உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் தத்துவம்


7. உடற்கல்வியின் தத்துவம் (Philosophy)

தத்துவம் ஒரு விளக்கம்

தத்துவம் என்று குறிக்கின்ற Philosophy என்ற சொல்லானது, இரண்டு கிரேக்கச் சொற்களால் உருவானதாகும். Philos + Sophia என்னும் சொற்களுக்கு இங்கே நாம் பொருள் காண்போம். Philos என்றால் Love (அன்பு) என்றும் Sophia என்றால் Wisdom (அறிவு) என்றும் பொருள் கூறுகின்றார்கள்.

அறிவைப் பெருக்கிக் கொள்வதில் அன்பாக பிரியமாக இருக்கிறோம் என்று நாம் இங்கே பொருள் கொள்ளலாம்.

“தத்துவம் என்பது வாழ்க்கையின் முடிவு பற்றிய ஞானத்தை விளங்கிக் கொள்ள மேற்கொள்ளும் முனைப்பாகும்.”

“சிறந்த தத்துவக் கல்வி என்பது சிறந்த வாழ்க்கைத் தத்துவம்” என்பதாக அறிஞர்கள் தத்துவத்திற்கு விளக்கம் கூறுகின்றார்கள்.

தத்துவம் என்றால் என்ன?

தத்துவம் என்பது மனிதர்களது அனுபவங்களைப் போலவே விரித்துகிடப்பது.விளக்கம் கொடுப்பது விவரம் சேர்ப்பது.

எந்த ஒரு துறைக்கும் தத்துவம் என்பது சொந்தமல்ல. அது வாழ்வுத் துறையாக இருக்கலாம்; வாழ்வைச் சேராத துறையாகவும் இருக்கலாம்; பூமிபற்றிய துறையாக இருக்கலாம்.சந்திரன்,சூரியன்,விண்மீன்கள் போன்றவை விளையாடும் விண்வெளித் துறையாகவும் இருக்கலாம். இயற்கையானது,செயற்கையானது, மாயத்தோற்றமானது என்றுகூட அது இருக்கலாம். அவற்றிலெல்லாம் ஆழ்ந்த அறிவை மட்டும் பெறாமல், அவைபற்றிப் பூரணமாகப் புரிந்து கொள்ளும் முயற்சியே தத்துவம் என்று கூறப்படுகிறது.

ஆகவே, தத்துவம் என்பது, உலகத்திலுள்ள இயற்கையானவற்றைப் புரிந்து கொள்ளவும், ஒவ்வொன்றின் உட்பொருளைப் பற்றி எழும் ஐயங்களைப் போக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் மேற்கொள்கிற அணுகுமுறைகளையே தத்துவம் என்று வித்தகர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.

சாதாரண சராசரி மனிதர்களுக்கும், தத்துவவாதிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஒன்றை விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

சராசரி மனிதன் ஒருவன், வாழ்க்கையில் அல்லது உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறான். சில சமயங்களில் பார்த்ததும் சில உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். அல்லது எந்த விதமான சலனமும் இன்றி இறந்துபோகிறான்.

ஆனால் தத்துவ ஞானம் உள்ளவர்கள். ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கிற பொழுதே, அதனுள்ளே நுழைந்து, நிறைந்த அறிவினைப் பெற்றுக் கொள்கின்றார்கள். அவர்களது முழுமையான முயற்சியானது, காண்பவைகளிலும் பெறுகிற அனுபவங்களிலும் அதிகமான அறிவைப் பெற, புத்திசாலிகளாக மாறிக் கொள்வதேயாகும்.

சாதாரண மனிதர்கள் தமக்கென்று பெறுகிற அனுபவங்கள் மூலமாக அல்லது அறிஞர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக அல்லது கற்றுத் தேர்ந்த ஆசிரியர்கள் கீழிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாக, அறிவினைப் பெறுகின்றார்கள்.

எப்படியிருந்தாலும் தத்துவவாதிகளும் சாதாரண மனிதர்களும், அவரவர் வழியில் அறிவினை விருத்தி செய்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதுதான் உலகின் உண்மையான தன்மையாகும்.

ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் முன்னேற விரும்புகிற எவனும், தனது எதிர்கால இலட்சியம் அல்லது குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளவும் நிறைவேற்றிக் கொள்ளவும், தத்துவார்த்த முறையிலே தான் சிந்தனை செய்கிறான்.

எந்த மனிதனும் புத்திசாலித்தனமாக சிந்திக்கிறான் சமுதாயத்தில் அறிவார்ந்த முறையில் அணுகி வெற்றிகரமாக வாழ முயல்கிறான் என்றால், அவன் வாழ்க்கைத் தத்துவவாதியாக விளங்குகிறான் என்பதேயாகும்.

எனவே, தத்துவம் என்பது கற்றலின் ஒரு பிரிவாக அதாவது ஒரு கிளையாகவே உள்ளது என்று கூறலாம், அத்தகைய தத்துவ அறிவானது ஆராய்கிறது. கண்டு பிடிக்கிறது. மதிப்பீடு செய்கிறது. இவ்விதமாக அறிவுகளைச் சேகரிக்கிறது.

அவ்வாறு அறிவைச் சேர்த்து, சேகரித்து வைக்கிற தத்துவ முறைகள் பலதரப்பட்டனவாக இருக்கின்றன.

தத்துவம் போல வேறு எதுவும் உலகில் பழமையானது இல்லை. வாழ்க்கையிலும் உலகத்திலும் விளைந்து வருகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளைப் பற்றித் திறமாக ஆய்ந்து, தெளிவாகத் தேர்ந்து, முறையான வழிகளில் விடையளிக்க முற்படும் சிறப்பான முனைப்பான அறிவேதத்துவமாகும்.

அவை ஆறு வகைப்படும்.

1. ஆரம்பம் அறியும் அறிவு (Metaphysics)

மெட்டாபிசிக்ஸ் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, ஆரம்பம் பற்றி அறிகின்ற அறிவு முறை என்று அர்த்தம் இருக்கிறது.

எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தொடக்கம் அதன் குணம், வாழ்வின் தொடக்கம், இறைவனின் இயற்கைக் குணம் போன்றவற்றை ஆராயும் அறிவு முறையாக இது செயல்படுகிறது.

மனிதன் என்பவன் யார்? வாழ்வு என்பது என்ன? இறப்பு என்பது என்ன, இப்படிக் கேள்விகள் கேட்டு கேட்டு, விடைபெற முயல்வது தத்துவத்தின் ஒரு பிரிவாகும். மனித உடலும் மனித மனமும் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து, உதவிக் கொண்டு, ஒப்பற்ற பணியாற்றிக் கொண்டு வருகின்றன.

ஏனெனில், மனித வாழ்க்கையானது மண்ணுலகில் ஏற்படுகின்ற நிகழ்ச்சிகளின் நீரோட்டமான போக்கிலே தான் பயணத்தை மேற்கொண்டு செல்கிறது. அந்த நேரங்களில் ஏற்படுகின்ற செயல்கள், பிரதி செயல்கள், அனுபவங்கள், அவற்றிலே உண்டாகும் சோதனைகள், முயற்சிகள், தவறுகள் எல்லாம், சங்கிலி கோர்த்தாற் போல் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் வருகின்றன.

ஒவ்வொரு நாளும் இப்படி மனித வாழ்க்கையில் நடக்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால், மனிதர்கள், அவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டே வாழ்கின்றனர். ஏற்படுகின்ற நிகழ்ச்சிகள் எப்படி? எதற்கு? ஏன்? எவ்வாறு என்று கேள்விகளை எழுப்பி, காரணங்களை அறிந்து கொள்ளவும் மக்கள் முயற்சிக்கிறார்கள். அது தானே மனித மனத்தின் மகிமையாக இருக்கிறது.

உதாரணமாக, ஒருவன் ஆடுகளத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் காலில் ஏதோ ‘பிடிப்பு ஏற்படுவது போன்ற உணர்வு. காலை மீண்டும் ஒரடி எடுத்து வைக்க இயலாத நிலைமை, அவன் விளையாடுவதை நிறுத்தி விட்டு, தனக்குண்டான தாக்குதலைப் பற்றி சிந்திக்கிறான்.ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? அதை எப்படி அகற்றுவது? இப்படி ஏற்படுகின்ற சிந்தனையும், அதைத் தொடர்ந்து ஏற்படுகிற செயல்களும்தான் அவனுக்கு அனுபவங்களையும், அகலாத அறிவுகளையும் வழங்குகின்றன. இதுதான் மனித வாழ்க்கையின் மகத்துவம். விளையாட்டு உலகின் விந்தையான அறிவுப் பரிமாற்றம்.

நமது மனமானது, நமக்கு ஏற்பட்டிருந்த முந்தைய அனுபவங்களை நன்றாக நினைவு படுத்திக் கொண்டு, நடந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சிகளில் ஏற்படும் நிலை கைக்கேற்ப, அனுசரித்துக் கொண்டு, அறிவார்ந்த முறையில் செயல்பட வைக்கின்றது.

தேவையானவற்றை மட்டுமே மனம், மனதில் தேக்கி வைத்துக் கொள்கிறது. தேவையல்லாதனவற்றைத் துாக்கி எறிந்து விடுகிறது.

அதனால், மனித நடத்தையானது. அனுபவங்களினால் விரிவடைகிறது. விளக்கம் பெறுகிறது. சுற்றுப் புற சூழ்நிலைக் கேற்ப சுமுகமாக நடந்து கொள்ளும் சுகமான இயல்பையும் வளர்த்துக்கொள்கிறது.

ஆகவே, எந்த வழியில் மனிதர்கள் நினைத்தாலும், செயல்பட்டாலும், அது ஒரு இலட்சியத்தை நோக்கியே முன்னேறிப்போகிறது. அந்த இலட்சியம் தான், ‘மகிழ்ச்சியான வாழ்வு’ என்பதாகும்.

கல்வி தரும் கண்ணோட்டம்

இன்றைய கல்வி முறை, மகிழ்ச்சியான வாழ்வளிக்கும் முறைகளை வழங்கி, மனிதர்களை மதி நிறைந்தவர்களாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்தக் கல்வியின் பாடத்திட்டம், செயல் திட்டம், இயற்கையை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் ஏற்றமிகு திட்டங் களாகவே இருப்பதால், இன்றைய சமுதாயத்தை இப்பொழுது வலிமைப்படுத்தவும், நாளைய பரம்பரையை நன்றாக வாழ்விக்கவும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

பொதுக்கல்வியின் சிறந்த பகுதியாக விளங்குவது உடற்கல்வி என்பது நாமெல்லாம் நன்கு அறிந்த ஒன்றே.

சிறந்த மனம் வேண்டும் என்பது தான் வாழ்வின் இலட்சியம் என்றால், அதற்கு சிறந்த வலிமையான தேகம் வேண்டும் அல்லவா? அந்த அரும்பணியைத் தான் உடற்கல்வி மேற்கொண்டு தொடர்கிறது.

உடற்கல்வியை செயல்படுத்தும் ஆசிரியர்களை, சிறந்த தத்துவவாதிகள் என்று அழைப்பது சிறப்பென்று நாம் கூறலாம். மற்ற துறையைச் சார்ந்த தத்துவவாதிகளைப் போலவே, உடற்கல்வி ஆசிரியர்களும், தங்களின் உடற்கல்வி பற்றிய விளக்கங்களையும் (Theory) செயல்முறைப் பயிற்சிகள் பற்றியவைகள் குறித்தும் தர்க்கரீதியாக ஆய்வு செய்கின்றார்கள்.

தங்கள் துறையின் முக்கியத்துவம் என்ன? அது போதுமா? அதன் பொருளை மக்கள் அறிவதில் ஆர்வம் காட்டுகின்றார்களா? மறுக்கின்றார்களா? அவர்களது ஆர்வத்தைத் துண்டும் வழிமுறைகள் என்ன? மக்களுக்கு உடற்கல்வி எவ்வாறு உதவுகிறது? உடற் பயிற்சி முறைகளை எப்படி போதிக்கலாம்? எவ்வாறு எதிர்பார்க்கும் இலட்சியங்களை அடையலாம்? எப்படி சமுதாயத்தை மேம்படுத்தலாம்?

இப்படியெல்லாம் சிந்தித்து கொள்கைகளை உருவாக்குதல்; திட்டங்களைத் தீட்டுதல்; திட்டங்களை செயல்படுத்துதல்; செயல் முறைகளில் திருத்தம் செய்தல் முதலியவற்றை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்வது, தத்துவவாதிகளாகத் திகழ்பவர்கள் செய்வதை ஒத்திருக்கிறது. எனவே, உடற்கல்விச் சிந்தனையும் ஒர் உயர்ந்த கலையாக விளங்கி மேம்பாட்டடைகிறது.

உடற் கல்வியாளர்களின் செயல்முறைகள் எல்லாமே அணுகு முறைகளில் உண்மையைக் கடைபிடிக்கின்றன. இலட்சியத்தை அடைகிறபோது தத்துவ முறைகளில் வழியே தவழ்கின்றன. செயல்களில் மாற்றங்களை அடிக்கடி ஏற்படுத்தி சிறப்பு நிலையைப் பெறுகின்றன.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்கிறோம்.

உடற்கல்வி என்பது செயல்முறையை விளக்குவதுடன் நின்று விடாமல், செய்முறைகளில் ஈடுபட்டு பயிற்சி செய்வதை அதிகப்படுத்துகிறது. அதனால், உடற்கல்வி மனிதர்களுக்கு மூன்று கோணங்களாகப் பிரித்துப் பார்த்து,செயல்படத் துண்டுகிறது.

உயிரியல், உளவியல், சமூக இயல் என்று நாம் மூன்றாகக் கொள்ளலாம்.

இம்மூன்று முறைகளிலும், மனிதர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்கி, திறன் நுணுக்கங்களை (Skills) வளர்த்து; அதிக சக்தியை செலவழிக்காமல் அநேக காரியங்களை திறம்படச் செய்யும் ஆற்றலைக் கற்றுக் கொடுப்பதே உடற்கல்வியின் தத்துவப் பண்புகளாக மிளிர்கின்றன.

எந்த செயலைச் செய்தால் என்ன விளைவு ஏற்படும்? எந்த முறையில் தொடர்ந்தால், எதிர்பார்ப்புக்கு மேலாகப் பயன்கள் நிறையும் என்பதாக, காரண காரியங்களை ஆராய்ந்து, கவனமாகவும், கருத்தாகவும் உடற்கல்வி கடமையை ஆற்றுகிறது.

உடற் கல்வியின் தத்துவமானது செயல் முறைக்கு உகந்ததாகவும், எளிதான நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட கருத்துக்களை கிரேக்கத் தத்துவ ஞானிகள் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் தேகத்தை எப்படி பயனுள்ளதாக வளர்க்க வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது.

இனி, உடற்கல்வித் தத்துவங்களில் உள்ள முக்கியமான, நுண்மையான கொள்கைகளை விரிவாகக் காண்போம்.

தத்துவங்களை 5 வகையாகப் பிரித்துக் காணலாம்.

1. கொள்கைத் தத்துவம் (Idealism)
2. உண்மைத் தத்துவம் (Realism)
3. அனுபவத் தத்துவம் (Pragmatism)
4. இயற்கைத் தத்துவம் (Naturalism)
5. சமூகத் தத்துவம் (Existentialism)

1. கொள்கைத் தத்துவம்: (Idealism) உண்மையானது மனம்

உலகத்தில் உள்ள எல்லா பொருட்களையும் விட, மனித மனம் தான் உண்மையானது என்று கொள்கைத் தத்துவவாதிகள் நம்புகிறார்கள்; அப்படி எந்தப்பொருளாவது உண்மையாக இருந்தால், அதுவும் மனித மனத்திலிருந்து எழுகின்ற எண்ணங்கள், கருத்துக்கள் இவற்றினால் உண்டானவையாகவே இருக்கும். ஆக, மனித மனம் என்பது அவனைச் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் மேலாக விளங்குகிறது என்பது இந்தக் கொள்கையாகும்.

இயற்கையும் மனிதனும்

இந்த உலகத்தில், வியாபித்திருக்கின்ற இயற்கையை விட, மனிதனே முக்கியமானவனாக இருக்கிறான். ஏனென்றால், மனமும் ஆத்மாவும் தான் வாழ்கின் எல்லாக் கதவுகளையும் திறக்கும் திறவு கோல்களாக விளங்குகின்றன. அதனால், மனிதன் தனது மனத்தால், உணர்வால், தனது வாழ்வில் இயற்கையை புரிந்து கொண்டு வாழ்ந்து கொள்கிறான். 

மதிப்பும் மனிதனும்

அவன் பெறுகிற மதிப்புகள், சிறப்புகள் எல்லாம் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன. அதே நேரத்தில், அவைகள் நிலையான தன்மை பெற்றும் நீடித்து தொடர்கின்றன.

ஏனென்றால், மனிதனுக்குத் தன் விருப்பம் போல் செயல்படும் ஆற்றல் இயற்கையாகவே உள்ளன. அந்த ‘விருப்பம்’ (Will) எனும் மன உறுதியுள்ள ஆற்றலால், இந்த உலகத்தில் உலவுகின்ற நன்மைக்கும் தீமைக்கும்; அழகுக்கும் அலங்கோலத்திற்கும்; சுதந்திரத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்து கொண்டு அவைகளுக்கும் தனக்கும் உள்ள உறவினையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறான்.

காரணமும் உள்ளுணர்வும்

இப்படியெல்லாம் நடந்து கொள்ளத் துண்டுவது அவனுள்ளே அமிழ்ந்து கிடக்கும் உள்ளுணர்வும், காரணம் கேட்டு அறியத் துடிக்கும் ஆவலும் தான்.

அப்படி செயல்படத்துண்டும் மனித மனம், எல்லா நினைவுகளுக்கும் அடிப்படையாக, படைக்கும்பேராற்றல் மிக்கதாக மனிதனுக்கு உதவி, உலகை நன்கு அறிய உதவுகின்றது.

இந்த மனித மனம், விஞ்ஞானபூர்வமான ஆய்வு முறைகளையும் அறிந்து பயன்படுவதில் நம்பிக்கைக் கொண்டு விளங்குகிறது.

இந்தக் கொள்கைத் தத்துவத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமை பெற்றவர் பிளேட்டோ எனும் கிரேக்கத் தத்துவஞானி ஆவார்.

கொள்கைத் தத்துவத்தின் தந்தையான பிளேட்டோ, மனிதர்களின் மனதின் உட்புறம், மனதின் வெளிப்புறம் என்று பிரித்து, அதன் பெருமையை விளக்கித் கூறினார்.

அவரைத் தொடர்ந்த அரிஸ்டாட்டில் எனும் தத்துவஞானி, விஞ்ஞான பூர்வமாக முறைகளைக் கையாண்டு கொள்ளலாம் என்ற விரிவை ஏற்படுத்தித்தந்தார். அதாவது ஒன்றைக் காண்பதன் மூலமும், ஆய்வு செய்வதன் மூலமும் உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று போதித்தார்.

கொள்கைத் தத்துவமும் கல்வியும்

1. கல்வியானது தனிப்பட்ட மனிதரின் ஆளுமையை வளர்த்து விடுகிறது.

2. மனிதருக்கு அறிவும், மனதின் வளர்ச்சியும் முக்கியமானதாகும் என்னும் கொள்கைத் தத்துவத்தைக் கல்வி வற்புறுத்துகிறது.

3. கல்வி என்பது தொடர்ந்து ஏற்பட்டு விடுகிற முன்னேற்றம். அது ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்து தோன்றி உருவெடுத்து வளர்ந்து கொள்கிறது. அதாவது கொள்கைத் தத்துவம் கூறுகிற மனித உள்ளுணர்வு செயல்களில் செழுமை ஏற்படுத்துவதைக் கல்வி செயல்படுத்துகிறது.

4. கல்வியின் திட்டங்கள் யாவும் கொள்கைகளைச் சுற்றியே கருக்கொண்டு விளங்குகிறது. கொள்கைத் தத்துவத்தின் குறிக்கோளும் மனித ஆளுமையை, முன்னேற்றுகிற முயற்சிகளை மேற்கொண்டு, வாய்ப்புகளை வழங்குவதிலேயே இருக்கிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையாகத்தான் கலை, இலக்கியம், வரலாறு போன்றவைகள் விளங்குகின்றன. 5. மாணவர்கள் என்பவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். அவர்கள் ஆசிரியர்களால் வழிநடத்தப் படுகின்றார்கள்.

இவ்வாறு கல்வியானது கொள்கைத் தத்துவத்துடன் கூடிக் கலந்து பணியாற்றுகிறது என்பதைப் புரிந்து கொண்டோம். அது போலவே, கல்வியின் பகுதியான உடற்கல்வியும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்று பார்ப்போம்.

கொள்கைத் தத்துவமும் உடற்கல்வியும்

1. உடற்கல்வி உடலை இயக்குவதற்கும் மேலாக ஆட்படுத்துகிறது.

கொள்கைத் தத்துவமானது, உடலையும் அதே சமயத்தில் மனதையும் வளர்க்க வேண்டும் என்றே வற்புறுத்திக் கூறுகிறது. அதே பணியைத் தான் உடற்கல்வியும் அயராமல் செய்கிறது. அத்துடன், அந்தத் தத்துவம் கூறுவது போல, உடற்கல்வியின் செயல்கள் யாவும், மாணவர்கள் தங்களுக்காகவே சிந்திக்க வேண்டும் என்பதையும் செயல்படுத்திக் காட்டுகிறது.

2. உடல் வலிமையும், உடல் திற செயல்களும், தனிப்பட்ட ஒரு மனிதரின் ஆளுமையை வளர்த்து விடுகின்றன.

கொள்கைத் தத்துவவாதிகள் கடுமையான உடற் பயிற்சிகளை அனுமதிக்கின்றனர். வரவேற்கின்றனர். அதன்மூலம் ஆளுமையை வளர்க்க விரும்புகின்றனர். அதையே தான் உடற்கல்வி செய்து முடிக்கிறது.

3. உடற்கல்வியும் கொள்கைகளைச் (Ideals) சுற்றியே திட்டமிட்டுப் பாடங்களைப் பயிற்றுவிக்கிறது. 4. ஆசிரியரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வழிகாட்டுபவராக விளங்குகிறார். அதாவது, மாணவர்களுடன் ஆசிரியர் மிகவும் நெருக்கமாக இருந்து, இணைந்து உதவுகிறார்.

5. ஆசிரியர் தான் கல்வித் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றும் பொறுப்புள்ளவராக இருக்கிறார்.

6. வாழ்க்கைக்கு கல்வியே உகந்ததாகிறது. இப்படி எல்லாவிதமான காரியங்களுக்கும், கொள்கைத் தத்துவத்திற்கும் உடற்கல்வி உதவி, வழிகாட்டி, வாழ்விக்கிறது.

2. உண்மைத் தத்துவம் : (Realism)

உண்மைத் தத்துவம்தான் முதலில் தோன்றியதாகும். ஆனால் அடுத்து வந்த கொள்கைத் தத்துவம் ஆக்கிரமித்துக்கொண்டு, உண்மைத்தத்துவத்தைப் பின்னோக்கித் தள்ளிவிட்டது.

விஞ்ஞான விதிமுறைகளின் ஆரம்பமும், உண்மைத் தத்துவத்தின் நடைமுறையும் ஒன்றுபோல் தொடங்கின அதன் தன்மையை, இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இனி, உண்மைத் தத்துவத்தின் கொள்கைகளைக் காண்போம்.

1. நாம் வாழும் உலகம் தான் உண்மையான உலகமாகும்.

இந்தத் தத்துவாதிகள், உலகத்தையும், இயற்கையையும், அப்படியே, இருப்பது போலவே ஏற்றுக்கொள்கின்றார்கள், மனிதன் செய்கிற செயற்கைப் பொருட்களைக்கொண்டு இவர்கள் திருப்தியடைவதில்லை. ‘இந்த உலகில் மனிதன் பிறந்தது. நில உலகத்தை ஜம்புலன் களாலும், அனுபவங்களாலும் நன்கு புரிந்து வாழ வேண்டும் என்றே விரும்புகின்றார்கள்.

2. இந்த நில உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லது, காரியங்கள் யாவும், இயற்கையில் அமைந்துள்ள விதிகள் (Laws)படியே நடைபெறுகின்றன.

இந்த இயற்கை விதிகள் தாம், மனிதர்களின் நில உலகத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கு நடக்கும் நல்லதும் கெட்டதும், காரண காரியங்கள் எல்லாவற்றிற்கும், இயற்கை தரும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளே காரணமாக அமைகின்றன. இதனை மனிதர்கள் தாங்கள் காணும் காட்சிகள் மூலமே புரிந்து கொண்டு விடுகின்றனர்.

3. உண்மைகள் யாவும் விஞ்ஞான விதி முறைப்படியே தீர்மானிக்கப்படுகின்றன.

அதாவது விஞ்ஞானமும் தத்துவமும் தான் சிறந்த உண்மைகளைக் கண்டுபிடிக்க உதவுகின்றன என்று உண்மைவாதிகள் நம்புகின்றனர்.

4. மனதும் உடலும் ஒற்றுமையுடன் செயல்படக் கூடிய வகையில் நல்ல உறவுடன் திகழ்கின்றன.

மனிதர்களின் நடத்தைகள் இயற்கை விதிகளின் படியே அமைகின்றன என்று ஒரு சிலரும் மனிதர்களின் நடத்தை அவர்கள் கற்கும் முறைகளிலிருந்து தான் உருவாகின்றன என்று வேறு சிலரும் கருதுகின்றார்கள்.

என்றாலும், மனதும் உடலும் பிரிக்க முடியாத உறவுடன் ஒன்றை ஒன்று மீறிவிடாமல், ஒரு முகமாக சிறப்பாகச் செயல்படுகின்றன என்பது தான் பொதுக் கொள்கையாக இருக்கிறது. 5. மதமும் தத்துவமும் ஒன்றை ஒன்று தழுவியே உலகில் இடம் பெற்றிருக்கின்றன.

அதாவது ஒரு உண்மைவாதி, தனது மத நம்பிக்கையுடன் தத்துவ அறிவின் வழி பெறுகிற அனுபவத்தையும் இணைத்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

உண்மைத் தத்துவமும் கல்வியும்

1. கல்வியானது மனிதரின் ஆராயும் அறிவுத் திறனை வளர்த்து விடுகிறது.
2. கல்வி வாழ்வை வளப்படுத்துவதற்காகவே பணியாற்றுகிறது.
3. கல்வியானது சிறந்த குறிக்கோள்களுடன் விளங்குகிறது.
4. கல்விமுறைகள் எல்லாம், ஒரு ஒழுங்கான பண்பாட்டு முறைகளைப் பின்பற்றிப் பணியாற்றுகின்றன.
5. கல்வியின் பாடத்திட்டங்கள் யாவும் விஞ்ஞான முறைகளின் அடிப்படையிலே தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
6. கல்வியானது கற்றுத்தருவதுடன் நிறுத்தி விடாமல், கற்ற அளவினை அளந்தறியும் கருவிகளையும் தன்னகத்தே கொண்டு துலங்குகிறது.

உண்மைத்தத்துவத்தின் கொள்கைகளுடன், கல்விக் கொள்கைகள் இணைந்திருப்பதையும் நாம் காணலாம். அதுபோலவே, உண்மைத் தத்துவத்துடன், உடற்கல்வி நடைமுறைகள் ஒத்துப்போவதையும் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.

உண்மைத் தத்துவமும் உடற்கல்வியும்

1. உடற்கல்வி வாழ்க்கைக்காகவே இருக்கிறது.

உடற்கல்வி, மாணவர்களை உலகை அறிந்து கொள்ளும் வகையில், அனுசரித்து நடந்து கொள்ளும் முறையில் தயார் செய்கிறது. வாழ்க்கைக் கல்வியாக உடற்கல்வி இருக்கிறது.

2. மாணவர்களின் உடல் திறனை அதிகப்படுத்திட, உடல்கல்வி நிறைய பணியாற்றி உதவி வருகிறது.

உடல் தகுதியுள்ள ஒருவர் தான், சமுதாயத்தில் சிறந்தவராக விளங்கி, சேவை செய்ய முடியும் என்ற உண்மைத்தத்துவம், உடற்கல்வியுடன் இணைந்திருப்பதை நீங்கள் அறியலாம்.

3. உடற்கல்வி செயல் திட்டங்கள் யாவும் விஞ்ஞானக் கருத்துக்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன.

உண்மைத் தத்துவம் போலவே, உடற்கல்விப் பாடத் திட்டங்கள் யாவும், விஞ்ஞானக் கருத்துக்களின் தொகுப்பாக, அடிப்படை இயக்கமாக அமையப்பெற்றிருக்கின்றன.

4. உடற்பயிற்சிகள் எல்லாம், கற்கும் திறனில் முக்கிய பங்கை வகித்து, முன்னேற்றம் அளிக்கின்றன.

உடற் பயிற்சிகள் அடிப்படைத் திறன் நுணுக்கங்களை வளர்த்து, பயிற்சியாளர்களின் திறமைகளைப் பெருக்கி, சிறந்த எதிர்பார்ப்புகளை வளர்த்து செழுமைப் படுத்துகிறது.

5. பள்ளிக்களுக்கிடையே நடைபெறுகின்ற விளையாட்டு நிகழ்ச்சிகள், போட்டிகள் யாவும், மக்களின் சமூக ஒற்றுமை நடத்தைகளில் சிறப்பான வளர்ச்சியை அளிக்கின்றன.
6. விளையாட்டும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வாழ்க்கையை அனுசரித்துப் போகும் ஆற்றலை அளிக்கின்றன.

மாணவர்கள் உடற்கல்வி தரும் செயல்களில் ஈடுபட்டு இந்த, உண்மையான நில உலகினுடன் தொடர்பு கொண்டு, இந்த உலகின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிடுகிறார்கள் என்பதைத் தான் உடற் கல்வியின் மூலம் உண்மைத் தத்துவம் நிலைநாட்டிக் கொண்டு வருகிறது.

3. அனுபவத் தத்துவம் (Pragmatism)

அனுபவத் தத்துவம் என்பதன் கொள்கையாவது, அனுபவம் தான் வாழ்க்கையின் திறவுகோலாக இருக்கிறது என்பதாகும். இந்தத் தத்துவமானது அறிவையே அடிப்படையாகக் கொண்டு வழி காட்டுகிறது. அதனால் தான் இதை அனுபவத்தத்துவம்(Experimentalism) என்று ஆரம்ப காலத்தில் கூறினார்கள்.

1880ம் ஆண்டு வரை Pragmatism என்ற பெயர் இதற்கு வரவில்லை. இது ஒரு அமெரிக்கத் தத்துவமாகும். இதன் தத்துவக் கொள்கையை இனி காணலாம்.

1. மனிதனுடைய அனுபவங்கள் உண்மை போன்றவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமையைப் பெற்றிருக்கின்றன. அனுபவத் தத்துவத்தை ஆதரிப்பவர்கள், மாற்றங்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

அனுபவம் ஒன்றே உண்மையை அறிய உதவுகிறது. அனுபவம் இல்லாதது எதையும் அறிந்து கொள்ளவோ, நிரூபிக்கவோ முடியாமற் செய்துவிடுகிறது என்பது இந்தக் கொள்கையின் கருத்தாகும்.

2. வெற்றிபெறவேண்டும் என்பது மட்டுமே முக்கியம். இந்தத் தத்துவத்தின் உண்மையான நோக்கமே இதுதான். அறிவும் அனுபவமும் உண்மையைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. அந்த உண்மையும் நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். ஏனென்றால், இன்றைய உண்மை; நாளைய பொய்யாக போய்விடுவதும் உண்டு.

ஆகவே, இந்தத் தத்துவவாதிகள், நடைமுறைக்கு உகந்த கோட்பாடுகள் உண்மையான தத்துவம் என்றும்; நடைமுறைக்கு ஏற்றதல்லாத கோட்பாடுகள் பொய் என்றும் நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும் கருதுகின்றார்கள். நம்பவும் செய்கின்றார்கள்.

3. வளர்ச்சியுற்ற பெரியதொரு சமுதாயத்தின் அங்கமாக மனிதன் இருக்கிறான். அவனது செயல்கள் யாவும் சமுதாயத்தையே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தத்துவமானது. மனிதனும் சமுதாயமும் சேர்ந்து சுமுகமாக வாழ முடியும் என்றும்; தனிப்பட்டவர்களை மதிக்கும் சமுதாயமும், சமுதாயத்தை மதிக்கும் தனிப்பட்ட மனிதனும் சேர்ந்த சுதந்திரக் கொள்கைகளை உடையவர்களாக வாழமுடியும் என்றும் கருதுகின்றார்கள்.

4. இந்தத் தத்துவத்தின் ஆரம்ப கர்த்தா என்று குறிப்பிடப்படுபவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த “ஹிரா கிரிட்ஸ்” என்பவர், இந்தக் கொள்கையை ஆதரித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் குயின்டிலியன், பிரான்ஸிஸ் பேகன், சார்லஸ் பியானு என்பவர்கள் ஆவார்கள். 

அனுபவத் தத்துவமும் கல்வியும்

கல்விக் கொள்கைகள் பல அனுபவத் தத்துவத்தின் கொள்கையாக இருப்பதை நீங்கள் இங்கே அறியலாம்.

1. தனிப்பட்ட மனிதர் எல்லோருமே, அனுபவம் மூலமாகவே கற்றுக் கொள்கின்றார்கள்.
2. கல்வி என்பது சமுதாய வளர்ச்சிக்கான நோக்கத்தையே பெரிதும் கொண்டிருக்கிறது.
3. கல்வியானது குழந்தைகளின் முழு வளர்ச்சி குறித்தே தனது பணியை திறம்பட ஆற்றிக் கொண்டிருக்கிறது.
4. மாறி வரும் உலகத்தில், பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

குறிப்பு : வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற அறிவும் அனுபவமுமே முக்கியமாகவேண்டும் என்கிற கருத்துள்ள அனுபவத் தத்துவத்திற்கு, கல்வி ஆற்றி வருகிற பணிகளை அறிந்து கொண்டோம். இனி உடற்கல்வியின் உதவியையும் காண்போம்.

அனுபவத் தத்துவமும் உடற்கல்வியும்

1. பல திறப்பட்ட விளையாட்டுச் செயல்களில் மாணவர்கள் பங்கு பெறும்போது, மிகவும் அர்த்தமுள்ள, அறிவார்ந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன.

விளையாட்டுப் போட்டிகள், வெளிப்புற முகாம் வாழ்க்கை, நீரில் உலவும் படகுப் பயணங்கள், நடனம், எல்லாம் நிறைந்த அனுபவங்களைத் தருகின்றன.

2. இயற்கையாகவே உடற்கல்வியில் போதிக்கப்படும் செயல்கள் யாவும், சமூக நலன்களை மிகுதிப்படுத்தும் அளவிலே தான் அமைந்திருக்கின்றன. குழு விளையாட்டுக்கள், குழு பொழுது போக்கு செயல்கள் எல்லாம் இதன் பெருமையை விளக்கும்.
3. கற்றுக் கொள்பவர்களின் ஆர்வத்திற்கேற்பவே, தேவைகளுக்கு ஏற்பவே, உடற்கல்விப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
4. ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கவும், தீர்த்துவிடவும் கற்றுக் கொண்டே, கற்கும் பணியானது உடற்கல்வியில் தொடருகிறது.
5. உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் ஊட்டுபவர்களாக இருக்கின்றார்கள்.
6. எப்பொழுதும் நிலையாக இருக்கின்ற பாடத்திட்டங்களை உருவாக்காமல், நிலைமைக் கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் திட்டங்களுடன், உடற்கல்வி மாணவர்களுக்குக் கற்பிக்கிறது.

இக்கருத்துக்கள் மூலமாக உடற்கல்வியின் மேன்மை நன்கு புரிகிறதல்லவா!

4. இயற்கைத் தத்துவம் (Naturalism)

மேற்கத்திய உலக நாடுகளில், மிகவும் பழமையான ஒன்றாக, இயற்கைத் தத்துவம் இருந்திருக்கிறது. முன்னர் விளக்கிய மூன்று தத்துவங்களைப் போலவே, இதுவும் முக்கியமான தத்துவமாகும்.

உலகில் உள்ள இயற்கையாக உருவான பொருட்கள். வடிவமைப்பு வாய்ந்தவைகள் மட்டுமே மதிப்புமிக்கவை என்பது தான் இந்த இயற்கைத் தத்துவத்தின் கொள்கையாகும்.

இனி அதன் முக்கியக் குறிப்புக்களைக் காணுவோம். 

1. எந்த உண்ைமப்பொருள் இவ்வுலகில் இருப்பதாக இருந்தாலும், அது இயற்கையின் இயைந்த பொருளாகவே இருக்கும்.

இந்த நில உலகில் நாம் பார்ப்பது, கேட்பது, அறிவது எல்லாம் இயற்கை மூலமாகவே நடக்கின்றன என்பது இந்தத் தத்துவத்தின் முக்கிய குறிக்கோளாக விளங்குகிறது.

2. எல்லா மதிப்பான நிலைமைகளுக்கும், இயற்கையே முக்கிய மூலமாக விளங்குகிறது.
3. சமுதாயத்தை விட, தனிப்பட்ட மனிதனே முக்கியமானவன்.

ஏனென்றால், சமுதாயமானது தனிப்பட்ட மனிதனும்,இயற்கையும் கொடுக்கின்ற பயன்களைக் கொண்டே பெருமை பெறுகிறது என்பதையே தலையாய நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

மனிதன் பெறுகிற எல்லா அறிவும், பயன்களும் இயற்கை மூலமாகவே கிடைக்கிறது. என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தத்துவத்தைப் படைத்தவர்கள் என்ற பெருமையைப் பெறுபவர்கள் கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானிகள் டெமாகிரிட்டிஸ், லியூசிப்பஸ், எபிகுரஸ், கமினியல் என்பவர்கள் ஆவார்கள்.

இவர்களைப் பின்பற்றி, இயற்கைத் தத்துவத்தை வளர்த்தவர்கள் ரூசோ, பாசிடோவ் பெஸ்டாலோசி, ஹெர்பர்ட், ஸ்பென்சர் போன்றவர்கள்.

இயற்கைத் தத்துவமும் கல்வியும்

1. தனிப்பட்ட மனிதனின் இயற்கையாக எழுகிற தேவைகள் அனைத்தையும் தீர்த்து, திருப்தி படுத்தும் வகையில், கல்விப் பணியை முடுக்கிவிட வேண்டும்.
3. கல்வி என்பது இயற்கையாக மூளையை மட்டும் வளர்த்துவிடுவதற்காக இல்லை.
4. மாணவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்கின்றார்கள்.
5. ஆசிரியர்களும் இயற்கையில் விதிகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
6. கல்விப்பணி வளர்ச்சிக்கு ஆசிரியர் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்.

இயற்கைத் தத்துவத்தின் கொள்கை வழி கல்வி செல்வதனை மேற்காணும் கருத்துக்கள் நமக்குத் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டுகின்றன.

இனி உடற்கல்வியின் பணி, இயற்கைத் தத்துவத்துடன் எப்படி இணைந்து போகின்றன என்பதனையும் தெரிந்து கொள்வோம்.

இயற்கைத் தத்துவமும் உடற்கல்வியும்:

உடற் கல்வியின் பணிமுறைகளைத் தந்திருக்கிறோம்.

1. உடற்கல்விச் செயல்கள் யாவும் இயற்கையில் உள்ள உடலார்ந்த நிலைக்கும் மேலாக வளர்ச்சி தருகிறது.
2. சுயஇயக்கச் செயல்மூலமாக, உடற்கல்வியானது, கற்றுத் தருவதில் கெட்டிக்காரத்தனமாக கவனம் செலுத்துகிறது.
3. கல்விப்பணி தொடர்பில், விளையாட்டு என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது.
4. தனிப்பட்டவர்களுக்கிடையே நடை பெறுகின்ற பெரும் போட்டிகளுக்கான சந்தர்ப் பங்களை, உடற்கல்வியானது உற்சாகப்படுத்துவ தில்லை.
5. முழு மனிதனை (whole man) உருவாக்கும் முயற்சியில் உடற்கல்வி கவனம் செலுத்துகிறது.

இயற்கைத் தத்துவத்தின் குறிக்கோள்களும் கொள்கைகளும் உடற்கல்வியில் உள்ளதை நாம் காணலாம்.

5. சமூகத் தத்துவம் (Existentialism)

சமூகத் தத்துவம் என்பது, தனிமனித உரிமையைப் பற்றியதாகும். சமூகத்தின் பிடியில் மனிதன் சிக்கிக் கொண்டு, அவனது தனித்தன்மையை இழந்து போகின்றான். அப்படி ஆகிவிடக்கூடாது என்று முனையும் கொள்கையுடையதுதான் சமூகத் தத்துவமாகும். அதன் கொள்கைகளை இனி காண்போம்.

1. மனிதன் இயங்கிக் கொண்டிருக்கும் தன்மையில், அதுவே உண்மையான இயக்கமாகக் கொள்ள வேண்டும்.
2. தனிப்பட்ட மனிதன் ஒவ்வொருவருக்கும், அவரவருக்கென்று வாழும் முறைகளில் தனித்தன்மை உண்டு.
3. சமூகத்தைவிட, தனிப்பட்ட மனிதனே முக்கியமானவனாகக் கருதப்பட வேண்டும்.

இந்தத் தத்துவத்தின் தந்தையானவர் சோரன் கியர்கிகார்டு எனும் தத்துவ ஞானியாவார்.

சமூகத்தத்துவமும் கல்வியும்

1. கல்விப் பணியில், தனிப்பட்ட மனிதர் ஒருவர் தனது தனித்தன்மையைக் கண்டு தெளிந்து கொள்கிறார்.
2. கல்வி என்பதே தனிப்பட்டவர்களின் வளர்ச்சிக்கென்று உதவும் பணியாகும்.
3. கல்வியின் பாடத்திட்டங்கள் யாவும், தனிப்பட்ட மனிதரின், முழு வளர்ச்சியைச் சுற்றியே அமைந்திருக்கின்றன.
4. மாணவர்கள் கற்பதில் உற்சாகம் ஊட்டுபவராக ஆசிரியர் இருக்கிறார்.
5. தனிப்பட்ட மனிதர்களுக்கு அவர்களது பொறுப்புக்களை உணர்த்தவும், கற்பித்துத் தரவும் கூடிய கடமையாகவே கல்வி பணியாற்றுகிறது.

கல்வியின் சமூகத் தத்துவம் போலவே, உடற்கல்வியின் தத்துவமும் இருக்கிறது.

சமூகத் தத்துவமும் உடற்கல்வியும்

1. தனிப்பட்ட மனிதர்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பங்கு பெறவும், பயன் பெறவும் உடற்கல்வியில் நிறைய வாய்ப்பிருக்கிறது.
2. உடற்கல்வியில் பல்வேறு பட்ட பாங்கான செயல்முறைகள் இருப்பதால், தேர்ந்தெடுக்கவும் மகிழ்ச்சியுடன் செயல்படவும் அதிக சந்தர்ப்பம் இருக்கிறது.
3. புதிய படைப்புச் சக்திகள், ஆக்க பூர்வமான சிந்தனைகளெல்லாம் விளையாட்டுக்களில் பங்கு பெறும் போது நிறையவே உண்டாகின்றன.
4. மாணவர்கள் தங்களைத் தாங்களே யாரென்று, எப்படியென்று, எவ்வாரென்று அறிந்து கொள்ளும் சூழ்நிலைகள் நிறைய இருக்கின்றன.
5. எல்லா நிகழ்ச்சிகளுக்கும், நடை முறைகளுக்கும ஆசிரியரே வழிகாட்டியாக, ஆலோசகராக விளங்குகிறார்.

இப்படியாக உடற்கல்வி எல்லா தத்துவங்களின் கொள்கைகளையும் சிறப்பாக அரங்கேற்றும் சிங்காரமான மேடையாகத் திகழ்வதை இதுவரை நாம் அறிந்து மகிழ்ந்தோம்.

அதனால்தான், உடற்கல்வி உலகத்தின் மேன்மைமிகு கல்வியாக இருப்பதுடன், முன்னேற்றமான வாழ்க்கைக் கல்வியாகவும் பெருமை பெற்று விளங்குகிறது.

இதுவரை நாம் அறிந்து கொண்ட தத்துவங்கள் எல்லாம், மேனாட்டிலிருந்து கிளம்பியவைகள் ஆகும். அவைகள் நம் நாட்டு வாழ்க்கை முறைக்கு ஏற்றதா என்பதையும் நாம் சற்று சிந்தித்துப் பார்த்திடவேண்டும். இந்தியநாட்டின் மரபுகள்,நம்பிக்கைகள்,கொள்கை கள், கோட்பாடுகள், தத்துவங்கள், வாழ்க்கையின் அணுகுமுறைகள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை ஆகும்.

‘எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை’ என்பது இந்தியப் பண்பாட்டின் எழுச்சிமிக்க வாசகமாகும்.

உயர்ந்த சிந்தனைகள் என்பது தெளிந்த சிந்தனைகளாக, நமது முன்னோர்களால் நிலை நாட்டப்பட்டவையாகும். பிற நாட்டுத் தத்துவங்களை நாம் ஏற்றுக் கொள்வது நல்லது என்றாலும், அவை எப்படி நம் தத்துவங்களுடன் ஒத்துப் போகிறது என்பதை உணர்ந்த பிறகு, மேற்கொள்வது புத்திசாலித்தனமாகும். ஏற்பனவற்றை ஏற்று, நீக்குவனவற்றை நீக்கி, பிற நாட்டுத் தத்துவங்களை முறையுடன் அணுகினால், நமது கல்வி முறையில் கலைகள் கொழிக்கும். உடற்கல்வி முறையில் உன்னதங்கள் செழிக்கும். நமது பாரம்பரியப் பெருமையும் பல்லாற்றானும் பெருகும்.

நமது உடற்கல்வியாளர்கள் நினைத்துப் பார்த்து, இவ்வாறு நடைமுறைப்படுத்தி மேன்மையளிப்பார்கள் என்று நாம் நம்ப இடமிருக்கிறது.தாய்நாட்டுப்பற்றுதான் அதற்குரிய தலையாய காரணமாக இருக்கிறது.


~