20

தானிய மணிகளை உரலில் இருந்து எடுத்து, அஜயன் வாரி இறைக்கிறான். குருவிகள், மைனாக்கள், புறாக்கள், என்று பல வண்ணங்களில், செண்டுகட்டினாற்போன்று வந்து குந்தி அந்த மணிகளைக் கொத்துகின்றன. அவை மகிழ்ச்சியில் வெளியிடும் குரலொலியும் ஏதோ ஒர் இனிய ஒலிச் செண்டாக இன்ப மூட்டுகிறது.

“எத்தனை அழகான பறவைகள்! அம்மா! வந்து பாருங்கள்” அஜயன் தாயைக்கூவி அழைக்கும்போது, விஜயன் சிரிக்கிறான்.

“அதோ பார்த்தாயா, மரத்தின் மேல்? ஒரு மூப்பு பார்த்துக் கொண்டு இருக்கிறது.நீ செய்யும் இந்தத்தானம், அந்த மூப்பு’க்குக் கொண்டாட்டமாக இருக்கிறது: லபக்கென்று குதித்து ஒரு கொத்தாக வாயில் கவ்விக் கொண்டு செல்ல நல்ல சந்தர்ப்பம் கொடுக்கிறீர் அல்லவா?”

“ஒ. அதெல்லாம் நம் அன்னை இருக்கும் இந்த இடத்தில் நடக்காது. அதனால் தான் நான் தைரியமாக இந்தப் பறவைகளுக்கு விருந்து வைக்கிறேன்.”

“அப்படியா? நம் அன்னை ஏதேனும் மந்திர-தந்திரம் வைத்திருக்கிறார்களா? அப்படியெல்லாம் நடக்காது என்று நீர் உறுதி மொழிவைக்க அன்றொருநாள் இதே இடத்தில் தான் இங்கு வந்து குந்திய கிளியை, இதே போல் ஒரு நாமதாரி மூப்பு லபக்கென்று விழுங்கி சீரணம் செய்தது.”

“அப்போது ஒருகால் நம் அன்னை இங்கே இருந்திருக்க மாட்டார். அவர் சுவாசக்காற்று இங்கே கலந்திருக்காது.”

“இந்த விதண்டா வாதம் தேவையில்லை. நீர் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஒரு விஷயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.” அஜயன் மிகவும் கூர்மையாக முகத்தை வைத்துக் கொள்வதை பூமகள் குடிலின் வாயில் ஒரம் நின்று பார்க்கிறாள். அவளுக்குச் சிரிப்பு வருகிறது.

மெல்ல நழுவிக் குடிலின் பக்கம் புதிதாகக் கன்று போட்ட பகவுக்குப் புல் வைக்கிறாள்.

“அதென்ன, இரண்டு பக்கம்?”

“அம்மா இருக்குமிடத்தில் வன் கொலை நடக்காதென்றீர். அதற்கு இன்னொரு பக்கம் உண்டென்றேன்.”

“இன்னொரு பக்கம் என்று ஒன்றும் கிடையாது.நடக்காது என்றால் நடக்காது. உண்மை, சத்தியம் என்றால் முழுமை. இதை எடுத்தாலும் குறைத்தாலும் முழுமையே. உண்மை; சத்தியம்; தூய்மை.”

“எனக்குப் புரியவில்லை”

"புரியவில்லை என்றால் அந்த மரமண்டை தமனகனிடம் கேள்! மிதுனபுரியில் இருந்து வந்தானே, காவலன், அவனிடம்...”

“நீர் தாம் இப்போது எனக்கு விளக்கத் தெரியாத மரமண்டை போல் பேசுகிறீர்!...”

இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் மரத்தில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிழட்டு நாமதாரிப்பூனை, கரகரவென்றிரங்கி நொடிப் பொழுதில் ஒரு புறாவைக் கவ்விச்சென்றுவிட்டது. அது சென்றதைப் பார்த்த பூமகள் திடுக்கிடுகிறாள். விஜயனின் சிரிப்பொலி கேட்கிறது.

“உம் சத்தியத்தைப் பூனை கவ்விக் கொண்டு சென்று விட்டது?”

அஜயன் எத்தகைய சலனமுமின்றி அதே கூர்மையுடன் விடையிறுக்கிறான். “இதுவும் சத்தியமே. அந்தப் பூனை பசியாக இருந்திருக்கும். அது மூப்பினால் ஓடியாடி இரை பிடிக்க முடியாது. பறவைக்குத் தானியம் தூவியதால், பறவைகள் சேர்ந்து வந்தன. அவற்றில் ஒன்று பூனையின் பசிக்குமாகிறது. எனவே, இதுவும் சத்தியம் தான்!”

“ஒரு பறவையை யமனிடம் இருந்து உம்மால் காப்பாற்ற முடியவில்லை. இதை ஒத்துக் கொள்ளுங்கள். பின் எதற்காக, நமது குருநாதர் வில்-அம்பு, போர்ப் பயிற்சி என்று கற்பித்திருக்கிறார்? வில்-அம்பு-வித்தை இந்த மாதிரியான நேரங்களில் பயன்பட வில்லை என்றால், விரோதிகளிடம் இருந்து எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்?”

“விரோதிகள் என்பவர் இருந்தால் தானே, அந்தச் சங்கடம் வரும்?” விஜயன் கேலியாகச் சிரிக்கிறான்.

“இது மிக நல்ல யோசனைதான். அப்படியானால் குருநாதர், நமக்கு ‘மந்திர-அஸ்திரம்’ என்ற வித்தையையும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லையே?”

“தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பயன்படுத்த வேண்டியதில்லை; பறவைகளும், விலங்குகளும் நமக்குப் பகைவர்கள் இல்லை.நம்மைப் போன்று அறிவு பெற்ற மனிதர், தங்கள், சினம், பேராசை ஆகிய தீக்குணங்கள் மேலிட, மற்றவரை அழிக்க அத்தகைய வித்தையைப் பயன்படுத்தி நிரபராதிகளை அழிக்க முன்வரும்போது, நாம் அவற்றைப் பயன் படுத்தி, சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். அதுவும் நம் குருநாதர், அனுமதிக்கும் போது தான்.”

“சரி, ஒத்துக் கொள்கிறேன் - நமக்குள் இப்போது சண்டை எதற்கு?” என்று விஜயன் இறங்கி வருகையில் பூமகள் குடில் மறைவில் இருந்து வெளிப்பட்டு வருகிறாள்.

“அம்மா, நமக்கு விரோதிகள் இருக்கின்றனரா?..”

விஜயனின் வினாவில் ஒரு கணம் அவள் தடுமாறிப் போகிறாள். -

ஆனால் அஜயனே இதற்கு மறுமொழி கூறுகிறான்.

“எல்லோருக்கும் இதம் நினைக்கும் அம்மா இருக்கையில் எங்கிருந்து விரோதிகள் வருவார்கள்?. இல்லையா அம்மா?”

“அக்கரையில் இருக்கும் குருகுலத்து அந்தணப்பிள்ளைகள் சிலர் நாங்கள் விளை நிலங்களில் ஏர்பிடிக்கையில், ஏளனமாகச் சிரித்தார்கள். நாங்கள் அந்தண குலத்துக்கும் கூடித்திரிய குலத்துக்கும் பொருந்தாத நீசர்களாம். அப்படி என்றால் என்ன அம்மா? விஜயனின் இந்த வினாவுக்கும் அவள் மவுனமாக இருக்கிறாள்.

“அம்மா! நாங்கள் எல்லோரும் உணவு சேகரிக்கிறோம். தாங்கள் அதை எல்லாம் நாம் சுவையாக உண்ணும்படி பக்குவம் செய்து தருகிறீர்கள். வேள்வித் தீயில் இட்டு, அதன் விளைவான மிச்சத்தை உண்பது தான் அந்தண் தருமமாம். நாம் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லாதவராம்!”

அவள் முகத்தில் சூடேறுகிறது.

“குழந்தைகளே, அவர்கள் சொல்லும் வேள்வி, கொல்லும் செயல். சத்திய முனிவரும், நத்த சுவாமியும் மேற்கொண்டு நம்மையும் ஈடுபடுத்தும் வாழ்க்கையே வேள்விதான். வேள்வி என்பது ஓம குண்டத்தில் போடும் சமித்துகளும் உயிர்ப்பிண்டங் களும் அல்ல. நல்ல உணவைப் பக்குவப்படுத்துவதும் வேள்வித் தீதான். அதை நாம் காத்துவைக்கிறோம். அதே தீ, நமது நல் ஒழுக்கங்களாகிய சமித்துகளால் நம்முள் எப்போதும் அனை யாமல் நம்மைப் பாதுகாக்கிறது. அது நம் உணவைச் செரிக்கச் செய்கிறது. நமக்கு ஆற்றலைத் தருகிறது. அது நமக்கு அறிவைத்தருகிறது. அது நமக்கு நல்ல தெளிவைத்தருகிறது; வீரியத்தையும் தருகிறது. அந்த ஒளி என்றும் அனையாமல் இருக்க, மேலும் மேலும் நம்மை புதுப்பித்துக் கொள்வோம். மூர்க்கத்தனம், பேராசை, சினம், எல்லாவற்றையும் அத்தியில் இட்டுப் பொகக்கிக் கொள்வோம். வேள்வி என்பது வெறும் சடங்குகளில் இல்லை. அன்றாடம் காலை, மாலைகளில், வானத்துத்தேவனையும், காற்றையும் மண்ணையும் நாம் தொழுதேற்றி நிற்பது. இந்த வேள்விக்கு ஆதாரசுருதிகள். காயத்ரி’ மந்திரத்தை எவரும் உச்சரித்து அறிவொளியும் வீரியமும் நல்கும் தேவனை வழிபடலாம். நம் சித்தத்தைத் துய்மையாக்கிக் கொள்ள, முப்புரி நூல் அடையாளம் எதற்கு? நம்முள் இச்சக்திகளை எழுந்தருளச் செய்து ஆற்றலைப் பெற அடையாளம் எதற்கு?.

அன்னையின் குரலில் அவர்கள் கட்டுண்டவர்களாய் இருக்கிறார்கள். கச்சலன் வந்து சென்று, இரண்டு பருவங்கள் கடந்துவிட்டன. மாரிக் காலம் முடிந்து, பனிமலர்கள் பூக்கும் பருவம். ஆனால் இந்தச் சூழலில், எது இளவேனில், எது முது வேனில் எதுவும் தெரிவதில்லை. முன்பு, பிள்ளைகள் சுவைத்துத் துப்பிய மாங்கொட்டைகளில் இரண்டு இந்நாள் இளமரங் களாகப் பூரித்து, பூக்குலைகளுடன் பொலிகின்றன.

பிள்ளைகள் இருவரும், கூரைக்குப் புல் சேகரிக்கக் கிளம்புகின்றனர். பெரியன்னை வருகிறார்.

“தனியாக எங்கே செல்கிறீர்கள்? குழந்தைகளே?. நீலன், கேசு, மாதுலன், யாரையும் காணவில்லை?”

“அவர்கள் தேனெடுக்கப் போயிருக்கிறார்கள் பெரியம்மா.” “மாதுலனுமா?” என்று விழியைச் சரித்துக் கொண்டு பார்க்கிறார். அவள் உடல் அந்த வெயிலிலும் குளிரில் போல் நடுங்குவது தெரிகிறது.

“ஏன் இப்படி நடுங்குகிறீர்கள், தாயே! அம்மம்மா... இப்போது, குளத்தில் நீராடினர்களா?”

“நான் தனியாக இல்லையடி பெண்ணே, புல்லி இருந்தாள். உடலெல்லாம் புழுதியாக இருந்தது. அழுக்குப் போக நீராடினேன். நீர் பட்டதும் இதமாக இருந்தது.”

பூமகள் விரைந்து உள்ளே சென்று, உலர்ந்ததோர் ஆடையைக்கொண்டு வருகிறாள். அவளை மெல்ல அழைத்துச் சென்று, ஆடையை மாற்றச் சொல்கிறாள். பிறகு ஈர ஆடையைப் பிழிந்து, ஒரத்து மரக் கிளையில் போடுகிறாள்.

“கண்ணம்மா, பிள்ளைகளை எங்கும் போகச் சொல்லாதே! நம் கண்முன்னே இருக்கட்டும்.

“நீங்கள் அஞ்ச வேண்டாம் பெரியம்மா. அவர்கள் குழந்தைகள் இல்லை, யாரும் தூக்கிச் செல்ல. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்போது நான் ஊமையாகிறேன்.”

முதியவர் நிமிர்ந்து பார்க்கின்றார். கனிந்த பழத்தின் விதைகள் போல் முதிர்ந்த விழிகள் ஒளிருகின்றன. என்ன பேசிக்

கொள்கிறார்கள்?

“அந்தணகுலம், கூத்திரிய குலம் என்பதெல்லாம் எப்படி என்று பேசிக் கொண்டார்கள். சத்திய முனிவருக்கும் நந்த சுவாமிக்கும் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லை என்று அக்கரை குருகுலக் கொழுந்துகள் சொன்னார்களாம். என்னிடம் கேட்டார்கள்.”

“ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடிக்கச் சொல்லி வைத்தார்களா?.”

தாயின் இழிந்து தொங்கும் செவிகளைப் பார்த்தவண்ணம் நிற்கிறாள். கன்னங்கள் வற்றி. சப்பிய மாங்கொட்டையாய்த் தலையும், அகன்ற நெற்றியும். எந்த இரகசியத்தைக் கட்டிக் காக்கின்றன?

“அடி, கண்ணம்மா, புல்லியின் ஆண், பெரிய பன்றி அடித்துக் கட்டிக் கொண்டு போகிறான். வலையில் விழுந்தது என்றான். அவன் சொன்ன சேதி கேட்டதிலிருந்து எனக்கு வெலவெலத்து வருகிறது. கச்சலன் வந்தபோது அரசல் பொரசலாகக் கேள்விப்படடது, நிசந்தான். யாகம் செய்கிறார் களாம். யாகம். மந்திரம் சொல்லி நீர் தெளித்துக் குதிரையை விரட்டியாயிற்றாம். அந்தக் குதிரை அடி வைத்த மண்னெல்லாம் அவர்களுக்குச் சொந்தம். மிதுனபுரிப்பக்கம் வந்திருக்கிறதாம். அவர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விரட்டி விட்டார்களாம். என்ன அநியாயம் பாரடி?”

அவள் எதுவும் பேசவில்லை.

இந்தப் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் தேனெடுக்கப் போகிறோம் என்று நின்றார்கள். உடம்பெல்லாம் பச்சிலையைப் பூசிக் கொண்டு தேனெடுக்கப் போவது விளையாட்டாக இருக்கிறது. எனக்கென்னமோ இன்று அனுப்ப வேண்டாம் என்று தோன்றிற்று. அடுத்த முறை போகலாம் என்றேன்.” என்று காரணம் புரியாமல் மழுப்புகிறாள்.

இவளுடைய அடிமனதில் கச்சலர் கூறிய ‘யாகம் மனதில் படிந்து இருக்கிறது. இப்போது கேள்விப்பட்டிருக்கும் செய்தி..?

யாகக் குதிரையுடன் ஒரு படையும் வரும்.

“அவன் வேறு என்னவெல்லாமோ உளறுகிறான். யாகம் செய்யும் ராசாவுக்கு ராணி இல்லையாம். ராணியைப் போல் தங்கத்தால் ஒரு பிரதிமை செய்து வைத்திருக்கிறார்களாம். பெரிய பெரிய ரிசி முனிவர்கள், ராசாக்கள், எல்லாரும் கூடிச் செய்யும்

யாகமாம். ஒருவருசம் ஆகுமாம்.” முதியவள் முணுமுணுத்துவிட்டு அவளைப் பார்க்கத் தலை நிமிருகிறாள். “என்னது? தாயே? என் தந்தைக்குப் பட்டத்தரசி இருக்கிறார்களே? ஊர்மிளியின் தாயார்? அவர் எதற்கு பொற்பிரதிமை செய்து வைக்க வேண்டும்?.”

அன்னை பேசவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு புற்றரைக்கு நகர்ந்து போகிறாள்.

மாதுலன் குழலூதிக் கொண்டு வருகிறான். அஜயன், விஜயன், நீலன், காந்தன் எல்லோரும் வருகிறார்கள். அரிந்த புல் கட்டைக் கூரை பின்னுவதற்கு வசதியான இடத்தில் போடுகிறார்கள்.

நாம் நீராடி வருவோம். அம்மா, இன்றைக்கு நாங்கள், எல்லோரும் இங்கு உணவு கொள்ளவில்லை. சாந்தன் வீட்டுக்குப் போகிறோம்.” உடலைத் தட்டிக் கொண்டு, ஆடிப்பாடிக் கொண்டு குளக்கரைக்குச் செல்கிறார்கள்.

பூமகளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மலைகள் கரைவது போலும், ஆறுகள் பொங்குவதுபோலும் கடல் ஊரை அழிப்பது போலும் மனசுக்குள் விவரிக்க இயலாத அச்சம் கிளர்ந்து அவளை ஆட்கொள்ளுகிறது.

“கண்ணம்மா? பிள்ளைகள் எங்கே போகிறார்கள்?”

“சாந்தன் கூட்டிப் போகிறான். யாவாலி ஆசிரமத்துப்பக்கம் போகிறார்கள். மானோ, மீனோ எதுவோ சமைத்து இருப்பார்கள். சத்தியரும் நந்த முனியும் அங்கே தானே இருப்பார்கள்? அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?”

“....அடியே, கண்ணம்மா, உனக்கு, அரண்மனையில், இளவரசுப்பட்டம் கட்டி நாடாள வேண்டிய பிள்ளைகளை இங்கே வேடக் கூட்டத்துடன் வைத்திருக்கிறோம் என்று மன வருத்தம் இருக்கிறதா? சொல்’

இறுகிப்போன உணர்வுகளை பெரியம்மை துண்டில் கொக்கிபோட்டு நெம்புவது போல் வேதனை தோன்றுகிறது.

ஒருகால் மந்திரக் குதிரை இங்கு வந்துவிட்டால்? வராது என்று என்ன நிச்சயம்? இந்தப்பிள்ளைகளுக்குத் தந்தையைப் பற்றி விவரங்களைக் கூறாமல் எத்தனை நாட்கள் இரகசியமாக வைத்திருக்க முடியும்?.

தாய்-தந்தை இவளை மண்ணில் விட்டார்கள் வளர்ந்தவர், உனக்குச் சகலமும் நாயகனே என்று தாரைவார்த்துக் கொடுத்தார். அவரோ உன் பந்தம் வேண்டாம் என்று வனத்துக்கனுப்பிக் கை கழுவிக் கொண்டார்.

இவள் தன் வயிற்றில் பேணி வளர்த்தாலும், குமரப்பருவத்து எழுச்சியில், அரும்பி மலருவது, அந்த வித்தின் பெளருசம்’ அல்லவோ? குதிரையின் வாலைப் பற்றிக் கொண்டு அடிபணிந்து போய்விடுவார்களோ? உடல் நினைக்கவே நடுங்குகிறது.

அந்நாள் கானகத்தில் இவள் நிராதரவாக விடுபட்ட போது இவளை முத்தை ஏந்தும் சிப்பிபோல் காத்துக் கொண்டுவந்தாரே, அந்த நந்த முனி என்ன சொல்வார்!

எது நீதி? எது அநீதி?

அவள் முதியவளுக்கு இலைக் கிண்ணத்தில் கூழ் கொண்டு வந்து வைக்கிறாள். கிழங்குக்கூழ். ஒரு துண்டு இனிப்புக்கட்டியும் வைத்துவிட்டு,

“அம்மா, நான் இப்போது, சத்தியமுனிவரையும் நந்த சுவாமியையும் பார்த்து விட்டு வருகிறேன். போகும் போது புல்லியோ, கும்பியோ தென்பட்டால் இங்கே வந்து இருக்கச் சொல்கிறேன். வரட்டுமா?” என்று நிற்கிறாள்.

அப்போது, கூட்டமாகத் தேனெடுக்கச் சென்ற பிள்ளைகள் வரும் கலகலப்புக் கேட்கிறது. மரங்களுக்கும் புதர்களுக்கும் இடையில் அவர்கள் ஆடிப்பாடி வரும் அசைவுகள் தெரிகின்றன.

அதற்குள்ளாகவா தேனெடுத்து வந்து விட்டார்கள்? எந்தெந்தக் காட்டுக்கெல்லாமோ சென்றலைந்து இரவில் எங்கேனும் உறங்கிவிட்டு மறுநாள் பகலிலோ, மாலையிலோ தானே திரும்புவார்கள்?.

அவர்களை எதிர் கொள்ள பூமகள் விரைகிறாள்.

அவர்கள் மூங்கிற் குழாய்களில் தேன் கொண்டு வரவில்லை. வெற்றுக்குழாய் கயிறு என்று சென்ற கோலத்திலேயே காட்சியளிக்கிறார்கள்.

‘வனதேவி. நாங்கள் ஒர் அதிசயம் பார்த்தோம்.’

மீசை அரும்பிவிட்ட பூவன், ஐம்பின்னல் போட்டிருக்கும் சிறுபிள்ளை, ரெங்கியின் மகளின் மகள், எல்லோரும் ஒரே குரலில், “குதிரை வந்திருக்குது. குதுரை...’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

இந்த வனங்களில் குதிரை என்ற பிராணி கிடையாது. அவர்கள் வரும் போதுகூட தேர்களில் காளைகள் கட்டி இழுப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள்.

‘மிதுனபுரியில் இருந்து வந்ததா?”

‘இல்லை வனதேவி! இது வெள்ளைக்குதிரை, பசுமாட்டை, காளையை விடப் பெரிசு. குச்சமாக. பெரிய வால்..” என்று இரண்டு கைகளை நீட்டி, நிமிர்த்தி சைகையாகவும் சொல் கிறார்கள். கழுத்தில் மணியாரம் போட்டிருக்கிறதாம். ஒரு பட்டுப் போர்வை போர்த்து, கால்களில் பொன் மின்ன அது நடந்து வருகிறதாம்.

தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி அது வருவதை சோமன் விவரிக்கிறான்.

“எங்கே வந்திருக்கிறது?”

“கிழக்கே. வேம்புவனம் தாண்டி மலை போல் மேடாக இருக்குமே, அங்கே தான் நாங்கள் பாறைத்தேன் எடுக்கப் போனோம். அங்கே ஆற்றுப் பக்கம் புல்தரையில் அது மேய்ந்து கொண்டிருந்தது.நாங்கள் கிட்டச் சென்று தொட்டுப்பாக்கலாம் என்று போனோமா? அது ஒர் உதை விட்டது. யாரு, இவன்தான்! பின்னே போய் சுகமாக உட்கார்ந்திட்டான்.” என்று பூவனைக் காட்டிச் சோமன் சிரிக்கிறான்.

‘இல்லை வனதேவி. அது என்னை விரட்ட வில்லை. அங்கே ஒரு குரங்கு வந்தது. அதை விரட்டியது. வனதேவி, அந்தக் குதிரை, ராசா வீட்டுக் குதிரையா?.” என்று பூவன் கேட்கிறான். அவள் கலவரமடைகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/20&oldid=1304449" இலிருந்து மீள்விக்கப்பட்டது