இருண்ட வீடு/அத்தியாயம்-8




8

பிள்ளை நிலைக்குக் காரணம் தோன்றிவிட்டது தலைவிக்கு !


தந்தியும் ஆணியும் தளர்ந்த வீணைபோல்
கூடத்து நடுவில் வாடிய சருகுபோல்
பெரியவன் பாயில் சுருண்டு கிடந்தான்
என்பு முறிந்த வன்புலி யுடம்பைக்
கன்மேல் கிடத்திய காட்சி போல
ஓய்வுடன் தலைவர் ஒருபக் கத்தில்
சாய்வுநாற் காலியில் சாய்ந்து கிடந்தார்.



வயிற்றின் உப்பலால் வாயிலாக் குழந்தை
உயிரை இழக்க ஒப்பாது கிடந்தது!


நடை வீட்டினிலே கடையின் கணக்கன்
நெடுந் தூக்கத்தில் படிந்து கிடந்தான்
வேலைசெய் வோர்கள் மூலையில் குந்தி
மாலை நேரத்தின் வரவுபார்த் திருந்தனர்.



இல்லத் தலைவி எண்ண லானாள்:
குழந்தை யுடம்பில் கோளா றென்ன
வளர்க்கும் முறையில் மாற்ற மில்லையே
களிம்புறு பித்தளை கைப்படக் கைப்பட
விளங்குறும் அதுபோல் வேளை தோறும்
கனிநிகர் உடம்பில் கண்ணை வைத்துப்
பனிபிணி யின்றிப் பார்க்கின் றேனே

எனப்பல வாறு நினைக்கும் போது
நெட்டை யன் தலை குட்டை இறைப்பினில்
பட்டதைப் போல்அப் பாவையின் நெஞ்சில்
பட்டதோர் எண்ணம்! பார்வை திரும்பினாள்
"மந்திரக் காரன் வரட்டும்" என்றாள்
அந்தச் சங்கிலி "அவர் ஏன்" என்றாள்.
இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
நொந்தது குழந்தை நோயால் என்றாள்.
வாலன் என்னும் மந்திரக் காரனை
அழைக்கின் றேன்என் றறைந்தாள் சங்கிலி !
"சரிபோ!" என்று தலைவி சொன்னாள்!
நாழிகை போக்காது நடந்தாள் சங்கிலி !
"ஏழரை ஒன்ப திராகு காலம்
இப்போது வேண்டாம்" - என்றான் தலைவன்;
வீட்டின் அரசியும் வேண்டாம் என்றாள்.
நடந்த சங்கிலி நன்றெனத் திரும்பினாள்.
வேலைக் காரியும் வீட்டின் தலைவியும்
நாலைந்து கடவுளின் நற்பெயர் கூறிக்
காப்பீர் என்று காப்புங்கட்டி
வேப்பிலை ஒடிக்கும் வேலையில் நுழைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-8&oldid=1534749" இலிருந்து மீள்விக்கப்பட்டது