உமார் கயாம்/24. பேகம் பொற்சித்திரமும் பினமாகிப் போனதுவே

24. பேகம் பொற்சித்திரமும் பினமாகிப் போனதுவே

சுல்தான் மாலிக்ஷா அவர்கள், அவன் செல்வதற்கு அனுமதியளித்து விட்டார். அவனுடைய காதல் நெஞ்சில் களிப்பு நிறைந்திருந்தது. பயணத்திற்குப் பாதுகாப்பு வீரர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டான். அடிமைகள் அவனுடைய சாமான்களை மூட்டைக் கட்டினார்கள். இரண்டு குதிரைகளுக்கிடையே கட்டிப் பொருத்தப்படக்கூடிய முறையிலே மூடப்பட்ட ஒரு பிரம்புத் தொட்டில் ஒன்றை வாங்கினான். அதிலே யாஸ்மியைப் படுக்க வைத்துக் கொள்ளலாம். ஜபாரக்கிற்காக ஒரு புதிய கழுதை வாங்கினான்.

“ஜபராக், திரும்பவும் பிச்சை யெடுக்கவே வேண்டியதில்லை” என்று சொல்லி சிரித்தான்.

அந்தக் கூன விகடன் அவனைக் கலவரத்தோடு பார்த்தான். “தலைவரே! ஒரு விஷயம் தங்களுக்கு எச்சரிக்க விரும்புகிறேன். தாங்கள் மிகவும் பலமுள்ளவர். ஆனால், யாஸ்மி மிகப் பலவீனமாக இருக்கிறாள். மகிழ்ச்சியைத் தாங்க முடியாத அளவு பலவீனமாக இருக்கிறாள்” என்றான்.

“நீ ஒரு புத்தியுள்ள முட்டாள்!”

“இல்லை, அங்கஹlனன்! வேதனையை அனுபவித்திருந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் தெரியும்!” என்று சொன்னான் ஜபாரக்.

பிற்பகலில், உமாரை வழியனுப்புவதற்காக பெரிய அமீர்கள் வந்து சேர்ந்தார்கள். குளிர்ச்சியான மாலை நேரத்திலே ஜபாரக் தன் கழுதையின்மேல் ஏறி வழிகாட்டிக் கொண்டு முன் செல்ல உமாரின் பயணம் தொடங்கியது.

அன்று இரவு யாஸ்மிக்குக் குளிர் பிடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. அவள் எந்தவிதமான உணவையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஆவலோடு உமார் அருகில் வந்தபொழுது அவள் புன்சிரிப்புடன் இருந்தாள்.

“நான் மிக அதிகமான மகிழ்ச்சியை அடைந்துவிட்டேன்! இனி அது நிச்சயமாகப் போய்விடும்” என்றாள்.

இரண்டாவது நாள் இரவு. அவர்கள் எபிரேட்ஸ் ஆற்றங்கரையிலே தங்கள் கூடாரத்தை அமைத்தார்கள். அடுத்த நாள் காலையில் பிரயாணிகளுக்காக விடப்படும் மிதப்புத் தோணிகளிலே ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். யாஸ்மி கூடாரத்திற்குள்ளே, ஏழெட்டுப் போர்வைகளால் மூடப்பட்டுக் கிடந்தாள். அவளுடைய கன்னங்களில் மகிழ்ச்சியொளி பாய்ந்து விளங்கியது. உமார் கூடாரத்திற்குள்ளே நடையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் சென்ற திசையெல்லாம் அவள் கண்களும் சென்றன. ஆனால், கழுத்தை மட்டும் அவளால் திருப்ப முடியவில்லை.

“நான் பாக்கியமில்லாத மனைவி, என் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டியதிருக்க, எனக்குத் தாங்கள் பணிவிடை செய்யும்படியான நிலையில் இருக்கிறேன். என் திருமணத்திற்காக வாங்கிய விலையுயர்ந்த சில சாமான்களைப் பார்க்கலாமா?” என்று கேட்டாள் பிரமையோடு.

அவளைச் சந்தோஷப்படுத்துவதக்ாக, பூவேலை செய்யப் பெற்ற பொன்னாடைகளையும், முத்துப் பதித்த மேலாடைகளையும் எடுத்துக் காட்டினான். தன்னை மறந்தவளாக அவள் அவற்றை விரல்களால் தடவித் தடவிப் பார்த்தாள். ஒற்றை நீலமணிக்கல் பதித்த வெள்ளித் தலைமுடியொன்றை யெடுத்துக் காண்பித்தான். “ஆ! இது மிக அழகாக இருக்கிறது. நாளைக் காலையில் எழுந்து தலைவாரிக் கொண்டு இந்த முடியை நான் அணிந்து கொள்வேன். பிறகு ஒருநாள் நாம் ஆற்றங்கரை அரண்மனையில் இந்த இடத்தில் அல்ல. நம்முடைய சொந்த அரண்மனையில்வெண்மையான அன்னங்கள் நீந்திச் செல்லும் அழகான ஆற்றங்கரையில் உள்ள நம் சொந்த அரண்மனையில் இருப்போம், அல்லவா?”

இப்படிப் பேசிக் கொண்டிருந்த யாஸ்மி திடீரென்று ஜன்னி கண்டவள்போல் பிதற்றத் தொடங்கினாள். நோயின் கடுமை அதிகமாகியது. அவளுடைய கண்கள் இருண்டன. உமார் பயந்து ஜபாரக்கை அழைத்தான். அவன் வந்து பார்த்தவுடனேயே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“பிளேக் வியாதி (கொள்ளைநோய்) போல் தோன்றுகிறது” என்றான் ஜபாரக்.

“இல்லை. அது ஒரு விதமான காய்ச்சல். கடவுளைப் பிரார்த்திப்போம்! பொழுது விடிவதற்குமுன் வியாதி நின்று போகும்படி வேண்டுவோம்” என்றான் உமார்.

“தொழுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை!” என்று முடித்தான் விகடன்.

குளிர் நீங்குவதற்காக ஜபாரக் கூடாரத்தைச் சுற்றி நெருப்பு எரிக்கப் பெற்றது. துணியினால் ஆன கூடாரச் சுவர்களில் நெருப்பின் செவ்வொளிப்பட்டு விளங்கிக்கொண்டிருந்தது. யாஸ்மி வேதனையால் முனகிக்கொண்டு பக்கத்துக்குப் பக்கம் புரண்டுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் உமார் மண்டியிட்டுக் கொண்டிருப்பதும், கூடாரத்தின் ஒருமூலையிலே ஜபாரக் உட் கார்ந்து கொண்டு கடவுளின் புனிதமான பெயர்களையெல்லாம் உச்சரித்துக் கொண்டு இருப்பதெல்லாம் அவள் அறிவதற்கு அப்பாற்பட்ட விஷயங்களாகிவிட்டன. நெருப்பு அமர்ந்து சாம்பலாகி விட்டது. கூடாரத்துச் சுவர்களில் ஆடி ஒளி வீசிக்கொண்டிருந்த செந்நிறமும் மறைந்து விட்டது.

திடீரென்று உமார் ஜபாரக்கை அழைத்தான். “விளக்குளை ஏற்று. அவள் பேசிவிட்டாள். இதோ என்னைத் தொட்டுக் கொண்டிருக்கிறாள் காய்ச்சல் விட்டுவிட்டது” என்றான். விளக்கைப் பிடித்துக்கொண்டு அவர்கள் அருகிலே வந்து நின்றான் ஜபாரக், யாஸ்மியைக் கவனித்தான். அவள் அசையாமல் படுத்திருந்தாள். அவளுடைய கண்கள் முடியிருந்தன. அவளுடைய ஒரு கை உமாரின் கழுத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவள் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன.

“என் உயிரே! என் உயிரே!” அசையும் உதடுகளிலிருந்து வந்த சொற்கள் நின்றன. அவள் கழுத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜபாரக் விளக்கைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். உமார் அவளைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். யாஸ்மி, மூச்சு விடுவதை நிறுத்திவிட்டாள். ஆனால் உமார் அவளையே கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்கு என்னவோ மாதிரியிருந்தது. விளக்கைக் கீழே வைத்துவிட்டு, உமாரின் தோள்களைத் தொட்டான்.

உமாரினுடைய ஆட்கள் எல்லோரும் கூடாரத்திற்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். திடீரென்று எழுந்த காற்று தூசியைக் கிளப்பி திரையிட்டு கொண்டிருந்தது. அந்தத் தூசித் திரையின் ஊடே சூரியன் ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஜபாரக் உள்ளும் புறமும் வருவதும் போவதுமாக இருந்தான். உமாரின் நிலையை வெளியே யிருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். “அவர் இன்னும் பேசமாட்டேன் என்கிறார். அவளுடைய முடிய கண்களில் பன்னீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்”.

“அவள் என்ன பிளேக் நோயினால்தானே இறந்துபோனாள்!” என்று ஒரு சிப்பாய் கேட்டான்.

“அவள் இறந்துபோனாள் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. இல்லாவிட்டால், திருமண நகைகளெல்லாம் எடுத்து அவளுக்கு அணிவித்துக் கொண்டிருப்பாரா?” என்று ஜபாரக் அவர்களுக்குக் கூறினான்.

“ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, வருத்தியழுதால்தான் சாகக் கொடுத்தவனுக்கு நிம்மதி ஏற்படும்.” என்றான் ஒருவன்.

“அதெல்லாம் அழுது விட்டார். இனி அவர் அழப் போவதில்லை. மழை பெய்தபின் பூத்த பாலைவனத்துப் பூப்ப்ோல் இருந்த அவள் அடுத்த நாளே அடிபட்டதுபோல் போய்விட்டாள். வெள்ளிய பூப்போல அவள் தரையில் கிடக்கிறாள். இவ்வளவு இளமையான காலத்தில் இறந்துபோகும்படி நேர்ந்ததே!” என்று ஜபாரக் வருந்தினான்.

அந்த மனிதர்கள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயிருந்த மரத்தடியில் ஒரு மேட்டிலே பெரிய புதை யான்ற்ை வெட்ட நேர்ந்ததும், சாவுக் கூடாரத்திற்கு மூடப்பட்ட அந்தத் தொட்டிலைத் தூக்கிவரத் நேர்ந்ததும் என்றுமில்லாத வழக்கமாக அவர்களுக்குத் தோன்றியது. சிறுபெண்கள் பிரசவத்தின் போதும் நோயினாலும் இறந்துபோவது எதிர்பார்க்கக் கூடியதே! தலையில் அப்படி எழுதப்பட்டிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? கரையிலே, ஆய்த்தமாக இருக்கும் தெப்பத்தை அவர்கள் சங்கடத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“அவன் பித்துப் பிடித்தவன்போல் இருக்கிறான்” என்று ஒருவன் வருந்தினான்.

“இதற்குப் போய் இவ்வளவு வருந்துகிறாரே! எண்ப வெள்ளிகள் கொடுத்தால் பாக்தாதிலே எத்தனையோ பெண்கள் வாங்கலாம்!” என்றான் ஒருவன்.

“சீ நாயே! உனக்கென்ன தெரியும்? காதலின் தன்மையும் ஆற்றலும் உனக்கு எப்படித் தெரியும்?” என்று ஜபாரக் சீறினான்.

அவன் உள்ளே சென்று நெடு நேரங்கழித்துத் திரும்பி வந்தான். அடிமைகளை அழைத்து, குன்றின் உச்சியில் தோண்டப்பட்டுள்ள புதை குழிக்குத் தொட்டிலை எடுத்துச் செல்லும்படி கூறினான்.

“தலைவர், அவளைத் தொட்டிலில் வைத்து, அவளுடைய வெகுமதிப் பொருளையும்கூடவே வைத்துவிட்டார். அவருடைய கையாலேயே எல்லாம் செய்து விட்டார்.

அவளைப் பிரிந்து விட வேண்டிய நேரம் வந்து விட்டதென்று எண்ணுகிறார். அவர் கீழே படுத்திருக்கிறார். சீக்கிரம் போய்த் தொட்டிலைத் தூக்கிக்கொண்டு வாருங்கள், சீக்கிரம்!” என்று அடிமைகளை ஏவினான் ஜபாரக். 

ஒட்டகக் காரர்கள், “நாங்கள் பிணத்தைத் தூக்கிச் செல்ல மாட்டோம், மிதப்புத் தோணியிலும் ஏற்றமாட்டார்கள்” என்று கத்தினார்கள்.

“புதை குழிக்குத்தான் தூக்கிச் செல்லவேண்டும். பயணத்திற்கல்ல, புதைகுழிதான் ஏற்கெனவே தோண்டப் பெற்றிருக்கிறதே! சீக்கிரம்!” என்றான் ஜபாரக்.

பயந்துகொண்டிருந்த அவர்களை விரட்டியடித்து, பிணத் தொட்டிலைத் தூக்கும்படி செய்தான். அவர்கள் பயத்துடனும் அவசரமாகவும், மேட்டின்மேல் அந்தக் கனமான தொட்டிலைத் தூக்கிச் சென்றார்கள். மெதுவாகக் கீழே இறங்கிப் புதைகுழிக்குள்ளே வைத்துவிட்டு, மண்ணை வாரிக் கொட்டி மூடினார்கள். அதன் மேல் ஏற்கெனவே சேர்த்து வைத்திருந்த கற்களைக் குவித்து வைத்து விட்டு வேகவேகமாகக் கூடாரத்தை நோக்கி ஓடிவந்தார்கள். ஒட்டகக் காரர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளையும் சாமான்களையும் ஒட்டகங்களிலே ஏற்றிக்கொண்டிருந்தார்கள். சிப்பாய்கள் குதிரைகளிலே சேணம் பூட்டித் தயாராக நின்றார்கள்.

“தலைவரே! எல்லா வேலையும் முடிந்து ஆயத்தமாக நிற்கிறோம். புறப்படவேண்டியதுதான்” என்று உமாரை நோக்கி ஜபாரக் கூறினான்.

வாயில் வழியாக வெளியில் வந்த உமாரின் தலைப்பாகையின் வால் நுனி அவனுடைய வாயிதழ்களில் ஊடே பறந்து வந்து சிக்கிக் கொண்டது. வெளியில் சுழன்று கொண்டிருக்கும் தூசிக் காற்றையும் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கலங்கிய நீரையும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றான். புறப்படுவதற்குத் தயாராக நின்ற அந்த மனிதர்களைப் பார்த்து,

“இந்தக் கூடாரத்தைக் கொளுத்தி விடுங்கள். உங்களிடம் உள்ள பொருள்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எங்காவது ஓடித் தொலையுங்கள் மீண்டும் என் கன்முன்னே உங்கள் முகத்தைக் காட்டாதீர்கள். மீண்டும் நீங்கள் என்முன்னே வருவீர்களானால், உங்கள் முகங்கள் என் நினைவுகளைக் கிளறிவிடும். அதை என்னால் பொறுக்க முடியாது. போய்விடுங்கள்!” என்றான்.

“தலைவரே!” என்று ஜபாரக் மறுத்துக் கூற முன் வந்தான்.

“உன்னையும்தான். நீயும் போய்விடு. இந்த இடத்தில் பிளேக் வியாதி (கொள்ளை நோய்) இருக்கிறதென்பது உனக்குத் தெரியவில்லையா? போ! போ” என்று விரட்டினான்.

மிதப்புத் தோணி ஆற்றைக் கடந்து சென்றது. உமார் அதிலிருந்து கவனித்தான். மனிதர்களும், ஒட்டகங்களும், மிருகங்களும் கண்ணுக்கு மறைந்து விட்டார்கள். அவன் தங்கியிருந்த கூடாரம் எரியும் புகை மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. வளையம் வளையமாக எழுந்த அந்தப் புகை, பாலைவனத்துத் தூசித் திரையை இருளச் செய்தது. கதிரவன் உச்சிக்கு ஏறியதும் அதுவும் மறைந்து விட்டது.

கதிரவன் ஒரு பெரிய விளக்குபோலத் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. அதைச் சுற்றி மேகங்கள் வானத்தை அலங்கரிக்கும் கொடிகள் போல விளங்கின. ஆற்றின் இருபுறமும் தெரிந்த சாம்பல் நிறமான மணல்வெளி ஒரே வெட்டவெளியாக, ஒன்றுமில்லாத தன்மையுடன் காட்சியளித்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலே எதுவும் இல்லை. அவனுடன் கூட வந்த கூட்டம் வெட்ட வெளியிலே கலந்து மறைந்துவிட்டது. கூடாரத்தை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அவன் உள்ளத்திலே, உடலிலே எரிந்து கொண்டிருந்தது.

ஆற்றின் அக்கரை சேர்ந்ததும், உமார் தண்ணிர் குடிப்பதற்காக ஆற்றிற்குள்ளே இறங்கப் போனான். கூடவே வந்த ஜபாரக் அவன் தோள்களைப் பிடித்து நிறுத்தினான். “தலைவரே! அது ஆறு! இறங்காதீர்கள்! சாவு நேரிடலாம்!” என்று தடுத்தான்.

இறங்கிய அவன் கால்களை அடித்துத் தள்ளிக் கொண்டு அந்த ஆறு பெருக்கெடுத்தோடியது. கரையோரத்துக் களிமண் சிறுசிறு துண்டுகளாக ஓடும் நீரில் விழுந்து கரைந்து மறைந்து கொண்டிருந்தது. கரைக்கு இழுத்து வரப்பட்ட உமார். தரையிலே உட்கார்ந்து கொண்டு ஓடும் வெள்ளத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்திலே ஒட்டகச் சாரியின் மணியோசை அவன் காதுகளிலே ஒலித்தது. கரையில் இருந்த தங்கும் இடத்தில் அந்தப் புதிய வியாபாரிகளின் கூட்டம் வந்து முகாமிட்டது. மிதப்புத் தோணி மீண்டும் ஆற்றைக் கடந்து செல்லத் தொடங்கியது. புதிய மனிதர்கள் தங்கள் குதிரைகளை நீர் குடிப்பதற்காக ஆற்றுக்குக் கொண்டு வந்தார்கள்.

“இல்லை, இது பிளேக் நோய் அல்ல. இவருக்குக் காய்ச்சலேயில்லை. நோய் இவர் உடம்பிலே இல்லை; மனதிலேதான் இருக்கிறது. இவ்வளவு தூரம் கவலைப் படுவாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏதாவது இவருக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். தங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று அருகிலிருந்த யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஜபாரக் கேட்டான்.

அப்பொழுது இன்னொரு மனிதன் அருகிலே வந்தான். உமாரின் கையில் ஒரு கனத்த குவளையைக் கொடுத்தான். அதிலே இரத்தம் போல் சிவந்த நிறமுடைய திராட்சை மதுவை ஊற்றினான். “ஆற்று நீர் நல்லதல்ல; இது மிக மிக நல்லது. குடியுங்கள்” என்று கூறினான். அந்தக் குரல் எங்கோ முன்பு கேட்ட குரல் போல் இருந்தது. ஆம்! அது வியாபாரி அக்ரோனோஸின் குரல்தான். அக்ரோனோஸின் கை, குவளையைப் பிடித்து உமாரின் உதட்டருகிலே நகர்த்தியது. உமார் சிறிது குடித்தான். இப்படியே குவளை காலியாகும் வரை குடித்தான். அவன் குடிக்கக் குடிக்க அக்ரோனோஸ் ஊற்றிக்கொண்டேயிருந்தான். அவன் ஊற்ற ஊற்ற உமார் குடித்துக் கொண்டே யிருந்தான்.

பிறகு இன்னும் சிறிது குடித்தான். அந்த மது கெட்டியாகவும் நல்ல மணம் பொருந்தியதாகவும் இருந்தது. உமாரின் மூளையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைத் தணித்தது.