உமார் கயாம்/19. அவமதிக்க வந்தவன் சவமாகிப் போனான்!

19. அவமதிக்க வந்தவன் சவமாகிப் போனான்!

அலையடித்து நுரையடித்துப் பொங்கிச் சீறிக்கொண்டிருந்தது அந்த ஏபிரேட்ஸ் ஆறு. அந்த ஆற்றைக் கடப்பதற்காக அதன் கரையிலேயிருந்த பாழடைந்த பாபிலோன் நகரத்தின் ஒரு பகுதியிலே சுல்தானின் படைகள் காத்துக் கொண்டிருந்தன. சுல்தானைத் தொடர்ந்து உமாரும் பிரபுக்களும் பேரீச்சம் பழக்காடுகளைக் கடந்து அந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கட்டிடங்கள் இடிந்து குவிந்து கிடந்த கற்களும், மணற் குன்றுகளும் காட்சியளித்தன. அழிந்துபோன அந்தக் குட்டிச் சுவர்களின் ஊடே சுற்றிக் கொண்டிருந்தான் உமார். வேட்டையாடாத நேரத்திலே, நடனங்களும் கண்கட்டு வித்தைகளும் காண்பதிலே சுல்தானுக்கு விருப்பம் அதிகம்.

பாழடைந்து போன ஒரு ராஜசபா மண்டபத்திலே சுற்றிலும் வண்ணத் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டன. பளிங்குப் படிகக் கற்களின் மேலே விரிப்புகள் விரிக்கப் பட்டன. அரசனுக்கும் அந்தக் கேளிக்கைக்காரர்களுக்கும், அரங்கம் அமைக்கப்பட்டது. இதிலே தினமும் நடனங்களும், வித்தைகளும் நடைபெற்றன. ஒரு நாள் மாலை உமாரும் அங்கு அழைக்கப்பட்டான். “நட்சத்திரங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் வானசாஸ்திரியாரே, என்னுடைய இந்த நாய்களின் ஆட்டத்தையும் கொஞ்சம் பாரும்” என்று சுல்தான் அவனை அமர்ந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

இரத்தினக் கம்பளத்திலே, உமாருக்காக ஓரிடம் ஒதுக்கிக் கொடுக்கப் பெற்றது. அவன் எதிரே, நடனக்காரர்கள் சுழன்று சுழன்று வந்தார்கள், வேடிக்கைக் காரர்களின் தலைவன் தானே ஓர் இசை கருவி போலக் காட்சியளித்தான். அவனுடைய இடுப்பிலே பிணைத்துக் கட்டப் பட்டிருந்த ஒரு முரசத்தில் அவனுடைய விரல்கள் ஒலியெழுப்பின. அதே சமயத்தில் அவனுடைய தோள்களில் கட்டப்பட்டிருந்த சிறு மணிகள் குலுங்கி இசைத்தன. அவன் சுழன்று ஆடும்போது அவனுடைய தலைமுடியவிழ்ந்து சுழன்றது.

ஆடிக் கொண்டிருந்த அந்தக் கேளிக்கைக் காரர்களின் தலைவன் சட்டென்று நின்று, உமாரின் எதிரிலே மண்டியிட்டுத் தன் கையை நீட்டி வெகுமதி கேட்டான். அவிழ்ந்து முன் தொங்கிய முடிக்கற்றையின் ஊடாக அவனுடைய விழிகள் உமாரைக் கூர்ந்து நோக்கின. உமாரும் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, தன் விரல் நுனியில் வைத்துக் கொண்டே, ஒரு நாணயத்தை வெகு திறமையாகச் சுண்டிச் சுண்டிச் சுழற்றி விட்டான்.

“கண்கட்டு வித்தையில் தேர்ந்த கலைஞரே! இது என்ன பிரமாதம்! வானத்துப் பனிக்கட்டிகளை (ஆலங்கட்டிகளை) கீழே வரவழைப்பேன். மணற்புயலையும் எழுப்பி வீசச் செய்வேன்! இன்னும் உங்கள் எண்ணத்தில் இருப்பதையும் எடுத்துரைப்பேன்!”

அவன் தன்னை ஆபத்தில் மாட்டிவிட முயலுகிறான் என்பதை யறியாத உமார் “அப்படியானால், நீ பெரிய வித்தைக்காரன்தான்!” என்றான்.

“வானநூற்கலைஞரே நான் ஒரு மோசமான அயோக்கியன் என்று தாங்கள் எண்ணுகிறீர்கள். இருப்பினும் எனக்குப் பயப்படுகிறீர்கள்!” என்றான். அவனுடைய கூரிய பார்வை உமாரின் மேலேயே பதிந்திருந்தது. சுல்தானுக்கு இது ஒரு வேடிக்கையாக இருந்தது. ஆவலுடன் அவனைக் கவனித்தார். “வானநூற்கலைஞரே! என் மனத்தில் இருப்பதைத் தாங்கள் கூறுங்கள்! தங்களால் முடியவில்லை என்றால் பரவாயில்லை. முடியாது என்று சொல்லி விட்டால் போதும்!” என்றான். அவனுடைய பரந்த தலையை யாட்டிக் கொண்டே, “எங்கே, நான் எந்த வாசல் வழியாகப் போகப் போகிறேன். சொல்லுங்கள் பார்க்கலாம்! கிழக்கா, வடக்கா, மேற்கா அல்லது தெற்கா? எது வழியே நான் வெளியேறப் போகிறேன். தீர்க்கதரிசியாரே! சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றான் அவன். அது உமாருக்கு ஒரு சவால் போலவே இருந்தது!

உமாருக்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது. ஒருவன் வெளியே செல்வதையும் விண்மீனையும் சம்மந்தப்படுத்துகின்ற பேதைமையை எண்ண எண்ணச் சிரிப்புதான் வந்தது. ஆனால் அவன் சிரிக்கவில்லை. காரணம் மாலிக்ஷா அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரோ, இந்த மாதிரி விஷயங்களிலே நம்பிக்கையுள்ளவர். கத்திச் சண்டைக்குத் தயாராக இருக்கும் வீரர்களைப் பார்க்கும் அதே ஆர்வத்தோடு, அவர் உமாரையும், நாடகத் தலைவனையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

“இது மிகச் சாதாரண விஷயம்..” என்று இழுத்தான் உமார். “மக்கள் பேசிக் கொள்கிறார்கள். தாங்கள் பெருந் திறமை வாய்ந்தவர் என்று. அப்படிப்பட்டவர் ஏன் பின் வாங்குகிறீர்கள். இப்பொழுது நான் எந்த வாசல், வழியாகப் போவேன் என்று சொல்லுங்கள், பார்ப்போம்!” என்றான் அவன்.

மற்ற ஆட்டக் காரர்களும் அவனைச் சுற்றிலும் வந்து நின்று கொண்டார்கள். சுல்தானுடைய ஆட்கள், நெருங்கி வந்து நின்று கொண்டார்கள், நன்றாகக் கேட்பதற்காக. மாலிக்ஷா உமாரின் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். நட்சத்திரங்களை ஆராய்வதற்கும் இந்த மாதிரி சம்பந்தமும் இல்லை என்று சொல்ல எண்ணினான் உமார். ஆனால், வாய் திறக்க வரவில்லை. உதடுகள் அசையவில்லை.

சுல்தானோ, அந்த மனிதன் எண்ணுவதைத் தன்னால் சொல்ல முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கிறார். எந்தக் காரணம் காட்டி எவ்வளவு விளக்கினாலும், மாலிக்ஷாவின் மூட நம்பிக்கையைப் போக்குவது முடியாத காரியம் என்பதை உணர்ந்து கொண்டான் உமார். இந்த ஆட்டக்காரன் தன்னைக் கவிழ்த்து விட வேலை செய்கிறானென்பதை, நெடுநேரத்திற்குப் பிறகு அவன் புரிந்து கொண்டான். இந்தச் சூழ்ச்சியைத் தகர்க்கத் தன்னுடைய புத்திசாலித் தனத்தைப் பயன்படுத்தியே வெற்றி காண முடியும் என்று முடிவு கட்டினான்.

“பேனாவும் தாளும் கொண்டு வாருங்கள்” என்று உமார் கட்டளையிட்டான்.

அரசரின் செயலாளர் ஒருவர், அவன் முன் வந்து மண்டியிட்டு ஒரு சிறு காகிதச் சுருளும், சிறகு பேனாவும் கொடுத்துவிட்டு போனார். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால்தான் பாராட முடியும் என்ற எண்ணத்துடன் அவற்றை வாங்கிக் கொண்டான் உமார். அரசரின் வானசாஸ்திரியின் கடமை இதுதான் போலும் என்று எண்ணிக்கொண்டே, யோசித்தான். தான்சொல்லுவது தவறாகிவிட்டால் மாலிக்ஷா மதிக்கவும் மாட்டார், இந்த நிகழ்ச்சியை மறக்கவும் மாட்டார். சொல்லுவது மட்டும் சரியாக இருந்துவிட்டால்...? நான்கு கதவுகள், கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு... ஏதோ முடிவுக்கு வந்து, தாளில் என்னவோ சில சொற்களை எழுதி முடித்தான் உமார். தாளை மடித்தான், எழுந்தான், மாலிக்ஷாவின் அனுமதியுடன் முன் நடந்து, படிக்கட்டுகளின் பக்கத்திலேயிருந்த பளிங்குக் கல்லின் மேலேயிருந்த படிவத்தின் கீழே அதைச் செருகி வைத்துவிட்டு மீண்டும் தானிருந்த இடத்தில் வந்து உட்கார்ந்தான்.

ஆட்டக்காரனைப் பார்த்து, “இனிமேல் நீ போகலாம்!” என்றான்.

ஆட்டக்காரனின் கண்கள் ஒளி வீசின. தன் சூழ்ச்சி பலிக்கப் போகிறதென்ற எண்ணத்திலே அவன் உள்ளம் பூரித்தது. முன்னுக்குச் சில அடிகள் நடந்து வந்தவன், கீழ்த்திசை வாசலை நோக்கி ஓடினான். அவன் தோள் மணிகள் குலுங்கியொலித்தன. பிறகு, வெற்றிக் குரல் எழுப்பிக் கொண்டே, பக்கத்திலேயிருந்த சுவரை நோக்கிப் பாய்ந்தான். பூவேலையுடன் தொங்கிய திரைச் சீலையைத் தூக்கிச் சுற்றியபடி, சுவரின் நடுவில் இருந்த சிறு கதவைத் திறந்து கொண்டே “இந்த வழியாக நான் வெளியே பாகிறேன்!” என்று சொல்லி விட்டுப் போனான். அவன் சென்றதும், தூக்கிய திரைச்சீலை கீழே விழுந்தது. பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாலிக்ஷா, அந்தத் தாளை எடுத்து வரும்படி தன்னுடைய செயலாளரைப் பணித்தார்.

அவர் கொண்டு வந்து கொடுத்ததும், பிரித்துப் படித்தார். அவருடைய கண்கள் வியப்பால் விரிந்தன. எழுதியிருந்ததை இரைந்து படித்தார்.

“ஐந்தாவது கதவு வழியாக!”

“யா அல்லா தேவதைகளின் பேராசானே! உண்மையில் நீ ஒருவனின் எண்ணங்களைத் தெரிந்து கொள்கிறாய்!” என்று பாராட்டினார்.

உமார் ஒன்றும் சோதிடக் கணக்குப் பார்க்கவில்லை. அந்தப் பயலின் சூழ்ச்சியைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்த்தான். நான்கு திசைக் கதவுகளில் ஏதாவது ஒன்றின் வழியாக அவன் போவதாக இருந்து, தானும் ஒரு திசையைக் குறிப்பிட்டால், தன் அதிர்ஷ்டவசமாகத் தான் குறிப்பிடும் திசையும் அவன் வெளியேறும் திசையும் ஒன்றாகவே இருந்து விடவும் கூடும். ஆனால், தன்னை நிச்சயமாக மோசம் செய்ய நினைத்த அந்தப் பயல், அதிர்ஷ்டம் விளையாடுவதற்குரிய வாய்ப்பைக் கூட தனக்குக் கொடுக்க மாட்டான். உமார் நிச்சயமாகத் தோல்வியடைவதையே விரும்புவான்.

ஆகவே, உமார் நான்கில் எதையாவது சொல்லுவதை எதிர்பார்த்து, இங்குள்ள யாருக்கும் தெரியாத வேறொரு தனிக் கதவு ஒன்றின் வழியாக, அவன் போவதற்குத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று சூழ்ச்சியின் போக்கையாராய்ந்து முடிவு செய்தானே தவிர வேறில்லை.

மாலிக்ஷா அவனருகில் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு அவன் தோளிலே தட்டிக் கொடுத்தார். ‘நீ தான் இரண்டாவது அறிஞர் அலி சென்னா’ என்று மனமாரப் பாராட்டினார். தன் செயலாளரைக் கூப்பிட்டு, “உமாரின் வாய் நிறையத் தங்க நாணயங்களை அள்ளிக் கொட்டு. இந்தப் பொன்னான வாயை பொன்னாலேயே நிரப்பு” என்றார் உட்னே அந்தச் செயலாளன், சுல்தான் அருகில் இருந்த பெட்டியைத் திறந்து, உமாரின் வாயிலே பொன் நாணயங்களைத் திணிக்கத் தொடங்கிவிட்டான். “சரி, எழுந்து போய், அந்த ஆட்டக்கார நாயைத் தேடிப் பிடித்து, வயிறு நிறையும் வரை வாயிலே மணலைக் கொட்டி நிரப்பு. நம் அறிவுலக மேதையை அவமதித்த குற்றத்திற்கு அதுதான் தண்டணை” என்றான். அரசர் ஆணையை நிறைவேற்றச் சில ஏவலர் வெளியில் சென்றார்கள்.

உமார் தப்பினான். அவன் வாயிலே எல்லா நாணயத்தையும் திணிக்காமல், பெட்டியோடு கொடுத்தார்கள். விடைபெற்றுக் கொண்டு உமார் வெளியேறினான். அடிமையொருவன், பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவன் கூடப் போனான்.

வழியிலே ஒரே கூட்டமாக இருந்தது. சிப்பாய்கள் இரண்டு பேர் பிடியிலே சிக்கித் துடித்துக் கொண்டிருந்தான் ஆட்டக்காரன். மூன்றாவது ஆள் வாளால் அவன் வாயைக் கிழித்து, சாக்கு மணலை அதில் சாய்த்துக் கொண்டிருந்தான். பாவம்! அவன் அழுகுரலைக் கேட்டுக் கொண்டே உமார் அங்கிருந்து தன் கூடாரம் சென்றான்.