4

“தேவி, மன்னர் இன்று மாலை செண்பகக் குளக்கரையில் தோட்டத்துக்கு வருகிறாராம். சேதி சொல்லச் சொன்னார்...”

அவந்திகா பூமகளின் கூந்தலில் தைலம் பூசிக் கொண்டிருக்கிறாள். செய்தி கொண்டு வந்தவள் சலவைக் காரனின் மகள், கனகாவோ ஏதோ பெயர். கறுப்பிதான். அழகான நீண்ட கண்கள். பருத்த தனங்கள், தோள்கள், இவள் போட்டுக் கொண்டிருக்கும் மணிமாலைகள் மேடேறி இறங்குவதை உறுத்துப் பார்க்கும் அவந்திகா, “மன்னர் உன்னிடம் சொல்லி அனுப்பினாரா? மன்னருக்குக் கவரிபோடச் சென்றாயா என்று சொற்களைக் கடித்துத் துப்புகிறாள்.

“... ஐயோ இல்லையம்மா, பெரிய மகாராணியார் சொல்லி அனுப்பினார். நான் ஏன் அங்கெல்லாம் போகிறேன்?..”

“சரி போ...”

பூமகள் அவள் செல்லும் திசையையே நோக்குகிறாள்.

“மன்னருக்கு, மனைவியை வந்து நேரில் மாளிகையில் பார்க்க முடியவில்லையா? இந்த ஏற்பாடு மகாராணியால் செய்யப் பட்டதா? மன்னருக்குச் சுயசிந்தனை இல்லையா? சடாமுடி குலகுருவோ, வேறு யாரோ சொன்னால் மட்டுமே கைபிடித்த மனையாளைப் பார்க்க - செண்பகத்தோட்டத்துக்கு வர வேண்டுமா?”

இவள் மனசுக்குள் கேட்டுக் கொண்ட வினாக்களுக்கு எதிரொலியே போல், அவந்திகா, “மகாராணி மாதா, மகன் இந்த மாளிகைக்கு வரவேண்டாம் என்று நினைக்கிறாரா?” என்று கேட்டுக் கொண்டே சிக்கெடுத்த முடியை விரலில் சுற்றிக் கொள்கிறாள்.

“அதில்லை, செண்பகத்தோட்டம், குளக்கரை, அதன் மீன்கள், அன்னப்பறவைகள், அவருக்கு மனங்கவர்ந்த இடங்கள். அதனால் நேராக வந்து அங்கே மகிழ்ந்திருக்கலாம் என்று எண்ணுவாராக இருக்கும். எது எப்படியானலும் நாம் செய்குளத்துக்குப் போகிறோம். அங்குதான் நீராடல். அங்கே இப்போது நீர் வெதவெதப்பாக உடலுக்கு இதமாக இருக்கும்... அவந்திகா, வேதபுரி பக்கம் இப்படி வெந்நீர்க் குளங்கள். யட்சவனத்தில் பக்கத்தில் பக்கத்தில் வெந்நீருற்றும், குளிரருவியும் இருக்கும் அதிசயம் அற்புதம்...”

“இங்கும் கோமுகி ஊற்று இருக்கிறதாம். மூன்று ஊற்றுகளில் நீராட வசதி இருக்குமாம்.”

“அங்கு ஒருநாள் எல்லோருமாகப் போகலாம் ஊர்மிளாதேவி, சுதாதேவி, ராணி மாதாக்கள் எல்லோருமே போகலாம். இந்த நேரத்தில் தேவை எதுவானாலும் நிறைவேற்ற வேண்டும்...”

“அவந்திகா, என்னதான் உயர்வுகள் இங்கு இருந்தாலும், நம் வேதபுரி மாளிகையின் தாமரைக்குளம் போல் இங்கு இல்லை...”

“அது எனக்குத் தெரிந்து, மன்னர் வெட்டி நேர்த்தியாகக் கட்டிய குளம். பளிங்கு போல் தரையும் கொத்துக் கொத்தாக வண்ண வண்ணங்களாக மீன்களும் தெரியும் இக்குளத்தின் ஒரங்களில் தாமரை மலர்கள் நிறைந்து இருக்கும். செந்தாமரை, வெண்தாமரை, மாறி மாறி மலர்ந்திருக்கும்..... பிறகு, நீங்கள் வந்தபிறகு, குளத்தைச் சுற்றிச் செவ்வரளி கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும். உங்களுக்கு நினைவிருக்குமே?”

“நினைவா?...”

பூமகள் நினைவில் ஆழ்ந்து போகிறாள். நந்தமுனியின் விரலைப் பற்றிக் கொண்டு அவள் நடந்த காலம்... கால்களைப் பளிங்கு நீரில் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பாள். நந்தமுனி கல் படியில் உட்கார்ந்து ஒற்றை நாண் மீட்டிப்பாடுவார்.


நீரும் நிலமும்
வானும் கானும்
கிளியும் கீரியும்
குயிலும் மயிலும்
எல்லாம் எல்லாம் நான்... நான்...
எல்லாம் நானா?

ஆமாம். நினைத்துப் பார் குழந்தை? மீன் உன் காலை முத்தமிட்டுப் பார்க்கிறதே ஏன்? நீ தண்ணீரைத் தொட்டுப் பார்க்கிறாயே? ஏன்? வெயிலில் கை வைத்துப் பார்க்கிறாயே, ஏன்? எல்லாவற்றிலும் உயிர்த்துடிப்பு இருக்கிறது. “இந்தக் கல்லில்?” என்று படித்துறைக் கல்லைக் காட்டுவாள்.

“ஆம், இருக்கிறது. நீ செவிகளை வைத்துப் பார் தெரியும்.”

“நந்த சாமி, என் அம்மா பூமிக்கு என்னைத் தெரியுமோ இப்போது?”

“ஓ! நிச்சயமாகத் தெரியும்..!!”

“பின் ஏன் என் அம்மா, ஊர்மி, சுதா இவர்களுடைய அம்மாவைப்போல் முகம், முடி, உடம்பு கை, கால் என்று நடந்து வரவில்லை?”

“வருகிறாளே? பூமித்தாய். ரொம்ப ரொம்பப் பெரியவள். இந்த நீர் நீ தொடும் போது எப்படி இருக்கிறது? மீன் எப்படி இருக்கிறது. நீ சிரிக்கும் அழகைப் பார்க்கத்தான் இப்படி எல்லாம் மாறி உன்னைக் கவருகிறாள். அரளிப்பூவில், தாமரைப்பூக்களில், பெரிய இலைகளில் பணித்துளிகளில் மயிலின் சிறகுகளில் எல்லாவற்றிலும் தாய் இருக்கிறாள். அவள் சிறு குஞ்சாக உன்னுள்ளும் இருக்கிறாள்.”

“எனக்கு என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.”

“ஒ, நிச்சயமாகப் பார்ப்பாய், ஒரு நாள்...”

“எப்போது?....” என்று ஒருவகையான பிடிவாத ஆவலுடன் அவள் சிணுங்குவாள்.

“நீ இவ்வளவு உயரம் வளர்ந்த பிறகு!” என்று தன் தலை உயரத்துக்கு அவர் கைகளை உயர்த்துவார்....

அவ்வளவு உயரம் வளர்ந்த பின்னரும் அவள் கனவுகள் மட்டுமே வளர்ந்தன. அவள் பிறப்பின் இரகசியம் புகைக்குள் பொதிந்த சுடர்போல் அவளுக்கு எட்டவில்லை.

பூமை கணவருடன் கானகத்தில் வாழ்ந்த நாட்களில், மரஉரிகளை வேடுவர்கள் கொண்டு வருவார்கள். குளிரும் மழையுமாக இருந்த நாட்களில், அந்த ஆடைகள் போதுமானதாக இருக்காது. இளையவர் முனி கூடங்களில் இருந்து ஆடைகள் வாங்கி வருவார். முனிவருக்கத்துக்கு கூடித்திரிய மன்னர்கள் வாரி வாரி வழங்குவார்களே? கம்பளி ஆடைகள், மெல்லிய தோலாடைகள், சில பட்டாடைகள் என்று அணிந்து கொள்வாள். அருவிகளிலோ தடாகத்திலோ நீராடும்போது, நீரின் மடியே தாய் மடிபோல் தோன்றும். “தாயே? நீதான் என்னை ஈன்றாயா? உன் முகம் எப்படி இருக்கும்?” என்று நீரினுள் தன்னைப் பார்ப்பாள். இந்த நீரின் மென்மை, உன் கரங்களா? இந்தக் குளிர்மை, உன் புன்னகையா? அதிகாலையில் வந்து தொடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறாயே, அது உன் மேனியில் என் கை தொடும்போது எழும் வாஞ்சையா?

பூத்திருக்கும் தாமரைகள், உன் கண்களா?

தாயே? உன் உயிருடன் கலந்த என் தந்தையே உன் மணாளரா? என்னை எடுத்து வளர்த்த தந்தை உன் மணாளரா?.... ஊர்மி என்னை விடப் பெரியவள் என்று சொல்கிறார்கள். நீ ஒருகால் அரண்மனைப் பணிப்பெண்ணாக இருந்தாயோ? நானும் அடிமைப் பெண்ணாக ஊழியம் செய்யலாகாது என்று என்னை மன்னர் உழவோட்டும் மண்ணில் விடுத்தாயோ? மன்னர் அதற்குப் பிறகு மேழிபிடிக்கச் செல்லவே இல்லையாம்! அவந்திகாவும் விமலையும், வாசனைப் பொடிகளும் துடைக்கும் துண்டுகளும் கூந்தலை ஆற்றிக் கொள்ளும் துபக்கலசங்களும் கொண்டு வருகிறார்கள். இந்தச் செய்குளம் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கல்படித்துறையைச் சுற்றிலும் மலர்ச்செடிகள் வண்னவண்ணமாகப் பூத்திருக்கின்றன. இவற்றுக்கு வாசனை இல்லை. அருகில் உடைமாறும், கூந்தல் ஆற்றிக் கொண்டு இளைப்பாறும் மண்டபம், இந்தச் செய்குளத்தை அரண்போல் பகங்கொடிகளும் முட்புதர்களும் காக்கின்றன. மாமன்னன் தேவியர் நீராடும் இடம் அல்லவா?

குளப்படிகளில் பூமை மட்டுமே இறங்குகையில் அவந்திகாவும் விமலையும் மேலே நிற்கிறார்கள்.

நீர் மித வெப்பமாக இந்தப் பின்பனிக் காலத்துக்கு இதமாக இருக்கிறது. பூமியில் இருந்து வரும் மித வெப்ப ஊற்றில் நிரம்பும் குளம். இந்த நீரையே மடைவெட்டி இன்னொரு குளத்துக்குக்கொண்டு செல்கிறார்கள். பிறகு அது கானகப்பாதையில் சென்று பரவிவிடும்.

முதுவேனில் பருவத்தில், இங்கே ஊற்றே இருக்காது. இந்தப் பூமகள் நீராட பூமிதேவி, நீராட்டிவிடுகிறாள்.

முழங்கால் அளவே ஆழம் அடியில் சுட்ட செங்கல் பாவிய தளம். கழுத்து வரை அமிழ்ந்து கொள்கிறாள். நீர் மேல் கூந்தலைப் பரவவிடுகிறாள்.

வயிற்றில் சிசுவின் சலனம்,... அவள் மேனியில் சுகமான ஒர் அனுபவத்தைப் பரவ விடுகிறது.

“தாயே? உனக்கும் நான் வயிற்றில் இருக்கும் போது இப்படி உணர்ந்தாயா? நீ என்னைப் பூமியில் விடும்போது, உனக்குச் சோகமாக இல்லையா? அந்தச் சோகங்களே மீண்டும் என்னுருவில் உயிர்க்கின்றனவோ?”

இதமான வெம்மையில் மின்னல்கள் போல் கதிர்கள்....

ஒரு கால் அவந்திகாவே என் அன்னையோ? அவள் மார்பில் பாலருந்த விதி எப்படி விட்டது?

நரைத்த முடியை உச்சியில் சுற்றிக் கொண்டு நந்த பிரும்மசாரியுடன் வரும் பெரியன்னை. ஒற்றை ஆடையை மார்புக்கு மேலும் முழங்காலோடும் சுற்றிக்கொண்டு வருவாளே, கால்களில் முரட்டுத் தோல் செருப்பு அணிந்து இலைப் பொதிகளில் அவளுக்குப் பரிசில் கொண்டுவருவாளே, அந்த முதியவள் யார்?

வேடுவர்கள் தயாரித்த கொம்புச்சீப்பினால் அவள் அடர்ந்த முடியை வாருவாள். காட்டுப்பூக்களை விதம்விதமாகத் தொகுத்து இணைத்து மலர்க்கிரீடம் சூட்டி, கன்னத்தை வழித்து திருஷ்டிகழிப்பாள். முத்தமிடுவாள். சில நாட்களில் ஊர்மி, கதா, பணிப்பெண் தோழிகள் எல்லோருடனும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவள் வருவாள் இவளை மட்டும் அனைத்து முத்தமிடுவாள். முத்துச்சிவப்புப் பழங்களோ, வெண்ணெய் இனிப்புப் பழங்களோ, கருநாவல் கனிகளோ, இலைகளில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பாள்.

ஊர்மிக்கு அவளைக் கண்டால் பிடிக்காது. ஏன், அரண் மனையில் இருந்த வேறு பல செவிலியருக்கும் அவளைப் பிடிக்காது. அவள் வந்து விட்டால், அவர்கள், “வாடி நாம் போய் தனியே விளையாடலாம்!” என்று, அவளை மட்டும் விட்டுவிட்டு வேறு பக்கம் போய்விடுவார்கள். அந்த அம்மை கொடுக்கும் கனிகளையோ, தேன் சுளைகளையோ, தொடமாட்டார்கள்.

ஒரு நாள் சுரமா அதற்குரிய காரணம் ஒன்று கூறினாள்.

“அவள் வேடுவப்பெண்மட்டுமல்ல. நரமாமிசம் உண்பவள். நம்மைப் போன்ற இளம் பெண்களை இப்படி ஏதேனும் கொடுத்து மயக்கிக் கானக நடுவில் கொண்டு சென்று, கிழித்து...”

அவள் சொல்லும் போதே பூமகளுக்கு உடல் நடுங்கியது. அன்றிரவு, அவள் அவந்திகாவின் அருகில் படுத்திருக்கையில் அவள் முகம் தோன்றிற்று. உச்சியில் முடிசுற்றிக் கொண்டு... அந்தம்மை “நான் தான் உன் அம்மை. உன்னை மண்ணில் விட்டேன். இப்போது எனக்குப் பசி. நீ வேண்டும்...” என்று கோரைப் புற்கள் போன்ற நகங்களை அவள் முதுகில் பதிக்கிறாள்.

பூமை ‘அம்மா’ என்று அலறும் போது அவந்திகாதான் திடுக்கிட்டுத் தட்டுகிறாள்.

“குழந்தாய், கனவு கண்டாயா? இதோ பாரு அவந்திகா, இருக்கேம்மா?”

“அம்மா.அம்மா.யாரு?”

“அம்மா தா... அம்மா இதோ இருக்காங்க கூட்டிவரேன்...”

சற்று நேரத்தில் அப்பா வந்தார். பெரிய ராணி வந்தார்.

“என்னம்மா?... இதோ... இதோ அம்மா...”

மங்கலான வெளிச்சத்தில் நரை தாடி தெரியத் தந்தை. அம்மா, ராணி... குழலவிழ, கண்கள் சுருங்க... கன்னத்தில் கறுப்புப் புள்ளியுடன்...

“இது ஊர்மியின் அம்மா.”

“அப்பா, என் அம்மா, அரக்கியா? நரமாமிசம் சாப்பிடுவாளா?” அப்பா அவள் கூந்தலைத் தடவி மென்மையாக உச்சிமுகர்ந்தார்.அம்மா, ராணி மாதா அவளை மடியில் கிடத்திக் கொண்டாள்.

“யாரோ இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லி யிருக்கிறார்கள் பயந்து போயிருக்கிறாள் குழந்தை!”

“உன் அம்மா, விண்ணில் இருந்து வந்தவள். தெய்வம். உன்னைப் பெற்று இந்த மாதா மடியில் தவழவிட்டுப் போனாள். நீ தெய்வமகள்...”

“அப்பா, அரக்கர் அம்மா எப்படி இருப்பார்கள்? சுரமை சொல்கிறாள், அவர்கள் விரும்பிய வடிவம் எடுப்பார்களாம். அழகான தாய் போல் வந்து, எங்களைப் போல் குழந்தைகளைத் துக்கிச் சென்று வள்ளிக்கிழங்கைக் கடித்துத் தின்பது போல் தின்பார்களாம்!”

“சிவ சிவ...! குழந்தாய், அதெல்லாம் பொய்! சுரமாவை நான் தண்டிக்கப்போகிறேன்! கதைகளில் தான் அப்படியெல்லாம் வரும். நீ தூங்கம்மா? அவந்திகா, குழந்தையை அருகில் அனைத்துக்கொண்டு படு” அவளை அவர் தூக்கிக் கட்டிலில் பஞ்சனையில் கிடத்தியது இப்போது நடந்தாற் போல் இருக்கிறது.

அவந்திகா தன் உருண்டையான, உறுதியான கைகளால் அனைத்துக் கொண்டதும், அந்த வெம்மையின் இதம் பரவியதும் நினைவில் உயிர்க்கிறது.

அடுத்த சில நாட்களில் அந்தப் பெரியம்மா, தனியாகவே வந்தாள். தோட்டத்தில் அவந்திகா, அவளுக்குப் பொற் கிண்ணத்தில் பாலும் சோறும் ஊட்டிக் கொண்டிருந்தாள்.

ஆடைமடிப்பில் இருந்து ஏதோ ஒர் ஒலையினால் முடைந்த சிறுபையை எடுத்தாள். அந்த ஒலைப்பை நிறைய அவளுக்கு மிகவும் பிடித்த வெண்ணெய்க்கனிகள் இருந்தன.

“சோறுண்ட பின் பழம்.....”

அந்தப் பழம். மேலெல்லாம் மேடும்பள்ளமாக பச்சையாக இருக்கும். சில சமயங்களில் வெடித்து உள்ளே சதை தெரியும். வெண்மையான சதை. அதில் வெண்ணெயும் தேனும் கலந்த ருசியுடன் - சோறு, நடு நடுவே கருமையான கொட்டைகள். ஒரு கனியில் பத்துப்பதினைந்து கொட்டைகள் இருக்கும்.

தின்று முடியுமுன் பூமகளின் இதழ்கள், கன்னங் களிலெல்லாம் அந்தச் சோறு ஒட்டியிருக்கும். குளத்துப்படியில் வைத்து அவள் வாயைக் கழுவுவார்கள். அந்தக் கொட்டை களையும் கழுவுவாள். எண்ணெய் தடவினாற் போன்று பளபள வென்று, வழுவழுப்பாக இருக்கும்.

பிறகு கல்பாவியதரையில் அந்த விதைகளை ஒரு கோலமாக வைப்பார்கள். அன்றும் இந்த விளையர்ட்டை ஆடுகையில், பெரியம்மா, வண்ண வண்ணச் சிறுமலர்களைப் பறித்து வந்து விதைக்கோட்டை வடிவுக்கு உயிரூட்டினாள்.அழகிய தாமரைப்பூ உருவாயிருந்தது. புற்களில் பூத்திருந்த ஊதா நிறச் சிறு பூக்களைக் கொண்டு வந்து அந்தப் பெரிய தாமரையை உருவாக்கினாள்.

அப்போது திடீரென்று அவள் கேட்டாள்.

“பெரியம்மா? நீங்கள் அரக்கரா?”

அவர் ஒரு கணம் திகைத்ததும் நினைவில் உயிர்க்கிறது.

“அப்படி ஒன்றும் கிடையாது குழந்தை! எல்லாரும் மனிதகுலம்தான்...”

“அரக்கர்களுக்கு நரமாமிச ஆசை வந்து, கோரைப்பற்களும் குரூரவடிவமும் வந்து விடுமாம். அப்போது அவர்கள் அழகான பெண்கள் போல் வந்து குழந்தைகளைத் துக்கிச் சென்று ஒடித்து, கடித்துத் தின்பார்களாம். சுரமை இல்லை, சுரமை? அவள் சொன்னாள். அவளுடைய அம்மா அப்படிச் சொன்னாளாம். சுரமை எங்களுடன் விளையாடுவாள். மணிக்கல்லை மேலே போட்டு கீழே மூன்று தட்டு தட்டும் வரை அது கீழே வராமலிருக்கும்....”

“அப்படி எல்லாம் இல்லை குழந்தை, முன்பு எப்போதோ அப்படி மனிதர்களும் ஒநாய், புலிகள் போல் பற்களுடன் பிறந்திருப்பார்கள். ஏனெனில், அப்போது, உணவைச் சமைத்துச் சாப்பிட அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகு மனிதர்கள் அறிவால் எத்தனையோ கற்றுக் கொண்டு விட்டார்கள். தானியங்கள், நெய், தேன், பால் எல்லாம் நமக்குக் கிடைக்கின்றன. அதனால், யாருக்கும் அப்படிக் குரூரம் வராது. வேறு வேறு வடிவம் எடுக்க முடியாது. வேடம் போட்டுக் கொண்டு நாடகம் தான் ஆடுவார்கள். அதுவும், பெண்கள் அரக்கியர்கள் வடிவம் மாறி குழந்தைகளைத் தூக்கிச் சென்று தின்பதெல்லாம் முழுப் பொய். ஏன் தெரியுமா?”

ஏன்?...”

“அவள் பெரியவளாவாள், அவளை ஒரு நல்ல மனிதன் திருமணம் செய்து கொள்வான். அன்போடு இருப்பார்கள். அப்போது அவளும் கருப்பம் தரிப்பாள். அவள் வயிற்றில் ஒரு குழந்தை உயிர்க்கும். அவள் உலகம் முழுவதையும், அன்பாய், தாய் போல் நினைப்பாள்...”

அவளுக்கு நீரின் வெம்மையில் உடல் முழுதும் ஒரு பரவசச் சிலிர்ப்பு பரவுகிறது.

‘அம்மா! உனக்கு நான் வயிற்றில் இருக்கும்போது, இப்படி உணரவில்லையா? ஏன்? உலகம் முழுவதையும் தாங்கும் தாய் போன்ற பரிவு வரவில்லையா? ஏன்? அதனால்தான் பூமியில் விட்டாயோ?...’

இன்னொரு நாளின் நினைவு உள்ளத்திரையில் படிகிறது.

ஊர்மி, சுதா, சுரமை, எல்லோருடனும் கண்ணாமூச்சி ஆடினார்கள். முதிய சண்டி அவள் கண்களைப் பொத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது, பெரியம்மா தோட்டத்துக்கு வந்து விட்டார். முரட்டுச் செருப்பொலி கேட்டதுமே, சண்டியின் பிடி தளர்ந்தது.

“இந்த ராட்சசி, இப்படிக் குழந்தைகளை வந்து வந்து கெடுக்கிறாள். இவள் கபடம் மன்னருக்கும் தெரியவில்லை; மாதாவுக்கும் தெரியவில்லை!...” என்று முணுமுணுத்து, உரத்த குரலில் ‘அடியே சுரமா? எல்லாரையும் உள்ளே கூட்டிச் செல்! பனிக்காற்று உடலுக்கு நல்லதில்லை கண்ட காட்டுப் பழங்களையும் வாங்கிக் கொள்ளாதீர்கள்!” என்று எச்சரித்தாள்.

ஆனால் பெரியம்மா தயங்கவில்லை.

‘குழந்தைகளா, அத்தையுடன் கண்ணாமூச்சி விளையாடுறீங்களா? என்னையும் சேத்துக்குங்கம்மா’ என்று அருகில் வந்து அவளைப் பற்றி குனிந்து உச்சி முகர்ந்து கண்ணேறு கழித்தாள்.

சண்டியை நேராகப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

“என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா? நான் அரக்கி என்ற பயமா? அப்படி ஒரு தனிக்குலம் இல்லை தாயே! கொன்று தின்னும் புலியும் விஷம் கக்கும் பாம்பும் கூட அரக்க குலம் இல்லை; உயிர்க்குலம். நாமெல்லாரும் மனிதர்குலம். நம்மிடத்தில், ‘அரக்கர், தேவர் என்ற இரண்டு குலங்களும் ஒளிந்திருக்கின்றன. நாம் பயப்படும்போது, கோபப்படும்போது, பொறாமைப்படும் போது, பேராசை கொள்ளும்போது, அடுத்தவருக்குத் தீங்கு நினைக்கும் போது, நமக்குள் இருக்கும் அரக்கர் வெளிப்படுவார். ஆனால், இன்னொருவர், தேவர், ஒளிந்திருக்கிறாரே? அவரால் இந்த அரக்கரைத் தலையில் தட்டி அடக்கிவிட அன்பு, அதுதான் சத்தியம், அதுதான் இமிசை செய்யாமை... இந்த ஆயுதத்தை அந்த அரக்கருக்கு நினைவுறுத்தி, “சாந்தமடை அரக்கா, நீயும் தேவராகி விடுவாய்!” என்று அமுக்கி விடுவார்...” என்று கதைபோல் அந்த அம்மை சொல்லும்போது, அவை அமுதமொழிகளாகவே இருக்கும்.

“அப்படியானால், நம் உள்ளே இரண்டு பேர் எப்போதும் இருக்கிறார்களா?”

“ஆம் கண்ணே. அரக்கருக்கு நாம் தீனி போட்டால் அவர் உரிமை பெற்று விடுவார். பொறாமை, இம்சை, பேராசை, சுயநலம், இதெல்லாம் அவர் தீனிகள். இதனால் நமக்கு மகிழ்ச்சியே வராது; சிரிக்கவே மாட்டோம். தூக்கத்தில்கூட கெட்ட கனவுகள் வரும்... அதனால் அன்பு பெருக, யாருக்கும் தீங்கு நினைக்காமல், சுயநலம் பாராட்டாமல் மற்றவர் சந்தோசம் பெரியதாக எண்ணினால், அரக்கர் எழும்பவே மாட்டார். உணவு இல்லையெனில் எப்படித் தலை தூக்க முடியும்! குழந்தைகளே. தின்ன வரும் புலிகூட சத்தியத்துக்குக் கட்டுப்படும்; அன்பின் வடிவமாகும்!”

“எப்படி?...”

“ஒரு கதை சொல்லட்டுமா?”

“சொல்லுங்கள் பெரியம்மா”

‘இது கதை இல்லை. உண்மையில் நடந்ததுதான்.

ஒரு சமயம் ஒரு புலிக்குப் பசித்தது. அந்தப் பசியைப் போக்கிக் கொள்ள அதன் கண்களுக்கு ஒரு மிருகம்கூட அகப்படவில்லை. பசியரக்கன் அதன் உள்ளே எழும்பியதால் அதற்குக் கோபத்தைத்தான் தீனியாக்க முடிந்தது. ஆத்திரத்துடன் உறுமிக் கொண்டு வருகிறது. அப்போது ஆற்றுக்கரைப் புற்றடத்தில் வெள்ளை வெளேரென்று ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. புலி உடனே ஒரே எழும்பு எழும்பிப் பாய முனைந்தது. சாதாரணமாக யாருக்கும் அப்போது என்ன தோன்றும்?... அச்சம்... அச்சம் தான் தோன்றும். முன்பே சொன்னேனில்லையா? அச்சமும் ஒருவகையில் அரக்கனுக்குக் கொடி பிடிக்கும் குணம்தான். அது வந்தால் மனசு குழம்பிப் போகும். நகரக்கூடத் தெரியாது. உடனே அழிவுதான். புலியின் வாய்க்குள் போவதற்குத் தப்பி, பசு, ஒட முயற்சி செய்யவில்லை. மாறாக, நிலைத்து நேராகப் புலியைப் பார்த்து, நண்பரே, என்று கூப்பிட்டது. “கொஞ்சம் நில்லுங்கள். நான் உமக்கு உணவாவதில் ஒரு தடையும் இல்லை. நீங்கள் உங்கள் குட்டிகளை விட்டு, உணவு தேட வந்திருக்கிறீர்கள். எனக்கு உங்கள் பசி, உங்கள் தாபம்

எல்லாம் புரிகிறது... எனவே ஒரே ஒரு விண்ணப்பம்...” என்று இறைஞ்சியது.

“என்ன அது?” என்று புலி உறுமிற்று.

“ஆற்றுக்கு அக்கரையில் என் கன்று நிற்கிறது. அங்கே எனக்கு உணவு கிடைக்காததால், அதற்கு வேண்டிய பால் என்னிடம் சுரக்கவில்லை. இந்த ஆற்றைக் கடந்து வரும் வலிமை அதன் கால்களுக்கு இல்லை. நான் இங்கே வாயிறார மேய்ந்துவிட்டு அக்கரை சென்று கன்றுக்குப் பால் கொடுக்க வேண்டும். அது தானாக உணவு கொள்ளும் வரையில் அதற்கு உணவூட்டிப் பாலிப்பது தாயாகிய என் கடமை. இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறந்து தாயாகும் பேறு பெற்றவர் அனைவரும் இதை உணருவார்கள். இந்தப் பூமியே நம் அனைவருக்கும் தாய். இந்தப் புல்லை, தாவர உயிர்களைத் தந்து எங்களைப் பாலிக்கிறார்கள். பூச்சி, புழு, பறவை, மான், முதலிய விலங்குகள் எல்லாமும் அப்படி ஒர் அன்பு வளையத்தில் இயங்குகின்றன.என் கன்றை நான் எப்படிப் பார்க்கிறேனோ, அப்படியே உங்களையும் பார்க்கிறேன். ஆதலால் நீங்கள், எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் அக்கரை சென்று, என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு உங்களிடம் வருவேன்... நீங்கள் உங்கள் பசியைப் போக்கிக் கொள்ளலாம்; குட்டிகளின் பசியையும் தீர்க்கலாம்” என்றது. பசு.

அதற்குப் புலி, “நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்பதை நான் எப்படி நம்புவேன்?..” என்று கேட்டது.

“நீங்கள் என்னைத் தொடர்ந்து வந்து பாருங்கள். நிச்சயமாக நான் வாக்குத் தவறமாட்டேன். இது சத்தியம்” என்று வாக்குக் கொடுத்தது பசு இந்த உலகை வாழ வைப்பதே சத்தியம்தான். மழையும், காற்றும், வெயிலும், ஆறும், பசுமையும் சத்தியத் தினால்தான் நிலைக்கின்றன. வானவீதியில் உதிக்கும் சூரியன் சத்தியம். சத்தியம் செத்தால் எல்லாம் அழியும் என் கன்றுக்குப் பால் ஊட்டிவிட்டு நான் திரும்பி வந்து உணவாவதால் அழிந்துவிட மாட்டேன். என் கன்று அந்த சத்தியத்தால் வளரும்.

எனவே என்னை நம்புங்கள்” என்று வாக்குக் கொடுத்துவிட்டு அக்கரை சென்றது. பசு.

புலி, எதுவும் செய்ய இயலாமல் நின்றது. பாய முற்பட்ட அதன் அரக்க வேகம் கட்டுப்பட்டுவிட்டது. அக்கரையில் பசு, கன்றை முகர்ந்து நக்கிக் கொடுத்து பாலூட்டியது. “குழந்தாய், அக்கரையில் ஒரு புலியின் பசி தீர்க்க நான் வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். சற்று நேரத்தில் நான் இரையாகப் போகிறேன்.நீ நன்கு பசியாறி, தானாக உணவு தேடிக்கொள்ள உறுதி கொள். சத்தியம் தவறாமல் வாழ்க்கையில் கருணை வடிவாக நில்” என்று, அதை முகர்ந்து ஆசி கூறிவிட்டுப் பசு புலியை நோக்கி ஆறு கடந்து வந்தது.

“புலியே, என்னை உணவாக்கிக் கொண்டு பசியாறுங்கள்!” என்றது. புலி உடனே, “பசுவே, நீ சத்தியத்தின் வடிவம் என்னுள் கிளர்ந்த பசி அடங்கி விட்டது. பசி இல்லாத போது, நான் யாரையும் கொல்ல மாட்டேன்” என்று கூறிவிட்டு உடனே திரும்பி விட்டது.

“எப்படி கதை?”

அந்தக் கதை எத்துணை உயிர்ப்புடன் அவளுடைய மனதை ஆட்கொண்டது! பசுவாகவும் புலியாகவும், சித்திர விளையாட்டு விளையாடியிருக்கிறாள். கோசல அரசகுமாரர் அந்தப் பழைய வில்லை ஒடித்துவிட்டார் என்ற சேதி கேட்டபோது, அந்தப் புலி திரும்பிப் போய் விட்டதை நினைத்துக் கண்ணிர் துளிக்க மகிழ்ந்தாளே!...

“தேவி. மன்னர் தங்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்!” படிகளின் மேல், பூஞ்செடிகளுக்கிடையே இருந்து தெரிவிப்பவள்... ஜலஜை.

அம்பு மானின் மீது பாய்ந்துவிட்டாற் போன்ற குலுக்கலுடன் அவள் எழுந்திருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/4&oldid=1304395" இலிருந்து மீள்விக்கப்பட்டது