இருண்ட வீடு/அத்தியாயம்-13


13

தலைவியும், அவளின் அண்ணனும் பேசுகிறார்கள்.

குழந்தைக்குப் பண்டம் வழங்கினார் மாமா.


மைத்துனர் வீடு வந்து நுழைந்தார்.
ஒத்த அன்பின் உடன்பிறந் தாளைத்
"தங்கையே என்ன அங்கே செய்கிறாய்?
உடம்புக் கென்ன ? ஒன்று மில்லையே?
குழந்தைக் கென்ன? குறைபா டில்லையே?
பெரியவன் நலத்தில் பிழைபா டில்லையே?
குடித்தனம் எவ்வாறு? தடித்தனம் இல்லையே?"
என்று கேட்டார். எதிரில் நின்றவள்
"இருக்கின் றேன்நான்" என்று கூறினாள்
சாகாதிருப்பது தனக்கே வியப்போ?



அங்குப் பாயினில் அயர்ந்து கிடந்த
வாயிலா குழந்தையை மைத்துனர் கண்டார்.
இயம்ப முடியா இரக்கம் அடைந்தார்.
அவ் விரக்கத்தின் அறி குறி யாகத்
தூங்கும் பிள்ளையைத் துயருற எழுப்பி
வாங்கிவந்த மாம்பழம் அனைத்தையும்
ஆங்கே குழந்தை அண்டையில் பரப்பினார்.
பூந்தி கட்டிய பொட்டணம் அவிழ்த்துக்
கொஞ்சம் அள்ளிக் குழந்தை முகத் தெதிர்
வஞ்சம் இன்றி வைத்துக், குழந்தையே
பாங்கொடு தின்னப் பழமும் பூந்தியும்
வாங்கி வந்தேன் மருந்துபோல் என்றார்.

ஓட்டை நீக்கி உள்ளீடு தன்னைக்
காட்டி விளாம் பழம் கருத்தாய்த் தின் என்று
அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்!
குழந்தை கிடந்த கூட மெல்லாம்
உழுந்து கிடந்த ஒரு களம் போலவும்
வேம்பின் பழம்பூ விரிதரை போலவும்
ஈயின் காடும் எறும்பின் காடும்
ஆயிற்று! மைத்துனர் அப்புறம் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-13&oldid=1534755" இலிருந்து மீள்விக்கப்பட்டது