ரோஜா இதழ்கள்/பகுதி 5

5

ருள் பிரியும் நேரத்திலே மதுரம் மைத்ரேயியுடன் பஸ் ஏறிவிடுகிறாள். புதிய நாள்; புதிய ஞாயிறின் உதயம். சென்னை யில் அது எந்தப் பகுதி.என்று மைத்ரேயிக்குப் புரியவில்லை. ஆனால் தெரு முழுவதும் அகன்ற தோட்டங்களிடையே வண்ணக் கனவுகள்போல் இல்லங்கள் எழும்பியிருக்கின்றன. சாலையில் நடந்து, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற அறிவிப்புப் பலகை பொருந்திய ஒரு வாயிலின் பக்கம் வந்து நிற்கிறாள். அங்கு ஒரு பக்கம் ‘லோகநாயகி’ என்று சலவைக் கல்லில் பொறித்த பெயர்ப் பலகை சுற்றுச்சுவர் தூணில் பதிந்திருக்கிறது.

அவர்கள் கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்வதற்குமுன், நாய் குலைக்கும் ஒலி கேட்கிறது. ஆளுயுரம் எழும்பிக் குதிக்கும் அல்சேஷியன் நாய்; அடித் தொண்டையிலிருந்து உறுமிக்கொண்டு, ‘உள்ளே அடிவைத் தால் ஒரு பவுண்டு சதைக்குக் குறையாமல் கவ்வக்கூடிய நான் குதறிவிடுவேன்!’ என்று அறிவித்து வரவேற்பளிக்கிறது.

‘இதென்ன கன்றாவி? நாயெப்ப வந்தது? இதைக் கட்டி விரட்டியடிக்கிறாளே? என்று மனசுக்குள் கடிந்து கொண்டாலும், மதுரம் நாசுக்காக.

“ஸார், ஸார்!” என்று குரல் கொடுக்கிறாள். அப்போது ஐந்தரையடி உயரத்தில் ரோமக் காடான சிவந்த திறந்த மார்பைக் காட்டிக்கொண்டு இடுப்பில் மட்டும் பைஜாமா அணிந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன் “ஹே ஸீஸர்...! ஸீஸர்!” என்று குரல் கொடுத்துக் கொண்டு வருகிறான். நாயின் கழுத்துச் சங்கிலியைப் பற்றிக் கொள்கிறான்.

“நான் தாண்டா சேது. பயந்துபோனேன். நல்லவேளை, புடிச்சிண்டிருக்கயா?”

“ஒண்ணும் பண்ணாது மாமி. நீங்க பாட்டுக்குப் போங்கோ!” என்று மதுரத்தின் குரலுக்கு அவன் மறுமொழியளித்தாலும், அவனுடைய நோக்கு பின்தொடரும் மைத்ரேயியைச் சந்தித்து, ‘யாரோ இவள்’ என்று வியந்து நிற்கிறது.

தனராஜுவிடம் ஆசைக் குடத்தை உடைத்தெறிந்த பிறகு இப்படி யாரேனும் இளைஞன் தன்னைப் பார்ப்பதே அவளுக்கு எண்சாணையும் ஒரு சாணாகக் குறுகச் செய்வதாக இருக்கிறது.

கார் நிற்பதற்காக எழுப்பிய முகப்பில் மேகவண்ணக் காரொன்று நிற்கிறது. அது முன்னும் பின்னும் ஒரே அமைப்பாக நீண்டவடிவு பெற்றிருக்கிறது. தோட்டம் மிக அழகாயமைந்திருக்கிறது. வட்ட வட்டமான புற்றரைகளைச் சுற்றிச் செம்மண் பாதை. பாதைக்கு வரம்பு கட்டினாற்போல் பூச்செடிகள். அடுக்குக் காசித்தும்பை ஜினியாப் பூஞ்செடிகள் மலர்ந்த இதழ்களுடன் காலைப் பொற்குழம்பில் குளித்தெழுந்த பெருமையுடன் சிரிக்கின்றன. ஒரு மூலையில் குடைராட்டினத்துக் குடை வடிவில் மேலேயிருந்து அளவான கூரை வேயப்பெற்ற பர்ணசாலை போன்ற கட்டிடம் கருத்தைக் கவருகிறது.

“அந்த இடத்தில் முன்ன லோகாவின் அப்பா இருந்தார். இப்ப அங்கே லோகாவின் ஆத்துக்காரர் இருக்கார். அவர் ரொம்ப நாள் கிராமத்தில் இருந்தவர். லோகாவுக்கு அப்பா செத்துப்போனப்புறம், இப்பத்தான் கொஞ்ச நாளாக இங்கு வந்திருக்கார்...” என்று மெதுவாகக் கூறுகிறாள் மதுரம்.

மைத்ரேயிக்கு ஒன்றுமே இப்போது கருத்தில் பதியவில்லை.

முன் வாயில் முகப்பைக் கடந்து மதுரம் அவளை வரவேற்பறைக்குக் கூட்டிச் செல்லவில்லை. வீட்டைச் சுற்றிப் பின்புறம் நடக்கிறாள். பெரிய தண்ணீர்த் தொட்டியின் அருகே, வேலைக்காரி பாத்திரங்களைத் துலக்க உட்கார்ந்திருக்கின்றாள். முன்புறத்தளவுக்கு விரிந்த பரப்பில் வாழைத் தோட்டம் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. பாத்திரம் துலக்குபவளைப் பார்த்தால் வேலைக்காரியாகத் தோன்றவில்லை. அவளுடைய இடையிலிருக்கும் விலை உயர்ந்த ரக யில் சோளி அணிந்திருக்கிறாள். கூந்தலை இழை பிரியாமல் வாரி, பின்புறம் வடைபோல் கொண்டை போட்டு வளைவாக மல்லிகைச்சரம் சுற்றி இருக்கிறாள். அவளுடைய பாசமணிச் சரத்தின் பட்டுநூல்குஞ்சம், சோளிக்குக் கீழ் வெற்று முதுகில் வந்து வடிந்திருக்கிறது.

“ஏண்டி கோகிலா எப்படி இருக்கே, சௌக்கியமா?” என்று மதுரம் மாமி விசாரிக்கையில் அவள் திரும்பிப் பார்த்துப் பற்கள் தெரியச் சிரிக்கிறாள். பற்களின் வெண்மை அவளுடைய கறுத்தமேனிக்கு மிக எடுப்பாகப் பளீரென்று தெரிகிறது.

“அட, மதுரத்தம்மாளா? ஊருக்குப் போனது போக நூறு வயிசு போ. இப்பத்தான் அம்மா சொல்லிட்டு உள்ளாற போச்சு. இந்த மதுரம் எங்க இருக்காளோ தெரியலன்னு...”

“அடிப்பாவி இன்னும் நூறுவயசு எனக்கு ஏண்டி நீ ஆசீர்வாதம் பண்றே? அம்மாவுக்கு உடம்பொண்ணும் இல்லியே? வெங்கிட்டு ஐயர் சமையலுக்கு இருக்கிறாரா?”

“அவருதான் இல்லியே? கண்நோவு வந்து அவரைப் புள்ளியாண்டான் வந்து டில்லிக்கு இட்டுப் போயிட்டாரே? அப்புறம் யாரும் சரியில்ல. நேத்துக்குத்தான் ஒரு மீசைக்கார ஆளு வந்து, பீடியக் குடிச்சிக் குடிச்சி சமையல் ரூம்பெல்லாம் போட்டுட்டுப் போய்ச் சேர்ந்தாரு. ஒரு அம்மா வந்து நாலுநாள் இருந்திச்சி. நானூறு ரூவா ஜாமான் காணாமப் படுத்து ...”

“ஐயோ?”

“அத்தையேன் கேக்குறே போ, பாலாம்மா சமையல் பண்றேன்னு, கையிலே ஆவியடிச்சிக்கிட்டுக் கட்டுப் போட்டிருக்குது. ஓட்டல்லந்து எடுத்து வந்தா ஐயிரு சோறு துண்ண மாட்டாரு, பாவம். போ, போ... உள்ளாற...”

மதுரம் திரும்புமுன் வேலைக்காரி கோகிலம் மைத்ரேயியைப் பற்றிக் கேட்க மறந்ததை நினைத்துக் கொண்டாற் போல பார்க்கிறாள். இதற்குள் லோகாவே பின்புறம் வந்து கோகிலாவை அழைக்கிறாள்.

“மாடிலேந்து காபிக் கப், ட்ரேயெல்லாம் எடுத்துவரலே! போயிக் கொண்டுவந்து கழுவி வை!”

“அட, மன்னியா? எப்ப வந்தே நீ? அந்தப் பொண்ணு யாரு?...” என்று கேட்கும் லோகநாயகியை நிமிர்ந்து நோக்கக் கூசுபவள்போல் நிற்கிறாள் மைத்ரேயி. வாட்டசாட்டமான உருவம். புசுபுசுவென்று தொங்கும் கன்னம். குரலில் ஒரு குளுமை இருக்கிறது.

“நான்தான் பாத்துட்டு ரொம்ப நாளாச்சேன்னு கிளம்பி வந்தேன்...” படி ஏறி நடந்து கொண்டே மதுரம் விவரம் கூறுகிறாள்.

“நான் உனக்குச் சொல்லி அனுப்பணும்னா, அட்ரஸா கிட்ரஸா ஒண்ணுந்தெரியாது. அன்னிக்கு ஒருநா உன்பெரிய பிள்ளை வந்தான். அவங்கிட்ட அப்பவே இங்கே ஆளில்ல. உங்கம்மாக்கு வரமுடியாட்ட யாரையானும் அனுப்பிவையின்னுகூடச் சொல்லி அனுப்பிச்சேன். வந்து சொல்லலியா அவன்?”

“யாரு, சீனுவா? சொல்லலியே தடியன்? சொன்னா வராம இருப்பேனா?”

“திண்டாடிப் போச்சு, போ. நான் வேற புனாவுக்குப் போயிட்டேன். சேதுவுக்கு வயிற்றுக் கடுப்பு, நீ வருவே வருவேன்னு பார்த்துக் கடைசில ஒரு அம்மாளைக் கொண்டுவந்து வச்சோம். எவர்சில்வர் பாத்திரம் ஒரு நானூறு ரூபாய் பாத்திரம் காணலே. எங்கியோ மாம்பலத்திலே இருக்கேன்னு சொன்னான். எங்கேயானும் வேலை செய்யறியா என்ன?”

“மாம்பலமா? பட்ணம் வந்தா எனக்கு எப்படி கட்டுப் படியாகும் லோகாம்மா? ரோக்கு ரோக்கு வீட்டு வாடகை கொடுத்துச்சாப்பிடணுமே? மாம்பாக்கம்னு திருக்கழுக்குன்றம் பக்கத்திலே கிராமம். ஓட்டலை மூடிட்டு அவர் அங்க வந்திருக்கார்னு தெரிஞ்சு நான் எல்லாத்தையும் இழுத்துண்டு வந்தேன். ஒண்ணும் சுகமில்ல. உங்ககிட்டச் சொல்லிக்கறதுக்கென்ன? நாமட்டுமானா பேசாம இங்கே இருந்துடுவேன்...”

“இந்தப் பொண்ணு யாரு?”

மைத்ரேயி தலைகுனிய நிற்கிறாள்; இதழ்கள் துடிக்கின்றன.

“இவ...இவ தாயார் தகப்பனார் யாருமில்ல, பாவம். தற்கொலை பண்ணிக்கிறேன்னு கிணத்தண்ட வந்து நின்னா. நான் நல்லவேளையாப் பாத்துக் கூட்டிண்டு வந்தேன். நீங்க பாத்து ஏதானும் செய்யணும் லோகாம்மா...”

லோகநாயகி ஒரு நிலைத்த பார்வையுடன் அவளை ஆராய்கிறாள்.

“ஏம்மா, கிணற்றில் நிறையத் தண்ணீர் இருந்ததா?”

மைத்ரேயியின் விழிகளிலிருந்து நீர் முத்துக்கள் சிந்துகின்றன.

“படிச்சிருக்கியா?”

‘ஆம்’ என்பதற்கறிகுறியாக மைத்ரேயி தலையை ஆட்டுகிறாள்.

“எத்தனை கிளாஸ்?”

“எஸ்.எஸ்.எல்.ஸி படிச்சி பரிட்சை எழுதாம நின்னுட்டேன்.”

அவள் அடுத்த கேள்வியைக் கேட்கவொட்டாமல் மதுரம் குறுக்கிடுகிறாள்.

“உங்ககிட்ட ஒப்படச்சிடறேன்னு கூட்டிண்டு வந்தேன். நல்ல குடும்பத்துப் பொண்ணு. நீங்க எங்கியானம் வேலை ஏதானும் போட்டுக்குடுத்தா உபகாரமாக இருக்கும்...”

லோகநாயகி சிரிக்கிறாள்.

“வேலை போட்டுக் கொடுக்கத்தான் கூட்டிண்டு வந்தாயா? அப்ப இங்கே இருக்கட்டும்...” என்று அவள் ஏதோ சொல்ல நாவெடுக்குமுன் தொலைபேசி மணி ஒலிக்கிறது.

உள்ளிருந்து மாநிறமாக ஊட்டமுள்ள உடல்வாகைக் குட்டைக்கை ரவிக்கையில் காட்டிக்கொண்டு இளநங்கை ஒருத்தி வருகிறாள்.

புறங்கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

“உனக்குத்தாம்மா ஃபோன்!”

“பாலா, சௌக்யமா! டாக்டருக்கா படிக்கிறே?” என்று கேட்கிறாள். மதுரம்.

அவள் படிப்பைப் பற்றிய மதுரத்தின் அக்கறையைவிட அந்தப் பொழுதில் கேட்கும் கேள்வியின் முக்கியத்துவம்தான் பெரிதென்று மைத்ரேயி உணர்ந்து கொள்கிறாள்.

“இந்த மாமி எப்ப வந்தாலும் நான் டாக்டருக்குப் படிக்கிறேனான்னு கேட்கிறாள். எனக்கு டாக்டர்னாலேயே வெறுப்புன்னு, நானும் எத்தனை தடவையோ சொல்லிட்டேன் நினைப்பில்லையா மாமி?”

மதுரம் சிரிக்கிறாள். “நினைப்பே இருக்கறதில்லேடி பாலா. நீ அப்ப எம்.எஸ்.ஸியோ பி.யூ.ஸியோன்னா படிக்கிறேன்னே? ஜடம் ஏது நினைப்பு?” பாலா இன்னும் பெரிதாகச் சிரிக்கிறாள்.

“நான் இரண்டும் படிக்கலே. காலேஜில்தான் படிக்கிறேன்” என்று நகைச்சுவையுடன் பேசுவதுபோல் சிரித்துக் கொள்கிறாள் பாலா.

“கையிலேன்னா காயம்?”

“பிரஷர் குக்கர், புதுசா வாங்கிண்டு வந்து பூசை பண்றாளேன்னு சமைச்சேன். வெயிட்டைத் திறக்காமல் மூடியைத் திறந்தேன். அடிச்சுது ஆவி.... நல்லவேளையாக முகம் தப்பிச்சது”

“அடாடா...பார்த்துச் செய்யக் கூடாதா?”

லோகநாயகி பரபரப்பாக வருகிறாள், “மன்னி, அடுப்பை கொஞ்சம் கவனிச்சுக்கோ. நான் இப்ப அவசரமா வெளியில் போக வேண்டியிருக்கு. சேதுவுக்கு சாம்பார் ரசம் வேண்டாம். எதானும் பொரிச்ச குழம்பு பண்ணிச் சாதம் போடு. இந்தப் பொண்ணு இங்கேயே இருக்கட்டும்!” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

மதுரம் மிகவும் உரிமையுடன் உள்ளே செல்கிறாள்.

குளியலறையில் சென்று குளித்துவிட்டுப் பாலாவிடம் கேட்டு ஒரு ஆறு கஜம் சேலையை வாங்கிச் சுற்றிக் கொண்டு இடுப்புச்சேலையை உலத்துகிறாள் தோட்டத்தில். மைத்ரேயி அவள் சொல்லும் சுற்று வேலைகளைச் செய்கிறாள்; காய் நறுக்கி, தேங்காயரைத்து, காபி கலந்து கொடுத்து, கோகிலம் (தேய்த்து வைத்த பாத்திரங்களை எடுத்து அடுக்கி, வேலை சரியாக இருக்கிறது.

லோகநாயகி மேலிருந்து நன்றாக உடுத்து இறங்கி வருகிறாள். குளிரலமாரியைத் திறந்து மோர் எடுத்துக் குடிக்கிறாள்.

கடுகு மஞ்சள் வண்ணத்தில் பூக்கள் அச்சிட்டு கதர் பட்டு சேலை உடுத்தியிருக்கிறாள். முகத்தில் மூக்கும் கண்களும் தீர்க்கமாக இருந்தாலும் சதை தொங்கி தளர்ந்திருப்பதால் கண்களையும் கருத்தையும் கவரும் சுறுசுறுப்பும் குறுகுறுப்பும் தெரியவில்லை.

“சேதுவுக்குச் சும்மா காப்பி குடுக்காதே மன்னி! என்ன காப்பி குடிக்கிறான்! டாக்டர் நல்ல மோரோ கஞ்சியோ குடுங்கறார்.” | “மோர் கடைஞ்சு குடு!...” என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். கார் அவளைச் சுமந்து செல்கிறது.

பாலா சாப்பிட வந்து உட்காருகிறாள். சாப்பாடு அறை மேசையில் மைத்ரேயிதான் பரிமாறுகிறாள்.

“அப்பாவுக்கு நீங்களே சாப்பாடு கொண்டு போட்டுடறேளா மாமி” என்று கேட்கிறாள் பாலா.

“அப்பா இங்கே வரதில்லையா?” என்று கேட்பது போல் சட்டென்று வெளியே வந்து பார்க்கிறாள் மதுரம்.

“ரெண்டு நாளா அநுசுயாதான் வந்து சமையல் பண்ண வேண்டியிருந்தது. அப்பா இங்கே வந்தா தினம் ஏதானும் குத்தம் சொல்றார். அம்மாவே அவரை அங்கேயே இருக்கச் சொல்லிட்டா.”

“அப்படியா?”

“ஆமாம் மாமி. இந்த அப்பா ஒரே ‘போர்’! இன்ன விஷயத்தில்தான் தலையிடறதுன்னில்ல. சேதுட்ட போயி “உங்கம்மா ஏன் மூக்குத்தியக் கழட்டிப் போட்டுட்டா”ன்னு கேக்கறார். சீ!"

“நீ என்ன துளியுண்டு சாதம் போட்டுண்டிருக்கே? சாம்பார் சரியாயிருக்கோ ? ஒரே அவசரம்....”

“ஃபர்ஸ்ட் கிளாஸ் மாமி. நல்ல சாப்பாட்டுக்கு நாக்குச் செத்துப் போச்சு. உண்மையாச் சொல்றேனே! அம்மாக்கு சாம்பார் வைக்கவே தெரியலே. புளிப்பு காரம் எல்லாம் ஒண்ணாவே சேராம தனித்தனியாகத் தூக்கிண்டிருக்கும்.”

இந்தப் பெண் உள்ளே ஒன்றும் வைக்கத் தெரியாதவள் என்று மைத்ரேயி அறிந்து கொள்கிறாள்.

பாலா சாப்பிட்டு முடிக்குமுன் கலகலவென்று நாலைந்து பெண்கள் உள்ளே வருவது தெரிகிறது. லோகாவும் வருகிறாள்.

“சமையலாயிடுத்தா மன்னி? நாங்க சாப்பிட உட்காரலாமா?”

‘ஓ! பேஷா!’ என்று சிரிக்கும் மதுரம் உள்ளே வரும் பெண்களைப் பார்த்துக் கும்பிடு போடுகிறாள்.

அவர்கள் எல்லோரும் பெரிய இடத்துப் பெண்கள். பெரிய பெரிய தொழில் அதிபர் குடும்பப் பெண்கள்; அதிகாரிகளின் மனைவியர்; அமைச்சருக்கு மருமகள்.... மெல்லிய துகிலணிந்து புஸுபுஸுவென்று ரொட்டிமா போன்ற உடலுடன் விளங்கும் வனிதை வடநாட்டுக்காரி என்று விளங்குகிறது. இன்னொருத்தி நீளத்திலகம் இட்டுக் கொண்டு, வெட்டிக் கொண்ட முடியும் கையில்லா இரவிக் கையுமாக இருக்கிறாள். முடியை உயர்த்தி உச்சியில் கொண்டை போட்டுக் கொண்டு பருமனாக ஒரு அம்மாள்; மைத்ரேயிதான் மேசையில் தட்டு வைக்கிறாள்.

“இவள்தான் புதுசு..” என்று லோகநாயகி அந்த வட நாட்டு வனிதைக்குச் சொல்கிறாள் ஆங்கிலத்தில்.

“இங்கே வா, உன் பேரென்ன?” என்று கேட்கிறாள் லோகா.

“மைத்ரேயி” என்று சொல்லிக் கொண்டு நிற்கிறாள்.

“பிராமணப் பெண் போலிருக்கு, ஐயங்காரா?” என்று கேட்கிறாள் நாமத் திலகக்காரி.

மைத்ரேயி தலையை ஆட்டுகிறாள், இல்லை என்று சொல்வதுபோல்.

“ஏன் தற்கொலை செய்து கொள்ள முயன்றாளாம்?”

“அதை நான் இன்னும் கேட்கவில்லை.”

“என்ன பிரமாத காரணம் இருக்கப் போறது? எவனேனும் சினிமாவில் நடிக்கலான்னு ஆசை காட்டி இழுத்திருப்பான். இல்லாட்டி யாரேனும் காதல் மூக்கல்னு கெடுத்து வயிற்றை நிரப்பி இருப்பான்...” என்று முணுமுணுக்கிறாள், அவள் தொடர்ந்து.

மைத்ரேயி இப்போது கண்ணீர் விடவில்லை. வெடுக் கென்று, “அப்படியொன்றுவில்லை!” என்று தெறிக்கிறாள்.

“ஓ, ஸ்மார்டா இருக்கிறாளே?” என்று கருத்தைத் தெரிவிக்கிறாள் வடநாட்டுக்காரி.

“பின்ன கிணற்றடியில் குளிக்கறத்துக்குத்தான் நின்னயாக்கும்” என்று லோகா மெல்ல நகைக்காமல் கூறுகிறாள்.

“அதுவுமில்லை. நான் நீங்க முன்ன சொன்னாப்பல, புத்திக்கெட்டுப் பாதிப் படிப்பை விட்டுட்டுப் போனேன். அப்பா அம்மா இல்லை. படிப்புத்தான் பெரிசுன்னு முதலில் தெரியலே. இப்ப இத்தனை நாள் என்னை ஆதரிச்ச குடும்பம் சேர்த்துக் கொள்ளவில்லை. வெளியே தள்ளிவிட்டார்கள். உங்களை எல்லாம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நான் எந்த வேலைவேணுன்னாலும் செய்வேன். எனக்குப் படிக்க வசதி கொடுத்தா நான் மறக்கவே மாட்டேன்.”

அவர்கள் ஒருவரை ஒருவர் மெளனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். பிறகு லோகா, “உனக்குச் சமையல் செய்யத் தெரியுமா?” என்று கேட்கிறாள்.

“சுமாராகத் தெரியும்; தெரியாததையும் கற்றுக் கொள்வேன்.”

“நாட் பேட்...” என்று நாமக்காரி பகருகிறாள்.

இதற்குள் மதுரம் சாப்பாடு பரிமாற அவளை அழைக்கிறாள். “ஹோம்ல சேர்க்கணும்னா சொன்னா?...” என்று இன்னொரு அம்மாள் கேட்கிறாள்.

"அப்படித்தானிருக்கும், எதுவும் இதுகள் சொல்வதெல்லாம் நம்பிவிடக் கூடாது....”

“அதான் நல்ல கவுரவமான குடும்பங்களில் வீட்டோடு குழந்தை பார்த்துக் கொள்ள, வயதானவருக்குப் பணி செய்ய, வீட்டுப் பணிகளைச் சற்றே மேற்பார்வை பார்க்க... என்ற மாதிரியில் கெளரவமான ஒரு வேலை கிடைக்காதான்னு தான் மதுரம் கூட்டிண்டு வந்திருக்காப்பல இருக்கு...”

“அந்த மாதிரி வேலைக்கெல்லாம் இவ தோதுப்படாது” என்று அறுதியிடுகிறாள் நாமக்காரி.

வடக்கத்திக்காரி மென்னகை செய்து கண் சிமிட்டுகிறாள். பிறகு எல்லோருமே சிரிக்கின்றனர்.

“சரி, மன்னி, அநுசுயா வருவா சாயங்காலமா. ஃபாரம் கொண்டு வரச் சொல்றேன். இங்கே இருக்கட்டும் அதுவரை” என்று முடிக்கிறாள் லோகா.

லோகா உண்டு முடித்து, வெற்றிலை போட்டுக் கொள்கிறாள். பிறகு எல்லோருமாக வெளியே செல்கின்றனர். சேதுவுக்குப் பத்தியச் சாப்பாடு. அவன் தனியாக வந்து உட்கார்ந்து தயிர் கலந்த சோற்றையும் பொரித்த குழம்பையும் உண்டு மாடிக்குப் போகிறான். கோகிலாவின் கணவன் நாய்க்குப் பின்பக்கம் சோறு பொங்கி இறைச்சியுடன் போடுவதை மேற்பார்வை பார்க்க மீண்டும் இறங்கி வருகிறான். மைத்ரேயிக்கு செவ்வையாய்க் கவனிக்காமல் புழுத்துப்போன சாமான்களைப் பார்த்துச் சீராக்கும் வேலை சரியாக இருக்கிறது. பைபையாய் அரிசி, வண்டு ஓடும் சாம்பார் பொடி, கரப்பான் பூச்சி செத்துக் கிடக்கும் எண்ணெய்....

மதுரம், ஒவ்வொன்றாய் எடுத்து வைத்துவிட்டு, பர்ண சாலைக்குச் சாப்பாடு கொண்டு செல்கிறாள்.

சற்றைக்கெல்லாம் நெற்றியில் பச்சைக் குத்தும், வெள்ளைச் சேலையுமாக ஒரு பெண் வருகிறாள். இருபத்தைந்து வயசிருக்கும்.

“வா வா, அநுசுயாவா?” என்று மதுரம் சிரித்து வரவேற்கிறாள்.

"அம்மா இப்பதான் வந்து சொன்னாங்க. துணியெல்லாம் கொஞ்சம் தைக்கணும், மாடி ஜன்னல் ஸ்கிரீனெல்லாம் ரொம்பப் பழசாப் போச்சு. புதுத் துணி வாங்கிவச்சிருக்கேன், போய்தச்சுப் போடுன்னாங்க.”

“ஹோம்லதானே இருக்கே?”

“பின்ன எங்க போறது?..... இது யாருங்க மதுரம்மா?”

“எனக்குச் சொந்தம்...” என்று மதுரம் சிரிக்கிறாள்.

மைத்ரேயிக்கு அவள் ஹோமிலிருந்து வந்தவள் என்று புரிந்து கொண்டதுமே பரபரப்பாக இருக்கிறது.

“ஹோம்ல வேலையாயிருக்கிறீங்களா?” என்று கேட்கிறாள்.

“வேலை, இருப்பு, எல்லாந்தான்...” என்று சிரிக்கிறாள் அநுசுயா. ஹோமில் வேலை கிடைக்க என்ன படித்திருக்க வெண்டும் என்றெல்லாம் கேட்க ஆசையாக இருக்கிறது, நாசமாகவும் இருக்கிறது.

அநுசுயா கையிலிருக்கும் பையைத் திறந்து, மடித்த தாளொன்றை மதுரத்தினிடம் கொடுக்கிறாள்.

“அம்மா உங்கிட்ட ஒரு ஃபாரம் கொண்டு கொடுக்கச் சொன்னாங்க...”

“இப்படிக் கொடு” என்று வாங்கிக் கொள்ளும் மதுரம் அதை மைத்ரேயியிடம் கொடுக்காமல் சமையலறைத் தட்டின் மீது ஓரத்தில் வைக்கிறாள்.

அநுசுயா மாடிக்குப் போகிறாள்.

“வா, வா...பசிக்கும் உனக்கு, நாம் சாப்பிடலாம். நான் தோட்டத்திலிருந்து இரண்டிலை பறிச்சிண்டுவரேன்...” என்று கத்தியுடன் கொல்லைப்புறம் செல்கிறாள்.

“இந்தம்மா வந்திடுச்சில்ல? வாழ மரம் மொட்டை. இரம்மா, சருகு தரேன்...” என்று கோகிலாவின் புருஷனான தோட்டக்காரக் குப்புசாமி சண்டைக்கு வருகிறான்.

ஒரு இலை பறிச்சா இவனுக்குக் கொள்ளை போயிடும்!

சமையலறையில் இரண்டு இலைகளையும் போட்டு நீர் தெளித்து, கறி, கூட்டு, ஊறுகாய், மோர், குழம்பு, ரசம் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, நல்ல மல்லிகைப் பூப் போன்ற சாதத்தைப் பரிமாறுகிறாள். நெய்யைத் தாராளமாக ஊற்றுகிறாள்.

மைத்ரேயிக்குக் கூச்சமாக இருக்கிறது.

“சங்கோசமில்லாம சாப்பிடு. எதுக்கு சங்கோசம்? வேலை செய்றோம் சாப்பிடறோம். வீடு கிடக்கும் கிடையப் பாரேன். ஆனா அவ என்ன பண்ணுவா? வெளிலே வேலைக்குப் போறவ வீட்டை எப்படிப் பாத்துப்பா? அந்தக் காலத்திலே லோகா துரைசானிபோல வளர்ந்தவ. அவப்பாவுக்கு ஒரே பொண்ணு, வீட்டோடு லேடி இருந்து பாடம் சொல்லிக் குடுத்து, பழகச் சொல்லிக் கொடுத்து செல்லமா வளர்ந்த பொண்ணு...” என்று சொல்லிக் கொண்டே அவள் இலையைப் பார்த்துக் குழம்பை ஊற்றுகிறாள்.

“அவர்... ஏன் அப்படித்தனியே இருக்கார் மாமி? உடம்பு சரியில்லையா?”

“ஒரு உடம்பையும் காணோம். அது ஒரு மாதிரி. அந்தக் காலத்திலே அத்தை பிள்ளை, அஞ்சு குடும்பத்துச் சொத்து வெளியில் போகக் கூடாதுன்னு குடுத்துட்டா. அவன் இங்கே வந்து இருக்க மாட்டேன்னுட்டான். இவளால் கிராமத்துக்குப் போக முடியுமா? போனால் ஒரே முசுடு. கையில் கரி படாம வளர்ந்த பொண்ணு. கற்சட்டி தேச்சு அடுப்பு மெழுகணும்பானாம். அப்புறம் அவப்பாவே அனுப்பல. அவப்பா செத்துப் போனப்புறம் கூட வரல. கொஞ்ச நாளைக்கு முன்னதான் ஊரில ஏதோ தகராறு, குடியானவங்களோட சண்டை. என்ன விவகாரமோ, போட்டு அடிச்சுட்டாங்கன்னு கேள்வி. லோகாதான் போயி அழைச்சிண்டு வந்தா ராவோடு ராவா. நான்போனதடவை வந்தபோது பர்ண சாலை பூட்டிக் கிடந்தது. இவன் மாடிலதானிருந்தான். இப்பதான் பாலா சொன்னாளே? அவள் புத்திக்கும் அறிவுக்கும், இப்படிக் கொண்டவன் அதிர்ஷ்டமில்லாம முசுடாப் போச்சு. இவனாலேயே இந்த வீட்டில ஒரு சமையல் ஆள் நிலைக்கிறதில்லே...”

இந்தக் கதையெல்லாம் மைத்ரேயிக்கு ஆர்வமாகக் கேட்கச் சுவைக்கவில்லை. அவளுடைய எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் இன்னும் உருப்பெறவில்லையே?

“மாமி, அநுசுயா என்னமோ ஃபாரம்னு கொண்டுவந்து கொடுத்தாளே அது எனக்கா?”

“உன்னை ஹோம்ல சேக்க வந்திருப்பதாகத்தான் அவ நினைச்சிண்டிருப்பா. ஹோம் வேண்டாம். நீ நல்ல குலத்தில் பிறந்திருக்கே. அதை எதுக்கு அழிச்சுக்கணும்?”

மைத்ரேயிக்குப் புரியவில்லை.

“இந்தப் பிராமணசாதிதான் கட்டுப்பாடு இல்லாம சீரழிகிறது. முதலியார், பிள்ளை எல்லாம் விட்டுக்கொடுக்கறாளா? அந்த ஹோமுக்குப் போனா, உன் குலம் கோத்திரம் எல்லாம் அழிஞ்சு போகும். அம்மா தெரியாதது, அப்பா தெரியாதது, ஒன்றரைக் கண், மாறுகண், இப்படி ஒரு மந்தைக் குழந்தைகள் இருக்கும். கதியத்து வயிற்றில் வாங்கிண்டு கழுத்தைத் திருகிப்போட மனசில்லாம வந்து சேர்த்துட்டுப் போற கழிசடைகள் அங்கே சேரலாம். உன்னைப் பார்த்தால் ராஜாத்தி மாதிரி இருக்கு. நீ எதுக்கு அங்கே போகணும்?....”

மைத்ரேயி, குட்டை குழம்பிவிட்டாற்போல் விழிக்கிறாள்.

“நான் பின்னே என்ன செய்வது? என்னை இங்கேயே சமையல் வேலை செய்யச் சொல்றேளா? எனக்குப் படிக்க ஆசையாயிருக்கிறது மாமி.”

“படியேன்? யார் வேண்டாங்கறா? அதுக்காக அந்தக் கலப்படச் சந்தையிலே போய் பரம்பரையையே அழிச்சுக்கணுமா? நான் எங்க சொர்ணத்தையே அங்கே விடச் சம்மதிக்கலியே? இந்தக் கோகிலா, அநுசுயா தொட்டுச் சாப்பிட மாட்டாள். அவ சேரிலேந்து வந்த பொண்ணு. அழுக்குத் தேச்சுக் குளிச்சிட்டா சாதிக்கறை போகுமாம்பா அவ. அநுசுயா போல இருக்கிறவாளுக்கு அது சரி. நீ போறது எனக்குச் சரியாப்படல. இந்தாத்திலே சமையல் வேலை செய்யறது என்ன தப்பு? லோகா ரொம்ப நல்லவ. நீ சமர்த்தாக இருந்தால் கூடவே படிச்சிக்கலாம். முதல்ல அவா பிரியத்தைச் சம்பாதிச்சுக்கணும், நீ. அப்புறம் அவளே வேற ஆளா இங்கே போட்டுட்டு உன்னைச்சித்து வேலைக்குன்னு வச்சிண்டு படிக்கவும் வசதி பண்ணுவா. நீ அவசரப்பட்டு ஹோமுக்குப் போயிடாதே. அதனாலதான் ஃபாரத்தை வாங்கி அப்படியே வச்சிட்டேன்...”

சாதியையும் கோத்திரத்தையும் அழிப்பதென்றால் எதைக் குறிப்பிடுகிறாள் என்று மைத்ரேயிக்குப் புரியவில்லை.

இந்தச் சாதியில் பிறந்ததற்காக, அவள் என்ன நன்மை கண்டு விட்டாள்? அவள் எதற்காக, எந்த மேன்மையை எண்ணி அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்? மாற்றான் பாசறையில் தலைநீட்டிவிட்டு வந்தாற்போல் அவள் வந்திருக்கிறாள். அவள் பிறந்த சாதியின் பெயரைச் சொல்லிக் கொள்ளவே இப்போது அவள் கூசிக் கொள்கிறாள்.

மதுரம் தொடர்ந்து பேசுகிறாள்:

“பிழைக்க வழி இல்லாமல் ஒரு அவலத்தைக் கட்டி அழகு, அந்தஸ்து, படிப்பு ஒண்ணும் இல்லாம இருந்தும் நான் இந்தச் சாதிப் பிறப்பினால்தான் பிழைக்கிறேன். தெரிஞ்சுக்கோ? இன்னிக்கு இந்தச் சமையல் ரூமில் வந்து சுவாதீனமாகப் புழங்கவும் இலைபோட்டுச் சாப்பிடவும் முடியிதுன்னா , அதுக்குக் காரணம் இந்த சாதிப் பிறப்புதான். எந்தத் தொழிலுக்கு விலை இல்லாமப் போனாலும் இதுக்குக் கிராக்கி போகாது. நான் சிவனேன்னு இங்கே ருசி ருசியா சமச்சுப் போட்டுண்டு நானும் வயிறு வாடாமல் சாப்பிட்டுக் காலம் தள்ளுவேன். யாரை என்ன சொன்னாலும் லோகா என்னைத் தள்ளி நில்லுனு சொல்ல மாட்டாள். ஆனா, குடும்பம்னு பின்னோட ஒண்ணு ஒட்டிண்டிருக்கே. நீ வாணாபாத்திண்டிரு. இன்னிக்குச் சாயங்காலம் நான் போகாட்ட காலமே ஜிட்டுவோ பொம்மியோ வந்துடும். அப்புறம் பெரியவன்; பின்னே அப்பனும் வந்துடுவான். வந்தா சும்மா இருப்பாளா? உக்கிராணத்தில் சாமான் இருக்காது; மேசையில் வச்ச பண்டம் போயிடும். என் குடும்பத்தைப்பத்தி நானே குறை சொல்லிக்கிறதிலே என்ன தப்பு இருக்கு? என் தலை எழுத்து...”

மைத்ரேயி வாயடைத்துப் போகிறாள்.

“அவாள்ளாம் இங்கே வரக்கூடாதுங்கறதுக்காகத்தான் என்னையே இங்கே கூப்பிட முடியறதில்ல அவளால், ஒரு தெவசம் திங்கள்னாக்கூட நான் வருவேன். உடனே போயிடுவேன். ஏதோ தட்டி முட்டிக் கேட்டால் பத்து அஞ்சு தருவாள். ஒரு பழசு, சாயம் போனதுன்னு கொடுப்பாள்... சாதத்தை இலையில் போட்டுட்டு இப்படிப் பேசறேனேன்னு பார்க்காதே. உங்கக்காவும் அத்திம்பேரும் பண்ணினது ரொம்பத் தப்பு. நம்ம ஜாதிய விட்டு, குடும்பத்தை விட்டு ஒரு பொண்ணு போனா, அது எவ்வளவு நஷ்டம்னு அவாளுக்குத் தெரியல. கிறிஸ்துவா விட்டுக் கொடுக்கிறாளா? வேற எந்த சாதியாளும் விட்டுக் கொடுக்கிறாளா, இப்படி?”

அவளுடைய சொற்கள் நறுக்கு நறுக்காகத் தெறித்து விழுந்தாற் போல் இருக்கின்றன. வயிற்றுக்கில்லாமல் புரண்டு புரண்டு சமுதாயத்தில் பல படிகளிலும் சிதறிய நெல்மணிகளுக்காகத் தேடும் அனுபவத்தில் அவள் சேகரித்த முத்துக்கள் தாம் இப்படிச் சிதறுகின்றனவோ? வெளுத்ததெல்லாம் பாலென்று நம்பிவிட்ட அவளுக்கு ஒரு கண்ணைத் துடைத்து அம்மணி உலகம் காட்டினாள். இவள் இன்னொரு கண்ணைத் துடைக்கிறாளோ?

பள்ளிக்கூடத்துக்குச் சென்று ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகளைப் பற்றியும், பிரிட்டிஷ் அரச குடும்ப வம்சாவளியைப் பற்றியும் படிப்பாளாக இருக்கும். தீரங்களை உருப்போடுபவளாக இருக்கும்.

ஆனால் ஒரு இளம் பெண் இயற்கையின் பருவக்காற்றை எதிர்க்காமலும் சாதகமாகச் சென்று படுகுழியில் விழாமலும் சாமர்த்தியமாக வாழ்க்கைப் படகை வலித்துச் செல்லக் கற்பிப்பார்களா?

தாயும் தகப்பனும் இருந்திருந்தால் தனக்கு நேரிட்டாற் போன்றதொரு விபத்து வாழ்க்கையில் ஏற்பட்டிராதென்றே மைத்ரேயி நம்புகிறாள். அவளுடைய வகுப்பில் எத்தனையோ பெண்கள் படித்தார்கள். ஆனால் அவளைப் போல் மனமழிந்து ஒரு போலியைத் தெய்வீகக் காதலென்று நம்பும் நிலைக்கு யாரும் வரவில்லை என்பதை நினைத்துப் பார்க்கையில் மனம் குன்றிப் போகிறது. புவியில் பிறந்ததன் காரணமாக, ஒரு பெண்ணாய்ப் பிறந்ததன் காரணமாக, குறிப்பிட்டதொரு உயர்ந்த சாதியிற் பிறந்ததன் காரணமாக, ஒரு சமுதாயத்தின் அங்கமாக இருப்பதன் காரணமாக அவளுக்குப் புரியாமலேயே கண்ணுக்குத் தெரியாத பொறுப்புகளும், பிணிப்புகளும் அவளுடைய அறியாமையில் விளையும் சுதந்திரமான போக்கைத் தடை செய்கின்றன. அவள் அங்கம் வகிக்கும் சமுதாயப் பெண்டிர் கற்பு நெறியுள்ளவரல்ல என்ற கூற்றுக்கு விளக்கம் காணவே தங்களை இந்த இழிநிலைக்குத் தூண்ட வலை வீசி இருக்கலாம். உண்மையில் காதல் என்ற ஒன்று கிடையாது. தனராஜுவின் மீது அவள் கொண்ட நட்பு காதலாக, எழுத்தில் ஏற்றி வைத்தும் அரிய பண்பாக இருந்திருந்தால் அம்மணியம்மாளின் எச்சரிக்கை மிகப் பெரிய கருநாகமாக அவளைத் துரத்திக் கொண்டு ஓடி வருவது போல் அச்சுறுத்தியிருக்குமோ?

தனராஜின் மீது காதல் கொண்டதாக நினைத்ததே பிரமை.

அந்த வீட்டுச் சமையலறை என்றால் மூச்சுவிடப் பொழுது இருக்காது என்று மைத்ரேயி புரிந்து கொள்கிறாள்.

பாலா மூன்று மணிக்கே கல்லூரியிலிருந்து வந்து விடுகிறாள்.

ரவாலட்டும் பஜ்ஜியும் செய்யச் சொல்கிறாள். பர்ண சாலைக்கு மதுரம் காபியும் சிற்றுண்டியும் கொண்டு கொடுக்கிறாள்.

சேதுவைப் பார்க்க ஐந்தாறு நண்பர்கள் வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் காப்பி, சிற்றுண்டி கொண்டு போகிறாள் பாலா.

லோகா மாலை ஆறேகால் மணிக்கு ஒரு கூடை எலுமிச்ச பழத்தைக் கொண்டு போட்டுவிட்டு வெறும் தேநீர் மட்டும் அருந்திவிட்டு மீண்டும் வெளியே செல்கிறாள். அநுசுயாவுக்கு முழு வேலையும் முடியவில்லை. எனினும் மாலை ஏழு மணிக்குள் அவள் விடுதிக்குப் போய்விடவேண்டும் என்ற விதியை மீறாமல் காபி சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுப் போகிறாள்.

இரவுக்குப் பருப்பு சாம்பார், ரசம், பீன்ஸ் பொரியல் அப்பளம், பெரியவருக்குக் கோதுமைத் தோசை, சட்னி.

லோகா, வீடு திரும்புவதற்கு இரவு மணி பத்தாகிறது. எட்டரை மணிக்கே மற்றவர் உண்டு முடித்துவிட்டாலும், எஜமானி அம்மாளின் வரவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். அப்போது பாதி எலுமிச்சம் பழங்களை நறுக்கி உப்பிட்டு வைக்கிறாள் மதுரம்.

லோகா வீடு திரும்பியதும் தொலைபேசியண்டை அமர்ந்து வெகுநேரம் யாருக்காகவோ காத்திருந்து பேசுகிறாள். பிறகு அவள் உண்ண வருகிறாள். சோறில்லாமல் வெறும் ரசம், பீன்ஸ் பொரியல், அப்பளம், மோரை மட்டும் கொள்கிறாள். பிறகு மாடிக்குச் செல்கிறாள். பருமன் குறைய ‘டயட்’ இருக்கிறாளாம்!

அவர்கள் இருவரும் உண்டுமுடித்து, கோகிலாவுக்கு மீதியைக் கொடுத்துவிட்டுச் சமையலறையைக் கழுவி விடு கின்றனர்.

மணி பதினொன்றாகிறது.

சாப்பிடும் கூடத்தை அடுத்து இடை அறையில் மதுரம் வினோலியம் சுருட்டொன்றைக் கொண்டுவந்து விரிக்கிறாள்.

ஆளுக்கொரு மனையும் தலைக்குக் கிடைக்கின்றன.

மைத்ரேயிக்கு நிம்மதியாக இல்லை.

“மாமி, என்னைப் பத்தி அவா ஒண்ணுமே கேக்கலியே? நீங்க நாளைக்குப் போயிட்டா நான் என்ன செய்வேன்?”

“கவலைப்படாதே, இந்த வேலை செஞ்சதால குறைச்சல் வந்து விடாது. லோகாவிடம் நான் சொல்லாமல் போக மாட்டேன்...”

“நீங்க இன்னும் நாலஞ்சு நாள் இருங்கோ மாமி...”

அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பின்புறக் கதவை யாரோ விரல் முட்டியால் தட்டுவது போன்ற ஓசை கேட்கிறது.

மைத்ரேயிக்கு நடுக்கமாக இருக்கிறது.

ஆனால் மதுரம் எழுந்து போகிறாள். அடுத்தகணம் கதவு திறக்கும் ஓசையும் மெல்லிய குரலில் மதுரம் கடிந்து கொள்ளும் ஒலியும் கேட்கின்றன.

“நானெங்கே தொலைஞ்சு போயிடுவேன்னு வந்தியா? அப்படியே போனாலும் ஒழிஞ்சு நிம்மதியாப் போவேன். மனுஷனுக்கு ஒரு ரோசம் மானம் இருக்கணும்!”

அவள் சமையலறையில் விளக்குப் போடுகிறாள். சாப்பிடும் கூடத்துக்கு வந்து குளிரலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துச் செல்கையில் மைத்ரேயி படுத்திருக்கிறாள். குளியலறையில் வெளிச்சம் பரவுகிறது. காலைத் தேய்த்துத் தேய்த்துக் கழுவும் ஓசை. காறி உமிழ்ந்துத் தொண்டையை சுத்த மாக்கிக் கொள்ளும் குரல் ஒலிகள். சமையலறையில் பப்படம் நொறுங்க, சாப்பிடும் அரவங்கள்.

“இங்கே இப்ப ஆளில்ல. நீங்க அழகாப் பகல் நேரத்தில வாசல் வழியா வந்துட்டுப் போகக் கூடாதா? எனக்கு கொல்றாப்பல இருக்கு...” மோரை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் ஒலிகளைத் தவிர வேறு மறுமொழி இல்லை.

“காலமே நேத்து அஞ்சுபடி அரிசியையும் கடையில் கொடுத்துட்டு அந்தத் தடியன் பணம் வாங்கிண்டு போயிருக்கான். வடிக்க மணி அரிசி இல்லை. அப்புறம் எப்படியோ சமாளிச்சு மணி செட்டிகிட்டக் கடன் சொல்லிட்டு ஒரு படி புழுங்கலரிசியும் சாமானும் வாங்கிண்டு வந்து ஆக்கி பொழுதை ஓட்டினேன். இப்படி எத்தனை நாளைக்கு என்பாடு அல்லாடணுமோ?”

“அதான் உன் தங்கை சம்பாதிச்சுப் போடறாளே?”

“நாக்கை அலம்புங்கோ! ஏனிப்படிப் பராதி சொல்றேள்? அநாதைன்னா என்னவேணா சொல்றதா?..."

“நானா சொல்றேன்? சைகிள்கடை ஏழுமலைதான் ரிப்பன் வாங்கிக் கொடுக்கிறான்; சினிமாவுக்குக் கூட்டிப் போகிறான்!”

“உங்க நாக்கு அழுகணும்னு நான் சொல்லமாட்டேன். ஒரு பொண்ணு கெட்டுப்போகறது அவ்வளவு சுளுவில்லை. பிஞ்சானாக் கூட வெம்பும்; அழுகாது. வெட்டுக்காயம் பண்ணி மூடிவச்சாத் தான் அழுகும். அப்படி உங்க வர்க்கம் வெட்டுக் காயம் பண்ணிட்டு கெட்டுப் போச்சின்னு எரியறாப்பல நீங்கபேசறேள். அவளுக்கு நாதியில்லே; படிப்பும் வரல. அதுக்காகக்கூடப் பிறந்த பிறப்பை அடிச்சு விரட்ட முடியுமா நான்? இந்த மோழைச் சாம்பு, அசடு, ஒரு கரண்டி எடுக்க வக்கில்லாதவன், உழைக்காட்டாலும் வயசுப் பிள்ளை, இவ நாலு ஆளுக்கு உழைச்சுக் கொட்டுவா. ஏதோ இங்கே அங்கேன்னு பிச்சைகேட்டு ஒரு கலியாணம் பண்ணி வைக்கலான்னு பார்த்தால், ஆயிரம் ரூபாய் கையில் வேணும்னு அவம்மா கோணவாயை ஒரு முழம் நீட்டிண்டு கேக்றா. நேத்து அப்பாவுன்னு லாரிக்காரப் பையன் வந்தான். நல்ல உழைப்பாளி. வம்பு தும்புக்குப் போக மாட்டான். இவனுக்குச் சொர்ணத்தை ஏன் கட்டி வைக்கக்கூடாதுன்னு நினைச்சேன். சாதியாவது இன்னொண்ணாவது? எல்லாம் நஞ்சு கந்தலாப் போனப்புறம் அதுக்குப் புடவைன்னு பேரு எதுக்கு?”

“குடு குடு...மீன் குழம்பு வச்சுக் கல்யாண விருந்து பண்ணு . உனக்கு வாய் அதிகமாயிடுத்து!”

“ஆமாம். மானம் மரியாதை இல்லாதவாளுக்கு வேறே என்ன பேசத் தெரியும்?”

சாப்பிட்டுக் கையலம்பும் ஓசை.

மதுரம் ஈயக் கற்சட்டியையும் குழம்புப் பாத்திரத்தையும் குழாயடியில் போடுகிறாள்.

அவள் கதவைச் சாத்தும் ஒலி கேட்கிறது.

ஆனால் மதுரம் பாயில் வந்து படுக்கவில்லை.

மைத்ரேயி ஏதேதோ நினைவலைகளின் மீது அலைந்தபடியே கண்ணயர்ந்திருக்கிறாள்.

யாரோ விசும்பி அழும் ஒலி கேட்டுச் சரேலென்று விழித்துக் கொள்கிறாள். மதுரம்தான். இருளில் அவள் குப்புறப்படுத்துக் கொண்டிருப்பது தெளிவாகிறது. தோள்கள் எழும்பித் தணிகின்றன.,

“மாமி...? மதுரம் மாமி? மதுரம் மாமி...”

மதுரம் விம்மலடங்கிக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளச் சில விநாடிகள் செல்கின்றன.

“செ! என் தலைவிதியை நினைச்சுண்டா சிலசமயம் இப்படித்தான் பொறுக்காம வந்துடும். சனியன் இப்படிப் பொண்ணாப் பிறந்திருக்கவே வேண்டாம்... கட்டின புருஷன் சரியில்லை. வாய்த்த பிள்ளை அதைவிட மோசம். விடுதலையுமில்லை; விமோசனமுமில்லை.”

“அழாதேங்கோ மாமி...”

“இதுகளை எல்லாம் விட்டுத் தொலைச்சிட்டு எங்கேனும் கண் காணாமல் போயிடலான்னு தோணும். பின்னும் துணிச்சல் வராம இந்தப் பாசபந்தத்தில் அடிபட்டுச் சிக்கிச் சுழல்றேன்...”

அந்தக் கணத்தில் மைத்ரேயிக்குதான் குன்றின்மேல் நிற்பதுபோல் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_5&oldid=1115341" இலிருந்து மீள்விக்கப்பட்டது