வேண்டும் விடுதலை/தேர்தல் வேண்டுகை!

 
தேர்தல் வேண்டுகை!


டந்த இரண்டாண்டுகளில் இந்திய அரசில் குழறுபடிகளும் கூத்தடிப்புகளும் சண்டை சள்ளுகளுமே நடந்து வருகின்றன. நல்லவர்களாலும் ஆட்சி செய்ய முடியவில்லை. வல்லவர்களாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. கொள்கை உள்ளவர்களின் ஆட்சியும் கவிழ்க்கப்படுகிறது; கொள்கையற்றவர்களின் ஆட்சியும் கவிழ்க்கப்படுகிறது. பதவிச் சண்டைக்காரர்களும், பகல் கொள்ளையடிப்பவர்களுமே மேலாங்கி நிற்கின்றனர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்ற இராசீவ், செயலலிதா, தேவிலால், சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கின்றார்கள்.!

வி. பி. சிங் அரசைச் சந்திரசேகர் இராசீவுடன் சேர்ந்து கவிழ்த்தார். 11 மாதங்களே ஆட்சியிலிருந்த வி. பி. சிங்கை, அவர் மண்டல் குழு அறிக்கையைச் செயலுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார் என்பதற்காகவும், அத்வானி, வாச்பேயி முதலிய பச்சைப் பார்ப்பனப் பதடிகள் தலைமையேற்றிருக்கும் பாரதீய சனதா, விசுவ இந்து பரிசத், ஆர். எசு. எசு. போன்ற இயக்கங்கள் கொண்ட இராமர் கோயில் சிக்கலுக்காகவுமே வி. பி. சிங் என்னும் நேர்மை மாந்தர் அரசு கவிழ்க்கப்பட்டது.

அந்நிலையில், மக்கள் சாய்காலை இழந்த பல ஊழல்கள் புரிந்த முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் கரவான முறையில் வஞ்சக மனத்துடன் சாணக்கிய சூழ்ச்சி செய்து , குரங்கு தன் குட்டியின் வாலை விட்டு ஆழம் பார்ப்பதைப் போல, 54 பாரளுமன்ற உறுப்பினர்களையே ஆதரவாளராக்கிக் கொண்ட சந்திரசேகரரை ஆட்சியில் ஏற்றி அவரைத் தம் கைப்பாவையாக ஆக்கித் தம் விருப்பத்திற்கு ஆட்டி வைத்து அசாம், தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, முதலிய மாநில அரசுகளை அடியோடு குப்புறக் கவிழ்த்துக் குடியரசுத்தலைவராகிய பார்ப்பன வெங்கட்டராமனின் ஆட்சியை அமையச் செய்தார். அரசியலும். அதிகாரமும் வாய்ப்புகளும் பார்ப்பனியத்திற்கு இருக்கவேண்டும் என்று எண்ணுவதில் குடியரசுத் தலைவர் வெங்கடராமன் யாருக்குமே கீழான வரல்லர் என்பதைக் கடந்த இரண்டாண்டுகளாக நடந்த இந்திய ஆட்சி நாடகங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டன.

இவ்வாறான, சூழ்நிலையில், இரு காவலர்கள் வேவு பார்த்தனர் என்னும் நொண்டிச்சாக்கை அடிப்படையாக வைத்து, ஏறத்தாழ மூன்றரை மாதங்களை ஆட்சி செய்த சந்திரசேகரரையும் அண்மையில் கவிழ்த்து விட்டார், இந்த அரசியல் பத்தினியான இராசீவ்!

இந்த ஊழல் பேர்வழிக்குத் துணையாகவும் இவரின் கொள்ளைப் பணத்திற்குப் பங்காகவும், இங்கு முன்பு மூப்பனார் கூட்டமும், இக்கால் செயலவிதா, வாழைப்பாடி, திண்டிவனங்கள், குமரி அனந்தன்கள் போன்றவர்கள் கூட்டமும் செயல்பட்டன; படுகின்றன. பணம் என்றால் வாய் திறந்து வயிறு கழுவுகின்ற இப்பிணந்தின்னிக் கழுகுகள் அரசியலில் ஏதோ பெரிய அறிஞர்கள் போலவும் தேசியப் பற்றுள்ளவர்கள் போலவும் கதைநாயகனுக்கேற்ற கட்டியங்காரன்களாக நாடகம் ஆடுகின்றனர்.

அவர்களும் இவர்களைப் போன்றவர்களும் பேசுவதெல்லாம் இந்திய ஒருமைப்பாடும் ஒற்றுமையும்! ஆனால் செய்வது எல்லாமே திருட்டுத்தனங்களும், பார்ப்பனியச் சூழ்ச்சிகளும் வேற்றுமைகளுமே! இந்தியாவில் அரசியலா நடைபெறுகிறது? பதவிச்சண்டைகளும், கள்ளப்பணங்களைப் பகிர்ந்து கொள்ளும் புகழ் கொள்ளைகளுந் தாமே! விளக்காக ஓரிரண்டு இடங்களில் ஓரிரண்டு நல்ல செயல்கள் இருக்கலாம் ஆனால் அவற்றால் என்ன பயன்?

முதலாளியமும் பார்ப்பனியமும் இணைந்து, சாதியத்தையும் மதவெறியையும் முன்னிறுத்தி, இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கும் அறக்கேடுகளுக்கும், காந்தியத்தையும், பார்ப்பனப் பாவலன் பாரதியையும் பின்னிறுத்தி நடத்தப் பெறும் இந்திய ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி, கொள்ளையர் ஆட்சி; கொலைகாரர் ஆட்சி வல்லதிகார ஆட்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

இந்தச் சூழ்நிலையில் இனிமேலும், இந்திய நடுவண் அரசுடன் தமிழின மக்கள் அரசியல் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. எத்தனை வழக்காடினாலும், ஞாயம் பேசினாலும், வடநாட்டானும் ஆட்சித் தலைமையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பானும் தமிழினத்தை மதிக்கமாட்டார்கள் அவர்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டார்கள். இவர்களுக்காகவே இவர்களே எழுதி வைத்துக் கொண்டிருக்கும் சட்டங்களும் அதிகாரங்களும் அறமன்றங்களும் இவர்களுக்குத் துணையாகவே இருக்கும். இந்த நிலையை எந்த மாநில அரசாலும் என்றைக்கும் மாற்றவே முடியாது. இன்னும் குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசைக் கைப்பற்றும் எந்தக்கட்சி ஆட்சியும் கூட இவர்களைத் தட்டிக் கேட்கவோ, தங்களின் வாழ்வுரிமைகளைப் பெறுவதற்கோ முயற்சி செய்யாது; செய்ய முடியாது. இந்தியா உரிமை பெற்று நாற்பத்து நான்கு ஆண்டுகளாகியும். தமிழர்கள் திராவிடர்கள் என்று இம்மாநில ஆட்சியைக் கைப்பற்றிய எங்கும் கூட அவ்வாறு செய்ததில்லை. செய்வதற்கு முயற்சி செய்வதும் கூட இல்லை.

இறுதியாக, தமிழக அரசுப் பொறுப்பைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றிருந்த கலைஞரின் தி.மு.க. அரசு கூட மாநில ஆட்சி என்ற அளவில்தான், வடநாட்டாருடனும் தமிழினத்தின் கழுத்தை அரிந்து கொண்டிருக்கும், பார்ப்பனருடனும் கூடிக்குலவி, தனிப்பட்ட தங்களின் நன்மைக்கும், பதவி நலத்திற்கும், அதிகார வாய்ப்பிற்குமாக ஆட்சி நடத்தியதே தவிர, தமிழுக்கென்றோ தமிழினத்தின் நிலையான அடிமை நீக்கத்திற்கென்றோ, தமிழ் நாட்டின் உரிமை மீட்சிக்கென்றோ எந்த ஒரு செயலையும் செய்ததில்லை. வள்ளுவர் கோட்டமும், பூம்புகார் அமைப்பும், கன்னியாகுமரியில் அமையவிருக்கும் திருவள்ளுவர் சிலையும், இலவயக் கல்வியும், சாரவுணவும், இலவய அரிசியும் வேட்டி சேலைக் கொடுப்பும் அரசியலும் அன்று ஆட்சியியலும் அன்று: இனமீட்பும், உரிமை மீட்சியும் அல்ல! வெறும் ஏமாற்றும் கண்துடைப்புமே ஆகும். நாற்பது இலக்கம் உறுப்பினர்கள் உள்ள கட்சி எங்கள் கட்சி என்று பீற்றிக் கொள்ளும் தி.மு.க. பின்பற்றிகளுக்கும், ஏன் கலைஞர்க்குமே சொல்லிக் கொள்கிறோம்!

“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’

என்னும் திருவள்ளுவப் பெருமானின் திருவாய் மொழியை நன்கு படித்திருப்பீர்கள். ஆனால் உணர்ந்திருக்க மாட்டீர்கள்; உணர்ந்திருந்தாலும் அதை வாழ்க்கையிலும் கடைப்பிடித்து உணர்த்தியிருக்க மாட்டீர்கள்! ஆட்சிச் செருக்கும் அறிவு அகம்பாவமும் உள்ள உங்களிடம் படைச் செருக்கும், வினைத் தூய்மையும் இருத்தல் அரிதினும் அரிது.

திருவள்ளுவர் பெருமானின் கருத்தை ஊரெல்லாம் முழக்குவீர்கள். அவர் திருவுருவச் சிலையையும் நாட்டுவீர்கள்! ஆனால் அவர் என்ன சொன்னார், எதற்குச் சொன்னார், ஏன் சொன்னார், எப்படிச் சொன்னார், எவருக்காகச் சொன்னார் என்கின்ற மெய்ப்பொருளை நீங்கள் அறிந்திருப்பதாக இதுவரை எங்கும் எப்பொழுதும் எதன் பொருட்டும் நீங்கள் காட்டவில்லை. உங்களிடம் உள்ள போலித்தனமான அறிவும், புரையோடிய உள்ளமும், புல்லிய செயல்களுமே உங்களை அவற்றினின்று வேறு பிரித்து வைத்திருக்கின்றன. உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுக்கவும் உங்களை நீங்களை மெச்சித்துக் கொள்ளவுந்தாம் நீங்கள் அறிவீர்கள். எனவே எந்த வாய்ப்பையும் நீங்கள் உங்களுக்காகத்தான் பயன்படுத்துவீர்களே தவிர, இம்மொழிக்காகவும், இனத்திற்காகவும், நாட்டிற்காகவும் பயன்படுத்த மாட்டீர்கள்.

இவ்வாறு நீங்கள் என்றுமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள், ஏனெனில் பிறர்க்கு உடலில் மட்டுந்தான் கொழுப்புப்படரும். ஆனால், கலைஞரே, உங்களுக்கு நீங்கள் மூச்சுயிர்க்கும் நெஞ்சாங் குலையிலும் கொழுப்பு! நீங்கள் பார்க்கின்ற கண்களிலும் கொழுப்பு! நீங்கள் சிந்திக்கின்ற மூளையிலும் கொழுப்பு படர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் கிடைத்த வாய்ப்பு களையெல்லாம் பறிகொடுத்து விட்டீர்கள்! இனி உங்கட்கு வெறும் வாய்ப்பூ தான்! இது நிற்க.

எனவே, தமிழர்களே! இனி எந்த அரசியல் கட்சியையோ, அரசியல் தலைமையையோ நம்ப வேண்டா. இனிமேலாகிலும் இந்திய அரசியலிலிருந்து பிரிந்து தனித்தமிழ்நாடு பெறுவதே நம் குறிக்கோளாக, முழு முயற்சியாக, இருத்தல் வேண்டும்.

ஆகவே, வருகின்ற, வந்து போகின்ற தேர்தல் திருவிழாக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டா. அதில் குதித்துக் கொம்மாளமிட்டுக் குளிர்காய விரும்பும் எவரையும் நீங்கள் நம்பவும் வேண்டா. அப்படி ஒரு வேளை நீங்களும் தேர்தலில் ஈடுபட்டு, எவரையேனும் உங்கள் மனத்துக்கும் அறிவுக்கும் பிடித்தவர் ஒருவர்க்கு, நீங்கள் ஒப்போலைவிட விரும்பினால், அவர் தனித்தமிழ் நாட்டுக் கொள்கை உடையவராக இருக்கட்டும்.

ஆமாம்! இந்தியக் கொடுங்கோல் சாதிமத வெறிகொண்டே பார்ப்பனீய முதலாளிய வடநாட்டு அரசினின்று தமிழகத்தை மீட்டுத் தனி இறையாண்மை அரசமைப்பவரையே அவ்வாறு உறுதி கொடுப்பவரையே தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்!

தமிழ்நிலம், இதழ் எண் : 144, நவம்பர் 1990