அறிவுக் கனிகள்/நிந்தனை
614.“இகழ்தல்”—அதனோடு விளையாடினால் ஆபத்து; அதனோடு வாழ்ந்தாலோ அழிவேதான்.
615.நிந்தைமொழிகள் நெருப்புப் பொறிகளை ஒக்கும்; ஊதிவிடாவிட்டால் தாமாக அவிந்து போகும்.
616.எந்த ஆழ்ந்த புண்ணேனும், வடுவின்றி ஆறியதுண்டோ?
617.தற்புகழ்ச்சி முடைநாறும் என்பர்; அப்படியானால் அவர்க்கு அணியாயமாய்க் கூறும் அவதூற்றின் நாற்றம் தெரியாது போலும்!
618.'அவதூறு' சொல்லும் வண்டிக்கு மைபோட ஆள்பஞ்சம் உண்டாவதில்லை.
619.உலகத்தில் ஒருபாதிக்கு அவதூறு சொல்லுவதில் ஆனந்தம் மற்றப் பாதிக்கு அதை நம்புவதில் ஆனந்தம்.
620.தன்னைப் பற்றிப் புறங்கூறுவது ஒவ்வொருவனுக்கும் தெரியுமானால், அதன்பின் உலகில் நான்கு நண்பர்களைக் கூடக் காண முடியாது.
621. தெய்வமே பெண்ணாக வந்தாலும் அவதூறு என்னும் நாய் அவளைப் பார்த்துக் குரையாமல் இராது.
622.அடுத்த வீட்டுக்காரனுடைய குறைகளை அம்பலப்படுத்த ஆசையாயுள்ள தினவுக்கு மருந்துமில்லை, மந்திரமுமில்லை.
623.அவதூறு வாளினும் அதிகமான கூர்மையும், நாகத்தினும் அதிகமான விஷமும் உடையது. அது மூச்சு விட்டால் போதும், அரைக்கணத்தில் அகிலலோகமும் பரவிடும்.
624.ஒரு மணி நேரம்கூட நாம் ஒருவர்க்கொருவர் அன்பாயிருக்க முடியவில்லை. சகோதரன் தவறு கண்டால் அதைப் பிறரிடம் ஊதுகிறோம், சாடை காட்டுகிறோம், நகைக்கிறோம், இளிக்கிறோம்—எவ்வளவுதான் நாம் நம் பெருமையைத் தூக்கி நிறுத்தினாலும் நாம் மனிதர்கள் ஒரு அற்பமான ஜாதியே.