அடிமனம்/புதிய கொள்கைக்கு விதை


புதிய கொள்கைக்கு விதை

பிராய்டு இதைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவருடைய மனமும் இதில் ஈடுபட்டது. இந்த முறையைக் கையாண்டு பார்க்க அவருக்கும் ஆசையுண்டாயிற்று. பிராயரும் பிராய்டுமாகச் சேர்ந்து தொழில் செய்யும்போது இந்த மாதிரியான நோயாளிகளை மனவசிய நிலையிலிருக்கச் செய்து அந்த நோய் தொடங்குவதற்கு முதற் காரணமாக இருந்த சம்பவத்தை ஞாபகத்திற்குக் கொண்டுவர முயலுமாறு செய்தனர். அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்துவிட்டால் அதுவே அந்த நோய் நீங்குவதற்குக் காரணமாக இருப்பதை அவர்கள் கண்டார்கள்.

இந்த சமயத்தில் ஜீன் மார்ட்டின் ஷார்க்கோ (charcot) என்பவர் பாரிஸில் புகழ்பெற்ற வைத்தியராக இருந்தார். மனவசிய முறையைக் கொண்டு மனநோய்களைக் குணப்படுத்த முதன் முதலாக முயன்ற வைத்தியர்களில் இவரும் ஒருவர். இவரிடத்தில் மனவசிய முறையை மேலும் விரிவாகக் கற்றுக் கொள்ளுவதற்காக பிராய்டு 1855-ல் பாரிஸுக்குச் சென்றார்.

பாரிஸிலிருந்து வியன்னாவுக்குத் திரும்பிய பிறகு பிராய்டு மனவசிய முறையைக் கையாண்டு அது அவ்வளவு திருப்தியான பலனையளிப்பதில்லை என்று கண்டார். அந்தக் காலத்தில் மனவசியத்தை சிகிச்சை முறையிற் கையாண்டவர்கள் மனவசியத் தூக்கத்திலிருக்கிற நோயாளிகளைப் பார்த்துச் சில கட்டளைகளையிடுவார்கள். ஒருவனுக்குக் கைவராமலிருந்தால் அவனை மனவசியத் தூக்கத்தில் இருக்கச் செய்து அவனுடைய கையை நீட்டவும் அசைக்கவும் உத்திரவிடுவார்கள். நோயாளி அவ்வாறே செய்வான். மனவசிய உறக்கம் கலைந்த பிறகும் அதைத் தொடர்ந்து செய்வான். ஆனால் இந்த சக்தி நீடித்திருப்பதில்லை. மறுபடியும் பழைய நிலைமை சில நாட்களிலோ சில மாதங்களிலோ ஏற்படத் தொடங்கியது; அல்லது அதே கோளாறு ஏற்படாவிட்டாலும் புதிதாக வேறு ஏதாவது ஒரு கோளாறு தோன்றத் தொடங்கியது. மேலும் எல்லோரையும் மனவசியத் தூக்கத்தில் இருக்கும்படி செய்யவும் முடியவில்லை.

பிராய்டுக்கு பிராயர் ஒரு சமயம் கூறிய சம்பவமே உள்ளத்தில் நன்றாகப் பதிந்திருந்தது. தற்செயலாகக் கண்டுபிடித்த அந்த முறையிலே அவருக்குப் பற்றுதல் ஏற்பட்டது.

மனவசியத் தூக்கத்திலே இருக்கும்போது நோயாளியை அவனுடைய மனத்தில் தோன்றும் எண்ணங்களை யெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி கூறி அதன் வழியாக அந்த மனநோய் ஏற்பட்ட காரணத்தைக் கண்டுபிடிக்க அவர் முயன்றார். அவ்வாறு நோய்க்குக் காரணமான சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்ததும் நோய் குணமாவதை அவர் மேலும் பல சோதனைகளின் மூலம் கண்டறிந்தார்.

சாதாரணமாக ஒருவனுக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தை மற்றவர்களிடம் எடுத்துக் கூறுவதினாலேயே அந்த துக்கம் சற்றுத் தணிகிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். யாராவது ஒருவர் வீட்டில் ஏற்பட்ட மரணத்திற்காக துக்கம் விசாரிக்கச் செல்லுவதிலும் இந்த உண்மை அடிப்படையாக இருக்கிறது. பலபேர் சென்று துக்கம் விசாரிப்பதால் துக்கப்படுபவர்களின் மனத்திலுள்ள பாரம் குறைகிறது.

கோபம் வந்தவன் மற்றவர்களைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்படித் திட்டுவதால் அவன் கோபம் தணிகிறது.

இவ்வாறேதான் மனத்தில் அழுந்திக்கிடக்கும் சிக்கல்களை மறுபடியும் வெளிக்கொணர்ந்து அவற்றை மறுபடியும் நினைவின் மூலமாக அநுபவிக்கும்படி செய்துவிட்டால் அந்தச் சிக்கல்களினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கி விடுகின்றன.

இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு மனத்திலுள்ள எண்ணங்களைத் தாராளமாக வெளியில் சொல்லி அதன் மூலம் ஆறுதல் பெறும் முறையை பிராய்டு மேலும் சோதனை செய்ய விரும்பினார்.

பிராய்டும் பிராயரும் சில காலம் சேர்ந்து தொழில் செய்தார்கள். அவர்களுடைய புதிய முறை நல்ல வெற்றியளித்தது. இந்த முறைக்கு அவர்கள் தூய்மையுறும் முறை (Catharsis) என்று பெயரிட்டனர். நோயாளி தன் மனத்திற்கு வரும் எண்ணங்களை யெல்லாம் வெளியிலே கூறி ஆறுதல் பெறுவதால் மனத்தின் பாரம் நீங்கித் தூய்மையுறுகிறான்; அவனுடைய மனச் சிக்கல்கள் நீங்குகின்றன.

இந்த முறையின் தோற்றத்திற்கு பிராயர் முதற் காரணமாக இருந்தாலும் அவர் இதைத் தொடர்ந்து கைக் கொள்ளவில்லை; மேற் கொண்டு ஆராய்ச்சி செய்யவும் இல்லை. ஆனால் பிராய்டு தொடர்ந்து இதை ஆராய்ந்தார். அதன் பயனாகப் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்து மனத்தைப் பற்றிய அறிவிலேயே ஒரு புரட்சியை உண்டாக்கி விட்டார்.

நோயாளி தன் மனத்திலே புதைந்து கிடக்கும் பழைய அதிர்ச்சிகளையும், அநுபவங்களையும் நினைவுக்குக் கொண்டு வருவதற்கு மனவசியத் தூக்கமும் அவசியமில்லை என்பதையும், அதை வேறு வகையிலே செய்யலாம் என்பதையும் பிராய்டு தம் அநுபவத்தின் மூலமாகக் கண்டார்.

மங்கலான வெளிச்சம் உள்ள ஒரு அறையிலே நோயாளியைத் தனியாகப் படுக்க வைக்க வேண்டும். யாதொரு விதமான இரைச்சலுமில்லாமல் அமைதியாக இருக்கும்படி செய்ய வேண்டும். நோயாளியைத் தன் கை கால்களைத் தளர்த்திவிட்டு நல்ல ஓய்வு நிலையில் இருக்கச் செய்யவும் வேண்டும், அந்தச் சமயத்தில் ஏதாவது ஒரு கேள்வி அல்லது குறிப்பின் மூலம் நோயாளியின் மனத்தில் எழுகின்ற எண்ணங்களை யெல்லாம் கொஞ்சம் கூட ஒளிக்காமல் அவை தோன்றியவுடனே சொல்லிக் கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும். இப்படித் தாராளமாக எண்ணங்களைச் சொல்லும் போது பழைய அநுபவங்கள், ஆசைகள் எல்லாம் தாமாகவே வெளியாகின்றன. அவற்றின் மூலம், ஒருவனுடைய குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகள், துன்ப அநுபவங்கள் எல்லாமும் வெளியாயின. நோயாளி அவற்றைக் கூறும்போது அவற்றை மறுபடியும் அநுபவிப்பது போல் உணர்ந்து வெளியிட்டான். இவ்வாறு செய்வதன் மூலம் மனத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கி மனக் கோளாறும் மறைந்தது.

இதிலிருந்து பிராய்டுக்கு ஒரு முக்கியமான உண்மை வெளிப்பட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஏற்பட்ட அதிர்ச்சிகளும், முக்கியமான அநுபவங்களும், அடக்கி வைக்கப்பட்ட இச்சைகளும், எண்ணங்களும் முற்றிலும் மறைந்து போய்விடுவதில்லை. அவை மனத்திற்குள் எங்கேயோ அழுந்திக்கிடக்கின்றன. மனத்தின் அந்தப் பகுதி சுலபமாக வெளிப்படையாகத் தோன்றுவதில்லை. இம்மாதிரியாக மனத்தில் ஒரு பகுதி இருக்க வேண்டும் என்று பிராய்டு கண்டார்; இந்தப் பகுதிக்கு அடிமனம் அல்லது நனவிலிமனம் என்று பெயர் கொடுத்தார். மனத்தின் ஆழ்ந்த பகுதி என்றும், நனவுக்கு எளிதில் வராத இச்சைகள் முதலியவை அழுந்திக் கிடக்கும் பகுதியென்றும் இதை விளக்கலாம்.

நனவிலி மனத்தில் அழுந்திக் கிடக்கும் இச்சைகள் முதலியவைகள் பெரும்பாலும் காமம், சினம், கோபம்., அச்சம் முதலான வலிமை மிகுந்த உள்ளக் கிளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. இவைகளெல்லாம் ஏதாவதொரு காரணத்தால் முதலில் அடக்கப் பட்டிருக்கலாம். சமூகம் ஏற்றுக் கொள்ளாத இச்சைகள் அடக்கப்பட்டிருக்கலாம். வேறு எத்தனையோ காரணங்களாலும் இவை அடக்கப்படுகின்றன.

இவ்வாறு அடக்கப் படுவதால் உள்ளத்திலே கோளாறுகள் ஏற்படுகின்றன; கவலை தோன்றுகிறது. இவற்றின் வேகம் மிகுந்து விட்டால் மனநோயும் உண்டாகிறது

மனநோயுடையவர்களை அவர்கள் நனவிலி மனத்தில் அழுந்திக்கிடக்கும் இச்சைகள், அநுபவங்கள் முதலியவற்றை நனவுக்குக் கொண்டுவருமாறு செய்து அவற்றை மீண்டும் மனத்திலேயே அநுபவிக்கும்படி செய்து விட்டால் மனநோய் நீங்குகிறது. மனம் தாய்மையுறுகிறது.

இவ்வாறு மனத்திற்குக் கொண்டுவதற்கு பிராய்டு கண்டுபிடித்த முறையை மேலே கண்டோம். அதற்கு அவர் “தடையிலாத் தொடர் முறை” என்று பெயர் கொடுத்தார்.

ஒரு பெரிய அதிர்ச்சியானது ஹிஸ்டிரியா முதலிய மனநோயை உண்டாக்குகிறதென்று முன்னரே கண்டோமல்லவா? முன்பெல்லாம் ஹிஸ்டிரியா பெண்களுக்குத்தான் உண்டாகும் நோயென்று நினைத்தார்கள். ஆனால் அது ஆண்களுக்கும் வருவதுண்டு என்பதை முதல் உலகயுத்தத்தின் போது தெளிவாகக் கண்டார்கள்.

பயங்கரமான சப்தத்துடன் ஒரு வெடிகுண்டு எதிரிலேயே வெடிக்கும். அது போர்வீரர்களின் மனத்தில் பெரிய பீதியை விளைவிக்குமல்லவா? உள்ளக் கிளர்ச்சி மிகுந்த வீரர்களை இது பாதிக்கிறது. வெடிகுண்டு நேரடியாக ஒகு தீமையும் செய்யாவிட்டாலும் சிலருக்குத் திடீரென்று கண் தெரியாது போய்விடும்; அல்லது காது கேளாது போய்விடும். இது அந்தக் குண்டு வெடித்ததால் மனத்தில் உண்டான அதிர்ச்சியின் காரணத்தாலே யாகும்.

குண்டு வெடித்த அந்தப் பயங்கர அநுபவத்தை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும்படி செய்துவிட்டால் இந்த நோய் நீங்கிவிடுகிறது. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டு விட்டது என்ற செய்தியே சிலருக்கு இந்த வெடிகுண்டு அதிர்ச்சி நோயைக் குணப்படுத்தி யிருக்கிறது.

ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதற்கு மனவசிய முறையில் தொடங்கிய சிக்மண்டு பிராய்டு முடிவில் மனப் பகுப்பியல் என்ற மனத்தைப்பற்றிய புதியதோர் உண்மையைக் கூறும் சாஸ்திரத்திற்கு அடிகோலலானார். நூற்றுக்கணக்கான நோயாளிகளைச் சோதனை செய்து பொறுமையோடு அவர் செய்த ஆராய்ச்சிகளே அவருக்கு உதவியாக நின்றன.

அவர் தமது கருத்துக்களை முதலில் வெளியிட்ட போது எத்தனையோ எதிர்ப்புகள் தோன்றின; எத்தனையோ பேர் அவரைப் பரிகாசம் செய்தனர். ஆனால் இன்று அவர் தோற்றுவித்த மனப் பகுப்பியல் பொதுப் படையாக எங்கும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது; மனத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு வழி காட்டியவர்களில் சிக்மண்ட் பிராய்டுக்கு ஒரு சிறந்த ஸ்தானமும் கிடைத்திருக்கிறது.

பிராய்டு கூறிய விஷயங்கள் எல்லாம் அப்படியே உண்மையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது மெய் தான். மனத்தைப்பற்றிப் புதிதாக ஒரு கருத்தை வெளியிடும்போது முதலில் கூறிய எல்லா விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் என்று யாரும் எதிர் பார்க்கமுடியாது. அதன் அடிப்படை மட்டும் உண்மையாக இருக்கிறதா என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். பிராய்டே பிற்காலத்தில் தமது கருத்தின் அம்சங்கள் சிலவற்றை மாற்றி யமைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் மனத்தைப் பற்றிய உண்மைகளை அறிவதற்கு உதவி செய்த பெருமை எவ்வகையிலும் குறைந்து போகாது. உளவியல் என்பதே தத்துவ சாஸ்திரத்திலிருந்து பிரிந்து தனியாக ஒரு சாஸ்திரமாக வளர்ந்து பல ஆண்டுகள் ஆகவில்லை. அது குழந்தைப் பருவத்திலிருக்கும் ஒரு சாஸ்திரம் அதிலே ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மனத்தின் மறைவிடங்களைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பார்க்கும்படி செய்தவர் சிக்மண்ட் பிராய்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. 
மனப் பகுப்பியலின் தந்தை

பிராய்டு தமது நான்காம் வயதிலிருந்து ஆஸ்திரியாவின் தலைநகராகிய வியன்னாவில் வளர்ந்து வந்தார். அவர் பிறந்தது மொரேவியாவில் உள்ள பிரீபர்க் (Freiberg) என்ற ஊரிலாகும். மொரேவியா இப்பொழுது செக்கோஸ்லோவாக்கியாவில் ஒரு பாகமாக இருக்கிறது. பிராய்டு ஒரு யூதருக்கு அவருடைய இரண்டாம் மனைவியின் பிள்ளையாகப் பிறந்தார். பிராய்டு வியன்னா பல்கலைக் கழகத்தில் வைத்தியத் துறையில் கல்வி பயின்று பட்டம் பெற்றுப் பிறகு மனித உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவருடைய ஆாாய்ச்சியிலே அவருக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தது. கண்ணில் ரண சிகிச்சை செய்ய வேண்டி நேர்ந்தால் அதில் வலி தெரியாமல் இருப்பதற்காக கொக்கேன் என்னும் மருந்தைப் பயன் படுத்த முடியும் என்பதை இவர் தமது ஆராய்ச்சியின் மூலம் அநேகமாகக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அதைப் பூர்த்திசெய்து பிறருக்கும் எடுத்துக் காட்டி நிரூபிப்பதற்கு முன்பாக இவர் அந்த ஆராய்ச்சியை விட்டுப் போகும்படி நேரிட்டது இவருடைய காதலி பல ஆண்டுகளாக வேறொரு பட்டணத்திலே காத்திருந்தாள். அவளால் மேலும் காத்திருக்க முடியவில்லை போலும். அவள் அவசரமாக வரும்படி அழைத்ததை மறுக்க முடியாமல் இவர் தமது ஆராய்ச்சியை முடியும் தருணத்தில் விட்டுவிட்டுப் போய் விட்டார். அந்த ஆராய்ச்சியை இவருடைய நண்பரான கோல்லர் (Koller) முடித்து இவருக்கு உரித்தான புகழை அவர் சம்பாதித்துக் கொண்டார்.

பிராய்டு தமது காதலியை மணந்துகொண்ட பிறகு தமது பழைய ஆராய்ச்சிகளில் சிலகாலம் ஈடுபட்டிருந்தார். ஆனால் பொருளாதார நிலைமை அவ்வாறு ஆராய்ச்சி செய்வதற்கு இடங் கொடுக்காததால் இவர் நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் தொழிலை நடத்தலானார்.

நரம்பு மண்டல நோய்களைத் தீர்ப்பதற்கு மேலும் சிறந்த தகுதிபெற வேண்டுமென்று பிராய்டுக்கு விருப்பம் உண்டாயிற்று. அதனால் இவர் 1885-ல் பாரிஸுக்குச் சென்றார். அந்த சமயத்தில் பாரிஸில் ஷார்க்கோ என்பவர் ஹிஸ்டிரியா நோயைக் குணமாக்குவதில் பெருங்கீர்த்தி பெற்றிருந்தாரென்று முன்பே கூறினேன். அவரோடு பிராய்டு ஓராண்டு வேலைசெய்தார். ஷார்க்கோ மனவசிய முறையைக் கையாண்டு ஹிஸ்டிரியா நோயாளிகளைக் குணமாக்குவதைக் கண்டு அம்முறையைப் பாராட்டினார்.

1886-ல் பிராய்டு வியன்னாவுக்குத் திரும்பிவந்து ஜோசப் பிராயருடன் சேர்ந்து தொழில் நடத்தலானார். பிராயரும் ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதில் புகழ் வாய்ந்தவர். அவர் தற்செயலாகக் கண்டுபிடித்த ஒரு முறை தான் பிற்காலத்தில் பிராய்டுக்குத் தமது மனப் பகுப்பியல் கொள்கையை நிறுவுவதில் உதவியாக இருந்தது. மனவசிய நிலையில் இருக்கும்போது ஹிஸ்டிரியா நோயாளியான ஒரு பெண்மணி தனது பழைய அநுபவங்களைக் கூறியதும் அவ்வாறு கூறியதால் அவளுடைய நோய் குணமாகி வந்ததையும் பிராயர் கவனித்த விஷயத்தைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டோம். இது பிராய்டுக்குப் பெருந்துணையாக இருந்தது. பிராயர் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்யவில்லை.

ஆனால் பிராய்டு அம்முறையைக் கையாண்டதோடு அம்முறையைக் கையாளுவதற்கு மனவசியமும் அவசியமில்லை என்று கண்டாரென்பதையும் முன்பே அறிந்திருக்கிறோம்.

மனவசிய நிலையில் நோயாளியை வைப்பதற்குப் பதிலாக மனத்திலே தோன்றும் எண்ணங்களை யெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி செய்யும் ‘தடையிலாத் தொடர்முறை’ என்பது பிராய்டு வகுத்தது. அதுவே அடிமனத்தில் மறைந்து கிடக்கும் இச்சைகளையும் அநுபவங்களையும் வெளிக் கொண்டு வருவதற்கு நல்ல சாதகமாக அமையலாயிற்று. பிராய்டு இந்த முறையைத் தமது அநுபவத்தின் பயனாக மிகச் சிறப்பாகத் திட்டப்படுத்தினார். இத்துடன் கனவுப் பகுப்பு முதலான வேறு பரிசீலனைகளும் அடிமன இச்சைகளையும், அடிமனத்தில் அழுந்திக்கிடக்கும் அநுபவங்களையும் அறிவதற்கு உதவுகின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார்.