5.பரிகலப் படலம்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் தொகு
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் தொகு
ஓர் அங்கதக் காவியம் தொகு
- ஐவரை மணந்தெம் கணவர் அடைந்த
- துயரெலாம் இங்கே சொல்லி முடியுமோ?
- இவரில் ஒருத்தியாய் எளியேன் அடைந்த
- குறையெலாம் இங்கே கூறி முடியுமோ?
- ஒருநாள்-
- வெட்கம் வெட்கம் மிகவும் வெட்கம்!
- துக்கம் துக்கம் பெரிதும் துக்கம்!
- மனமும் நாணி வருத்துதே அம்மா!
- நாவும் குழறி நடுங்குதே அம்மா!
- எப்படிச் சொல்வேன்! யாவற் றிற்கும்
- என்தலை விதியை யன்றியிவ் வுலகில்
- எவரை நோக இடமுண் டம்மா!
- தீபா வளியோ திருக்கார்த் திகையோ,
- நன்றாய் எனக்கு ஞாபக மில்லை
- வீட்டில் ஏதோ விசேஷ முண்டு,
- வீரவ நல்லூர் விருந்து முண்டு,
- பருப்பு முதலிய பற்பல கறிகள்
- வகைவகை யாக வைத்தது முண்டு.
- வந்த மன்னரும் எங்கள் மன்னரும்
- அமுது செய்துகை அலம்ப வெளியில்
- இறங்கினர், உடனே எனக்கு முன்னால்
- வாழ்க்கைப் பட்ட மனைவிய ருக்குள்
- இழுப்பும் வலிப்பும் எதிர்ப்பும் வந்தன
- அடியும் பிடியும் கடியு மாயின
- மனிதப் பிறவியில் வந்தவ ராமென்று
- எள்ளள வேனும் எண்ண மிலாதவர்
- கொண்டை பற்றிச் சண்டை செய்தனர்!
- மண்டை ரத்தம் வடிய விட்டனர்.
- என்னால்,
- ஆன மட்டும் விலக்கினேன், அம்மா!
- ஆகா தாகா தென்றேன், அம்மா!
- கெஞ்சிக் கெஞ்சிச் சொன்னேன் அம்மா!
- கீழே விழுந்துகும் பிட்டேன் அம்மா!
- எதற்கும் இவர்கள் இணங்கினா ரில்லை.
- எளியேன் செய்யவே றென்னுண் டம்மா?
- கூகூ என்ற கூக்குரல் கேட்டுப்
- பக்கத் துள்ளார் பலரும் வந்தனர்.
- ஊரார் எல்லாம் ஒன்றாய்க் கூடினர்.
- விருந்தின ரெல்லாம் விரலை மூக்கில்
- வைத்த படியே மயங்கி நின்றனர். (40)
- முடிவில்,
- மேலவீட் டண்ணன் வெள்ளையம் பிள்ளை
- நல்ல மனிதர் நடுநிலை யுள்ளவர்
- நாலு காரியமும் நன்றாய் அறிந்தவர்
- பட்டுத் தேறிப் பழக்கம் வந்தவர்
- (என்ன செய்யலாம் இறந்து போயினரே!)
- வந்தொரு வாறு வழக்கைத் தீர்த்தார்
- ‘ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி
- புருஷன் எச்சில் புசித்திட வேண்டும்,
- இடையில்,
- தீபாவளியோ திருக்கார்த் திகையோ
- வேறிம் மாதிரி விசேஷ நாளோ
- வந்திடு மாகில், வரிசை வரிசையாய்
- ஐந்திலை யிட்டவை அனைத்திலும் அமுது
- படைத்துப் புருஷன் பருகிய பின்னர்
- பரிகலத் துள்ள பதார்த்த மெல்லாம்
- மனைவியர் சரியாய் வகுத்துண வேண்டும்
- வழக்குகள் ஒன்றும் வரலா கா(து)’எனக்
- கூறிப் போயினர், கூடி யிருந்தோர்
- யாவரும் ‘இதுவே நீதி’ என்றனர். (60)
- என்றவர்,
- கலக முண்டான காரண மறிந்து
- சிரித்து நின்றார், ‘சீசீ’ யென்றார்
- ‘எச்சில் இலைக்காய் இந்தக் களரி
- கூட்டுவ ரோ?எனக் கூறிப் போனார். (65)
- ஐயோ!
- துயரம், துயரம், பிறப்பே துயரம்!
- பிறப்பினுந் துயரம் பெண்மக ளாதல்,
- பெண்மக ளாதலிற் பெரிதும் துயரம்
- மருமக் கள்வழி வலையிற் படுதல் (70)
- வலையிற் பட்டு வருந்தலில் துயரமோர்
- காரண வருக்குக் கழுத்தைக் கொடுத்தல்
- கழுத்தைக் கொடுத்தலில் துயரம் கருணை
- இல்லா மாமிக் கிசைய நடத்தல்
- இசைய நடத்தலில் துயரம் என்போல் (75)
- பாரக மீதிப் பஞ்சபா விகளுள்
- ஒருத்தி யாக உயிர்பெற் றிருத்தலே!