அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/088-383

84. வேளாளர் விருத்தி

பெரும்பாலும் தமிழ்பாஷை வழங்குமிடத்தில் பூமியைத் திருத்திப் பயிரிட்டு சீவிப்பவர்கள் சீனராயினும், பர்மியராயினும், ஐரோப்பியராயினும் அவர்களை வேளாளரென்றே கூறத்தகும். வேளாளரென்பது பூமியை உழுது பயிரிடுந் தொழிற்பெயர், இத்தகைய சிறந்தத் தொழிலை பிராமணனென்னும் பெயரை வைத்துக்கொண்டிருப்பவனாயினும், க்ஷத்திரியனென்னும் பெயரை வைத்துக் கொண்டிருப்பவனாயினும், வைசியனென்னும் பெயரை வைத்துக்கொண்டிருப்பவனாயினும் செய்வானாயின் அவனையும் வேளாளனென்றே கூறத்தகும்.

சகலசீவர்களையும் ஆதரிக்கக்கூடிய வேளாளத்தொழில் குன்றவும், திரவியவிருத்திக் குறையவும், நாளுக்குநாள் பஞ்சமதிகரிக்கவும் நேரிட்டக் காரணங்கள் யாதெனில், தொழிற் பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களாக மாற்றி, கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் பொய்க் கட்டுக்கதைகளை ஏற்படுத்தி, பிராமணனென்பவன் உயர்ந்தசாதி, அவன் ஏறுபிடித்து உழலாகாது,

தாழ்ந்தசாதியோனென்பவனே அவன் பூமியை உழுது சீர்படுத்த வேண்டும், அவனுக்கு அரை வயிற்றுக் கஞ்சிவார்த்து ஒருநாள் முழுவதும் வேலை வாங்கவேண்டும் அவன் வயிற்றிற்கு சரியான ஆகாரமின்றி எலும்புத் தோலுமாய்மடிந்தாலும் சந்தோஷமடைந்து அறுத்த தானியத்தை வீட்டில் சேர்த்துவைத்துக்கொண்டு தங்கள் சுகத்தைப் பார்ப்பதினால் வேளாளம் சுகம்பெருமோ, தானியவிருத்தியடையுமோ, பஞ்சம்போமோ, சீவராசிகள் செழிப்புறுமோ, ஒருக்காலுமில்லை.

தன் மெய்ப் போலொத்த மனிதன் தனது பூமியை உழுது பயிரிட்டு தானியங்களை அளித்து தனக்கு சுகந்தருவோனை தாழ்ந்தசாதியோனென வகுத்து அவன் கஷ்டத்திற்குத் தக்கக் கூலிகொடாமல் கொல்லுவோர்களது பூமி சிறக்குமோ, தானியம் பெருக்குமோ, அவர்களின் கன்மபல விருத்தியை அவர்களே தெரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஐரோப்பிய துரைமக்களின் சிறப்பையும், அவர்கள் உழைப்பையும் சற்று கண்ணோக்குங்கள், ஐரோப்பியருள் பி.ஏ, எம்.ஏ., பட்டம்பெற்று உபாத்தியாயராக விருப்பவர்கள் தங்கள் கலாசாலைப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதுடன் பூமியை உழுது பயிரிடும் வித்தைகளையும் அவர்களுக்குக் கற்பித்து கலப்பை முதலிய ஆயுதங்களையுந் தங்கள் தோளின்பேரில் ஏந்தி வீடுசேருவது வழக்கமாம்.

விவேக மிகுத்தோரின் இத்தகைய கற்பனையால் மற்ற வாசிக்கும் பிள்ளைகள் தங்கள் டம்பத்தையும், கர்வத்தையும் ஒழித்து தாங்களுங் கலப்பை கொண்டு பூமி உழுது பயிரிட ஆரம்பிக்கின்றார்கள். கல்வி பெருக்குற்றும், டம்பம் கர்வமுதலியவைகளில்லாத தேசம் சீர்பெறுமா. கல்விபெருக்கற்று நாங்கள் பிராமணசாதியோர் உயர்ந்தவர்கள் ஏறுபிடித்து உழலாகாதென்னும் தேசம் சீர்பெறுமா.

இவர்கள் செய்யும் இடுக்கங்கள் சகிக்க முடியா ஏழை ஜனங்கள் வெளிதேசங்களுக்குப்போய் பிழைக்க ஆரம்பித்தபோதினும் அவர்களை வெளியேறவிடாது தடுக்க ஆரம்பிக்கின்றார்கள். காரணம் அவர்கள் போய்விட்டால் இவர்கள் பூமியை உழுது பயிரிடுவதற்கு ஆளில்லாமற் போய்விடுமாம்.

அந்தோ! பூமிகளை ஏராளமாக அனுபவிக்க ஆசை கொண்டவர்கள் ஏனப்பூமிகளை உழுது பயிரிடலாகாது. அத்தகைய பூமியைத் திருத்தி உண்பதற்கு சக்தியற்றவர்கள் பூமியின் பலனைத் தேடுவானேன். சிணங்களை அறுக்கவும், சாராயக் கடை பார்க்கவும், தோல் பதனிடவும், உத்திரவு கொடுத்துள்ள வேதமும், மநுதர்ம்மசாஸ்திரமும், ஏறுபிடித்து வுழு துண்பதற்கு உத்திரவுகொடாதோ, தாழ்ந்த சாதி என்று தங்களிஷ்டம் போல் வகுத்துவிட்ட ஏழை தான் பூமியிற் கஷ்டப்படவேண்டுமோ, அவர்கள் வெளிதேசஞ்சென்று சுகமாகப் பிழைக்கலாகாதோ. உயர்ந்த சாதி என்போர் பணம் சம்பாதிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் சாதி சாஸ்திரங் கிடையாது. தாழ்ந்த சாதியென்று அழைக்கப்படுவோர் பணம் சம்பாதிக்க வேண்டிய இடங்களில் மட்டும் சாதிசாஸ்திரம் உண்டுபோலும்.

- 3:19: அக்டோபர் 19, 1909 -