அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/089-383

85. தாழ்ந்த சாதியார் அல்லது தாழ்ந்த வகுப்பார் என்பவர்கள் யார்

இத்தேசத்துள் பிச்சை இரந்து தின்கின்றார்களே அவர்கள் தாழ்ந்த வகுப்பார்களா, பொய்யைச் சொல்லி சீவிக்கின்றார்களே அவர்கள் தாழ்ந்தவகுப்பார்களா, களவுசெய்து சீவிக்கின்றார்களே அவர்கள் தாழ்ந்தவகுப்பார்களா இதன் விவரந் தெரியவில்லை.

பூர்வ புத்ததன்ம காலத்தில், பஞ்சபாதகர்களை மிலேச்சர்களென்றும், தீயர்களென்றும், தாழ்ந்த வகுப்பாரென்றும், இழிந்தோ ரென்றும் வகுத்துவைத்திருந்தார்கள். காரணம் யாதென்பீரேல், பெண்சாதி பிள்ளைகளுடன் குடும்பவாழ்க்கையிலிருந்து உழைக்கக்கூடிய தேகபலமிருந்தும்

சோம்பேரிகளாய் பிச்சை இரந்து தின்பவர்களை மிலேச்சர்களென்றும், கொலை, களவு முதலியவைகளால் சீவிப்பவர்களை தீயர்களென்றும், விபச்சாரம் கள்ளருந்தல் முதலியச் செயலுடையோரை இழிந்தோரென்றும், தங்கள் சுயத்தொழிலின்றி எக்காலும் ஒருவரை வணங்கி சீவிப்பவர்களும் விவேகமற்றவர்களுமானோரை தாழ்ந்தவர்களென்றும் வகுத்திருந்தார்கள்.

இத்தகைய செயலுள்ளோர் யாவரென்றாயுங்கால் சகலசாதியிலும் கல்வியற்றோரிடம் அமைந்தேயிருக்கின்றது. கல்வி கற்றவர்களிடத்து உயர்ந்த குணத்தையும், உயர்ந்த செயலையுங் காணலாம். கல்வி கல்லாரிடத்து தாழ்ந்த குணத்தையும் தாழ்ந்த செயலையுங் காணலாம். இஃது அநுபவப் பிரத்தியட்சமாதலின், எச்சாதியோனாயிருப்பினும் கல்விகற்று விவேக முதிர்ந்தோனை உயர்ந்த வகுப்போனென்றும், கல்லாது அவிவேகமிகுப்போனை தாழ்ந்த வகுப்போனென்றுங் கூறல்வேண்டும்.

இதுவே சகலதேச விவேகமிகுத்தோர்களின் சம்மதமாகும். அங்ஙனமின்றி கல்விகல்லாது அவிவேக தாழ்ந்தசெயலை உடையவர்களிற் சிலர் தங்களுக்குள்ள தனச்செருக்கினால் கல்விகற்றவர்களும், விவேகமிகுத்தவர்களும் உயர்ந்த குணமும், உயர்ந்த செயலும் உள்ளோர்களை தாழ்ந்தசாதியோர் என்றும், தாழ்ந்த வகுப்போரென்றுங் கூறுவது நியாயமாகுமோ. அத்தகைய அந்நியாய வார்த்தைகளை விவேகிகளும் ஒப்புக்கொண்டு தாழ்ந்த சாதியோன் யார், தாழ்ந்த வகுப்போன் யார், அவன் எவ்வகையால் தாழ்ந்த சாதியானான், நீரெவ்வகையால் உயர்ந்தசாதியானீரென்று விசாரியாத பத்துப்பெயர் தங்களுக்குத் தாங்களே உயர்ந்தவர்கள், உயர்சாதியோரென்னும் பெயரை வைத்துக்கொண்டு அவர்களுக்கு விரோதிகளாயுள்ள நூறுபெயர்களைத் தாழ்ந்த வகுப்போர்களென்றும், தாழ்ந்த சாதியோர்களென்றுங் கூறுவதானால் அம்மொழி விவேகமிகுத்த நீதியதிபர்களுக்குப் பொருந்துமோ. கருணானந்த நீதியதிபர்களும் நீரெப்படி உயர்ந்தவனானீர், அவனெப்படி தாழ்ந்தவன் ஆனானென்னும் விசாரிணையின்றி ஒருசார்பினர் மொழிகளைக் கேட்டுக் கொண்டே தீர்ப்பளிக்கப்போமோ.

உலகவாழ்க்கையோ தேருருளை ஒத்தது. தேருருளை கீழதுமேலதாய் வருவதுபோல் தாழ்ந்தவன் உயர்ந்தவனாகவும், ஏழை கனவானாகவும், உயரும்படியானக் காலமுண்டாகும். அக்காலத்தில் தற்காலத்து உயர்ந்துள்ளவர்களின் பலன் செய்துள்ள கன்மத்துக்கீடாய் அநுபவித்தே தீரல்வேண்டும்.

மற்றவர்களை மனங்குன்ற தாழ்த்தியச்செய்கை தங்களை மனங்குன்ற மற்றவர்கள் தாழ்த்தாமல் விடார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 3:19; அக்டோபர் 20, 1909 -