வேங்கடம் முதல் குமரி வரை 4/005-032

5. திருப்புத்தூர் திருத்தளிநாதர்

றைவனின் தாண்டவத் திருவுருங்கள் ஏழு என்பர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து செயல்களை இறைவன் செய்கிறான், ஒவ்வொரு செயலைச் செய்யும் போது ஒவ்வொரு தாண்டவம் புரிகிறான் என்றும் அறிவோம். 'ஐந்து கிருத்யங்களுக்கும் ஐந்து தாண்டவக் கோலம்தானே இருத்தல் வேண்டும். ஏழு என்ன கணக்கு?' என்று நீங்கள் கேட்பீர்கள். ஐந்து செயல்களுக்கும், ஐந்து தாண்டவம், அதில் காத்தலை இரண்டு கூறாய்ப் பிரித்த இன்பக் காத்தல், துன்பக் காத்தல் என்று பாகுபாடு பண்ணி, ஐந்தை ஆறாக்கியிருக்கிறார்கள். பின்னர் எல்லாச் செயல்களையும் ஒருமிக்கச் செய்யும் ஆனந்தத் தாண்டவமே, இத்தாண்டவ வடிவங்களுக்கெல்லாம் சிகரமாகிறது. இந்தாண்டவ வடிவங்களை இறைவன் தன் துணைவியாம் பார்வதிக்குக் கூறியதாக வரலாறு.

மாதவர் பரவும் ஆனந்த நடனம்
வயங்குறு சந்தியா நடனம்
காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே
கவின்பெறு திரிபுர நடனம்
ஓதுமாகானி தாண்டவம், முனிதாண்டவம்
ஓடும் உலக சங்கார
மேதகு நடனம் இவை இவைநாம்
விதந்த தன்னுமம் என்று உணர்த்தி

என்பது பாட்டு, இவற்றில் கௌரி தாண்டவத்தை அன்னை பார்வதியின் வேண்டுகோளுக்காகவே ஆடிக்காட்டியதாக ஐதீகம். அது காத்தல் இல்லாதிருக்குமா? தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும் மதுரை வெள்ளியம்பதியிலே சந்தியா தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சிளைத்திர சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு ரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாமிர சபையிலே முனிதாண்டவத்தையும் புரிகிறார் என்று அந்தந்தத் தல வரலாறுகள் கூறும், அப்படியானால் கௌரி தாண்டவம் ஆடிய இடம்தான் திருப்புத்தூர் சித்சபை என்று கண்டோம், இங்குள்ள சித் சபையில் இன்று நின்று நடனம் ஆடுபவர் ஆனந்த நடராஜர்தான்.

சிவசக்தியான கௌரி. பெருமானோடு ஊட, அவள்தன் ஊடல் தீர்க்க இந்தத் தாண்டவத்தை ஆடினார் இறைவன் என்பது புராணக் கதை, கௌரியம்மையார் தவங்கிடந்து இத்தாண்டவத்தைக் காணப்பெற்றார் என்பதும் ஒரு வரலாறு. இந்தத் தாண்டவக்கோலம் சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் என்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. நான்கு கைகளுடனும் வலது கையில் பாம்பையும் ஏந்திய கோலம். இன்னும் ஒரு, கரம் அபயகரம், மற்றொன்று கஜஹஸ்தம். முயலகன் பேரில் ஊன்றிய திருவடி எடுத்த பொற் பாதம். சுழன்று ஆடாத நிலை. இத்தகைய அற்புதக் கோலத்தில் ஆடிய தலமே திருட்புத்தூர். அத்தலத்துக்கு செல்கிறோம் நாம் இன்று.

தமிழ்நாட்டில் திருப்புத்தூர்கள் இரண்டு. ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில், மற்றொன்று வட ஆற்காடு மாவட்டத்தில், இரண்டில் பாடல் பெற்ற தலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதே. இந்த ஊர் காரைக்குடி ஸ்டேஷனிலிருந்து நேர் மேற்கே பதினைந்து மைல் தொலைவில் இருக்கிறது. மதுரைக்கு வடகிழக்கே 40 மைல் தூரம். மதுரையிலிருந்து செல்ல விரும்பினால் ஒன்று சொந்தக் கார் இருக்கவேண்டும். இல்லை, பஸ் பிரயாணத்தோடு திருப்தி அடைய வேண்டும், காரைக்குடியிலிருந்து காரில் சென்றால் வழியில் குன்றக்குடி முருகனையும், பிள்ளையார்பட்டி பிள்ளையாரையும் தரிசித்து விட்டே செல்லலாம். பிள்ளையார் பட்டிக்கும் திருப்புத்தூருக்கும் இடையே நான்கு மைல் தூரம்தான். மெயின் ரோட்டை ஒட்டியே கோயில் இருக்கிறது. இந்த ஊரில் அன்று கோட்டை இருந்திருக்க வேண்டும். இன்று இருப்பதெல்லாம் இந்த மதில்சுவர்கள்தாம். கோயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. சுவாமி கோலிலுக்கு நேராக ஒரு கோபுர வாயிலும், அம்பாள் சந்நிதிக்கு நேராக ஒரு கோபுர வாயிலும், இருக்கின்றன. கோயில் பெரிய கோயில் அல்ல. கோயில் திருவண்ணாமலை ஆதீனத்தார் மேற்பார்வையில்தான் இருக்கிறது.

கோயில் வாயிலில் ஒரு தகரக் கொட்டகை இருக்கும். அதைக் கடந்தே கோயிலுள் செல்லவேணும். கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் வயிரவர் சந்நிதி மேற்குப் பார்க்க இருக்கிறது. இங்கு

ஆனந்த நடராஜர்

வயிரவர் வரப்பிரசித்தி உடையவர். இந்தக் கோயிலில் திருமால் திருமகள் சந்நிதி, அகத்தீசுவரர் சந்நிதிகள் எல்லாம் உண்டு. தாண்டவ வடிவில் அங்கிருப்பவர் ஆனந்த நடராஜரே. கௌரி தாண்டவர் அல்ல. இத்தலத்தில் கருவறையில் இருப்பவர் திருத்தளி நாதர் அம்மை சிவகாமி, இக்கோயிலில் இருக்கும் செப்புச் சிலைகளில் உயர்ந்தவை, சிறப்பானவை. ராமர், சீதை, இலக்குமணர் சிலைகள் தான். இவை எப்படி இந்தச் சிவன் கோயிலுக்கு வந்தன என்று தெரியவில்லை. எங்கேயோ புதையுண்டு கிடந்தவர்களை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள், இங்கே தான் வான்மீகர், அகத்தியர், திருமகள், இந்திரன் மகன் சயந்தன் எல்லாம் வழிபட்டதாக வரலாறு. ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை சயந்தன் பூசை நடக்கிறது. வெளிப் பிராகாரத்தில் மேல் பக்கத்தில் சப்த மாதர், தலவிருட்சமான கொன்றைமரம் ஆகியவை இருக்கின்றன.

இத்தலத்துக்கு அப்பர் வந்திருக்கிறார், சம்பந்தர் வந்திருக்கிறார்.

மீன் காட்டும் கொடி மருங்குல் :உமையாட்கு என்றும்
விருப்பவன் காண்; பொருப்பவலிச்
சிலைக்கை போன்கான்;
நன் பாட்டுப் புலவனாய்ச்
சங்கம் ஏறி நற் கனகக்
கிழி தருமிக்கு அருளி
னோன் காண்;
பொன் காட்டக் கடிக் கொன்றை
மருங்கே நின்ற
புனக் காந்தள் கைகாட்டக்
கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவில்
திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்
அவன் என் சிந்தையானே

என்பது; அப்பர் தேவாரம். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுத்துப் பாண்டியனிடம் பொற்கிழிபெற வைத்த வரலாறெல்லாம் கூறப்பட்டிருக்கிறது தேவாரத்தில், சம்பந்தரும் ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.

வெங்கள் விம்மு வெறியார்
பொழில் சோலை
திங்களோடு திளைக்கும்
திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியார்
அவர் போலும்
எங்கள் உச்சி உறையும்
இறையானே

என்பது சம்பந்தர் தேவாரம்.

இந்தக் கோயிலில் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. கேரள சிங்க வள நாட்டுப் பிரமதேயமான திருப்பத்தூர் என்றும், கொழுவூர் கூற்றத்து பிரமதேயமான திருப்புத்தூர் என்றும் இவ்வூர் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருக்கற்றளிப் பட்டர், ஸ்ரீ தளிப்பரமேசுரர், திருத்தளிப் பெருமானடிகள் என்று இறைவன் குறிக்கப் பட்டிருக்கிறான். நடராஜரைக் கூத்தாடுதேவர் என்று குறித்திருக்கிறார்கள். காமக் கோட்டமுடைய நாச்சியார், திருப்பள்ளியறை நாச்சியார் என்று அம்பிகை குறிப்பிடப்பட்டிருக்கிறாள். இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து கிடைக்கும் தகவல்களே அனந்தம்.

கோயில் விளக்குக்கு நாற்பது சுழஞ்சு பொன் கொடுத்தது. விளக்கெரிக்க. ஐம்பது ஆடுகள் வழங்கியது. கோயில் திருவிழாவுக்கு நெல் அளந்தது, கோயிலுக்கு நெல்லும் பொன்னும் ஒரு வணிகன் அளித்தது எல்லாம் தெரிகின்றன. திருப்புத்தூர் சடை யார் ஜயங்கொண்ட, வினகராழ்வார் கோயிலில் கூட, நாலோக வீரன் சந்தி என்று கோயிலில் ஏற்படுத்தியது, தேவாரம் பாடத் தானம் வழங்கியது முதலிய தகவல்களுமே கிடைக்கும். ஆளுடைய பிள்ளையால் சம்பந்தர் சந்நிதியில் பூசைக்குப் பொருள் கொடுத்தது. பாண்டியன் ஸ்ரீவல்லபதேவன் அரசி உலக முழுதுடையான் கோயில் மடைப்பள்ளி கட்டியது. கணிகை ஒருத்தி கோயில் திருவிழாக் காசுக்கு ஒரு திருவுருவம் எடுப்பித்தது- இன்னும் எண்ணற்ற தகவல்கள் தமக்கு இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து கிடைக்கும். அவகாசம் இருப்பவர்கள் இத்தலத்துக்கு வடமேற்கு பதினைந்து மைல் தொலைவில் உள்ள பிரான்மலைக்கும் சென்று திரும்பலாம். பிரான்மலை வேள்பாரி இருந்து அரசாண்ட இடம் என்பர். அதனைக் கொடுங்குன்றீ என்றே அன்று அழைத்திருக்கின்றனர்; கொடுங்குன்றோரும், குயிலமிர்த நாயகியும் அங்கே கோயில் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தர் பாடியிருக்கிறார்.

வானில் பொலிவு எய்தும்
மேகம் கிழித்து ஓடி
கூனற் பிறை சேரும் குளிர்
சாரல் கொடுங்குன்றம்
ஆளிற் பொலிவயர்ந்து
அமர்ந்தாடி உலகேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு
மேயான் திரு நகரே.

என்பது சம்பந்தர் தேவாரம். கோயில் மலை அடிவாரத்தில் இருக்கிறது. மலைமேல் ஏறிச் சென்றால் அங்கு பைரவர் சந்நிதியும், இருக்கின்றன. அங்குள்ளவர் கல்யாணக் கோலத்தில் இருக்கிறார். தேவ சபை என்று ஒரு மண்டபமும் இருக்கிறது.

பிரான்மலையில் உள்ள முருகன் அருணகிரியாரது திருப்புகழ் பாடும் பெருமை பெற்றவன். இவர்களையும் கண்டு வணங்கி விட்டுத் திரும்பலாம்.