அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/248-383

244. கலாசாலைகளில் மதப்படிப்பும் நல்லொழுக்கப் படிப்பும்

பூர்வம் இத்தேசத்து சமணமுநிவர்களால் வரைந்துவைத்துள்ள மநுகுல சீர்திருத்தங்களில் “ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம் ஓதலி நன்றே யொழுக்கமுடைமெ” எனக் கூறியுள்ளார்கள்.

மக்களுக்குக் கல்வியைக் கற்பிப்பதினும் நல்லொழுக்கத்திலும் சீலத்திலும் வளர்ப்பதே விசேஷமென்றும் ஒழுக்கமும் சீலமும் வளருமாயின் பின்னர் கற்கும் கல்வியின் பயனானது உலக உபகாரமாக விளங்குமென்றும் வரைந்துள்ளவைகளுக்குப் பகரமாக பூர்வமித்தேசத்தில் விசேஷக் கல்விச்சாலைகளில்லாதிருப்பினும் சகலமக்களும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கத்தில் நிறைந்திருந்தார்களன்றி துன்மார்க்கர்கள் விசேஷங் கிடையாது. அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுநிவர்களால் கற்பித்துவந்த கல்வியேயன்றி வேறு கலாசாலைகளுங் கிடையாது. கற்றவர்கள் எழுதி வைத்துள்ள நூற்களிலும் நிதிநெறி ஒழுக்கங்களையே மக்களது சீர்திருத்தமாக எழுதிவைத்துள்ளார்களன்றி வேறொன்றுங் கிடையாது. கற்கும் கல்வியும் நல்லொழுக்கத்திற்கு ஆதாரமாகவே கற்பித்தும் இருக்கின்றார்கள்.

ஆதலின் நமது தேசக்கலாசாலைகளில் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கத்துக்குரிய ஒழுக்கப்படிப்பைக் கற்பிக்கவேண்டுமேயன்றி மதப்படிப்பை கற்பிக்கலாகாது. சாதிகர்வம், தனகர்வம், வித்தியாகர்வங்களுடன் மதக்கர்வமுஞ் சேர்ந்துவிடுமாயின் தேசத்தோருக்குள்ள ஒற்றுமெயும் அன்புங்கெட்டு சீரழிவதற்கு ஏதுவாகிவிடும். அத்தகைய மதப்படிப்பைக் கொடுத்து ஒற்றுமெய் கேட்டை உண்டு செய்வதினும் ஒழுக்கப்படிப்பைக் கொடுத்து ஒற்றுமெயடையச்செய்வதே உத்தமமாகும்.

மதப்படிப்பினால் சில சீர்திருத்தங்களுண்டென்று பலர் தோன்றினுந் தோன்றுவர். அஃது மதவைராக்கியமேயாம். அவரவர்கள் மதக்கதைகளின் ஊழல்களை உய்த்துணர்வார்களாயின் மக்களது சீர்திருத்தங்களுக்கும் நன்மார்க்கச் செயல்களுக்கும் அவைகள் உதவாவென்றே தீர்ப்பார்கள். அதாவது ஒவ்வோர் மதப்புத்தகங்களிலும் திருடவேண்டிய கதைகளும் அங்கு நாய் குரைத்தால், மந்திரம்பண்ணுங்கதைகளும், குருபத்தினியைப் பெண்டாளும் கதைகளும், குருபத்தினியைப் பெண்டாளினும் ஓர் கொட்டையைக் கழுத்தில் கட்டிக்கொண்டால் அப்பாவம் நீங்கிவிடுமென்னுங் கதைகளும், சகோதிரனைக் கொல்லுங் கதைகளும், புத்திரிகளைப் பெண்டாளுங் கதைகளும், ஒருவன் மனைவியை மற்றொருவன் அழைத்துப்போய்விட்டால் அவனையும் அவன் பந்துமித்திரரையும் அவன் தேசத்தோரையுங்கொன்ற கதைகளையும், ஒரு சகோதிரன் தனக்கு சேரவேண்டிய பாகத்தைக் கொடாமற் போய்விடுவானாயின் அவனையும் அவனது குருக்களையும் அவனது பந்துமித்திரர்களையும் தேசத்தோர்களையுங் கொல்லுங் கதைகளையும், நேற்று முன்னானாள் மோட்சத்தை எட்டிப்பார்த்து வந்தவன் போல், எங்கள் சாமியை நம்பினாலே மோட்சமுண்டு மற்றசாமிகளால் நரகமுண்டென்னுங் கதைகளையும், சத்திபூசைக் கதைகளையும், புண்டரீக யாகக்கதைகளையும், தங்கள் தங்கள் முயற்சிகளாலாகாது மந்திரம் பண்ணுங்கதைகளையும், தங்களாலாகாது தங்கள் சாமிகளுக்கு மாட்டுபலி, மனிதபலி கொடுக்குங் கதைகளையும், தாங்கள் செய்துவந்த பாபங்கள் யாவையும் ஒன்றுசேர்ந்து ஓர் ஆட்டுக்கடா தலையிலேற்றிவைத்து அனுப்பிவிடும் கதைகளையும், உலகமக்கள் எல்லோருஞ் செய்த பாபங்களுக்கு பதிலாக ஒருவர் பாடுபட்டுவிட்டாரென்று கூறி பஞ்சமாபாதகங்களை அஞ்சாது செய்யத் தூண்டுங் கதைகளையும், குருக்களுக்கு தட்சணை தாம்பூலங் கொடுத்துவிட்டால் சகல பாபமும் நீங்கிவிடுமென்னுங் கதைகளையும், பத்துநாளைய பூசைவைத்துக்கொண்டால் பல பாவங்களும் நீங்கிவிடுமென்னுங் கதைகளையும், இருபது நாளைய பூசைவைத்துக் கொண்டால் இடுக்கங்களெல்லாம் நீங்கிவிடுமென்னும் கதைகளையும், உலகமாதா ஒருவளிருக்கின்றாள் அவளுக்கு ஆடுமாடுகளை பலிகொடுக்கின் நாம் கோரிய யாவுங் கிடைக்குமென்று கூறுங்கதைகளையும், கலாசாலைகளில் கற்குங் சிறுவர்களுக்குக் கற்பிப்பதாயின் பிள்ளைகளின் தன்முயற்சிகள் யாவுமற்று யாரோ தங்களுக்கு உதவிசெய்வார்களென்று அண்ணாந்து நிற்பதுடன் நல்லொழுக்கச்செயல்களற்று தீயொழுக்கங்கள் பெருகி கல்விகற்றும் “பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டா” மென்னும் நிலைநின்று சீர்கெட்டுப்போவார்கள். ஆதலின் இராஜாங்க உதவிபெருங் கலாசாலைகள் யாவற்றிலும் சிறுவர்களுக்கு மதப்படிப்புகளை அகற்றி நல்லொழுக்கப் படிப்பை அளிக்கும்படி வேண்டுகிறோம்.

- 5:36; பிப்ரவரி 14, 1912 -