வேங்கடம் முதல் குமரி வரை 4/004-032

4. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனிடம் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி, மகேந்திரவர்மனுக்குப் பின் நரசிம்மவர்ம பல்லவனிடமும் சேனாதிபதியாக இருந்திருக்கிறார். சாளுக்கிய மன்னன் புலிகேசிமேல் நரசிம்மவர்மன் எடுத்த படையெடுப்பில் முன்னின்று சேனையை நடத்தியிருக்கிறார். சாளுக்கிய மன்னன் தலை நகரான வாதாபி மீது படையெடுத்து அந்தப்போரில் வெற்றி கண்டு அந்த நகரைத் தீக்கிரையாக்கியிருக்கிறார். வாதாபி நகரில் அகப்பட்டதையெல்லாம் சுருட்டிக் கொள்ளத் தன் படைவீரர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான் நரசிம்மவர்மன். எல்லாப் படை வீரர்களும் பொன்னையும் பொருளையும் கொள்ளை கொண்டு போகிறபோது, பல்லவ சேனாதிபதி பரஞ்சோதி மட்டும் பொன்னிலும் பொருளிலும் மோகம் கொள்ளாமல், அந்த நகரத்தின் கோட்டை வாயிலில் இருந்த கணபதி விக்ரஹத்தை மட்டும் தம்முடன் எடுத்துச் செல்ல மன்னனிடம் அனுமதி கேட்டிருக்கிறார். மன்னனோ! அனுமதி கொடுக்கத் தயங்கவில்லை. அவ்வளவுதான்: வாதாபிக் கோட்டையிலுள்ள கணபதி பெயர்த்தெடுக்கப்பட்டார். நாடு திரும்பிய வெற்றி வீரர்களோடு வீரராக, ஏன் அந்த வீரர்கள் தலைவராகவே தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டு விட்டார் பரஞ்சோதி, நேரே இந்த விநாயகரைத் தம் சொந்த ஊரான திருச்செங்காட்டாங்குடிக்கே கொண்டு வந்து விட்டார். அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்தும் வைத்து விட்டார். வாதாபி கணபதி தமிழ் நாட்டுக்குள் வந்து நிலைபெற்றது இப்படித்தான்.

திருச்செங்காட்டாங்குடியில் வாதாபி கணபதியைப் பரஞ்சோதியார் (ஆம்! பின்னர் தம்மைச் சிறுத்தொண்டன் என்று அழைத்துக்கொண்டவர்) பிரதிஷ்டை செய்த திருநாளன்று பல்லவ மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருக்கிறான். பரஞ்சோதியாருடைய கைங்கரியத்தைப் பாராட்டியிருக்கிறான். ஆனால் பரஞ்சோதியாருக்கு மட்டும் ஒரு சிறு கவலை. தம்மைப் போல் கணபதியின் பேரில் காதல் கொள்பவர்கள் யாராவது, தாம் வாதாபியிலிருந்து பெயர்த்தெடுத்து வந்தது போலவே, செங்காட்டாங்குடியிலிருந்தும் பெயர்த்து எடுத்தச் செல்லலாம் அல்லவா என்பதுதான், பரஞ்சோதியாருடைய கவலையை உணர்ந்திருக்கிறான் நரசிம்மவர்மன். 'அப்படி நடக்காது, கவலையே வேண்டியதில்லை' என்று அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறான்.

என்றாலும், இந்த எண்னம் அவன் உள்ளத்தில் ஊன்றி நின்றிருக்கிறது. தென்னாடு வந்த பல்லவ மன்னன். தன் தந்தை மகேந்திரவர்மன், திருச்சி, சித்தன்னவாயில் முதலிய இடங்களில் கட்டிய குடைவரைக்கோயிலையும் தீட்டிய சித்திரங்களையும் காண விரைந்து ஒரு சுற்றுப் பிரயாணத்தைத் தொடங்கியிருக்கிறான். அந்தப் பிரயாணத்தில்தான், இன்றைய காரைக்குடியை அடுத்த குன்றக்குடியிலிருந்து மேற்கு நோக்கி நடந்திருக்கிறனான். அப்படி நடந்தவன் வழியில் ஒரு சிறிய குன்றைக் கண்டிருக்கிறான். ஆம்! இந்தச் சிறிய குன்றில் ஒரு கணபதியைச் செதுக்கி வைத்துவிட்டால், அசைக்க முடியாதவராக அமர்ந்து விடமாட்டாரா அவர் என்று எண்ணியிருக்கிறான். அவ்வளவுதான்; அவன் எண்ணத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்கள் உடன் வந்த சிற்பிகள். மலையைக் குடைவது என்பதுதான் அவர்களுக்கு எளிதான காரியம் ஆயிற்றே. குடைவரைக் கோயில் ஒன்று உருவாகி விட்டது. அங்கு தேசிக விநாயகப் பிள்ளையார்-கற்பக விநாயகர், அசையாத பிள்ளையாக, அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்து விட்டார். இருவருக்கும் இடையில் சிற்பிகள் நரசிம்மவர்ம பல்லவனது திருவுருவையுமே செதுக்கிநிறுத்தி விட்டார்கள். அன்று முதல் இங்கு பிள்ளையார் ஆதிக்கம் செலுத்த முற்பட்டுவிட்டார். ஈக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூரின் பெயர் அன்று முதல் பிள்ளையார்பட்டி என்றே நிலைத்து விட்டது. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் உருவான கதை இப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் குடைவரைக் கோயிலில், பிள்ளையார் திரு உருவம் அசைக்க முடியாத திரு உருவமாக அமைக்கின்ற வாய்ப்பு ஏற்படாதல்லவா? அந்தப் பிள்ளையார் பட்டிக்கே செல்கிறோம் நாம் இன்று.

பிள்ளையார்பட்டி ஒரு சிறிய ஊர், ராமநாதபுரம் ஜில்லாவில், காரைக்குடியிலிருந்து திருப்புத்தூர் செல்லும் வழியில் காரைக்குடிக்கு மேற்கே எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. வழியில்தான் குன்றக்குடி முருகன் கோயிலும் இருக்கிறது. பெயரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், குன்றக்குடி முருகன், மலைமேல் நிற்பவன் என்று. மயில்போல் சரிந்து நீண்டிருக்கும் மலை மேல் கோயில் இருக்கிறது. ஏறுவது சிரமமாக இராது. ஆதலால் அண்ணனைத் தரிசிக்கப் போகும் இடத்தில் தம்பியையும் தரிசித்துவிட்டே மேல் நடக்கலாம். பிள்ளையார் பட்டிக்குத் திரும்பும் வழியில் பலகை நட்டு வழி காட்டியிருப்பார்கள் நெடுஞ்சாலைப் பொறியாளர். ஊருக்கு மத்தியில் கோயிலும் குளமும். குளத்தைச் சுற்றி அகன்ற வீதி.

நரசிம்மவர்மன் காலத்தில் உருவான குடைவரைக் கோயிலை மூலக் கோயிலாகக் கொண்டு பின்னர் இந்தக் கோயில் விரிந்து வளர்ந்திருக்கிறது. இப்படி விரிந்த கோயில் தான் இன்று மகாமண்டபம், ராஜகோபுரம் முதலியவைகளுடன் பெருங் கோயிலாக இருக்கிறது. இக்கோயிலில் கோயில் கொண்டிருப்பவர்தான் மருதங்குடி நாயனார். இந்த மருதங்குடி நாயனார் கோயிலை விரிவாகவும் அழகாகவும் கட்டி முடித்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார். கோயிலைக் கட்டி கோயிலுக்குமுன் ஒரு நல்ல குளத்தையும் வெட்டி, இவற்றைச் சுற்றி நல்ல நல்ல விடுதிகளையம் அமைத்து, தக்க முறையில் பாதுகாத்து வருகிறார்கள் பதினாறு காரியக்காரர்கள். இக் காரியக்காரர்கள்தான் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார் என்ற கோத்திரத்தவர். இவர்களே கோவில் பூசை படித்தரம் முதலியவை சிறப்பாக நடைபெற (கோயில் வருமானம் போதாமல் இருப்பதால்) தங்கள் சமுதாய நிதியிலிருந்து கொடுத்து உதவுகிறார்கள்.

இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் இரண்டு பிரசித்தம். ஒன்று மார்கழித் திருவாதிரைத் திருநாள், இரண்டு விநாயக சதுர்த்தி, திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேதராக நடராஜர் வீதி உலா வருவார். அன்று சிவகாமசுந்தரியின் ஊடலைத் தீர்க்க, நடராஜர் எழுதிக் கொடுக்கும் பிடிபாடு மிக்க அழகானது. அதாவது தனக்கு எவ்வளவு சொத்திருக்கிறது என்பதை எல்லாம் அடுக்கடுக்காய் எடுத்துக் கூறிச் சிவகாமியின் ஊடல் தீர்க்க விரைவார். சிவகாமியின் ஊடல் தீர்கிறதோ இல்லையோ, கோயிலின் நிலபுல விவரம் முழுதும், ஆண்டுதோறும் மார்கழி அறுவடையில் ஊரார் எல்லாம் அறியப் படிக்கப் பெறுவது என்பது வரவேற்கத்தக்க தொன்றுதானே! இந்தக் கோயிலின் பெருந் திருவிழா விநாயக சதுர்த்தியே. ஆம்! பிள்ளையார் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்தக் கோயிலில் சதுர்த்தி பெரிய விழாவாகக் கொண்டாடப்படுவது ஆச்சரியமில்லைதான். விழா மற்ற ஊர்க் கோயில்களில் எல்லாம் நடைபெறுவது போல, பத்து நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடக்கும் விழாதான் இந்தக் கோயிலுக்கே உரிய தனிச் சிறப்போடு நடத்தப்பெறுகிறது.

விழாவைப் பற்றிச் சொல்லுமுன் சதுர்த்தி விரதத்தைப் பற்றியும் அவ்விரதம் ஏற்பட்ட விதத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை.

ஒரு நாள் விநாயகர், தேவர்கள் எல்லாம் கண்டு களிக்கக் கைலாயத்திலே நர்த்தனம் செய்திருக்கிறார். சரிந்த தொந்தி, மோதகம் ஏந்திய கை, குறுகிய கால்கள் இவைகளுடன் ஆடிய விநாயகரது அல்லது விநாயகரைப் போன்ற உருவும் படைத்தவர்கள் நடனம் ஆடுவதைக் கண்டால், சிரிக்காமலிருக்க முடியுமா? ஒன்று சந்திரன், சிரிப்பை அடக்கியிருக்க வேண்டும். இல்லை. அப்படி சிரித்ததற்கு ஒரு பொய்யையாவது கற்பனை பண்ணிச் சொல்லத் தெரிந்திருக்க வேனும், இரண்டும் செய்யவில்லை. வாய்விட்டே சிரித்துவிட்டான் அவன். அவ்வளவுதான்; கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது விநாயகருக்கு. அதனால் பிடி சாபம் என்று கோபமாகச் சந்திரனைச் சபித்தே விட்டார். சாபமோ, அன்று முதல் சந்திரன் உருவை ஒருவருமே பார்க்கமாட்டார்கள். கண்ட்வரும் நிந்தை செய்து ஒதுக்கி லிடுவார்கள். அத்தகைய நீசனாக அவன் ஆகட்டும் என்பதுதான் சாபம். நல்ல கலை பொருந்திய உருவம் கொண்ட சந்திரளோ, அன்று முதல் கலை இழந்து தேய்ந்து தேய்ந்து மெலிந்தான் கண்டவரும் வெறுத்து ஒதுக்கினர், வெட்கத்தால் உருவம் குன்றிய சந்திரன் பிரமனிடம் சென்று முறையிட்டான். சாபமிட்டவர்தால் சாப விமோசனத்தையும் அருளவேண்டும் என்று சொல்லிச் சந்திரனை விநாயகரிடத்தில் அழைத்துச் சென்றான் பிரமன், சந்திரனும் விநாயகர் திருவடியில் விழுந்து வணங்கி, தெரியாது செய்து பிழையை மன்னித்தருள வேண்டினான். பிரம்மாவும் அவனுக்காகட் பரிந்து பேசினார். 'தவறு செய்ததற்குத் தண்டனை வேண்டியதுதான் ஆனால் அது நிரந்தரத் தண்டனையாக இருக்கவேண்டாமே வருஷத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே அந்தத் தண்டனையை அவன் அனுபவிக்குமாறு அருள் புரியலாமே' என்றார் பிரமன் விநாயகரும் மனம் இரங்கிச் 'சுக்ல சதுர்த்தியில் உன்னைச் காண்பவர்களெல்லாம் வீண் அபவாதம் அடையட்டும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் என்னைப் பூஜித்தால் அந்த அபவாதம் நீங்கட்டும்' என்றும் சாபத்தை மாற்றி அருளினார் இது காரணமாகத்தான் வளர்பிறையில் சதுர்த்தியன்று! இன்றும் மக்கள் சந்திரனைப் பார்க்காது ஒதுக்குகிறார்கள். அப்படித்தப்பித் தவறிப் பார்ப்பவர்களும், ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் விரதம் அனுஷ்டித்து விநாயகரை வணங்கிச் சாப விமோசனம் பெறுகின்றனர்.

இப்படித்தான் சதுர்த்தி விரதம் அன்று முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது என்று பெறுகின்றன புராணங்கள், அதிலும் இந்த விரதம் பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய முக்கிய விரதம் என்றும் சொல்கிறது. காரணம் இந்த உலகத்தில் ஆண்களை விடப் பெண்களே காரணம் இல்லாமல் வீண் அபவாதத்துக்கு உள்ளாகிறார்கள். ஆதலால் அவர்கள் மேல் ஏற்படும் வீண் அபவாதங்கள் நீங்கவும் அவர்கள் மிகவும் விரும்பும் பிள்ளைப்பேறு முதலிய எண்னங்கள் சித்திபெறவும் சித்தி விநாயகரை அவர்கள் விரும்பிய சதுர்த்தி அன்று விரதம் அனுஷ்டித்து வணங்குதல் வேண்டும். வருஷம் முழுதும், இருபத்து நான்கு சதுர்த்தியிலும் விரதம் அனுஷ்டிப்பதோடு, ஆவணி மாதம்

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
சுக்ல சதுர்த்தியில் விரதபூர்த்தி செய்து விநாயகரைத் தொழுதால் பெறற்கரிய பேறுகளையெல்லாம் பெறலாம் என்பதுதான் மக்கள் நம்பிக்கை.

பிள்ளையார் பட்டியில் சதுர்த்தி விரதம் எல்லோராலும், சிறப்பாகப் பெண்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வருஷம் முழுதும் -ஆம், இருபத்து நான்கு சதுர்த்திதிதியிலும் விரதம் அனுஷ்டித்தவர்கள் எல்லாம், வருஷக் கடைசியல், ஆவணி மாதம் சுக்லபக்ஷ, சதுர்த்தியன்று விரத பூர்த்தி செய்கிறார்கள். அன்று பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் சந்நிதியில் வருஷம் முழுதும் விரதம் அனுபேடித்த பெண்கள் ஒன்று கூடுகிறார்கள். விரதபூர்த்தியை செய்ய பேந்திருக்கும் பெண்கள் எத்தனை பேரோ அத்தனை குடங்கள், ஆம் நானூறு ஐந்நூறு பேர்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒன்று என்று குடங்கள் வைத்து ஒவ்வொரு குடத்தினுள்ளும் ஒவ்வொரு வெள்ளிப் பிள்ளையாரையும் போட்டுக் குடத்தில் தண்ணீர் நிரப்பிப் பூசனை புரிகிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்யொரு குடம் எடுத்து அந்தக் குடத்தில் உள்ள தண்ணீராவ் அபிஷேகம் செய்து கொள்கிறார்கள். நனைந்த உடலோடும், உடையோடும் பிள்ளையார் சந்நிதியிலே விழுந்து வணங்கி, எழுந்து நின்று தீப ஆராதனையைக் கண்டு களிக்கிறார்கள். அன்று கோயிலில் கொடுக்கும் பிரசாதமாகிய மோதக நைவேத்தியத்தை மட்டுமே அருந்துகிறார்கள். இப்படி விரதம் அனுஷ்டித்து விரத பூர்த்தி செய்கின்ற பெண்கள் எல்லாருக்கும் அவரவர்கள் பிராத்தனை செய்து கொண்ட நலங்களையும் பெறுகிறார்கள். பெண்கள் மட்டும் என்ன- ஆண்களுமே இந்தச் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் என்ரிய எண்ணியாங்கு எய்துவர்.

சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்பும் எல்லோரும் பிள்ளையார் பட்டிக்குப் போகலாம். அதோடு பல்லவர் காலத்தில் சிற்பக்கலை எப்படியெல்லாம் வளர்ந்தோங்கியது என்று கண்டறிய இயலும், அதற்கு மேல் இந்தக் குடைவரைக் கோயிலில் உள்ள பிள்ளையார் எப்படி மற்ற தமிழ் நாட்டுப் பிள்ளையார் திரு உருவங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதும் தெரியும். இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித் தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர் இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். அங்குசமும், பாசமும் இல்லாமலே அடியவரை ஆட்சி கொள்ளும் சக்தி உடையவராக இருக்கிறார். வயிற்றை ஆசனத்தில் படியவிடாமல் அர்த்த பத்ம ஆசனத்திலேயே கால்களை மடித்திருக்கச் செய்து கொள்கிறார். வலக்கரத்தில் மோதகம் தாங்கி இடக்கரத்தை இடையில் பொருத்திப் பெருமிதத் தோற்றத்தோடு காட்சி கொடுத்திருக்கிறார். ஆம், ஆதி நாளிலே உருவானவர்-இப்படி இரண்டு திருக்கரங்களோடு இருந்துதான், பின்னர் நாள்கு திருக்கரங்களோடு எழுந்த, நடந்து, நின்று நடமாடி, மூவிகத்திலும், சிம்மத்திலும், ஏறிச் சவாரி செய்து கலைஞன் சிந்தனையிலே வளர்ந்திருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர் முடிவு செய்யலாம்.

இதோடு, இந்தக் கோயிலில் இருக்கும் இரண்டு செப்புச் சிலைகள் மிக்க அழகு வாய்ந்தவை. அவை தாம் சந்திரசேகர மூர்த்தியும் அவரது துணைவியும். நல்ல சோழர் காலத்துச் சிலை. ஆயிரம் வருஷ காலத்துக்கு முன்பே உருவாகியிருக்க வேண்டும். நிற்கும் நிலையையும் மணிமகுடத்தையும் பார்த்ததுமே எளிதாகச் சொல்லிவிடலாம். மானும் மழுவும் தாங்கிப் பிறையும் மகுடமும் அணிந்து அபய கரத்தோடு அருள்பாலிக்கும் திரு உருவாக அமைந்திருக்கறார். ஆணுக்குப் பெண் அழகு என்பதுபோல், அன்னை பார்வதி அவரைவிட அழகாக இருக்கிறாள்.

கோயில் பிரும்மாண்டமான அளவில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. ராஜ கோபுரம் வேறு நீண்டு உயர்ந்திருக்கிறது. இன்றையச் சிற்பிகளின் வேலைப்பாடுகளைத் தூண்களில், விதானங்களில் எல்லாம் காணலாம். இங்குள்ள பிள்ளையார் பேரருளைச் சொக்கலிங்க ஐயா அவர்கள் பாடியிருக்கிறார்கள்.

நாமும் பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரை வணங்கிப் பெறற்கரிய பேறுகளையெல்லாம் பெற்றுத் திரும்பலாம்.