இலக்கியங்கண்ட காவலர்/நெடுஞ்செழியன்

10
நெடுஞ்செழியன்

பாண்டிய அரசர்களுள், நெடுஞ்செழியன் என்ற பெயருடையார் பலராவர். நம்பி நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர்களை நோக்குங்கள். அறம் உரைத்த நம் நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என அழைக்கப் பெற்றுள்ளான்.

வெற்றிவேற் செழியன் என்ற பெயர் பூண்ட மகன் கொற்கையில் இருந்து துணைபுரிய, கோப்பெருந்தேவி யார் எனும் பெயருடையளாய, மாண்புமிக்க மனைவி யார் உடனிருக்க, நெடுஞ்செழியன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு, நாடாண்டிருந்தான். நெடுஞ்செழியன் நீதி தவறா நெறியுடையான்; அறம் தவறாவாறு ஆட்சிபுரியும் அரசியல் முறை அறிந்தவன். அவன் நாட்டில், அந்தணர் வீதிகளில் எழும் அருமறை ஒலி கேட்குமே யல்லது, வலியரால் நலிவெய்தி முறை வேண்டி வந்தாரும், வறுமையால் வாடிக் குறை கூற வந்தாரும், தாம் வந்ததை வேந்தனுக்கு அறிவிப்பான் வேண்டியடிக்கும் மணியொலி என்றுமே கேளாது. முறை கெடாவாறும், குறை நேராவாறும் நின்று காக்கும் நல்லாட்சி, நெடுஞ்செழியன் நாட்டாட்சி. நெடுஞ்செழியன் ஆட்சி நல்லாட்சியாதலின், அவன் மக்கள் நலம் கருதும் மன்னவனாதலின், அவனைப் பழிதுாற்றும் அவன் குடிகளையோ, அவர் அவனைத் தூற்றும் பழியுரைகளையோ காணலும், கேட்டலும் இயலா. அவன் ஆற்றல் கண்டு அடங்கிப் பணியாது, பகைத்துப் போரிட வந்தார் நாடுகளுள் புகுந்து, அவரை வென்று அழிக்க, அதுகண்டு, அப்பகைவர் தூற்றிக் கூறும் பழிவுரைகளையே கேட்டல் கூடும். இவ்வாறு அறமும் ஆற்றலும் விளங்க நாடாண் டிருந்தான் நெடுஞ்செழியன்.

ஒருநாள் அரசவையுள், அவன் அரியணைமீது அரசமா தேவியோடு அமர்ந்திருந்தான். வழக்கம் போல் நிகழும் கூத்தும், பாட்டும் அன்றும் நடைபெற்றன. அன்று ஆடிய மகளிர் ஆட்டமும், அவர் பாடிய பாட்டும் என்றும் இல்லாச் சிறப்புடையவாய் அமைந்து விட்டன. அதனால், அவற்றைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்திருந்த மன்னன் தன் அறிவு மயங்கினான். அரசன் நிலையை அறிந்தாள் அரசமாதேவி. தான் அருகிருப்பவும், அரசன் ஆடல் பாடல்களில் அறிவு மயங்கினான்; ஆகவே, அவன், தன்னைக் காட்டிலும், அவற்றிடத்திலேயே பேரன்புடையான் என எண்ணினாள்; அந்நிலையே அவளுக்கு ஆறாச் சினம் பிறந்தது; அரசனை விடுத்து, அரசவை நீங்கித் தன் அரண்மனை நோக்கிச் சென்று விட்டாள். நெடுஞ்செழியன் அஃதறிந்தான். அவனோ மனைவியைப் பிரிந்தறியா மாண்புடையான். அவனால் அரசமாதேவியின் பிரிவைப் பொறுக்க முடியாது போயிற்று. மேலும், அவள் வறிதே பிரியாது, பெருஞ்சினம் கொண்டு பிரிந்து போனாள். ஆகவே அவள் சினம் போக்கி, அவள் அன்பைப் பெறும் விழைவோடு அவள் அரண்மனை நோக்கி விரைந்து சென்றான்.

அரசன் அரசியாரின் அரண்மனை வாயிலுட் புகும் அந்நேரத்தில், ஆங்கு, அரசர்க்கு அணிகலன் ஆக்கித் தரும் பொற்கொல்லன் வந்து வீழ்ந்து வணங்கினான். அரசன் வினவா முன்னரே, “அரசே! நம் தேவியாரின் காற்சிலம்பைக் களவாடிய கள்வன், சிலம்போடு என் இல்லின்கண் உள்ளான். அதை உணர்த்தவே ஓடோடி வந்துள்ளேன்,” என உரைத்தான். அரசியாரின் ஊடலைத் தீர்க்க விரும்பும் ஆர்வத்தோடு செல்லும் அரசன் அவ்வார்வ மிகுதியாலும், ஊடல் தீர்க்கச் செல்லும் தனக்குக் காணாமற் போய்க் கிடைக்கும் அவள் காற்சிலம்பு நல்ல துணையாம் என எண்ணிய எண்ணத்தாலும், அறிவு மயங்கி, ஊர்க் காவலரை அழைத்து, “இவன் கூறும் கள்வன் கையில் காற்சிலம்பு இருக்குமேல், அவனைக் கொன்று, அச் சிலம்பினைக் கொணர்க” எனப் பணித்து விட்டான்.

காவலரைக் கூட்டிச் சென்ற பொற்கொல்லன், தன் மனையில் தங்கியிருந்த கோவலனை அவர்க்குக் காட்டி, அவனே கள்வன் என்று கூறி, அவனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு செல்லுமாறு செய்துவிட்டான். கோவலன் கொலையுண்டான்; கண்ணகியின் காற்சிலம்பு மன்னவன் மனைவியால் சென்று விட்டது. இடையே நடந்தன அறியாத நெடுஞ்செழியன் அரண்மனையில் மனைவியின் ஊடல் போக்கி உவந்திருந்தான்.

கணவனைக் கள்வன் எனக் கூறிக் கொலை செய்து விட்டனர் என்பதைக் கண்ணகி அறிந்தாள்; கண்ணிர் விட்டுக் கலங்கினாள்; கடுந்துயர் உற்றாள்; ஓடினாள், ஒடிக் கணவனைக் கண்டாள்; கண்ட அக்கணமே கணவன் கள்வனல்லன் என்பதை நாடறியச் செய்ய வேண்டிய கடமை காத்திருப்பது உணர்ந்தாள். உடனே அரசன் கோயிலை விரைந்து அடைந்தாள், வாயிற்காவலன் வழியே, வருகையினை அவனுக்கு உணர்த்தினாள்.

யார் எந்நேரத்தில் வரினும், அவரை வரவேற்று அவர் குறைகேட்டு முறை செய்யும் கோலுடையனாய நெடுஞ்செழியன், கண்ண்கியை அழைத்து வருமாறு காவலனைப் பணித்தான். எஞ்சிய ஒற்றைச் சிலம்பு கையிற் கிடக்க, கண்களில் நீர் ஒழுக வந்து நின்றாள் கண்ணகி. கண்ணிர் ஒழுக நின்ற கண்ணகியைக் கண்டவுடனே கலங்கினான் காவலன். அவன் கண்களுக்கு, அவள் கண்ணிரே முதற்கண் தோன்றிற்று. ஆகவே, “நீ யார்? யாது நின் குறை?” என வினவினான். அது கேட்ட கண்ணகி, “காவல! புகார், யான் பிறந்த ஊர். என் காற்சிலம்பை விற்றற் பொருட்டு வந்து, நின்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயர்” என உரைத்தாள். கோவலன் கள்வனே; அவன்பால் இருந்தது, அரசியார் காற்சிலம்பே என்பதை உண்மையாக நம்பிய நெடுஞ்செழியன், “பெண்ணே! களவிற்குக் கொலையே தண்டம் என நீதி நூல்கள் நவில்கின்றன. ஆதலின் கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று. ஆகவே கவல்வது விட்டுச் செல்க,” என்றான். கண்ணகி அதனைக் கேட்டாள்: “அரசே, என் கணவனா கள்வன்? என் காற்சிலம்பை விற்ற என் கணவனா கள்வன்? அவன் விற்றது என் காற்சிலம்பன்றோ? அச் சிலம்பினுள் உள்ளது மாணிக்கப் பரலன்றோ? ஏதும் அறியாது கூறுவது என்னையோ?” என்று வெகுண்டுரைத்தாள். அதுகேட்ட அரசன், “நீ உரைத்தது நன்று. அரசியார் காற்சிலம்பில் உள்ளது முத்துப் பரலே,” என்று கூறிக்கொண்டே, அரசியார் பால் அன்றளித்த அச் சிலம்பினைக் கொணரப் பணித்தான். வந்தது சிலம்பு; வாங்கி உடைத்தாள் கண்ணகி உள்ளிருந்த மாணிக்கப் பரல் மன்னவன் வாயிற் சென்று தெறித்தது.

மணியைக் கண்ட மன்னவன் மதி மருண்டான். “பொன்செய் கொல்லன் புன்சொல் கேட்ட யானே கள்வன். அந்தோ! யானும் ஓர் அரசனோ? அறம் பிறழா ஆட்சியை அழித்து விட்டேனே! தென்னவர் தவறு செய்யார்; பாண்டியர் பிழை புரியார் என்ற புகழ்ச்சொல் என்னால் கெட்டுவிட்டதே! இனியும் என் உயிர் வாழ்வதோ! இன்னே நெடுக என் உயிர்!” என்றான். அங்ங்னமே அரசன் மயங்கி வீழ்ந்தான்; மறைந்தது அவன் உயிர் என்னே மன்னன் மாண்பு! பாண்டியர் செங்கோல் பிழைபட்டது என்ற பழிச்சொல், பகைவர் செவிகளுள் சென்று புகாமுன்னரே, வளைந்த செங்கோலை, வீழ்ந்து உயிர்விட்டு நிமிர்த்திய நெடுஞ்செழியன் பெருமையே பெருமை! அம்மட்டோ மன்னன் மாண்டான் என்பதை அறிந்த மாதேவியாரும், கணவன் இறக்க உயிர் வாழேன் எனும் கருத்துடையராய், அரசன் வீழ்ந்த அவ்வரியணை மீதே தாமும் வீழ்ந்து உயிர் துறந்தார். என்னே கணவன் மனைவியர்தம் காதல் வாழ்வு: நெடுஞ்செழியன் நெறி தவறான்; நெறிதவறின் உயிர் வாழான். இவ்வாறு, தன் அறியாமையால் அழிந்த அறத்தினைத் தன் உயிர் கொடுத்து உயிர்ப்பிக்கும் உரவோனாதல் அறிந்தன்றோ, அவன் பகை வேந்தனாய சேரன் செங்குட்டுவன்,

     “வல்வினை வளைத்த கோலை மன்னவன்
      செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது”

எனக் கூறிச் சிறப்பித்தான்!

உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட உயர்ந் தோனாய நெடுஞ்செழியன், இறவாது நாடாண்டிருந்த காலத்தே நாட்டு மக்கட்கு நல்கிய நல்லுரை, நாவாரப் பாராட்டும் பெருமை வாய்ந்தது.

ஒரு நாடு நல்லாட்சி பெற்ற நாடாய், நனி சிறந்து விளங்க வேண்டுமாயின், அந்நாடு, ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலரைத் தன்பால் கொண்டிருத்தல் வேண்டும். நாட்டில் சான்றோர். பலர் தோன்ற வேண்டுமாயின், கல்வியில் நாட்டம் உடையார் மிகப் பலராதல் வேண்டும்; அதற்குக் கல்வியின் சிறப்பும், கல்லாமையின் இழிவும் அம்மக்கள் உள்ளத்தே ஊன்றிப் பதியுமாறு எடுத்துக் கூறும் தொண்டு எங்கும், எப்பொழுதும் நடைபெற்ற வண்ணம் இருத்தல் வேண்டும். இந்த உண்மையினை உணர்ந்தவன் நெடுஞ்செழியன். அதனாலன்றோ, கற்றார் பெறும் பெரும் புகழ் இது, கல்லார் பெறும் பெரும்பழி இது, “கற்க கசடறக் கற்பவை, என்ற பொருள் நிறைந்த பொன்னுரையினைப் புகட்டும் அவ்வறப் பணியினைத் தானும் மேற்கொண்டான்.

“பெற்றெடுத்த மக்கள் அனைவரையும் ஒத்த அன்பே காட்டி வளர்க்கும் உயர்வுடையவள் தாய். அவ்வியல்புடையளாய தாயும், தன் மக்கள் பெற்றிருக்கும் கல்வியின் ஏற்றத் தாழ்வுகளுக் கேற்ப, நிறையக் கற்ற மகன்யால் பேரன்பு காட்டலும், கல்லாத மகன்பால் அன்பு காட்ட மறுத்தலும் செய்வள்.

“ஒரு குடியிற் பிறந்தார் அனைவரும் ஒத்த சிறப்புடையார் ஆதலின், அவர் அனைவரையும் ஒரு தன்மையராகவே மதித்தல் வேண்டும். ஆனால், அக்குடியில் பிறந்தாருள் மூத்தவன் கல்லாது காலம் கழிக்க, இளையோன் கற்றுத் துறைபோய பெரியோனாயின், அவ்விருவருள் மூத்தோனை ‘வா!’ என வாய் திறந்து அழைக்கவும் நானும் மக்கள், அவன் இளையோன் ஆட்டியாங்கு ஆட முன் வருவர்.

“பிறப்பினாலேயே நால்வகைப் படுவர் மக்கள். எனப் பிரித்து, அவருள் ஒருவர் பிறவியினாலேயே உயர்ந்தவராவர்; ஒருவர் பிறவியினாலேயே தாழ்ந்த வராவர்” எனச் சில அறநூல்கள் கூறுகின்றன. ஆனால், அந்நாற்குலத்துள், உயர்குலத்தில் பிறந்தான் ஒருவன் கல்லாதவனாக, இழிகுலத்தில் பிறந்தான் ஒருவன் கற்று வல்லோனாயின், கற்ற அவ்விழிகுலத்தான் காலின்கீழ்க் கல்லாத மேற்குலத்தான் வீழ்ந்து பணியாற்றக் கடமைப்பட்டவனாவான். ஆகவே, ஒருவர் உயர்வுக்கும் தாழ்வுக்கும், அவர் பிறந்த உயர்குலமும், இழிகுலமும் காரணங்களாகா; அவர்தம் கல்வி கல்லாமையே காரணங்களாம். ஆகவே உலகிற் பிறந்தார். ஒவ்வொரு வரும் கற்றல் வேண்டும்.”

“கல்வி காசு கொடுத்து வாங்கும் பொருளன்று. ஒருவர், தம் ஆட்சியைக் காட்டி, ஆணையிட்டு அடிமை கொள்வதும் ஆகாது. கலை பல கற்றுப் பெற்ற அறிவுடையார், தாம் கற்ற கல்வியைப் பிறர்க்கு விரும்பிக் கொடுத்துழியே, அதைப் பெறுதல் பிறர்க்கு இயலும். ஆகவே, பிறர்பால் உள்ள பேரறிவைப் பெற விரும்பும் ஒருவன், அதை விரும்பிக் கொடுக்கும் நல்லுள்ளம் அக்கல்வி உடையார்க்கு இயல்பாகவே உண்டாமாறு ஆவன புரிதல் வேண்டும். உள்ளம் ஆணைக்கு அடங்காது; அச்சம் காட்டி அதை ஆட்கொள்வதும் இயலாது; அன்பிற்கே அஃது அடிபணியும். மனம் இயல்பாகவே மாறுதல் வேண்டும்; அம்மாற்றம், உண்டாகுமாறு அவர் உவப்பன செய்தல் வேண்டும்; அத்தகைய மனமாற்றம், கற்றுவல்ல அப்பெரியார்க்குத் துன்பம் வந்துற்ற வழி, முன்னோடிச் செய்யும் உதவியாலும் அவர்க்குப் பொருட் குறை உண்டாயது அறிந்து, போதும் என அவரே மறுக்கும் அளவு மிக்க பொருள் தருவதாலுமே உண்டாம்.

“உதவுவதாலும் உறுபொருள் கொடுப்பதாலும் மட்டுமே, அம்மாற்றத்தினை உண்டாக்கி விடுதல் இயலாது. மேலும் ஒன்று தேவை. கல்வியுடையார் குலத்தால் கீழோராய், அவர்பால் கற்கவரும் மாணவன் மேற்குலத்தானாக, வந்த மாணவன், ‘யானோ மேற்குலத்து வந்தவன்; பணிந்து நின்று பழகியறியேன்! என்று எண்ணுவானாயினும், கல்வி தரும் ஆசிரியன் வறியனாக, கற்க வரும் மாணவன் மாநிதிச் செல்வ முடையனாக, வந்த மாணவன், யானோ செல்வச் சீமான்! ஆசிரியனோ, அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் வறியன்! அவரைப் பணிந்து நிற்பது பழியாம்!’ என எண்ணுவானாயினும் அத்தகையாரால் வேண்டிய கல்வியை விரும்பியாங்குப் பெறுதல் இயலாது. தன்னைத் தாழ மதிக்கும் மனம் மாணவர் பால் உளது என்பதை ஆசிரியன் அறியின், அவன் உள்ளம் வாடும்; வாடிய அவன் உள்ளத்தினின்றும் விழுமிய கல்வி வாராது. ஆகவே கற்க விரும்புவார், பணிந்து, பின்னின்று கற்றற்குச் சிறிதும் பின்னடைதல் கூடாது.”

இவையனைத்தும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், அறிவு பெறும் கல்வியின் சிறப்பும், அதைப் பெறுதற்காம் அரிய வழியும் குறித்துக் கூறிய அறவுரைகளாம். அவன் கூறிய நெறியில் நின்று, ஆசிரியரைப் பணிந்து, கலை பல கற்று, நிலை பல பெற்று உயர்வோமாக!