அப்பம் தின்ற முயல்/பகைவென்ற சிறு முயல்

8
பகைவென்ற
சிறு முயல்

வேலூருக்குப் பக்கத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டை வேலூர்க்காடு என்றே மக்கள் அழைப்பார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய நாகப் பாம்பு வாழ்ந்து வந்தது. அந்த நாகப் பாம்பு அந்தக் காடு முழுவதும் சுற்றிச் சுற்றி வரும். பெரிய மிருகங்களை அது பெரும்பாலும் நெருங்குவதில்லை. தவளை, கோழிக்குஞ்சு போன்ற சில உயிர்களைக் கொன்று தின்பது அதன்வழக்கம். ஆடு, நாய், முயல், குரங்கு, மான்போன்றவற்றையும் அது சில சமயம் ஏதாவது காரணம் கூறிச் சீறிப் பாய்ந்து திண்டிவிடும். அந்தச் சின்ன உயிர்கள் நஞ்சு தாங்காமல் இறந்து போகும்.

ஒரு நாள் அந்த வேலூர்க் காட்டின் வழியாக ஒரு பார்ப்பன வழிப் போக்கன் சென்று கொண்டிருந்தான். அவன் தலையில் அரிசிமூட்டையும், தோளில் காய்கறிகள் நிறைந்த ஒரு மூட்டையும், கையில் ஒரு செம்பு நிறையப் பாலும் வைத்திருந்தான். அவன் காட்டு வழியாக நடந்து செல்லும் போது பாதையின் குறுக்கே அயர்ந்து படுத்திருந்த நாகப் பாம்பைக் கவனிக்க வில்லை. ஏதோ நினைப்பில் நடந்து கொண்டிருந்த அவன் தெரியாமல் அந்தப் பாம்பை மிதித்துவிட்டான்.

நாகப் பாம்பு சீறிக் கொண்டு அவனைக் கடிக்க வந்தது. அவன் பயந்து தொங்கு, தொங்கென்று ஓடினான். அப்படி ஒடும்போது அவன் கையில் இருந்த பால் செம்பு கீழே விழுந்தது. செம்பில் இருந்த பாலில் ஒருபாதி கீழே கொட்டிவிட்டது. மேலும் ஒரு பாதி செம்பில் இருந்தது.

பின்னால் துரத்திக் கொண்டு வந்த நாகப் பாம்பு கீழே சிந்திய பாலைக் குடித்தது. பிறகு செம்பினுள் இருந்த பாலையும் குடித்தது. அகன் சீற்றம் தணிந்தது. செம்பை எடுப்பதற்காக திரும்பிய பார்ப்பனன் செம்புப் பாலை நாகப்பாம்பு குடிப்பதைப் பார்த்துவிட்டு அப்பொழுது ஓடினால்தான் தப்பமுடியும் என்று ஒரே ஒட்டமாக ஓடிவிட்டான். நாகப்பாம்பும் வயிறு நிறைந்து விட்டதால் பார்ப்பனனை விரட்டு வதை மறந்துவிட்டது.

இரண்டு நாள் கழித்து அந்தப் பார்ப்பனன் அந்த வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தான். வழியில் தான் போட்டுச் சென்ற பால் செம்பு கிடப்பதைக் கண்டு அதை எடுப்பதற்காக அதை நோக்கிச் சென்றான். சிறிது தொலைவிலேயே அந்த செம்பைச்சுற்றிக் கொண்டு நாகப்பாம்பு படுத்திருப்பதைக் கண்டான். பயந்து வேறு வழியாக ஓடினான்.

அவன் ஒடுகின்ற ஓசையைக் கேட்டு நாகப்பாம்பு விழித்துக் கொண்டது.

“பார்ப்பனரே, பார்ப்பனரே சிறிது நில்லும்” என்று பாம்பு கத்தியது.

பார்ப்பனன் மேலும் வெகமாக ஓடினான். நாகப் பாம்பு விரட்டிக் கொண்டு சென்றது. பார்ப்பனன் ஒடும் வழியில் வேகமாகச் சென்று எதிரில் நின்று படமெடுத்தாடத் தொடங்கியது.

பார்ப்பனன் வெல வெலத்துப் போனான். “நாக ராசா, உன்னைக் கும்பிடுகிறேன். என்னைக் கடிக்காமல் விட்டு விடு” என்று பார்ப்பனன் கெஞ்சினான்.

“பார்ப்பனரே, உம்மை நான் கடிக்கவில்லை. ஆனால் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு நாளைக்கு முன் நீர்கொண்டு வந்த பால் மிகச் சுவையாக இருந்தது. அது போல் வாரம் ஒரு முறையாவது எனக்கு நீர் பால் கொண்டு வந்து தர வேண்டும். அப்படிச் செய்தால் உம்மையும் கடிக்க மாட்டேன், உம்முடைய பிள்ளைகுட்டிகளையும் கடிக்க மாட்டேன். நீர் தாராளமாக இந்தக் காட்டில் எப்பொழுது வேண்டுமானாலும் பயம் இல்லாமல் போய் வரலாம்.”

இதைக் கேட்ட பார்ப்பனனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒப்புக்கொண்டால் வாக்குக் கொடுத்தபடி தொடர்ந்து பால் கொடுத்து வர வேண்டும். ஏழைப் பார்ப்பனனாகிய தன்னால் அவ்வாறு செய்யமுடியுமா என்று மலைத்தான். ஒப்புக் கொள்ளா விட்டால் அந்தப் பொல்லாத நாகப்பாம்பு அப்பொழுதே அவனைக் கடித்துக் கொன்று விடும். உடனே சாவது நல்லதா, தொடர்ந்து தொல்லைப் படுவது நல்லதா என்று அவன் மயங்கினான்.

இந்த நெருக்கடியான நிலையில் யாரும் ஒரே முடிவுக்குத்தான் வர முடியும். எப்படியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் யாருக்கும் தோன்றும். பார்ப்பனனும் பாம்புக்கு வாரந்தோறும் பால் கொண்டு வருவதாக வாக்குக் கொடுத்து விட்டுப் புறப்பட்டான். ஐந்தாறு வாரங்கள் எப்படியோ சமாளித்து பாம்புக்குப் பால்கொண்டு போய்க்கொடுப்பான். தானம் வாங்கும் பணத்தில் ஒருபகுதி பாலுக்குச் செலவாவது அவனால் தாங்க முடியாததாய் இருந்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எண்ணி எண்ணிப் பார்த்தான்.

தொடர்ந்து சிந்தித்தால் ஒரு வழி தோன்றாமலா போய் விடும். பார்ப்பனன் ஒரு வழியைக் கண்டு பிடித்தான்.

“காட்டில் ஒரு நாகராசன் இருப்பதாகவும் அவனுக்கு வெள்ளிக் கிழமை தோறும் பால் வைத்தால் தீராத துன்பம் எல்லாம் தீரும்” என்றும் ஊருக்குள் கண்டவர்களிடம் எல்லாம் சொல்லி வந்தான்.

நாகப்பாம்பை ஒரு தெய்வம் போல நினைத்து அதற்கு பால் ஊற்றி வழிபட்டால் தங்கள் குறை எல்லாம் தீரும் என்று நம்பி பல மக்கள் முதலில் பார்ப்பனனிடம் பால் கொடுக்கத் தொடங்கினார்கள். பிறகு அவர்களே நேரில் சென்றும் பாம்புக்குப் பால் வார்க்கத் தொடங்கினார்கள்.

நாகப் பாம்பின் பக்தர் கூட்டம் பெருகியது. மூட மக்கள் கூடக் கூடப் பாம்புக்கு யோகம் அடித்தது. பல ஊர் மக்கள் சேர்ந்து அந்த இடத்தில் நாகப்பாம்புக்கு ஒரு கோயிலும் கட்டினார்கள். வேண்டுதல் செய்து கொண்டு பாலோடு முட்டை, கோழிக்குஞ்சு, முதலியவற்றையும் படைக்கத் தொடங்கினார்கள்.

நாகப்பாம்புக்கு மனிதர்களுடைய இந்தப் படையல்கள் மிகுதிப்பட மிகுதிப்பட, ஆணவமும், செருக்கும் தன்னை விடப் பெரியவர் யாரும் இல்லை என்ற நினைப்பும் கூடிவிட்டன.

தன்னுடைய பெருமையை நிலை நாட்டிக் கொள்வதற்காக அது தேவையில்லாமல் காட்டு விலங்குகளை அடிக்கடி தீண்டிக் கொன்று வந்தது. காட்டில் ஒவ்வொரு நாளும் அதன் தீய செயல்கள் மிகுந்து வந்தன.

சின்னஞ்சிறு விலங்குகளை சீறிப்பாய்ந்து தீண்டிக் கொன்று விடும். பெரிய விலங்குகளை அவை தூங்கும் போது கடித்துக் கொன்றுவிடும். நாளுக்கு நாள் காட்டு விலங்குகள் பாம்பினால் இறந்து வந்தன. அதன் தொல்லையை அவற்றால் பொறுக்க முடியவில்லை. ஒரு நாள் காட்டில் உள்ள விலங்குகளெல்லாம் ஒன்று கூடிப் பாம்பின் தொல்லையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வழி என்று ஆலோசனை செய்தன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியைச் சொன்னது. ஆனால் எந்த வழியும் சரியாகத் தோன்றவில்லை. பெரிய பெரிய விலங்குகளெல்லாம். தங்களால் அந்தப் பாம்பின் தலையை நசுக்கிக் கொன்று விட முடியும் என்றும், ஆனால் தாங்கள் கொல்லுவதற்கு முன்னால் அந்தப் பாம்பு தங்களைக் கடித்து விட்டால் உடல் முழுதும் நஞ்சு பரவி தாங்கள் இறந்து போக நேரும் என்றும் அஞ்சின. சிறிய விலங்குகளோ பாம்பின் எதிரில் செல்லவே பயந்தன. இந்த நிலையில் எந்த முடிவுக்கும் வர முடியாமல் அவை கலைந்து போயின.

பாம்பின் அட்டூழியம் தொடர்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு புதர் நிழலில் சின்ன முயல் ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. அதன் உடம்பில் ஏதோ வளவள என்று ஊறுவது போல் இருந்தது. கண் விழித்த முயல் தன் மீது அந்த நாகப் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டது. ஒரே பாய்ச்சலில் முயல் தாவிக் குதித்தது, பாம்பு எங்கோ சிதறி விழுந்தது.

“குட்டி முயலே, என்னைத் தட்டிவிட்டா ஒடுகிறாய். இருஇரு உன்னை என்னசெய்கிறேன்” என்று சீறிக்கொண்டே பாம்பு சென்றது.

அந்தச் சின்ன முயல் தப்பித்தோம்,பிழைத்தோம் என்று பாய்ந்தோடி ஒரு மரத்தடியில் நின்றது. அந்த மரத்தின் கிளை ஒன்றில் ஒரு குரங்கு குந்திக் கொண்டிருந்தது.

“சின்ன முயலே, சின்ன முயலே என்ன வேகம், என்ன வேகம்” என்று குரங்கு கூறியது.

“குரங்கண்ணா இது வெறும் வேகம் இல்லை, உயிர் வேகம்! உயிர் தப்புவதற்காக ஓடிவந்த வேகம்” என்று முயல் கூறியது.

“இந்தக் காட்டிலலே நீதான் அழகானவன். நீ யாருக்குப் பயந்து ஓடி வருகிறாய்?” என்று குரங்கு கேட்டது. “அந்த நாசமாய்ப்போன நாகப் பாம்புக்குப் பயந்து தான் ஓடி வருகிறேன்” என்றது முயல்.

குரங்கு தொபுக்கென்று கீழே குதித்தது. முயலின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. “குட்டி முயலே இந்த நாகப்பாம்பைத் தொலைப்பதற்கு ஒரு வழியும் இல்லையா?” என்று ஆத்திரத்தோடு கேட்டது.

அ-4

“இந்த மனிதர்கள் பாம்புக்குப் பால் வார்க்கிறார்கள். அதற்குத் தலையில் கொழுப்பு ஏறி விட்டது. அதைத் தொலைத்தால் தான் நாம் அமைதியாகத் தூங்கமுடியும்” என்றது குட்டி முயல்.

“குட்டி முயலே இதற்கு ஒரு வழி கண்டு பிடி. எனக்கும் தூக்கம் சரியாக வரவில்லை. சில சமயம் என் வாலைப் பார்த்தே பாம்பென்று நான் பயந்து விடுகிறேன்” என்றது குரங்கு.

குட்டி முயல் ஒன்றும் பதில் சொல்லவில்லை. வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“என்ன மேகங்களை எண்ணுகிறாயா?” என்று குரங்கு கேட்டது.

வானத்தில் சில கரிய மேகங்கள் காற்றினால் உந்தப்பட்டு ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருந்தன. முயலின் கண்கள் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தன. காற்றின் வேகம் சிறிது நேரத்தில் வலுவாயிற்று. காட்டு மரங்களெல்லாம் காற்றினால் அலைக்கப்பட்டன. மரக்கிளைகள் ஆடியபோது அவற்றிலிருந்து பழங்கள் உதிர்ந்து விழுந்தன. இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முயலின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

சிறிது நேரத்தில் சடசடவென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே முயலை வாரி அணைத்துக் கொண்டு மரத்தின் அடிப்பாகத்திற்கு ஓடியது குரங்கு. மழை விழாத இடத்திற்குச் சென்றதும் குரங்கு முயலைப் பார்த்துக் கேட்டது.

“கார் மேகத்தைக் கண்டால் மயிலுக்குத்தான் மகிழ்ச்சி உண்டாகும். நீ மகிழ்ச்சியடையக் காரணம் என்ன?”

“குரங்கண்ணா எனக்குத் திடீரென்று ஒரு கருத்துத் தோன்றியது. காற்றில் பழங்கள் உதிர்வதை நீ பார்த்தாய் அல்லவா? குரங்கண்ணா கவனித்துக்கேள். நீ தான் ஒரு பெரிய வேலை செய்யப் போகிறாய். உன்னை இந்தக் காட்டு விலங்குகளெல்லாம் வாழ்த்தப் போகின்றன.”

முயல் இவ்வாறு சொல்லிக் கொண்டு வரும் போதே “ஐயையோ என்னால் முடியாது. அந்தப் பாம்பு கடித்தால் நான் செத்துப் போய் விடுவேன்” என்று குரங்கு ஒலமிட்டது.

“சும்மா பயப்படாதே. நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக் கொள். உன் உயிருக்கு ஆபத்து வரும்படி நான் சொல்ல மாட்டேன்” என்றது முயல்.

“சரி சொல்லு,” குரங்கு கேட்கத் தயாராய் இருந்தது.

“குரங்கண்ணா, மனிதர்கள் இந்த வெள்ளிக்கிழமையன்று பாம்புக்குப் பால் கொண்டு வருவார்கள். குடம் குடமாகப் பாலைக் குடித்து விட்டு அது படம் விரித்துக் கூத்தாடும். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் வரிசையாகப் பனைமரங்கள் நிற்கின்றன. அவற்றின் உச்சியில் நுங்குகள் குலை குலையாகக் காய்த்துத் தொங்குகின்றன” என்று முயல் சொல்லிக் கொண்டு வரும் போதே குரங்கு குதித்தது.

“புரிந்து கொண்டு விட்டேன். முயல் குட்டியே நீ மிகுந்த அறிவாளி. இனி நீ கூற வேண்டாம். நாளை நடக்கப் போகிறதை நீ ஈச்சம் புதர் மறைவிலிருந்து பார்த்து மகிழலாம். வெற்றி, வெற்றி” என்று.ஆனந்தக் கூத்தாடியது குரங்கு.

வெள்ளிக்கிழமை வந்தது. வேலூரிலிருந்து பக்தியுள்ள பெண்மணிகள் வெள்ளிக் குடங்களில் பாலை எடுத்துக் கொண்டு காட்டு நாகராசன் கோயிலுக்கு வந்தார்கள். பார்ப்பனர் அந்தக் குடங்களையெல்லாம் கோயில் வாசலில் வரிசையாக வைத்து தீபம் காட்டினார். பிறகு நாகராசனை வரவழைப்பதற்காக சில மந்திரங்களை முனுமுனுத்தார். நாகப்பாம்பு வந்தது. குடம் குடமாக நகர்ந்து சென்று பாலை வயிறு முட்டக் குடித்தது. உடைத்து வைத்திருந்த கோழி முட்டைகளையும் உறிஞ்சிக் குடித்தது. ஆனந்தம் பொங்கப் படமெடுத்து ஆடியது. அப்பொழுது அதன் தலையின் மீது கணிரென்று ஒரு நுங்கு வந்து விழுந்தது. தொடர்ந்து தட தடவென்று நுங்குகள் பாய்ந்து வந்தன.பக்தியோடு நாகராசனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து பூசாரிப் பார்ப்பனரும் ஓடிவிட்டார்.

முப்பது குரங்குகள் பனைமரங்களின் உச்சியில் இருந்து பறித்துப் போட்ட நுங்குகள் பாம்பின் தலையிலும், அதன் உடம்பின் பல பகுதிகளிலும் சட சட வென்று கனமாக வந்து விழுந்ததால் அது அந்த இடத்திலேயே நசுங்கிச் செத்தது.

அது செத்து விட்டதைக் கண்ட முயல் புதர் மறைவிலிருந்து துள்ளிக் குதித்து வெளியில் வந்தது. பனைமரத்திலிருந்து குரங்குகள் அனைத்தும் இறங்கி வந்தன. செத்த பாம்பின் உடலைத் தூக்கி வீசிக் கொண்டு அவை காட்டுக்குள் சென்றன. எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் தங்கள் பொதுப் பகைவனான நாகப்பாம்பு இறந்த செய்தியை அறிவித்தன.

குரங்குகளையும், முயலையும் காட்டு மிருகங்கள் அனைத்தும் வாழ்த்தின.அந்த நாள் தொட்டுவழிப்போக்கர்கள் அந்தக் காட்டில் பயமின்றி நடந்துசென்றனர்.