வேங்கடம் முதல் குமரி வரை 5/004-019

4. திரிபுவனச் சிற்பங்கள்

ன்றைய உலகம் சினிமா உலகம். சினிமாவில் காதல் காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன என்பதையுமே அறிவோம். பண்டைத் தமிழன் காதல் வாழ்வில் திளைத்தவன். சங்க இலக்கியங்கள் எல்லாம் அந்த வரலாற்றைத் தானே கூறுகின்றன. ஒத்த குலமும் ஒத்த நலனும், ஒத்த அழகும், ஒத்த பண்பும் உடைய தலை மகன் ஒருவனும் தலைமகன் ஒருத்தியும் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஒரு பொழிலிடத்தே ஊழ்வினை வசத்தால் தனித்து சந்திக்கின்றனர். காதல் அரும்புகிறது. பின்னர் மலர்கிறது, என்றெல்லாம் கதை விரிகிறது இலக்கியங்களிலே.

இன்றோ கல்லூரிகளிலே, கடற்கரையிலே, சாலைகளிலே, சோலைகளிலே கன்னி ஒருத்தியும் காளை ஒருவனும் சந்தித்து காதலை வளர்க்கிறார்கள் - என்றே சினிமாக் கதைகள் உருவாகின்றன. பெண் சோலை மரங்களுக்கிடையே ஓடுவதும், மல்லிகைப்பந்தரின் கீழே அவளை ஓடிப் பிடித்து விளையாடி காதல் உரையாடுவதும், நாம் நாளும். பார்க்கும் காட்சிகளாக அமைகின்றன. வெள்ளித் திரையில் கொடியடியில் காணும் மடக்கொடிகளாக மங்கையர் நிற்பதைத்தானே வெள்ளித்திரை தெள்ளத்தெளிவுடன் உருவாக்குகிறது.

இந்த கற்பனைக்கெல்லாம் மூலமாய் அமைந்த வடிவங்கள் நம் நாட்டுச் சிற்பக் கலை உலகிலும் உண்டு, ஆம் கொடியடியில் காணும் மடக்கொடிகள் இருவர் கல்லுருவில் நிற்கிறார்கள், ஒரு கோயிலிலே. அந்தக் கோயில் தான் திரிபுவனம் கம்ப ஹரேஸ்வரர் கோயில் இந்தப் பெண்களை, ஆம் சிலை உருவில் நிற்பவர்களைப் பார்த்த பின்தான் கவிச்சக்ரவர்த்தி கம்பன்

நஞ்சினும் கொடிய நாட்டம்
அமுதினும் நயந்து நோக்கி
கெஞ்சவே கமலக்கையால்
தீண்டலும், நீண்ட கொம்பர்
தன் சிலம்பு அடியில் மென்பூச்
சொரிந்து, உடன் தாழ்ந்த என்றால்
வஞ்சி போல் மருங்குலார் மாட்டு
யாவரே வணங்கலாதார்?

என்று பாடி இருக்க வேணும். இன்னும் புகழேந்தியும் கம்பனது அடி ஒற்றியே,

பாவையர் கை தீண்டப்
பணியாதார் யாவரே?
பூவையர் கை தீண்டலும்
அப்பூங்கொம்பு - மேவி அவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே.

என்றும் பாடுகின்றான். இந்தப் பெண்வடிவங்களை சிற்ப உலகில் சலபாஞ்சிகைகள் என்று கூறுகின்றனர். தமிழ் நாட்டின் சிற்பக்கலை உலகில் இவ்விரு பெண்களும் ஓர் ஒப்பற்ற சிருஷ்டி என்று கூறினால் அதை ஒருவராலும் மறுக்க முடியாது. அவர்கள் நிற்கின்ற ஒயில், அவர்கள் உடுத்தியிருக்கும் உடை, அணிந்திருக்கும் ஆபரணங்கள் எல்லாமே அழகுக்கு அழகு செய்கின்றன.

இன்னும் கூந்தலை வாரி முடித்து, அவைகளைச் சுற்றி முத்துமாலைகளைக் கோத்துக் கட்டி, அந்தக் கொண்டைகளிலே மகரிகைகளை அணிந்து, சர்வாலங்கார சோபிதைகளாக அவர்கள் நிற்கின்றனர். காதிலே அணிந்துள்ள விராட குண்டலங்களும், இடுப்பில் அணிந்துள்ள அந்தரீயமும், காலிலே அணிந்திருக்கும் சலங்கையும் ஒலிக்கும் ஒலியையே கேட்கிறோம் நாம். மார்பகத்தை மூடாது, மலையனைய முலை காட்டி மாரனையே பொர விடும் மங்கையராக அல்லவா அவர்கள் நிற்கிறார்கள்? இவர்களைக் கண்ட பின்,

நடந்தாள் ஒரு கன்னி மாரச
கேசரி நாட்டில், கொங்கைக்
குடந்தான் அசைய, ஒயிலாய்,
அது கண்டு, கொற்றவரும்
தொடர்ந்தார், சந்நியாசிகள் யோகம்
விட்டார், சுத்த சைவரெலாம்
மடந்தான் அடைத்து சிவபூசையும் -
கட்டி வைத்தனரே!

என்று கவிஞன் ஒருவனுக்கு பாடத் தோன்றினால் வியப்பே இல்லை. இந்த இரண்டு சலபாஞ்சிகை சிற்பவடிவங்களைக் காணவே ஒரு நடை போகலாம் திரிபுவனத்திற்கு.

சரி, போகிறதே போகிறோம் அங்குள்ள மற்ற சிற்ப வடிவங்களையும் காணாமல் திரும்ப இயலுமா என்ன? கோயிலை மூன்று வாயில்கள் அழகு செய்கின்றன.

அவற்றை முறையே தோரணத் திருவாயில், திருமாளிகைத் திருவாயில், திரு அனுக்கன் திருவாயில் என்கின்றனர், இவற்றை எல்லாம் கடந்து உள்ளே சென்று மூலக் கோயிலை ஒரு சுற்று சுற்றினால் கருவறை மேலே: எழுந்துள்ள ஒரு பெரிய விமானத்தையுமே காண்போம்.. இந்த விமானம் தஞ்சைப் பெரு உடையார், கங்கை. கொண்ட சோனீச்சுரத்தார் கோயில் விமானங்களைப் போல் உயரமோ காத்திரமோ உடையது அல்ல என்றாலும், அழகில் சூறைந்ததல்ல. இதனையே சச்சிதானந்த விமானம் என்பர். விமான தரிசனம் செய்து கொண்டே மேலப் பிரகாரத்துக்கு வந்தால், அங்கே மேற்கே பார்த்த கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். நான் கண்ட லிங்கோத்பவர்களில் எல்லாம் அழகு வாய்ந்த வடிவம் இது ஒன்றேதான். பொங்கழல் உருவன் அவன் என்பதைக் காட்ட, அந்த வடிவத்தில் சுடர் விடும் பல சுடர்களுக்கு உள்ளேயே இறைவனைக் காட்டியிருக்கிறான் சிற்பி.

இனி கோயிலுள் சென்று நடுக்கம் தீர்த்த பெருமானாம் கம்பகரேஸ்வரனைத் தரிசித்துவிட்டு திரும்பும் பொழுது, செப்புச்சிலை வடிவில் நிற்கும் பிக்ஷாடனர் திருக் கோலத்தையுமே காணலாம். சோழர் காலத்துச் செப்புப் படிமங்களில் சிறந்த ஒன்று அது. சொல்லாதன எல்லாம் சொல்லித் தொடர்ந்து நம்மை ஆளாக கொண்டு, நம் அன்பையும் ஆணவத்தையும் பிக்ஷை கேட்கும் அந்த அடிகளை வணங்கிய பின் வடப்பக்கம் உள்ள அறம் வளர்த்தாளையும் வணங்க வேண்டும்.

அதற்குப் பின் நாம் சரபர் சந்நிதியில் நுழைந்தால் அங்குதான் நாம் காணவந்த கன்னியர் இருவர் நிற்பர். அவர்களைக் கண்டு அவர்கள் அழகில் மயங்கி நம் உள்ளங்களைப் பறிகொடாதவாறு நிமிர்ந்து நோக்கினால், சரப மூர்த்தியைக் காணலாம். அது என்ன சரபமூர்த்தி என்கிறீர்களா? சரபர் சிவனது அஷ்டாஷ்ட மூர்த்தங்களில் ஒன்று என்பதைப் பலர் அறிவார்கள். அவர் எப்படித் தோன்றினார், எதற்காகத் தோன்றினார் என்று சொல்ல வேண்டாமா? நமக்குத் தெரியும், மகாவிஷ்ணு இரணியனை அழிக்க பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் , உள்ள நரசிம்ம வடிவம் எடுத்தார் என்று.

இரணியன் உடல் கிழித்து உதிரம் குடித்ததும் அவருக்கு ஒரு வெறியே ஏற்பட்டு விடுகிறது. அந்த வெறியை அடக்க சிவபிரானே சரபர் வடிவில் வந்து அதனை ஒடுக்குகிறார். பாதி சிங்க வடிவிலும், பாதி பறவை வடிவிலும் வந்தவரையே சரபர் என்கிறோம். நரசிம்மனை அடக்க இறைவனே சரபனாக வந்தான் என்று கொள்வது வைஷ்ணவ பக்தர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் எல்லா மூர்த்திகளும் தோன்றி நின்று ஒடுங்கும் இறைவன் ஒருவனே, அவனே நரசிம்மன், அவனே கம்பகரேஸ்வரன், அவனே சரபன் என்று மட்டும் உணர்ந்து கொண்டால் உள்ளத்தில் விகற்பங்கள் ஒன்றும் தோன்றாது. இக்கோயிலில் மூலவராம் சரபரை விட, உத்சவராக சிறிய வடிவில் செப்புப் படிமமாக இருப்பவரே மிக்க அழகு வாய்ந்தவர். சிற்பக் கலை உலகில் அதிசயமானவரும் கூட!

இத்தனை நல்ல சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டதுதான் திரிபுவனம் கோயில். இக்கோயிலை - மூன்றாம் குலோத்துங்கன் என்னும் திரிபுவனச் சக்ரவர்த்தி பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே கட்டியிருக்கிறான். சோழர் கோயில் கற்பணிகளிலே ஒரு முக்கியமான மைல் கல் இக்கோயில். இந்தத் திரிபுவனச் சக்ரவர்த்தி விரும்பியபடியே இவனது முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார் திருத்தொண்டர் பெரிய புராணத்தைப் பாடி இருக்கிறார்.

அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்த குலோத்துங்கள், அவரை யானை மீதேற்றி தானும் உடன் இருந்து அவருக்குச் சாமரை வீசிக் கௌரவித்திருக்கிறான். பக்தியும் கலையும் நிரம்பியவனாக இருந்ததனால் அல்லவா இப்படி ஒரு கலைக்கோயிலும் காவியக் கோவிலும் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறான் அவன். இக்கோயில் இன்று தருமபுரம் ஆதீன கர்த்தர் அவர்கள் மேற்பார்வையில் இருக்கிறது. திருப்பணி சிறப்பாக நடந்து குடமுழுக்கும் நடக்கிறது. ஆதீன கர்த்தர் அவர்களின் கலைப்பணியையும் பக்திக் கனிவையும் நினைத்து நான் தலை தாழ்த்தி நின்றேன்.