வேங்கடம் முதல் குமரி வரை 4/027-032

27. செந்தில் ஆண்டவன்

ஒரு கவிஞன் தமிழ்க்கடவுள் முருகனிடத்து அளவு கடந்த பக்தி படையகனாக வாழ்கிறான். முருகன் என்றால் அழகன், இளைஞன் என்பதை அறிகிறான். ஆம், 'என்றும் இளையாய் அழகியாய்' என்றெல்லாம் பாடிய கவிஞர் பரம்பரையில் வந்தவனல்லவா? கலிஞன் என்றால்தான் அவனோடு வறுமையும் உடன் பிறந்து வளருமே; வறுமையால் தவிகின்றான். வீட்டிலோ மனைவி மக்கள் எல்லாம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வாடுகிறார்கள். இந்த வலுமையையெல்லாம் துடைக்க அந்தக் கலியுக வரதன் முருகனிடம் முறையிடச் சொல்லி அவன் மனைவி வேண்டுகிறாள். 'தேவர் துயரையெல்லாம் துடைத்தவனுக்கு உங்கள் துயர் துடைப்பதுதானா பிரமாதம்?' என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் கவிஞனோ மெத்தப் படித்தவன். இந்த முருகளோ சின்னஞ்சிறு பிள்ளைதானே! அன்னை மடிமீதிருந்து இந்த இளவயதில் அன்னை அமுதுட்டினால் தானே உணவருந்தத் தெரியும்? அவனோ தாய்க்கு அருமையான பிள்ளை, அதனால் அவளோ அவன் கண்ணுக்கு மையிட்டு, நெற்றிக்குப் பொட்டிட்டு. அடிக்கடி எடுத்தணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பாள், இப்படியெல்லாம் தாயோடு விளையாடும் இந்த வயதில், பக்தர்கள் துயரையெல்லாம் அவன் அறிதல் சாத்தியமா? இல்லை, நாமே சென்று சொன்னாலும் அதைத் துடைக்கும் ஆற்றல்தான் இருக்குமா? பிள்ளை கொஞ்சம் வளர்ந்த பெரியவனாகட்டும், நல்ல கட்டிளங்காளையாக, வீர புருஷனாக வளர்ந்து பின்னால் அன்றோ அவனால் தன் துயர் துடைத்தல் கூடும் என்றெல்லாம் எண்ணி எண்ணி, முருகனிடம் விண்ணப்பம் செய்வதை ஒத்திப் போட்டுக்கொண்டு வருகிறான் ஒன்றிரண்டு வருஷங்களாக. ஆனால் ஒருநாள் அவனது நண்பர் ஒருவர். திருச்செந்தூர் செல்பவர், அவனையும் உடன் கூட்டிச் செல்கிறார். அங்கே முருகன் கோயில் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தவன்தான் அவன் ஆகவே நண்பருடன் கடற்கரையிலே உள்ள அந்த முருகன் கோயிலுக்கு செல்கிறான்.

அலை வந்து மோதும் அத்திருச் சீரலை வாயிலின் கோயிலைச் சுற்றி வந்து தென் பக்கத்திலுள்ள சண்முக விலாத்தைக் கடந்து கோயிலுக்குள் நுழைகிறான். அத்தனை நேரமும் கூனிக் குறுகி நடந்த கவிஞன் நிமிர்ந்து நோக்குகிறான். அப்போது அவனுக்கு நேர் எதிரே சண்முகன் காட்சி கொடுக்கிறான், அங்கே செப்புச் சிலை வடிவில் நிற்கும் சண்முகன் பாலனும் அல்ல பால சந்நியாசியம் அல்ல, ஓராறு முகங்களும், ஈராறு கரங்களும் கொண்ட சண்முகநாதனே வேலேந்திய கையுடன் வீறுடன் நிற்கிறான். ஒரே தங்க மயமான பொன்னாடை புனைந்து ரத்ன சகிதமான அணிகளையும் அணிந்து நிற்கிறான். தலையில் அணிந்திருக்கும் கிரீடம் ஒன்றே ஒரு லட்சம் ரூபாய் பெறும். கையில் ஏந்தியிருக்கும் வைர வேலோ எளிதாக இரண்டு லட்சம் ரூபாய் பெறும். ஆளுக்கே கொடுக்கலாம் ஐந்து லட்சத்துக்கு ஜாமீன். அத்தனை சௌகரியத்துடன் செல்வந்தனாகக் கம்பீரமாக நிற்கிறான். இவ்வளவுதானா? இந்த அழகனுக்கோ ஒன்றுக்கு இரண்டு மனைவியர். அழகனுக்கு ஏற்ற அழகிகளாக, அன்னம் போலவும், மயில் போலவும் விளங்குகிறார்கள். வஞ்சனை இல்லாமல் மனைவியர் இருவருக்கும் அழகான ஆடைகளையும் அளவற்ற ஆபரணாதிகளையும் அணிவித்து. அழகு செய்திருக்கிறான்.

இதையெல்லாம் பார்த்த கவிஞனுக்கோ ஒரே கோபம் 'இன்னுமா இவன் சின்னப் பிள்ளை? என் குறைகளையெல்லாம் நான் முறையிடாமலேயே அறிந்து கொள்ளும் வயது இல்லையா? இல்லை, ஆற்றல் தான் இல்லையா? ஏன் இவன் நம் துயர் துடைத்திருக்கக் கூடாது?' என்றெல்லாம் குமுறுகிறான். குமுறல் எல்லாம் ஒரு பாட்டாகவே வெளிவருகிறது.

முன்னம் நின் அன்னை அமுதூட்டி
மையிட்டு முத்தமிட்டுக்
கன்னமும் கிள்ளிய நானல்லவே,
என்னைக் காத்தளிக்க
அன்னமும் மஞ்ஞையும் போல் இரு
பெண்கொண்ட ஆண்பிள்ளை நீ
இன்னமும் சின்னவன் தானோ
செந்தூரில் இருப்பவனே

என்பதுதான் பாட்டு, “அன்னமும் மஞ்ஞையும் போல் இரு” "பெண் கொண்ட ஆண்பிள்ளை அல்லவோ நீ” என்று ஆங்காரத்துடனேயே கேட்கிறான்: ஆறுமுகனை, இன்னமும் சின்னவன் தானோ என்று முடிக்கும்போது கவிஞனின் ஆத்திரம் அளவுகடந்தே போய் விடுகிறது. இப்படிப் படிக்காசுப் புலவன் நேருக்கு நேரே சண்முகனைக் கேட்ட தலம்தான் திருச்செந்தூர் என்னும் திருச்சீரலைவாய். அந்தத் திருச்செந்தூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருச்செந்தூர் திருதெல்வேலி ஜில்லாவில், திருநெல்வேலிக்குக் கிழக்கே முப்பத்தைந்து மைல் தொலைவில் இருக்கிறது. கடற்கரை ஆண்டியான செந்தில் ஆண்டவனைத் தரிசிப்பதற்கு முன் கடலாடிவிட வேண்டும் என்பர். கோயிலின் தென்புறத்தில் நல்ல வசதியாகக் கடலில் இறங்கி ஒரு முழுக்குப் போடலாம். அந்த முழுக்கால் உடலில் ஏறியுள்ள உப்பை, இன்னும் கொஞ்சம் தெற்கே நடந்து அங்குள்ள நாழிக் கிணற்றில் ஆம், நல்ல தண்ணீர் கிணற்றில்தான் குளித்துக் கழுவிக்கொள்ளலாம். திரும்பித் தென்பக்கம் வாயிலுக்கு வந்து சண்முக விலாசத்துக்குள் நுழைந்து கோயிலுள் செல்லலாம். முக்காணியர் என்ற அர்ச்சர்கள் உங்களை முதலில் சுப்பிரமணியன் சந்நிதிக்கே அழைத்துச் செல்வர். அவன்தானே அங்குள்ள மூலமூர்த்தி இந்தத் திருச்செந்தூர்தான் நக்கீரரது திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. மிகவும் பழமையான தலம் அல்லவா? பழைய சங்க இலக்கியமான புறநானூற்றிலேயே.

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலை இய காமர் வியன்துறை

என்று குறிப்பிடப்பட்ட பதி. 'சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்றே முருகன் சிலப்பதிகாரத்தில் பாடப்பட்டிருக்கிறானே! இங்குள்ள பாலசுப்பிரமணியன் பெருமையெல்லாம் அவன் சூரசம்ஹரம் செய்து தேவர் இடுக்கண் தீர்த்தது தான். ஆதலால் அந்த வரலாற்றை முதலில் தெரிந்துகொள்ளலாம்.

சூரபதுமன், சிங்கமுகன், பாணுகோபன் என்ற அசுரர்கள் தேவர்களுக்கெல்லாம் இடுக்கண் செய்கிறார்கள். அதனால் தேவர்கள் எல்லாம் சென்று சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள், அவரும், அவர்கள் துன்பத்தைத் தீர்க்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். அதன்படியே தன்னுடைய ஐந்து திருமுகங்களோடு அதோ முகமும் கொள்கிறார். ஆறு திருமுகத்தில் உள்ள ஆறு நெற்றிக் கண்களிலிருந்தும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயு ஏந்திச் சென்று, அக்னியிடம் கொடுக்க அக்னியும் அந்தப் பொறிகளது வெம்மையைத் தாங்காது கங்கையிலே விட்டு விடுகிறாான். கங்கை அந்தப் பொறிகளைச் சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அங்கு ஆறு பொறிகளும் ஆறு திருக் குழந்தைகளாக மாறுகின்றன. இப்படித்தான் வைகாசி மாதத்தில் விசாக நாளில் விசாகன் பிறக்கிறான்.

இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றார்கள். இந்தக் கார்த்திகேயனைப் பார்க்கச் சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கைக்கு வருகிறார். அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து மார்போடு அணைக்கிறாள். ஆறு குழந்தைகளும் சேர்த்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள். அவனே கந்தன் எனப்பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறான். இவன் வளர்கிறபோதே சூரபது மனது கொடுமைகள் அதிகம் ஆகின்றன. உடனே தந்தையின் வாக்கைப் பரிபாலிக்க நவ வீரர்களை உடன் அழைத்துக் கொண்டு போருக்குப் புறப்படுகிறான். அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து அனுப்புகிறாள்.

இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கு ஆனவர்கள் தாராகாசுரனும் கிரௌஞ்சமலையும்தான். மண்ணியாற்றங்கரையில் உள்ள சேய்ஞ்ஞலூரில் சிவபிரானை வணங்கி, சூரபதுமன் இருக்கும் வீரமகேந்திரத் தீவை நோக்கி வருகிறான். திருச்செந்தூரில் முகாம் செய்து கொண்டு வீரபாகுவைத் தூதனுப்புகிறான். சூரபதுமன் சமாதானத்துக்கு இணங்க வில்லை. அவனும் போருக்குப் புறப்படுகிறான். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும், சிங்கமுகாசுரனையும் கொன்று குலிக்கிறான். ஆறு நாட்கள் நடக்கிறது போர். கடைசியில் போர் சூரபதுமனுக்கும் முருகனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரில் அன்னை தந்த வேலைப் பிரயோகித்து சூரனைச் சம்ஹாரம் செய்கிறான். திருச்செந்தூர் உற்சவங்களில் சிறப்பான உற்சவம் கந்த சஷ்டி உற்சவம்தான். வேற்படையால் இரு கூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறைத் தன் கொடியாகவும் அமைத்துக் கொள்கிறான் முருகன், இப்படி சூரபதுமனைத் தன் வாகனமாகவும் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். அந்த விசுவரூப தரிசனம் கண்ட் சூரபதுமனோ

கோலமா மஞ்ஞை தன்னில் -
குலவிய குமரன் தன்னைப்
பாலன் என்றிருந்தேன் அந்நாள்
பரிசு இவை உணர்ந்திலேன் யான்
மால் அயன் தனக்கும், ஏனை
வானவர் தமக்கும், யார்க்கும்
மூல காரண்மாய் நின்ற
மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ .

.
செந்தில் ஆண்டவன்
என்று துதிக்கிறான். இந்த மூர்த்திதான் திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவனாக எழுந்தருளியிருக்கிறான். நல்ல அழகொழுகும் வடிவம். விபூதி அபிஷேகம் செய்யக்கோயில் நிர்வாகிகள் மூன்று ரூபாய்தான் கட்டணம் விதிக்கிறார்கள். 'விபூதிக் காட்பிட்டுக் கண் குளிரக் கண்டால் நம் வினைகளெல்லாம் எளிதாகவே தீரும். உள்ளத்திலும் ஒரு சாந்தி பிறக்கும், இந்த ஆண்டவனை, பாசுப்பிரமணியனைத் தரிசித்து விட்டு வெளியே வந்து வடக்கு நோக்கித் திரும்பினால் அங்கு சண்முகன் நின்று கொண்டிருப்பார், அன்று படிக் காசுப் புலவர் கண்ட கோலத்திலேயே, ஆம், அன்னமும் மஞ்ஞையும் போல் இருபெண்களுடன் நிற்கும் ஆண் அழகனையே காணலாம். அவனையும் வணங்கிவிட்டு அவன் பிராகாரத்தை ஒரு சுற்று சுற்றி, துவஜஸ்தம்ப மண்டபத்துக்கு வந்து அந்தப் பிராகாரத்தையும் சுற்றலாம். அங்குதான் மேலப் பிராகாரத்தின் இரு கோடியிலும் வள்ளியும் தெய்வயானையும் தனித் தனிக் கோயிலில் இருப்பர். இதற்கடுத்த பெரிய பிராகாரத்திலே சூரசம்ஹாரக் காட்சி சிலை வடிவில் (உப்புச உருவில்) அர்த்த சித்திரமாக இருக்கும். இந்தக் கோயிலின் வடக்குப் பிராகாரத்திலே வேங்கடவன் கொலு வீற்றிருக்கிறான். அங்கு மணல் மேட்டைக் குடைந்து அமைத்த அனந்தசயனனையும் கஜலட்சுமியையும் தரிசிக்கலாம்.

இக்கோயிலில் உள்ள ஆறுமுகனைப் பற்றிய ரசமான வரலாறு ஒன்று உண்டு, 1648-ம் வருஷம் மேல் நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பொன் வண்ணத்தில் இருக்கும் ஆறுமுகனைக் கண்டு களித்திருக்கிறார்கள், அந்த மூர்த்தியை எடுத்துச் சென்றால் அத்தனை பொன்னும் தங்களுக்கு உதவுமே என்று கருதி, அந்த மூர்த்தியைக் களவாடிக் கப்பலில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்: ஆனால் ஆறுமுகனோ அவர்களுடன் நெடுந்தூரம் செல்ல விரும்பவில்லை. ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறான். கொந்தளிக்கும் கடலிலே டச்சுக்காரர் கப்பல் ஆடியிருக்கிறது. இனியும் ஆறுமுகனைத் தங்கள் கப்பலில் வைத்திருத்தல் தகாது என நினைத்து அவனை அலக்காய்த் தூக்கிக் கடலிலேயே எறிந்திருக்கிறார்கள்.

கோயிலில் இருந்த ஆறுமுகள் காணாமல்போன செய்தியை நாயக்க மன்னரின் பிரதிநிதியான வடமலையப்ப பிள்ளையன் அறிந்திருக்கிறார்; வருந்தியிருக்கிறார். பஞ்சலோகத்தில் இன்னொரு ஆறுமுகனை வார்த்தெடுத்து நிறுத்த முனைந்திருக்கிறார். ஆனால் கடலுள் கிடந்த ஆறுமுகனே அவரது கனவில் தோன்றி, தான் இருக்கும் இடத்தை அறிவித்திருக்கிறான். அவன் தெரிவித்தபடியே அவர்கள் கடலில் ஆறு காத தூரம் சென்றதும் அங்கு ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் கருடன் வேறே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அங்கு மூழ்கிப் பார்த்ததில், கடலின் அடித்தளத்தில் டச்சுக்காரர்கள் களவாடிய ஆறுமுகமானவன் இருந்திருக்கிறான்: இதனை எடுத்து வந்து ஒரு நல்ல மண்டபம் கட்டி அதில் இருத்தியிருக்கிறார் வடமலையப்பர். அதனாலேயே இன்னும் ஆறுமுகவன் கோயில் கொண்டிருக்கும் மண்டபம் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.

இது ஏதோ கற்பனை கதை அல்ல. 1785 இல் பெர்லின் நகரிலிருந்து எம். ரென்னல் எழுதிய 'சரித்திர இந்தியா' என்ற புத்தகத்தில் இத்தகவலைத் தாம் ஒரு டச்சு மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டதாக அவர் எழுதியிருக்கிறார். 1648 இல் இது நடந்தது என்று உறுதியாகக் கூறியிருக்கிறார், 1648 இல் கடலுள் சென்ற ஆண்டவன் 1553 இல் தான் வடமலையப்ப பிள்ளையின் மூலம் வெளிவந்திருக்கிறான். அன்றிலிருந்து அவன் புகழ் பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்தச் செந்தில் ஆண்டவனிடத்திலே பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மன் மிகுந்த பக்தி சிரத்தையோடு வாழ்ந்திருக்கிறான். திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த லஷிங்டன் என்ற துரை மகனும் இந்த ஆண்டவனிடம் ஈடுபட்டு 1803 இல் பல வெள்ளிப் பாத்திரங்களைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கின்றார்.

இக்கோயில் கட்டியிருக்கும் இடம் ஆதியில் கந்தமாதன் பர்வதம் என்ற மணல் குன்றாக இருந்திருக்கிறது. தேவர்கள் வேண்டியபடித் தேவதச்சனான மயனே முதலில் கோயில் கட்டினான் என்பது வரலாறு. மயன் கட்டிய கோயில் நாளும் விரிவடைந் திருக்கிறது. பாண்டிய மன்னர்களும் சேர மன்னர்களும் இக்கோயில் கட்டுவதில் முனைந்திருக்கிறார்கள். வரகுணமாறன், மாறவர்மன், விக்கிரம பாண்டியன் முதலியோர் கோயிலுக்கு வேண்டிய நிபந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவை பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கின்றன. கி.பி. 1729 முதல் 1758 வரை திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்டவர்ம மகாராஜா இக்கோயிலில் உதய மார்த்தாண்டக் கட்டளையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த இருபதாம் நூற்றாண்டிலும், மௌனசுவாமி என்பவர் கோயில் திருப்பணியை மேற்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின் திருப்பணியைத் தொடர்ந்து நடத்தியவர் வள்ளிநாயக சுவாமிகள், இன்று விரிவடைந்திருக்கும் கற்கோயில், ராஜகோபுரம், பிராகாரங்கள் எல்லாம் இவர்களது திருப்பணி வேலைகளே. முருகன் கோயில்களில் எல்லாம் சிறப்பான கோயிலாக இருப்பது இந்தச் செந்திலாண்டவன் கோயிலே.