வேங்கடம் முதல் குமரி வரை 4/028-032

28. வானவாமலைத் தோத்தாத்திரிநாதர்

ஆடுங் கடை மணி
ஐவேல் அசதி அணிவரைமேல்
நீடும் கயற் கண்ணியார்
தந்த ஆசை நிகழ்த்தரிதால்
கோடும், குளமும், குளத்தருகே
நிற்கும் குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத்
தோன்றுது என் கண்களுக்கே

என்று ஒரு பாட்டு. ஒளவையார் பாடிய அசதிக் கோவையில் உள்ள பாட்டு. ஒளவைப் பிராட்டி ஒரு நாள் மதிய வேளையில் ஒரு குக்கிராமத்துக்குப் போகிறார். அவருக்கு நல்ல பசி. அப்போது வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு குடியானவன் ஔவைக்குக் குடிக்கக் கூழ் கொடுக்கிறான். ஔவை அவன் பெயர் என்ன? என்று கேட்கிறாள், 'அசத்துப் போச்சே' என்கிறான். ஊர்ப் பெயர் கேட்கிறாள்; தன் பெயரையே மறந்து போனவன் ஊர்ப் பெயரை ஞாபகத்தில் வைத்திருப்பானா? அதுவும் மறந்து போச்சு என்கிறான். ஊரில் ஏதாவது முக்கியமான காட்சி இருக்கிறதா என்கிறாள். தன் ஊருக்கு அடையாளமாக ஐந்து வேலமரங்கள் இருக்கின்றன என்கிறான். அதனால் 'ஐவேல் அசதி' என்று அவன் பெயரை உருவாக்கிக்கொண்டு ஒரு கோவையே பாடி விடுகிறாள் ஔவை. பாடல் நல்ல காதல் துறையில் அமைந்த பாடல். இதே போல் நான்கு ஏரிகள் சூழ்ந்த ஒரு தலம். அங்கு ஒரு கோயில். அக்கோயிலில் இருப்பவர் தோத்தாத்திரி. வந்த வணங்குவார் பாவங்களையெல்லாம் கழுவித் துடைத்து முத்தி கொடுப்பவர். தோத் என்றாலே துடைப்பவர் என்று தானே பொருள்; கோயில், குளம், குளக்கரை, மரம் என்றெல்லாம் அமைந்து, காண்பார் நினைவில் எல்லாம் பக்தியை உண்டுபண்ணும் தலந்தான் அது. இத்தலத்தைப் பற்றிப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பாடுகிறார்.

வானோர் முதலா
மரம் அளவா எப்பிறப்பும்
ஆனேற்கு அவதியிடல்
ஆகாதோ?-தேனேயும்
பூவர மங்கை
புவிமங்கை நாயகனே!
சீவர மங்கை அரசே!

என்பது பாடல். வானோர் முதல் மரம் வரை எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த மனிதனுக்குப் பிறப்பே இன்றி முத்தியை அளித்தல் ஆகாதோ என்று கேட்டிருக்கிறார். அப்படி முத்தி அனிக்கவல்ல பதிதான் ஸ்ரீவரமங்கை என்னும் வானவாமலை என்றும் பாராட்டப் பெறும் நான்கு நேரி, அங்குள்ள தோத்தாத்திரி நாதர் கோயிலுக்குத்தான் செல்கிறோம் நாம் இன்று.

ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலம் திருநெல்வேலிக்கு நேர் தெற்கே பத்தொன்பது மைல் தொலைவில் இருக்கிறது. திருநெல்வேலி-நாகர்கோயில் பெருஞ்சாலை வழியாகத்தான் போக வேண்டும். கார் வசதியுடையவர்கள் காரிலேயே போகலாம். ஊருக்கு இரண்டு மைல் இருக்கும்போதே கோயில், கோபுரம், ஏரி எல்லாம் தெரியும். நான்கு ஏரிகள் அன்று இருந்து நான்கு நேரி என்ற பெயரை ஊருக்குத் தேடித் தந்திருக்கிறது. ஆனால் இன்று கோயிலை அடுத்திருப்பது ஒரு பெரிய ஏரிதான். ஏரிக் கரையில் பெரிய மரங்கள் எல்லாம் நிற்கின்றன. அந்த மரங்களின் ஊடே நீண்டுயர்ந்த கோபுரத்தைத் தாங்கிக் கொண்டு கோயில் இருக்கும். ஆதியில் கோயிலின் கருவறையே குளத்துக்குள்தான் இருந்திருக்கிறது. இன்றும் குளத்தில் நீர் நிறைந்திருந்தால் கோயில் கருவறையைச் சுற்றி ஒன்றிரண்டு அடித் தண்ணீர் நிற்கும். ஆம், கோயில், குளம், மரம் எல்லாம் பரமபத நாதனை நினைவுபடுத்திக் கொண்டே நிற்கும் அங்கு, கோயில் வாயிலுக்குச் சென்றால் முதலில் பந்தல் மண்டபம் என்ற இடத்துக்கு வந்து சேருவோம், அதை ஒட்டிய உயர்ந்த மண்டபங்களிலேதான் தங்க ரதம், தங்கச் சப்பரம் எல்லாம் இருக்கின்றன.

வானவாமலை கோயில்-குளம்

செல்வாக்கு உள்ளவர்கள் என்றால், நிர்வாகிகள் கதவுகளைத் திறந்து தங்க ரதத்தை எல்லாம் காட்டுவார்கள். ஆனால் பங்குனி உத்திரத்துக்கு முந்திய நாள் அங்கு சென்றால் ஒருவரது 'தயவும் இல்லாமலேயே தங்க ரதம் தெரு வீதியில் உலா வருவதைக் கானலாம். இந்தப் பந்தல் மண்டபத்தின் வடபகுதியிலேதான் வானபோமலை மடம் இருக்கிறது. அம்மடத்தில் உள்ள ஜீயர் பிரசித்தி உடையவர். அந்த மகானையும் தரிசித்து விட்டுப் பிறகு நடக்கலாம். கோபுர வாயிலைக் கடந்து கோயில் உள்ளேயே நுழையலாம். கோயில் வாயிலைக் கடந்ததும் நம் கண்முன் வருவது ஜெவந்தி மண்டபம். ஜெவந்தி நாயக்கர் என்றும், ஜெவந்தி ராஜா என்றும் அழைக்கப்பட்டவரால் கட்டிய மண்டபம் இது. நான்குநேரி தாலூகாவிலே ஜெவந்திபுரம் என்று ஓர் ஊரே இருக்கிறதே. சங்கரன் கோயிலிலும் ஜெவந்தி வாசல் இருக்கிறதே. ஜெவந்தி நாயக்கர் என்பவர் பக்தியோடு நல்ல திருப்பணிகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று அறிகிறோம்.

உற்சவ காலத்தில் இம்மண்டபத்திலே வைத்து உத்சவரை அலங்காரம் பன்ணி உலாச் செய்ய எழுந்தருளுவிப்பார்கள், இம் மண்டப முகப்பில் சாமரை ஏந்திய ஊர்வசி, திலோத்தமை இருவரும் நிற்கிறார்கள். இவர்களை நாம் கருவறையிலுமே பார்க்கப்போகிறோம். இந்த மண்டபத்தைச் சுற்றி ஒரு பிராகாரம். மண்டபத்தின் வடபுறம் உள்ள அறைகளில்தான் வாகனங்கள் எல்லாம் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இடப்புறம் இருப்பது வீரப்ப நாயக்கர் மண்டபம். இங்குள்ள தூண்களில் எல்லாம் நல்ல சிற்ப வடிவங்கள் உண்டு ஒவ்வொரு தூணிலும் நான்கு ஐந்து வடிவங்களைச் செதுக்கியிருக்கிறான் சிற்பி. அவைகளில் சிறப்பானவை அனுமனை அணைத்து . நிற்கும் ராமனது திருக்கோலமும், பீமனை எட்டிப் பிடிக்கும் புருஷா மிருகமும், இன்னும் வீரபத்திரன் முதலிய சிலைகளும் உண்டு.

இந்த மண்டபத்தை அடுத்தே லக்ஷிமி நாராயணன், லக்ஷிமி வராகர், வேணுகோபாலன், தசாவதார சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. ஜெவந்தி மண்டபத்துக்குப் பின்னால் உள்ள கொடிமரத்தைக் கடந்தே உள் கோயிலுக்குச் செல்ல வேணும், இந்த மண்டபம் தான் குலசேகர மண்டபம். இங்குதான் வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. இங்கேயே மணவாள மாமுனி, உடையவர், கூரத்தாழ்வான், பிள்ளைலோகாச்சாரியர் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. இன்னும் ஆழ்வார்களுக்கு என்று ஒரு தனி சந்நிதியும் உண்டு. நம்மாழ்வாரைத் தவிர எல்லா ஆழ்வார்களும் அங்கே இருக்கிறார்கள். இத்தலத்துக்கு நம்மாழ்வார் வந்து இங்குள்ள தெய்வ நாயகரை மங்களா சாஸனம் செய்திருக்கிறாரே, அப்படியிருக்க இவரை இங்கு காணோமே என்று கேட்கத் தோன்றும். நம்மாழ்வாரது வடிவம், உற்சவர் முன்பு வைத்திருக்கும் சடகோபத்திலே (சடாரியிலே) பொறிக்கப்பட்டு அவர் விசேஷ மரியாதையுடன் இருக்கிறார் என்பார்கள், அங்கே செல்லும்போது அவரைத் தரிசித்துக் கொள்ளலாம்.

இவ்வளவு இடமும் கடந்துதான் அர்த்த மண்டபத்தக்கு வர வேணும், அந்த மண்டபத்தக்கு வெளியே சந்நிதியை நோக்கிக் கூப்பிய கையராய் சந்நிதிக் கருடன் நிற்பார். கருவறையில் இருப்பவரே தோத்தாத்திரி - பட்டாபிஷேகக் கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி இருமருங்கும் இருப்ப, ஊர்வசியும் திலோத்தமையும் சாமரை வீசிக்கொண்டு நிற்பர். தங்க மயமான ஆதிசேடன் குடை பிடிக்க, வைகுந்தத்தில் மகாவிஷ்ணு இருக்கும் கோலத்தில் காணலாம். பிருகு, மார்க்கண்டேயர், சந்திர சூரியர் எல்லாரும் இருப்பார்கள். வெளியே விஷ்வக் சேனர். ஆகப் பதினோரு பேர் ஏகாசனத்தில் இருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இத்திருக்கோலக் காட்சியை ஒரு கவிஞர் அழகாகப் பாடுகிறார்.

திருமலியும் வைகுந்தப் பெருநகரில்
இலங்கும் திருக்கோலம்
நிலத்தில் உள்ளார் திருஉறவேபணியச்
செல்வ நலம், அருளும் உயர்
செங்கமல மகளும் திருமருவு
பொறுமையுருச் சிறந்த நிலமகளும்
உருமலிய இருபாலும் உவந்தனர்
வீற்றிருப்ப உயர்வுறவே
உயர்ந்து பொருள் உணரமுயல் பிருகு
ஒப்புயர்வில் பெருந்தவத்து மார்க்கண்டன்
இருவர் உரிமையினால் இருபுறமும்
கரங்குவித்து நிலவக்

கருடனொடு சேனையர் கோன்
திரு ஆணை தெரியும் கருத்தினொடு
பணிந்து முணர்முறை உறவே இருப்பக்
கனிவுளத்தோடு இருமருங்கும்
கவரி இரட்டினராய்க் கவின் மலியும்
ஊர்வசி திலோத்தமையர் அமைய.
வருகதிர்கொன் பரிதியொடு
திங்கள் எனும் இருவர்மனை நினைத்து
தலைவணங்கி வாழ்த்தி அருகிருக்க
வாழ்வை எலாம் அடியவர்க்கு
அருளுவதே நினைந்தான் வானமலை
அரவணையின் வள்ளல் அடிபணிவாம்,

என்ற பாட்டுத்தான் எவ்வளவு விளக்கமாகக் கூறி விடுகிறது. இந்த மூலவருக்கு முன்னுள்ள அர்த்த மண்டபத்திலேதான் உபய நாச்சியார், ஸ்ரீவரமங்கைத் தாயார், ஆண்டாள் முதலியோர் பக்கம் இருக்கத் தெய்வநாயகன் என்னும் உற்சவமூர்த்தி பட்டாடை அணிந்து மகரகண்டி முதலிய அணிகளும் அணிந்து பெரியதொரு பீடத்தில் எழுந்தருளியிருக்கிறான், இந்தத் தெய்வ நாயகனையும், ஸ்ரீவரமங்கைத் தாயாரையும், நம்மாழ்வார் பத்துப் பாசுரங்களில் மங்களாசாஸணம் செய்திருக்கிறார்.

தெய்வ நாயகன் நாரணன்
திரிவிக்கிரமன் அடியிணைமிசை
மொய் கொள் பூம் பொழில்
சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை
ஸ்ரீவரமங்கை மேயபத்துடன்
வைகலில் பாடவல்லார்
வானோர்க்கு ஆரா அமுதே.

என்ற பாடலில் தெய்வநாயகன் ஸ்ரீவரமங்கையெல்லாரும் இடம் பெறுகின்றனர்.

இக்கோயிலில் உள்ள மூலவர் எல்லாரும் அன்று இருந்த ஏரியின் நடுவில் இருந்த பெரியதொரு பாறையிலேயே வடிக்கப்பெற்றவர். இன்றும் இம்மூலமூர்த்தியைச் சுற்றியே ஒரு பிராகாரம். அங்குதான் முப்பத்திரண்டு முனிவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான் ரோமரிஷி. வைகாசன முனி, தும்பிக்கை ஆழ்வார் முதலியோர் எல்லாம் அங்கே இருக்கின்றனர். இத்தலத்தின் சிறப்பு, இங்கு நடக்கும் எண்ணெய்க் காப்புத் திருமஞ்சனமே. ஆறுபடி நல்லெண்ணெய்யைச் சந்தன எண்ணெய்யுடன் சேர்த்துத் தினசரி காப்பு நடக்கிறது. விசேஷ காலங்களில் நூற்றிப் பன்னிரண்டுபடி எண்ணெய்க் காப்பு நடக்கும். இப்படித் தோத்தாத்திரி நாதருக்குத் திருமஞ்சனம் செய்யப்பட்ட எண்ணெயை ஓரிடத்தில் சேகரித்துப் பின்னர் அதனை வீரப்ப நாயக்கன் மண்டபத்துக்குப் பின்னால் உள்ள எண்ணெய்க் கிணற்றில் விட்டு விடுகிறார்கள். இந்த எண்ணெய்க் கிணற்றில் நாம் கால்படி நல்லெண்ணெய்யை வாங்கி வந்து ஊற்றி விட்டு அக்கிணற்றிலிருந்து கால்படி எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். கோயில் நிர்வாகிகள் எடுத்துத் தருவார்கள். இந்த எண்ணெய் தீராத சரும வியாதியான குஷ்டம் முதலியவைகளை யெல்லாம் தீர்க்கிறது என்பது நம்பிக்கை, பாட்டில் பாட்டிலாக இந்த எண்ணெய் வடநாட்டுப் பக்தர்களுக்குச் செல்கிறது. இந்த எண்ணெயின் மகிமையை அகஸ்தியரே அவருடைய வைத்திய முறையில் குறித்திருக்கிறார். பிரபல டாக்டர்களும் இந்த எண்ணெயின் மகிமையை உணர்ந்து இதை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பர். ஆதலால் இத்தலத்துக்குச் செல்லும்போது நீங்கள் ஒரு பாட்டில் எண்ணெய் எடுத்து வர மறக்காதீர்கள்,

இன்னும் இக்கோயிலில் உள்ள ராமர் சந்நிதி, கண்ணன் சந்நிதி, சக்கரத்தாழ்வார் இடங்களுக்கும் சென்று கண்டு தரிசித்துத் திரும்பலாம். இத்தலம் வானவாமலை என்று அழைக்கப்படுவதின் காரணம் பாண்டி மன்னன் ஒருவன் வானவன் மாதேவி என்ற சேரகுல மங்கையை மணந்து வானவன் என்ற பட்டத்தையே ஏற்றிருக்கிறான். இந்தப் பாண்டிய மன்னனே முதன் முதலில் இக்கோயிலைக் கட்டியிருக்க வேணும். வரமங்கை நாச்சியார் கோயில் கொண்டிருப்பதன் காரணமாக வரமங்கல நாயகர் என்ற பெயர் பெற்றிருக்கிறது. அந்தப் பெயரையே நம்மாழ்வாரும் தம் பாசுரங்களில் கையாண்டிருக்கிறார். பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் நாயக்க மன்னர்களால் விரிவடைந்திருக்கிறது. இன்னும் சுற்றுத் தூண்கள் தாங்கும் நீண்ட பிராகாரங்கள் இக்கோயிலின் பெரும் பகுதி நாயக்கர் திருப்பணியே என்பதை நினைவுறுத்தும். புஷ்பாஞ்சலி சன்னியாசி என்பவர் இங்கிருந்த பல திருப்பணிகளைச் செய்தார் என்பதும் வரலாறு. அப்படித் திருப்பணி செய்த அன்பர்களுக்கு நாமும் அஞ்சலி செய்து விட்டு மேலே நடக்கலாம்.