ஈசாப் கதைப் பாடல்கள்/குரங்கின் குறும்பு

அலைகள் இல்லாக் குளத்திலே
அதிக மீன்கள் பிடிக்கவே
வலையை இருவர் விரித்தனர்;
வளைத்து மீனைப் பிடித்தனர்.

வலையில் அதிக மாகவே
வந்து விழுந்த மீன்களை
கலயம் தன்னில் நிரப்பினர்;
கையில் எடுத்துச் சென்றனர்.

அருகில் இருந்த மரத்திலே
அமர்ந்தி ருந்த குரங்குமே
‘குறுகு’ றென்று இதனையே
கூர்ந்து பார்க்க லானது.


மனிதர் இருவர் தலைகளும்
மறைந்த வுடனே, வேகமாய்க்
குனிந்த முதுகுக் குரங்குமே
குதித்தே ஓடி வந்தது;

கரையில் கிடந்த வலைதனைக்
கையில் எடுத்துக் கொண்டது;
விரைவில் குளத்தில் குதித்தது;
வீசி வலையை விரித்தது.

வலையில் மீன்கள் எதுவுமே
வந்து சிக்கு முன்னரே,
தலையும் காலும் சிக்கியே
தவித்த தந்தக் குரங்குமே!

தகுந்த உதவி இல்லையே!
தப்ப வழியும் இல்லையே!
மிகுந்த முயற்சி செய்தது;
வீண்தான் என்றே அறிந்தது!

“குளத்தில் வலையை விரிக்கவும்.
குதிக்கும் மீனைப் பிடிக்கவும்
பழக்க மில்லா என்னையே
பாழும் ஆசை கெடுத்ததே!

மந்தி யாகப் பிறந்தநான்
மனித னாக நடித்ததால்,
இந்தக் குளத்தில் சாகிறேன்.
இதுஎன் மடமை” என்றது.