வேங்கடம் முதல் குமரி வரை 4/019-032

19. குற்றாலத்துறை கூத்தன்

சென்னை கிறிஸ்தவ கலாசாலையில் அன்று இருந்த பேராசிரியர்களில் பலர் ஸ்காட்லாந்து தேசத்தவர். அந்தக் கல்லூரியில் ஒரு விழா. விழாவுக்கு கல்லூரியின் பழைய மாணவரான ரஸிகமணி டி. கே. சி. யை அழைத்திருந்தார்கள் விழா நடக்கும் போது டி. கே. சி. யின் பக்கத்தில் ஒரு பேராசிரியர் உட்கர்ந்திருந்தார். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். பேராசியருக்கு இந்தியர்கள், அதிலும் தமிழர்கள் என்றால் என்னவோ ஏளனம். பேச்சோடு பேச்சாகக் கேட்டார் அவர் கே. சி. யிடம்: “நாங்கள் இயற்கையை மிகவும் மதிப்பவர்கள். மரங்கள் என்றால் எங்களுக்கு மிக மிகப்பிரியம். நீங்கள் அப்படி இல்லைதானே?” என்று. அதற்கு டி. கே. சி. சொன்ன பதில் இதுதான். “மரங்களிடம் எங்களுக்குப் பிரியம் கிடையாது. அதனிடம் நாங்கள் பக்தியே செலுத்துகிறோம். எங்கள் கோயில் எல்லாம் ஒவ்வொரு மரத்தைச் சுற்றியே எழுந்திருக்கிறது. ஏன், மரத்தையே கடவுளாகப் பாவிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்கள் நாங்கள். நான் இருக்கும் குற்றாலத்திலே கோயிலுள் இருப்பது ஒரு பலாமரம். மரத்தின் இலை பலாப்பழம், பழத்துக்கு உள்ளிருக்கும் சுளை, சுளைக்குள்ளிருக்கும் கொட்டை எல்லாவற்றையுமே சிவலிங்க வடிவில், இறைவனது வடிவில் கண்டு மகிழ்கிறவர்கள் நாங்கள்” என்றெல்லாம் சொன்னார். மேற்கோளாக,

கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம்
சதுர்வேதம், கிளைகள் ஈன்ற
களை எலாம் சிவலிங்கம், கனி எலாம்
சிவலிங்கம், கனிகள் ஈன்ற
சுளை எலாம் சிவலிங்கம், வித்து எலாம்
சிவலிங்க சொரூபமாக
விளையும் ஒரு குறும்பலாவின் முளைத்து எழுந்த
சிவக் கொழுந்தை வேண்டுவோமே!

என்ற பாடலையும் பாடிக் காட்டியிருக்கிறார். ஆம், மரங்களை விரும்புவதோடு நிற்காமல் அவைகளையே சிவலிங்க சொரூபமாக வழிபடவே தெரிந்தவர்கள் தமிழர். அப்படி வழிபாடு இயற்றுவதற்கு உரிய வகையில் இருப்பதுதான் குறும்பலா. அந்தக் குறும்பலா இருக்கும் தலம்தான் குற்றாலம். அந்தத் திருக்குற்றாலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்குற்றலாம் எங்கிருக்கிறது. என்று சாரல்கால சமயத்தில் நான் சொல்லித் தெரிய வேண்டியவர்கள் அல்ல நீங்கள், தென்காசிக்கு ஒரு டிக்கெட் வாங்கி அங்கு போய் இறங்கி மேற்கு நோக்கி மூன்று மைல் சென்றால் குற்றாலம் போய்ச் சேரலாம். இப்போதுதான் மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும், தூத்துக் குடியிலிருந்தும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் வேறு விடப்படுகின்றனவே. கோடை க்காலத்தில் உதகை, கோடைக் கானல் என்

குற்றாலம் அருவி

றெல்லாம் செல்லும் சுகவாசி களைவிட எண்ணி றந்தோர் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் குற்றாலம் நோக்கிச் செல்வார்கள். குற்றாலத்தின் பெருமை எல்லாம் அது ஒரு சுகவாசஸ்தலம் என்பதினால் மட்டும் அல்ல. அங்குள்ள அருவியில் நீராடி மகிழலாம் என்பதினால்தான், உலகில் குற்றாலத்தை விடப் பிரும்மாண்டமான, அழகிய நீர்வீழ்ச்சிகள் எத்தனை எத்தனையோதான். என்றாலும், இப்படி உல்லாசமாக அருவிக்குள்ளேயே நுழைந்து நீராடும் வசதியுடையது அதிகம் இல்லை. அப்படிக் குளிப்பதற்கு வசதியாய், உடலுக்கும் உள்ளத்துக்குமே ஒரு மகிழ்ச்சி தருவதாய் அருவி அமைந்திருப்பதினால்தான் இந்தத் தலத்துக்கே ஒரு சிறப்பு. ஆதலால் நாமும் குற்றாலம் சென்றதும் நேரே அருவிக்கரைக்கே சென்றுவிடுவோம். பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்ச தூரம் சென்றதும் சிற்றாறு வரும். அதன்மேல் கட்டியிருக்கும் பாலத்தின் வழியாகக் கோயில் வாயில்வரை சென்று அதன்பின். அருவிக்கரை செல்லலாம். இப்போதெல்லாம் சிற்றாறைக் கடக்காமலேயே நேரேயே அருவிக் கரை செல்ல நல்ல பாதை போட்டிருக்கிறார்கள். நாம் அந்த வழியிலேயே செல்லலாம்.

குற்றாலமலை ஐயாயிரம் அடி உயரமே உள்ள மலை, இம்மலை மூன்று சிகரங்களையுடைய காரணத்தால் திரிகூட மலை என்று வழங்கப்படுகிறது. இச்சிகரங்களில் உயர்ந்தது 5135 அடி உயரமுள்ள பஞ்சந்தாங்கி. இம்மலையில் உள்ள காடுகளுக்குச் செண்பகக்காடு என்று பெயர் உண்டு. மலை முழுதும் நல்ல மரங்களும் செடி கொடிகளும், வளர்ந்துநிற்கும் மூலிகைகளும் நிறைந்திருக்கின்றன என்பர். இந்த மலையிலிருந்து குதித்துக் குதித்து வருகிறது. சிற்றாறு. மிக்க உயரத்தில் இருப்பது தேனருவி, அடுத்தபடியாக, செண்பகதேவி அருவி. அதன் பின்தான் நாம் வந்து சேர்ந்திருக்கும் வட அருவி. இங்கு தான் இருநூறு அடி உயரமுள்ள மலையிலிருந்து அருவி குதிக்கிறது. இந்த இருநூறு அடியும் ஒரே வீழச்சியாக இல்லாமல் இடையில் உள்ள பாறைகளில் விழுந்து வருவதால் வேகம் குறைந்து குளிப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறது. முதலில் இவ்வருவி பொங்குமாங்கடலில் விழுகிறது. அங்கிருந்தே பின்னர் கீழே நீர் வழிகிறது. குளிப்பதற்கு வேண்டிய வசதிகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. அருலியாடும் அனுபவம் ஓர் அற்புத அனுபவும். அது சொல்லும் தரத்தன்று. ஆகவே அருவியாடி திளைத்து அதன்பின் கோயில் வாயில் வந்து கோயிலுள் நுழையலாம். அருவிக் கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரம்தான் கோயில் வாயில், கோயில் வாயிலை ஒரு சிறு கோபுரம் அணி செய்கிறது. கோயிலில் நுழைந்தால் விஸ்தாரமான மண்டபம் இருக்கிறது முதலில் இதனையே

கோயில்

திரிகூட மண்டபம் என்பர். இதனைக் கடந்தே நமஸ்கார மண்டபம், மணி மண்டபம் எல்லாம் செல்லவேணும். இதற்கு அடுத்த கருவறையில் தான் திருக்குற்றாலநாதர் லிங்க வடிவில் இருக்கிறார். இவர் ஆதியில் விஷ்ணுவாக இருந்தவர். பின்னர் அகத்தியரால் சிவலிங்கமாக மாற்றப்பட்டார் என்பது புராணக்கதை.

இறைவன் இட்ட கட்டளைப்படி வடநாடிருந்து அகத்தியர் தென்திசைக்கு வருகிறார். அப்போது இக்குற்றாலநாதர் கோயில் பெருமாள் கோயிலாக இருந்திருக்கிறது. அகத்தியர் சிவனடியார் கோலத்தில் வந்திருந்தார் என்பதற்காக அவரைக் கோயிலுள் செல்ல அர்ச்சகர் அனுமதிக்கவில்லை. ஆதலால் மனம் உடைந்து அகத்தியர் திரும்பி, சிறிது தொலைவில் உள்ள இலஞ்சி சென்று, அங்குள்ள முருகனை வணங்குகிறார். அந்த முருகன் இந்த அர்ச்சகர்களை வஞ்சனையால் வெல்ல வழி சொல்லிக் கொடுக்கிறான். அவன் சொல்லிக் கொடுத்த வண்ணமே துவாதச நாமம் தரித்து, பரமவைஷ்ணவராக மறுநாள் அகத்தியர் கோயிலுக்கு வருகிறார். அர்ச்சகர்களும் ஏமாந்து உள்ளே அனுமதித்து விடுகிறார்கள். உள்ளே சென்றவர் தாமே விஷ்னுவுக்குப் பூசை செய்வதாகச் சொல்லி, மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டு, நின்ற கோலத்தில் இருந்த பெருமாளை தலையில் கைவைத்து ஓர் அமுக்கு அமுக்கி, 'குறுகிக் குறுகுக' எனக் கைலாய நாதனை நினைக்கிறார், அப்படியே அவரும் குறுகிக் குற்றாலநாதார் ஆகிவிடுகிறார். அகத்தியரால் இப்படி மாற்றப் பெற்ற இறைவனை அகஸ்தியரே பாடித் துதிக்கிறார். பாட்டு இதுதான்.

முத்தனே! முவரிக் கண்ணா!
மூலம் என்று அழைத்த வேழப்
பத்தியின் எல்லை காக்கும்
பகவனே! திகிரியாளா!
சுத்தனே! அருள் சூல் கொண்ட .
சுந்தரக் கதுப்பினானே!
நத்தணி செவிய கோல
நாடுதற்கரிய நம்பி!

இந்தப் பாட்டைப் படித்தால் இதில் உள்ள துதி விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பொருத்தமாயிருப்பதைப் பார்க்கலாம். இட்படிப் பாடிக்கொண்டு வந்ததினாலே தான் வைஷ்ணவ அர்ச்சகர்கள் ஏமாந்திருக்கிறார்கள். இப்படி ஆதியில், விஷ்ணுவாகவும், பின்னர் சிவனாகவும் மாறிய இறைவனே திருக்குற்றால நாதன். நாமும் இரண்டு பெருமான்களையும் நினைத்தே வணங்கித் திரும்பலாம். குற்றால நாதருக்கு வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் குழல்வாய் மொழி அம்மை கோயில் கொண்டிருக்கிறாள், நின்ற கோலத்தில் அங்கிருந்து காட்சி தருகிறாள். அம்மையின் கோயிலுக்குத் தென்புறத்தில்தான் தலவிருட்சமான குறும்பலா. நான்கு வேதங்களுமே தவம் செய்து இப்படிப் பலாமரம் ஆயிற்று என்பர். இப்பலா மரத்தடியிலே ஒரு லிங்கம். இம்மரத்தில் பழுக்கிற பலாப்பழத்தை எவரும் பறிப்பதில்லை, குற்றாலத்திலே உள்ள குரங்குகளே கீறித் தின்னும் என்பர். இவ்விரு கோயில்களையும் சுற்றியள்ள மேலப் பிராகாரத்திலே தான் நன்னகரப்பெருமாள், நெல்லையப்பர், மனக்கோலநாதர், நாறும்பூநாதர் முதலியோர் கோயில் கொண்டிருக்கின்றனர்

குற்றாலத்தில் இறைவன், குற்றாலம், கோவிதாஸ், சமருகம் என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே எழுந்தருளியிருத்தலால் அம்மரத்தின் பெயரே தலத்தின் பெயர் ஆயிற்று என்பர். கு என்றால் பூமியாகிய பிறவிப் பிணி, தாலம் என்றால் தீர்ப்பது. ஆகவே பிறவிப்பிணி தீர்க்கும் தலம் ஆனதால் குத்தாலம் ஆகி குற்றாலம் என்று திரிந்தது என்றும் கூறுவர். ஆதி சக்தி மூவரைப் பயந்த தலமாதலால் இத்தலத்துக்குத் திரிகூடம் என்ற பெயர் வந்தது என்றும் தலபுராணம் கூறும். அதற்கேற்பவே, கோயிலுள் வடபக்கத்தில் பராசக்திக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. இங்கே பராசக்தி யோகத்தில் இருப்பதால் இதனை யோகபீடம் என்றும், உலகம் எல்லாம் தோன்றுவதற்கு மூலமாயிருத்தலால் தரணி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பராசக்தியே அரி, அயன், அரன் என்னும் மூவரையும் ஒவ்வொரு கர்ப்பத்தில் பயந்தாள் என்பதைக் குறிக்கத்தானு மாலயன் பூந்தொட்டில் இச்சந்நிதியில் ஆடிக் கொண்டிருக்கிறது.

இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்திருக்கிறார். குற்றாலத்துக்கு ஒரு பதிகமும், குறும்பலாவுக்கு ஒரு பதிகமும் பாடியிருக்கிறார்.

வம்பார் குன்றும் நீடு உயர்
சாரல் வளர் வேங்கை
கொம்பார் சோலைக் கோல வண்டு
யாழ் செய் குற்றாலம்

என்றும்

மலையார் சாரல் மகவுடன்
வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி
மாந்தும் குற்றாலம்

என்றும் குற்றாலத்தைப் பாடிப் பரவியவர்,

அரவின் அணையானும் நான்முகனும்
காண்பரிய அண்ணல் சென்னி
விரவிமதி அணிந்த விகிர்தருக்கு
இடம்போலும் விரிபூஞ் சாரல்
மரவம் இருக்கையும் மல்லிகையும்
சண்பகமும் மலர்ந்து மாந்தக்
குரவமுறுவல் செய்யும் குன்றிடம்
சூழ்தண் சாரல் குறும்பலாவே

என்று குறும்பலாவையும் பாடியிருக்கிறார். நாவுக்கரசர், 'குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளர்?' என்றே கேட்கிறார்.

மணிவாசகரோ,

உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
சுற்பனவும் இனிபமையும்
குற்றாலத்தமர்ந்து உறையும்
கூத்தா உன்குரை கழற்கே
கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே

என்று கசிந்து கசிந்து பாடியிருக்கிறார். கபிலரும் பட்டினத்தடிகளும் குற்றாலத்தானை நினைந்து பாடிய பாடல்களும் உண்டு.

இத்தலத்தில் நிறைய கல்வெட்டுகள் உண்டு. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட பரகேசரிவர்மன் என்னும் முதல் பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு சோழ நாட்டுடன் இணைந்திருக்கிறது. இன்னும் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன் முதலிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்திய நிபந்தங்களை யெல்லாம் குறிக்கும் கல்வெட்டுகள் உண்டு. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பல திருப்பணிகள் செய்திருக்கிறான். இப்படிச் சோழரும் பாண்டியருமாகக் கட்டிய கோயிலை, சொக்கம்பட்டி குறுநில மன்னர்களும் விரிவுபடுத்திப் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். குழல்வாய் மொழி அம்மை கோயிலைத் தேவகோட்டை காசி விசுவநாதன் செட்டியார் குடும்பத்தினர் திருப்பணி செய்திருக்கின்றனர். கோயிலில் திருப்பணி வேலைகளை இப்போதும் செவ்வனே செய்து வருகின்றனர்.

இக்கோபிலை விட்டு வெளியே வந்ததும் நேரே ஊர் திரும்ப முடியாது. கோயிலுக்கு வடபுறம்தான் இத்தலத்தில் பிரசித்தி பெற்ற சித்திர சபை இருக்கிறது. அம்பலக் கூத்தன் ஐந்து திருச்சபையில் அவள் கூத்தை ஆடியிருக்கிறான். திருவாலங்காட்டில் ரத்ன சபையிலும், சிதம்பரத்தில் பொன்னம்பலத்திலும், மதுரையில் வெள்ளியம்பலத்திலும், திருநெல்வேலியில் தாமிர சபையிலும் ஆடிய பெருமான் இத்தலத்தில் சித்திர சபையில் நின்று நிருத்தம் ஆடியிருக்கிறார். ஐந்தருவிக்குச் செல்லும் ரோட்டில், ரஸிகமணி டி. கே, சி நினைவு இல்லத்துக்குக் கீழ்ப்புறமாகச் செல்லும் பாதையில் சென்றால் சித்திர சபை சென்று சேரலாம். இச்சபையே தெப்பக் குளத்துடன் கூடிய ஒரு பெரிய கோயில். கோயில் முழுதும் சித்திரங்களால் நிறைந்திருக்கின்றன. பெருமானும் இங்கே சித்திர உருவிலேயே அமைந்து ஆடும் காட்சி தருகிறார். ஆதலால் சித்திர சபையைக் காணாது திரும்பினால் திருக்குற்றாலத்தைப் பூரணமாகக் கண்டதாகக் கூறமுடியாது.

குற்றாலநாதர், குழல்வாய் மொழி, குற்றாலத்துக் கூத்தர் எல்லோரையும் பார்த்தபின் அவகாசமிருந்தால் வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள இலஞ்சிக் குமரனையும் காணலாம். இன்னும் நாலு மைல்கள் வடக்கே சென்று திருமலை சென்று மலை ஏறி அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகனையும் வணங்கலாம்.

குற்றாலம் செல்லும் இலக்கிய ரசிகர்கள், கையோட கையாகக் குற்றாலக் குறவஞ்சியை எடுத்துப் போக மறக்க வேண்டாம். அத்தலத்தில் இருந்து கொண்டு,

வானரங்கள் கனிகொடுத்து
மந்தியோடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு
வான்கவிகள் கெஞ்சும்
தேனருவித் திரை எழும்பி -
வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும்
தேர்க்காலும் வழுகும்

என்றெல்லாம் பாடல்களைப் படித்துப் பாருங்களேன். ஒரு புதிய உலகமே உங்கள் கண்முன் வராதா என்ன?