இலக்கியங்கண்ட காவலர்/பசும்பூண் பாண்டியன்

11
பசும்பூண் பாண்டியன்

மிழகத்தைக் கடைச் சங்க காலத்தில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னர்களில், பசும்பூண் பாண்டியன் தலைசிறந்தவனாவான். சேரவேந்தர்களுள் செங்குட்டுவனும், சோழ வேந்தர்களுள் திருமாவளவனும் சிறந்து விளங்கியதைப் போலப், பாண்டிய வேந்தர்களுள் பாருளோர் போற்ற வாழ்ந்தவன் பசும்பூண் பாண்டியன். இவன் நெடுஞ்செழியன் எனவும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனவும் அழைக்கப் பெறுவான்.

பசும்பூண் பாண்டியன், நனிமிக இளையனாய் இருக்கும் காலத்திலேயே நாட்டாட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்; அவன் இளமைத் தோற்றம் எழில் பெறக் காட்சி அளிப்பதில் குன்றவில்லை. தாய் தந்தையர், குழவிப் பருவத்தில் அணிவித்த கிண்கிணியினை நீக்கி விட்டு, வீரக்கழல் புனைவதையும் அப்பொழுதுதான் மேற்கொண்டான்; பிறந்த மயிர்களையும் பெருவிழாவும் அண்மையிலேயே கொண்டாடினான்; வளை களைந்து வில்லேந்தும் வன்மையினை அவன் கை பெற்றதும் அப்பொழுது தான்; ஐம்படைத் தாலியை நீக்கிவிட்டு, வேம்பு அணிந்ததும், அவன் ஆட்சிக்கு வந்த அன்றுதான் நிகழ்ந்தது. அரியணை ஏறுவதற்கு முன்னாள்வரையும் அறுசுவை உணவினை உண்டு அறியான்; அந்நாள் வரை அவன் பாலுணவு உண்டே பழகி இருந்தான். அரியணை ஏறும் பசும்பூண் பாண்டியன் அத்துணை இளையனாய் விளங்கினான்.

பாண்டிய நாட்டில் பாராண்டிருப்பவனோ பச்சிளஞ் சிறுவன்; ஆனால், அவன் ஆட்சிக்குட்பட்ட பாண்டி நாடோ, கொற்கைத் துறை அளிக்கும் முத்தும், பொதியமலை அளிக்கும் ஆரம் முதலாம் பல பொருள்களும் நிறைந்து செல்வத்தால் செழித்திருந்தது. அப்பெரும் பொருள்பால் பேராசை கொண்ட பாண்டிய நாட்டுப் பகைவர்கள், பசும்பூண் பாண்டிய னின் இளமைக் காலத்தை வாய்ப்பாகக் கொண்டு பாண்டிய நாட்டின்மீது படையெடுக்கத் துணிந்தனர். அவ்வாறே யானைக்கண் சேய்மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற பெயருடைய சேரன் ஒருவனும், ஒரு சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மா, பொருநன் என்பாரும் ஒன்றுகூடி, “நாற்படை உடையோம் நாம்; நல்ல திறமும் உண்டு நம்பால்; பசும்பூண் பாண்டியனோ பாலகன்; ஆகவே அவனை வெல்லுதல் எளிது; வென்றால் பெறும் பொருளோ பெரிது!” என்று எண்ணித் தம் படையொடும் வந்து மதுரைமா நகரை வளைத்துக் கொண்டனர்.

பால் மனம் அறாச் சிறுவனே எனினும், பேராற்றலும், போர் வன்மையும் வாய்க்கப் பெற்ற பசும்பூண் பாண்டியன், பகைவர் செயல்கண்டு கலங்கினானல்லன்; வந்து எதிர்த்த பகைவரைப் பாழ்செய்தல்லது வறிது மீளேன் என வஞ்சினம் உரைத்துப் போருக்கு எழுந்தான்; வழிவழிவந்த தன் குலத்தோர் அணிந்த வேப்பந்தாரை விரும்பி அணிந்தான்; மதுரைமா நகரின் வாயிற்கணுள்ள குளத்தில் மூழ்கி எழுந்தான்; போர்ப்பறை முழங்க, மதமிக்க களிறேபோல், மாற்றார் படை நோக்கிச் சென்றான்; சென்று களம் புகுந்த செழியன் தன் களிற்றுப் படையால், பகைவர் முன்னணியைப் பாழ்செய்தான். தம் முன்னணிப் படையின் தளர்ச்சி கண்ட பகைவர் செய்வதறியாது சிந்தை கலங்கினர். அந்நிலையில் அவர் மீது வின்ரந்து பாய்ந்து பசும்பூண் பாண்டியன் பெரும் போர் செய்தான். பாண்டிப் படைமுன் நிற்கமாட்டாத பகைவர், புறமுதுகு காட்டி ஒடினர்; ஒடும் பகைவரை ஓடி உய்ய விட்டானல்லன்; அவரை அம்மட்டோடு விடின் அவர் ஆணவம் அழியாது; மீண்டும், வேண்டும் படை கொண்டு வரினும் வருவர்; ஆகவே அவர்களை அறவே அழித்தல் வேண்டும் என்று எண்ணினான். உடனே தோற்றோடும் பகைவரை விடாது துரத்திச் சென்று, அப்பகைவருள் ஒருவனாகிய சோழனுக்குரிய ஆலங்கானம் எனும் ஊர் அருகே, அப்படையை அறவே அழித்துச் சேரமான் யானைக்கண் சேய்மாந்தரஞ் சேர லிரும்பொறையைச் சிறைசெய்து, அவ்வேழரசர்களின் முரசுகளையும், குடைகளையும் கைப்பற்றிக் கொண்டு, தன் வெற்றிப் புகழை மக்களும் புலவரும் வியந்து புகழப் பாண்டிய நாடு மீண்டான்.

தன்னை வந்தெதிர்த்த ஏழரசர்களையும், நனி இளையனான காலத்தில், தனியே நின்று வென்ற பசும்பூண் பாண்டியன் பேராண்மை தமிழர்களின் உள்ளத்தில் தனியிடம் பெற்று விட்டது. ஆனதால் அவ்வெற்றிச் சிறப்பினை, அவன் பெயரோடு இணைத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என அழைத்துச் சிறப்பித்தார்கள். அவன் காலத்தே வாழ்ந்து, தமிழ் வளர்த்திருந்த நக்கீரர், பொதும்பில் கிழார், ஆலம்பேரி சாத்தனர், மாங்குடிக் கிழார் முதலாம் புலவர் பெருமக்கள், தலையாலங் கானப் போரையும், அப்போரில் பசும்பூண் பாண்டியன் பெற்ற வெற்றிப் புகழையும், தாம் பாடிய பாக்களில் வைத்துப் பாராட்டினார்கள். ஒருவனை ஒருவன் தாக்குவதும், ஒருவனை ஒருவன் வெற்றி கொள்வதும் உலகத்தின் இயல்பு: அஃது எங்கும் நிகழக்கூடியது; அத்தகைய போர் உலகிற்குப் புதியது மன்று; ஆனால், ஏழு பேரரசர்கள் கூடி ஒருவனை எதிர்ப்பதும், அவ்வொருவன், பிறர் எவர் துணையும் வேண்டாமலே விரைந்து சென்று, அவ்வேழரசர் களையும் வென்று அழிப்பதும், அதுவும், தன்னாட்டுட் புகுந்தாரைத் துரத்திச் சென்று அவர் நாட்டில் அழிப்பதும், அம்மம்ம! அதிசயம்! அதிசயம்! இதுபோன்ற நிகழ்ச்சி, இதுவரை நிகழ்ந்ததாக யாம் கண்டதும் இலம்; கேட்டதும் இலம்!” என்று புலவர் இடைக்குன்றுார்க் கிழார் பாடிப் பாராட்டினார்.

தன் நாட்டுள் புகுந்து போரிட வந்த பகைவரைப் பாழ்செய்து வென்ற பசும்பூண் பாண்டியன், அதன் பின்னர்ப் பகைவர் நாடுகளுள் தான் புகுந்து போரிடத் தொடங்கினான். தமிழகம் எங்கும் சென்று, தமிழ் நாட்டின் அரசியல் அமைதியைக் குலைத்து வாழ்ந்து வந்த கொங்கர் எனும் போர்வீரர் கூட்டத்தைக் கொங்கு நாடு சென்று கொன்று திரும்பினான்; சேர நாடு சென்று, வெளிநாட்டு வாணிகச் செல்வத்தால் வளம் சிறந்து விளங்கிய முசிறித் துறையை முற்றி, அதைத் காத்திருந்த சேரனது யானைப் படையை அழித்து மீண்டான்; தன் தலைநகருக்கு அண்மையில் அர்சாண்டிருந்த, நீடூர்க்குரிய எவ்வி எனும் குறுநிலத் தலைவனை வென்று, அவனுக்குரிய முத்துர்க் கூற்றத்தையும், மிழலைக் கூற்றத்தையும் வென்று தனதாக்கிக் கொண்டான்.

வெற்றிமேல் வெற்றி பெற்று விழுப்புகழ் நிறைந்த வேந்தனாய் வாழ்ந்த பசும்பூண் பாண்டியன், தன் பாண்டிப் படையின்பால் பேரன்புடையனாவன். பாண்டியன் பாசறை வாழ்வின் ஒருநாள் நிகழ்ச்சி, அவன் தன் படை வீரர் பால் காட்டும் பரிவு எத்துணைப் பெரிது என்பதை எடுத்துக் காட்ட வல்லது. பகைவர் படையின் முன்னணியில், அப்படையின் பேரரணாய் நின்று காத்த யானைப் படைகளை அழித்து வெற்றி பெற்ற போரில், அவன் படை வீரர் பலர், புண் பெற்று வருந்துகின்றனர் என்பதை ஒருநாள் அறிந்தான்; அறிந்த நேரமோ, இரவில் நடுயாமம்; குளிர்ந்த வாடைக் காற்று வீசிக் கொண்டே இருந்தது; மழைத் துளிகள் விடாது வீழ்ந்து கொண்டே இருந்தன; என்றாலும், அக்காலத்தின் அருமையினை எண்ணினானல்லன், பகற் காலத்தே சென்று காண எண்ணின் அதற்கு அப்போது ஒய்வு கிடைக்காது; போர்க்கள நிகழ்ச்சிக்கே பகற்காலம் பற்றாது; ஆகவே அவரைச் சென்று காண்டது அப்பகற் காலத்தே இயலாது. அதனால் அவரை அந்நள்ளிரவிலேயே சென்று காணத்துணிந்தான். வாட் புண் பட்ட வீரரைக் கண்டு, ஆறுதல் உரைத்து, அன்பு காட்ட வேண்டும் என்ற வேட்கை, காலத்தின் கொடுமையை மறக்கச் செய்தது. பாண்டில் விளக்கேந்திப் பலர் முன்னே செல்ல, மழைநீர் மன்னன் மீது படாவாறு வெண் கொற்றக் குடையேந்திய ஒருவன் பின்னே வர, காற்றால் அலைப்புண்டு கீழே வரும் தன் மேலாடையினை இடக்கையால் பற்றிக்கொண்டு, வலக்கையில் வாளேந்தி, வழியில் வரிசையாக நிற்கும் குதிரைகள் உடலை ஆட்டுவதால், அவற்றின் உடல்மேல் உள்ள மழைநீர் தெறித்துத் தன்மீது விழுவதையும் பொருட்படுத்தாது, சேறு நிறைந்த தெரு வழியே நடந்து சென்று, பசும்பூண் பாண்டியன் பாசறை புகுந்தான். ஆங்கே படைத் தலைவன், முன்னே கடந்து சென்று, புண்பெற்ற போர் வீரர்களையும், அவர்கள் பெற்ற அப்புண்களின் நிலைமையினையும் கூறிக் கொண்டே செல்ல, அவ்வீரர்களுக்கு அன்புரை வழங்கி ஆறுதல் உரைத்துக் கொண்டே செழியன் சென்றான். பேயும் உறங்கும் நடுயாமம் என்றும் பாராது, படை வீரர்டால் பரிவு காட்டும் பசும்புண் பாண்டியனின் போர் நுணுக்க அறிவு பாராட்டற்குரியதாம்.

பேராண்மை கொண்டு பேரரசு செலுத்தும் பசும்பூண் பாண்டியன் நாட்டவர் போற்றும் நல்ல பல பண்புகளும் பெற்றிருந்தான்; பெற்ற அப்பண்புகளைப் பிறர் அறியக் காட்டி அறம் உரைக்கும் அரசனும் ஆவான்; பகைவர் படை பாண்டி நாட்டுத் தலைநகரைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அஃது அறிந்த பசும்பூண் பாண்டியன், தன் அரசவையில் உள்ளார் முன்னிலையில், “யாமோ பெரும் படை யுடையோம்; இவனோ இளையன்!” என எண்ணி, என். ஆற்றல் அறியாது வந்து எதிர்த்த அவ்வரசர்களை ஒரு சேர அழித்து, அவர்களையும், அவர்கள் குடைகளையும், முரசுகளையும் கைப்பற்றி மீள்வேன்; அவ்வாறின்றி, வறிதே மீள்வேனாயின், என் ஆட்சியின் கீழ் வாழும் என் நாட்டு மக்கள், ஆட்சியாளரால் அல்லல் பல அடைந்து, ஒடி உய்யும் இடம் அறியாது, கண்ணிர் விட்டுக் கலங்கி நின்று, ‘எங்கள் நாட்டு அரசன் நனிமிகக் கொடியவன்! யாம் என் செய்வோம்? எவ்வாறு உய்வோம்?’ எனச் செயலற்றுப் பழிதுiற்றப் பண்பிலா அரசு செலுத்தும் பழியுடையேனாவேன்! என் அரசவை இருந்து, அறவுரை பல வழங்கி வருவதோடு என்னைப் போற்றிப் புகழும் பண்புடையராய் மாங்குடி மருதன் முதலாம் புலவர் பெருமக்கள் என்னைப் பாடாது விடுமாறு, பழிமிகு செயலுடையனாவேன்! பல பொருள் கொடுத்துப் பாராட்டிப் பேண வேண்டியவர்களாய பாணன், பொருநன், கூத்தன் முதலாம் பரிசிலர்கள், வறுமையால் வாடி, வாயிலில் வந்து நின்று, கண்ணிர் விட்டுக் கலங்கும் காட்சியைக் கண்டும், அவர்க்குப் பொருள் கொடுத்து உதவ மாட்டாமைக்கும் ஏதுவாகிய வறுமை வாழ்வில் வாடுவேனாவேன்!” என வஞ்சினம் உரைத்து, அதன் வழியே, குடிபழி தூற்றக் கோலோம் பல் கூடாது; பழிபல நிறைந்து, புலவர் பாராட்டைப் பெறாது விடுத்தல் பெரும் பேதைமையாம்; வாயில் வந்து இரந்தார்க்கு வழங்கி வாழ்தலே வாழ்வாம் என்பன போலும் அறவுரை வழங்கிய பசும்பூண் பாண்டியன் புகழ் பாரெல்லாம் பரவுக!