உமார் கயாம்/23. இதயந்தாங்காத இன்ப வேதனை

23. இதயந்தாங்காத இன்ப வேதனை

உமார் யாஸ்மியைத் தன்னுடைய கைகளிலே தூக்கிக் கொண்டான். அவள் நோயினால் நடுங்கிக் கொண்டே அவனுடைய கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவளை அப்படியே தெருவுக்குக் கொண்டு வந்தான். அங்கே தயாராகக் காத்திருந்த பல்லக்கின் உள்ளே, விரித்திருந்த பஞ்சு மெத்தையிலே மெதுவாக அவளை வைத்தான். அமீர் அஜீஸ் என்ற உமாரின் நண்பனிடமிருந்து, தற்சமயத்திற்காக வாங்கப்பட்ட பல்லக்கு அது. அதற்குக் காவலுக்கு இரண்டு வீரர்களையும் அமீர் அஜீஸ் அனுப்பியிருந்தார்.

“என் அருமை மணப் பெண்ணே! இனி நீ என்றென்றும் என்னுடைய கைகளிலேயே இருப்பாய்!” என்று அவள் காதில் மட்டும் விழும்படியாக உமார் கூறினான்.

பாதுகாப்பு வீரர்கள் பல்லக்குத் திரைகளை இழுத்து மூடினார்கள். அதுவரையில் அனாதையாகக் கிடந்த யாஸ்மியோடு ஒன்றாக வாழ்ந்த பிச்சைக் காரர்கள் எல்லாரும் விலகி வழிவிட்டார்கள்.

“அல்லாவின் புகழ் நிலைப்பதாக! பொன் நாணயங்களை அள்ளி வழங்கும் அருளாளன்; அறிவாளன் புகழ் ஓங்குவதாக!” “கூடாரமடிப்பவன் புகழ் வளர்வதாக!” என்று வாழ்த்தினார்கள்.

“இந்த மணமக்கள் வாழ்வில் இன்பம் நிறைவதாக!” என்று கூவினார்கள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்த ஒரு சிறுமி தன் கையில் இருந்த கூடையில் நிறைந்திருந்த ரோஜாப்பூ இதழ்களை உமாரின் குதிரையின் மீது கொட்டினாள்.

“தலைவரே! நாங்கள் எங்கு செல்ல வேண்டும்? கட்டளைக்குக் காத்திருக்கிறோம்!” என்று வீரன் ஒருவன் கேட்டான்.

“அங்காடிச் சந்தைக்கு செல்” என்று ஆணையிட்டான் உமார்.

“அங்காடி இந்நேரம் மூடப்பட்டிருக்குமே? பிற்பகல் தொழுகைக்குப் பிறகு அடைத்துவிடுவது வழக்கமாயிற்றே!”

“இருக்கட்டும்! நீ அங்கே செல்! விரைந்து செல்!” என்று மீண்டும் கூறினான் உமார்.

கரிய நிறமுடைய அடிமைகள் பல்லக்கைத் தூக்கினார்கள். பல்லக்கு நகர்ந்தது. அதன் பக்கத்திலேயே குதிரையை மெல்ல நகர்த்திக் கொண்டு சென்றான் உமார். பாதுகாப்பு வீரர்களும் உடன் நடந்தார்கள். அந்த வீரர்களில் ஒருவன் ஜபாரக்கிடம் மெதுவாக, “உங்கள் தலைவர் குடி மயக்கத்தில் இருக்கிறாரோ?” என்று கேட்டான். “அவர் குடித்திருப்பது போன்ற மதுவை உன் ஆயுள் முழுவதுமே குடிக்க முடியாது. பேசாமல் வா!” என்று அதட்டினான் அந்த விகடன்.

அங்காடிச் சந்தையின் தெருவாசல் அருகிலே, இராவிளக் கொன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே ஈட்டி தாங்கிய வீரர்கள் அறுவரும், காவல் தலைவன் ஒருவனும் காவல் செய்து கொண்டிருந்தார்கள். காவல் தலைவன், பல்லக்கையும், பல்லக்குடன் வரும் அரசாங்க உடுப்பணிந்த பாதுகாப்பு வீரர் இருவரையும், பக்கத்திலே வரும் உமாரையும் கண்டான். உமாரின் தோற்றத்தைக் கண்டதும் ஏற்பட்ட ஒரு மரியாதையுணர்ச்சியால் எதிரில் சடக்கென்று நின்று சலாம் வைத்தான்.

“தலைவரே! பேரரசர் சுல்தான் அவர்களின் ஆணைப்படி இந்தக் கதவுகள் இரவு நேரங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதைத் திறப்பதோ, கடப்பதோ இயலாத செயல்” என்று பணிவாகவும், சட்டத்தின் பிடிப்பை விட்டுக் கொடுக்காமலும் அந்தக் காவல் தலைவன் கூறினான்.

“சுல்தான் அவர்களின் அன்பைப் பெற்ற எனக்கு இன்றிரவு எதுவுமே அடைக்கப்படக் கூடாது. நீ இதைத் திறப்பதற்கு அனுமதிப்பதன் அடையாளமாக இந்த மோதிரத்தை வைத்துக் கொள். சீக்கிரம் கதவுகளைத் திற!” என்று கட்டளையிட்டான் உமார்.

“ஆஸ்தான சோதிடரை இவ்வளவு நேரமா காக்க வைப்பது? திற திற!” என்று உறுமினான் ஜபாரக்.

காவல் தலைவன், மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு சந்தேகம் கலந்த பார்வையுடன் தலையை அசைத்தான். வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வாசலின் இரட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்து விட்டான். தன்னுடைய வீரர்களை விலகி விடும்படி கூறினான். உமாரும், பல்லக்கும் உள்ளே நுழைந்தனர். பல்லக்குக்குப் பின்னாடியே ஒரு தாடிக்காரக் கிழவன் ஒட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டான். வீரர்கள் கண்ணுக்கும் காதுக்கும் எட்டாத தொலை உள்ளே நுழைந்ததும், அந்தத் தாடிக் காரக் கிழவன், உமாரின் குதிரைச் சேணத்தைப் பிடித்துக் கொண்டு, “குவாஜா அவர்களே, இந்த வழியே வாருங்கள். இந்த ஏழை எலிராக்கின் கடைக்கு வாருங்கள். பட்டுத் துணிகளும் பவழக் கற்களும் முத்து வைரமும் எத்தனையோ வகைகள் என் கடையில் இருக்கின்றன. தங்கள் மணப் பெண்ணின் சிவந்த உதட்டுக்குக் பொருத்தமான முத்துப் பதித்த தங்கப் புல்லாக்கும் இன்னும் வகை வகையான நகைகளும் இருக்கின்றன” என்றான்.

அதற்குள்ளே, மற்றொரு தாடிக்காரன் வந்து, “ஏழைகளின் பாதுகாவலரே! எங்கள் சுல்தானின் தோழரே! இந்தப் புறம் வாருங்கள். ஸீராக்கிற்கு வைரக் கல்லுக்கும் படிகாரத்துக்கும் உள்ள வேறுற்றுமை கூடத் தெரியாது. அவனுடைய கடைப்பொருள்கள் எல்லாம் போலி. எல்லாம் இந்த அலெப்போவிலேயே செய்யப்பட்டவை. என் கடைக்கு வாருங்கள். தங்க நூல் இழைத்து நெய்யப்பட்டப் பட்டுத் துணி வகைகள் கட்டுகட்டாக இருக்கின்றன. பவழம் பதித்த வண்ணத் துணிகள், டமாஸ்கஸ் பட்டணத்திலிருந்து வரவழைக்கப் பட்டவை. எத்தனையோ விதங்கள்” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே இன்னொருவன் வந்து உமாரின் சேணத்தைப் பிடித்துக் கொண்டான்.

“தலைவரே! மதவிரோதிகளான இந்த நாய்களுடன் ஏன் பேரம் செய்கிறீர்கள்! அழுக்குப் பிண்டங்களே, எங்கள் தலைவரின் தோழியான மங்கையின் வெள்ளிக் கழுத்துக்குப் பொருத்தமான ஒளி வீசும் மணிக் கற்கள் வேண்டும் என்ப்து உங்கட்குத் தெரியவில்லையா? ஒடுங்கள்! ஒடுங்கள்! தலைவரே! உண்மையான மத நம்பிக்கையுடையவனும், சையத்தின் பேரனுமாகிய என் கடைக்கு அருள் கூர்ந்து வருகை புரியுங்கள். அழகான பொருள்கள் அனைத்தும் தங்கள் விருப்பப்படி வாங்கிக் கொள்ளலாம்” என்று, குதிரையை இழுத்தான்.

“இருட்டில் வழி மறிக்கும் குருடர்களே! உங்களிடம் எல்லாப் பொருள்களையும் நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், அவற்றின் விலையை சுல்தான் அவர்களே கொடுப்பார்கள். தெரிகிறதா? இந்த இரவு மீண்டும் வரப்போவதில்லை. உம் கடைகளை எல்லாம் திறவுங்கள்” என்று உமார் அவசரப் படுத்தினான்.

அன்று இரவு, ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமாகப் பறந்தது. கோடைக் காலமாகவும், புழுக்கமாகவும் இருந்ததால், உமார் தன் கூடார வாசலில் படுக்கையைப் போட்டிருந்தான். யாஸ்மி அதில் சாய்ந்து கிடந்தாள். அருகிலே படுத்திருந்த உமார் அவளுடைய கூந்தலின் கற்றையின் டையே தன் விரல்களை நுழைத்து கோதிவிட்டான். நீண்ட நாளைக்குப் பிறகு இப்பொழுதுதான் அவனுக்கு மறுபடி உயிர் வந்தது போலிருந்தது. அன்றைய இரவு அழுத்தம் நிறைந்ததாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளின் துன்பப் பொழுதுகள் எல்லாம் தொலைந்து போய் விட்டன. கடலின் மேல் தோன்றிய தீய தோற்றம் கடலுக்குள்ளேயே மீண்டும் மறைந்தது. போல், அந்த நாட்கள் மறைந்து போய் விட்டன. விண்மீன் வெளிச்சத்தின் ஒளிப்பெருக்கு, அவனருகில் இருந்த யாஸ்மியின் சிவந்த கைகளைக் கோடிட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது.

அவள் மூச்சு விடும்போதெல்லாம் அவள் மேல் போர்வை ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. வெளியிலே, மணல் வெளியில் முளைத்திருந்த பச்சைப் பூண்டுகளின் காய்ந்த வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து வந்து கொண்டிருந்தது.

“அன்பே, இனியும் தூங்காமல் இருக்கிறாயே” என்று உமார் யாஸ்மியைக் கேட்டான்.

“எனக்கு மகிழ்ச்சி பொறுக்க முடியவில்லை. அது உடலைத் துன்புறுத்துகிறது. என் இன்பத்தின் அளவை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது தவறானதா?” என்று யாஸ்மி சோகம் பொருந்திய புன்முறுவலுடன் கேட்டாள்.

“அது தவறாக இருந்தால், நான் பெரும் பாவியாக இருக்க வேண்டும்!” என்றான் உமார்.

யாஸ்மி தன் விரல்களால் உமார் உதடுகளை மூடினாள். “உஷ் அப்படிச் சொல்லாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது. உங்கள் அன்பை நினைத்து ஏங்கி ஏங்கி நட்சத்திரங்கள் தோன்றியதிலிருந்து மறையும் வரை காத்திருந்தும், பார்த்துக் கொண்டே நடந்துமாய் கழித்த இரவுகள் எத்தனையோ! இப்பொழுது நம் காதல் நிேைவறி விட்டது. இனி. இனிமேல், தங்களைப் பிரிந்திருப்பதென்பது என்றால் நினைக்கக் கூட முடியவில்லை. அப்படிப் பிரிந்து விட்டால் அதைப்போல் கொடுமையானது வேறில்லை. தங்களைப் பிரிந்து விடும்படி மீண்டும் எதுவும் நேரிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. மிகப் மிகப் பயமாக இருக்கிறது.”

“பயப்படாதே! நாம் இருவருமே, நிசாப்பூருக்குச் சென்று விண்மீன் வீட்டிலே போய் இருப்போம். நான், சுல்தானிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வருகிறேன்.”

“தங்களால் அது முடியாதா என்ன? தங்களுக்குள்ள சக்தியை நான் மறந்து விட்டேனே. ஆமாம்! எனக்காக அங்காடியிலே எத்தனை எத்தனை பொருள் வாங்கி விட்டீர்கள்! அப்படியானால் இனிமேல் நான் பிச்சைக்காரியில்லை; அல்லவா?”

“நீ என்னுடைய உயிர். மூன்று வருடங்களாக என் ஆவி நோய்ப் பட்டிருந்தது. இப்பொழுதுதான் என் நோய் தீர்ந்தது.

“நினைத்துப் பார்த்தாலே நம் வாழ்க்கை பெரும் அதிசயமாக இருக்கிறது! இல்லையா? எத்தனையோ தடவை நான் இதை எண்ணியெண்ணி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். முதலில் புத்தகக் கடை வீதியில் தங்களைக் கண்ட பொழுதே காதல் கொண்டு விட்டேன்.

பிறகு, தங்களைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாத மனவுறுதி பெற்றேன். தங்கள் அருகில் இருப்பதே பேரின்பம் என்று நினைத்தேன். ஏதோ மாயவுலகில் இருப்பது போல் மகிழ்ந்தேன். தங்களைப் பிரிந்திருந்தபொழுது என் உடலின் ஒவ்வோர் அங்கமும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.”

“இப்பொழுது எல்லாம் போய் விட்டது. அப்படித்தானே?” என்று முடித்தான் உமார்.

“ஆம்! துன்பம் எல்லாம் போய் விட்டது. ஆனால், உடல் வலி போகவில்லையே!”

“என்ன,” என்று திடுக்கிட்டபடி உமார் தலையைத் தூக்கினான். கிழக்கில், இருட்டின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. “கண்ணே நீ என்ன சொன்னாய்! பார், இரவு முடிந்து பகல் தோன்றுகிறது.

இரவு முழுவதும் உறங்காமல் இருந்து விட்டோமே, வருந்தாதே! இது நமக்கு விடிவுகாலம். இன்றைய விடிவு போல் என்றைய விடிவும் இருக்கப் போவதில்லை.

“ஆம்! இருக்கப் போவதில்லை!” என்று சொல்லி அவள் சிரித்தாள்! அது என்ன சிரிப்பு?

“இதோ, சுல்தான் கூடாரத்தில் மணியடித்து விட்டார்கள். இப்பொழுது, நான் குளித்துக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சுல்தானைப் போய் பார்க்க வேண்டும். அவரிடம் நாம் ஊர் திரும்புவதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு வரவேண்டும்; யாஸ்மி!”

“போய் அனுமதி பெற்றுக்கொண்டு விரைவில் வாருங்கள்! ஒரு சிறிது நேரமே தங்களைப் பிரிவதென்றாலும் எனக்குப் பொறுக்க முடியாது. ஆகவே, விரைவில் திரும்பி வாருங்கள்!” என்று யாஸ்மி விடை கொடுத்தாள்.

ஆனால் அவள் கொடுத்த விடை ஜன்மாந்திர விடை போலத் தோன்றியது.