இலக்கியத் தூதர்கள்/தமிழில் தூது


இலக்கியத் தூதர்கள்


1. தமிழில் தூது

தமிழில் சிறு நூல்கள்

ஆயுந்தொறுந் தொறும் இன்பந் தரும் மொழியாகிய நந்தம் செந்தமிழ் மொழியில் நவில்தொறும் நயந்தரும் சிறு நூல்கள் எண்ணிறந்தன உள. அவை பல்வேறு வகையினவாய் அமைந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒருவாறு தொகுத்து வகுத்த நம் முன்னோர் ‘தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள்’ என்று அறுதியிட்டனர். ஆனால் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சிற்றிலக்கியங்களும் இக்நாளில் வழங்குகின்றன.

தொல்காப்பியர் சொல்லும் விருந்து

பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழந்தமிழ இலக்கணமாகிய தொல்காப்பியம் சிற்றிலக்கியங்கட்கெல்லாம் அடிப்படையான ஓர் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் இக் நாளிற் போலப் பல்வகைச் சிற்றிலக்கியங்கள் வழக்காற்றில் இருந்திலவேனும் காலப்போக்கில் அவை தோன்றுதற்குரிய விதியை அவர் வகுத்துள்ளார். அஃது அவர் எதிர் காலத்தை நுனித்து நோக்கும் பழுத்த மதிநலத்தைப் புலப்படுத்துவதாகும். தொடர்நிலைச் செய்யுட்கு உரியனவாக உரைக்கப்பெற்ற வனப்பு எட்டனுள் ‘விருந்து’ என்பதும் ஒன்று. புலவர்கள் தாந்தாம் விரும்பியவாறு தனித்தும், பல பாக்கள் தொடர்ந்தும் வரப் புதியதாகப் பாடப்பெறுவதே விருந்தெனப்படும். இப்பொது விதியே அந்தாதித் தொடையில் அமைந்து வரும் கலம்பகம், அந்தாதி, மாலை போன்ற சிறு நூல்கட்கும், அந்தாதியாய் வாராத உலா, தூது, கோவை, பிள்ளைத்தமிழ், பரணி முதலான பைந்தமிழ்ச் சிற்றிலக்கியங்கட்கும் இலக்கணமாயிற்று. இவ்விதியை ஆதாரமாகக் கொண்டே மதி நலஞ் சான்ற புலவர் பெருமக்கள் பல துறைச் சிறு நூல்களைப் படைத்துள்ளனர். அத்தகையவற்றுள் ஒன்றாக விளங்குவதே ‘துாது’ என்னும் பிரபந்தமாகும். பாட்டியல் நூல்கள்

இத்தகைய பிரபந்தங்கட்கு இலக்கணம் கூறும் நூல்கள் தமிழிற் பலவுள. பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல்,நவநீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல் போன்ற நூல்கள் அவ்வகையைச் சார்ந்தனவாகும். இப்பாட்டியல் நூல்களில் ஒன்றிலேனும் ‘பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு’ என்னும் வரையறை உரைக்கப்படவில்லை. இவற்றில் கூறப்படாத சிறு நூல்கள் பல இன்று வழக்கில் இருக்கின்றன. இன்னும் காலத்திற்கேற்பப் பல்வேறு இலக்கியங்கள், எழுதலுங் கூடும். எனவே, சிற்றிலக்கியங்கள் இத்துணை வகைப்படுமென அறுதியிட்டு உரைத்தல் இயலாது.

தூது நூல்கள்

இலக்கிய வளஞ்சான்ற இனிமைத் தமிழ் மொழிக்கண் நூற்றுக் கணக்கான தூதுப் பிரபந்தங்கள் உள்ளன. நெஞ்சுவிடு தூது, தமிழ்விடு தூது, நெல்விடு தூது, துகில்விடு தூது, மான்விடு தூது, வண்டுவிடு தூது, விறலிவிடு தூது, காக்கைவிடு தூது, பணவிடு தூது, புகையிலைவிடு தூது, வனசவிடு தாது.முதலிய பல தூது நூல்கள் ஓதற்கினிய உறு சுவையுடையனவாய் உள்ளன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது உமாபதி சிவனார் இயற்றிய நெஞ்சுவிடு தூதாகும்.

பிற நூல்களில் தூது

இவையன்றித் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் குயில், கிளி, புறா, நாரை, நாகணவாய்ப்புள், அன்றில், வண்டு முதலியவற்றைத் தூது விடுத்ததாக அமைந்த பாக்கள் பல காணப்படுகின்றன. கலம்பகம், அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்களிலும் அவ்வாறமைந்த பாக்களைப் பார்க்கலாம்.

தூதின் இலக்கணம்

ஒருவர், தம்முடைய கருத்தைக் காதலர், நண்பர். பகைவர் ஆகியோரில் யாரேனும் ஒருவர்க்கு மற்றொருவர் வாயிலாகக் கூறி விடுப்பதே துாதாகும். மக்களில் ஒருவரையோ, அன்றி விலங்கு, பறவை முதலான அஃறிணைப் பொருள்களில் ஒன்றனையோ தூது விடுப்பதாகக் கலிவெண்பாவான் யாக்கப்பெறும் இயல்பினதே இந்நூலாகும். தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் தம் நூலில் தூது என்னும் அதிகாரத்தில் தூதிலக்கணத்தைத் திறம்பட வகுத்தோதியுள்ளார்.

அஃறிணைத்தூதுப் பொருட்கள்

ஒருவர் உரைக்கும் கருத்தை அறிந்து மற்றொருவர்க்கு உணர்த்தும் ஆற்றல் வாய்ந்த மக்களையே தூதாக விடுத்தல் இயல்பாயினும் அத்தகைய ஆற்றலில்லாத அஃறிணைப் பொருள்களையும் தூது விடுக்கும் முறை, இலக்கிய வழக்கில் காணப்படுகின்றது. இவ்வழக்குப் பற்றியே,

“கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவும் இயற்றுந போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே”

என்று பின்னாளில் நன்னூலார் இலக்கணம் வகுக்க வேண்டியதாயிற்று.

தூது செல்லும் பத்து

இரத்தினச் சுருக்கம் என்னும் நூல் தூது விடுத்தற்குரிய பொருள்களாகப் பத்தினைக் குறிப்பிடுகின்றது. அன்னம், மயில், கிளி, மேகம், நாகணவாய்ப் புள், தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்னும் இவற்றுள் ஒன்றைப் பொருளாகக் கொண்டு, புலவர்கள் தம் புலமை கலந்தோன்று மாறும் இலக்கிய நயம் பொதுளுமாறும் தூதிலக்கியத்தை ஓதுகின்றனர்.

“இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்
பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈ ரைந்துமே
தூதுரைத்து வாங்கும் தொடை”

என்னும் பழம்பாட்டால் அவ்வுண்மை புலனாம்.

சங்க காலத் தூது

கடைச் சங்கத் தொகை நூல்களுள் தலைமை சான்ற புறநானூற்றுள் பிசிராந்தையார் என்னும் பெருந்தமிழ்ப் புலவர் தம் ஆருயிர் நண்பனாகிய கோப்பெருஞ் சோழனுக்கு அன்னச்சேவலை அருந்தூது விடுத்ததாக நறுந்தமிழ்ப் பாடலொன்று உள்ளது. புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியென்னும் மூவகை நட்புள் முதன்மை வாய்ந்த உணர்ச்சி யொத்தலாகிய நட்பால் உள்ளங் கலந்து நின்ற அவ்விருவருள் ஒருவராய பிசிராங்தையார் தம்பால் சோழன் கொண்டிருந்த அன்பினையும் நன்மதிப்பையும் அப் பாட்டால் இனிது விளக்குகின்றார்.

அன்னச்சேவல் தூது

“அன்னச்சேவலே! போர் வென்றி மிக்க புரவலனாகிய சோழன் தன்னாட்டைத் தலையளி செய்யும் நன்னராளன். நீ தென்றிசைக் குமரித்துறையிலுள்ள அயிரை மீன்களை அருந்தி வடதிசைக்கண் உள்ள இமயம் நோக்கிப் பெயர்குவையாயின் இரண்டற்கும் இடைப்பட்ட சோழநாட்டுக் கோழியூரைக் குறுகுவாய். அந்நகரின் நடுவண் அமைந்த நெடுநிலை மாடத்தே நின் காதற் பேடாகிய இள வன்னத்துடன் சென்று தங்குவாய். நின் வரவினை வாயிற் காவலர்க்கு உணர்த்தாதே தடையின்றி மன்னவன் கோயிலுட் புகுவாய். எம் நண்பனாகிய கோப்பெருஞ் சோழன் கேட்குமாறு ‘யாம் பிசிராந்தையின் அடிக்கீழ் இருப்போம்’ என்று உரைப்பாய். அது கேட்ட வளவில் சோழன் மகிழ்வுற்று, நின் பேடை யன்னம் பூணுமாறு நினக்குப் பொன்னும் மணியுமாய அணிகலன்களை யளிப்பான்” எனக் கூறி இன்புற்றார்,

“அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை யளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையன் மாலையாம் கையறு பினையக்
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி

வடமலைப் பெயர்குவை யாயின் இடையது
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்டநின்
இன்புறு பேடை யணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.” -புறம், கன.

என்பது அப்புலவரின் தூதுப் பாடலாகும்.

நாரை விடு தூது

சத்தி முற்றம் என்னும் ஊரில் தோன்றிய புலமைச்சான்றார் ஒருவர், பாண்டியனைப் பாடித் தம் வறுமை நோயைக் களைந்துகொள்ளும் பொருட்டு மதுரைமாநகர் புக்கார். அவண் பாண்டியனைக் காண்டற்கியலாது வருந்தி ஒருபால் ஒதுங்கியிருந்தார். அதுபோழ்து ஒருநாள் மாலை வேளையில் வானில் வடதிசை நோக்கிப் பறந்து சென்ற நாரையினத்தை விளித்துப் பாடலுற்றார்.

“நாராய் ! நாராய்! செங்கால் நாராய் !
பழம் படு பனயின் கிழங்குபிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!”

என்று நாரையை விளித்த நற்றமிழ்ப் புலவர், “நாரையே! நீயும் நின் பேடையும் தென்திசைக் குமரியாடி வடதிசை இமயத்துக்கு ஏகுவீராயின் எம் ஊராகிய சத்திமுற்றத்து வாவியுள் சிறுபொழுது தங்குமின் அதற்கு அணித்தாக அமைந்துள்ளது என் குடில்; அது மழையால் நனைந்த சுவர்களே யுடையது: சிதைந்துபோன கூரையையுடையது; ஆங்கே கனை குரற் பல்லியின் நல்ல சொல்லை எதிர்நோக்கிப் பாடு பார்த்திருப்பாள் என் மனையாள்; அன்னவளைக் கண்டு, மாறன் மதுரையில் ஆடையின்றி வாடையின் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்திக், காலதுகொண்டு மேலது தழுவிப், பேழையுள்ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல் நயமிக்கதொன்றாகும்.

காவியங்களில் தூது

குணமாலை யென்னும் அணங்கு, சீவகன்பால் கிளியைத் தூது விடுத்த செய்தியினைச் சிந்தாமணிக் காப்பியத்திற் காணலாம். வாசவதத்தையின் பிரிவுத் துயருக்கு ஆற்றாது வையங் காவலனை உதயணன் மான் முதலியவற்றை நோக்கி விரித்துரைத்த கருத்துக்களைப் பெருங்கதை பேசுகிறது. நளனிடமிருந்து தூது சென்ற நல்லன்னம், தமயந்தியைக் கண்டு நளனின் நல்வியல்பெல்லாம் சொல்லி இருவர்க்குமே திருமணத்தை முடித்து வைத்த செய்தியை நளவெண்பா நயம்பட எடுத்துரைக்கும். வடமொழியிலும் மேகசந்தேசம், மேகசந்தேசம் அம்ச சந்தேசம் போன்ற நூல்கள் உள்ளன.

தூதின் காரணம்

பிரிவால் வருந்தும் தலைவன் தலைவியர் அஃறிணைப் பொருள்களைத் தூது விடுத்தற்கு அவர்தம் உள்ளக் கலக்கமே உற்ற காரணமாகும். அப்பொருள்கள் தூது சென்று மீளவேண்டுமென்பது அவர்கள் கருத்தன்று, காம நோயால் துன்புறும் தம் உள்ளத்திற்கு ஆறுதல் உண்டுபண்ணவே தம் துயரைப் பலவாறு புலம்பி வெளியிடுவர். இதனைக் ‘காம மிக்க கழிபடர் கிளவி என்பர் இலக்கண நூலார்.

இருதுறைத் தூது

இஃதன்றி அகத்துறைக் கற்பொழுக்கத்தில் நிகழும் பிரிவுகளில் ஒன்றாகத் தூதிற் பிரிவையும் குறிப்பர். பகை தணிக்கும் வினைப்பொருட்டுத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்தகறலே தூதிற் பிரிவு என்பர் இலக்கண ஆசிரியர். எனவே தமிழில் உள்ள தூதுப் பிரபந்தங்களையும் தூதுப் பாடல்களையும் பெரும்பான்மை பற்றி இருவகையுள் அடக்கலாம். காதல் பற்றிய அகத்துறைத் தூதெனவும், பகை தணிக்கும் வினைகுறித்து வேற்று வேந்தர்பாற் செல்லும் புறத்துறைத் தூதெனவும் அவற்றைக் குறிப்பிடலாம், அம்முறையில் தூதுப் பிரபந்தங்கள் அனைத்தும் அகத்துறை இலக்கியங்களேயாகும். இந்நூலுள் இருதுறைத் தூதர்களைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய அருஞ்செயல்களைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.