உமார் கயாம்/37. சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை

37. சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை

தன்னுடைய அறைக்குள் வந்து உட்கார்ந்த உமார் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டான். இவ்வளவு விந்தையான விஷயங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, அவன் தனியாக இருப்பது நல்லதென்று தோன்றியது. அந்தக் கழுகுக் கூட்டுக்கு வந்த பிறகு அவன் தனியாக இருப்பது இதுவே முதல் தடவை. ஹாஸானுடைய அதிசயிக்கத்தக்க அறிவாற்றலைக் கண்டு அவன் வியப்படைந்தான். இந்தப் புதிய மதத்தைத் தோற்றுவித்த தலைவனுக்குத் தன்னைப் பின்பற்றுவோரையெல்லாம் காப்பாற்றி ஆதரிக்கக்கூடிய அளவு செல்வம் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. அதுபற்றிய ரகசியத்தை அவன் வெளியிடவுமில்லை.

ஹாஸானுடைய பேச்சுக்களையும், அவன் தன் சக்தியின் பெருமையைப்பற்றிக் கூறியதையும் நினைக்கிறபொழுது, அவனுக்கு வேதாந்தி காசாலி கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. “தன்னைத்தானே போற்றிப் பெருமையாகப் பூசித்துக் கொள்வதைவிட வேறு எதையாவது ஒரு பொருளைத் தொழுவது உயர்ந்தது” என்ற பொன்மொழிதான் அது. ஹாஸானுடைய திட்டப்படி பார்த்தால், பலப்பல பள்ளி ஆசிரியர்களின் மகிழ்ச்சியைப்பற்றிய விவாதங்களும், அறிஞர் பிளாட்டோவின் குடியாட்சித் திட்டமும் முட்டாள் தனமாகி விடுகின்றன.

உண்மையில், புத்தியுள்ள மிருகங்கள் என்ற நிலையைக் காட்டிலும் மனிதப் பிராணிகள் உயர்ந்தவையல்ல என்ற நிலையிருக்குமானால், ஹாஸ்ானுடைய புது மதத்தை மிக உயர்ந்ததென்று கூறலாம். ஆனால் மனிதர்கள் புத்தியினால் மட்டும் மிருகங்களிலிருந்து வேறுபடவில்லையே, அவர்களுக்கென்று சுதந்திரமான எண்ணங்களும், கொள்கைகளும் இருக்கின்றன. தன் ஒரு குறிக்கோளுக்காகப் பலதரப்பட்ட விஞ்ஞானிகளின் மனத்தையும் அடக்கியாளும் ஒரே தலைவனாக ஹாஸான் இருக்கிறான். அவனுடைய இந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்காக மற்றவர்கள் மனசாட்சியை இழந்து வேலைசெய்ய வேண்டியிருக்கிறதே?

உலகத்தின் ஆராய்ச்சிக் கூடங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தது போல் இருக்கும் இந்த இடத்தில், ஸோயி போன்ற ஓர் அழகிந பெண்ணின் துணையுடன் இருப்பது அப்படி ஒன்றும் கெடுதல் அல்ல. மேலும், நிசாம் உடனோ, காசாலியுடனோ, தன்னுடைய மனசாட்சியுடனோ விவாதித்துக் கொண்டு சங்கடப்பட வேண்டியதும் இல்லை. நிம்மதியாகவே இருக்கலாம். ஆனால், எத்தனை செல்வம் கிடைத்தாலும், இன்பம் கிடைத்தாலும், ஹாஸானைப் போன்ற ஒருவனிடம் வேலை செய்வது கூடவே கூடாதென்று உமார் எண்ணினான். ஹாஸானிடம் வேலை செய்தால், அவனுடைய அடிமையாகிவிட வேண்டியதுதான். சுதந்திரமான எண்ணங்களுக்கும், அன்புக்கும் அருளுக்கும் அங்கே இடமில்லை.

அவனிடம் வேலை பார்த்தால், தான் செய்ய வேண்டுமென்று நினைக்கிற ஆராய்ச்சிகளைச் செய்ய முடியாது. வானுலகத்தின் மையத்திலே, பூமி அசையாமல் நிற்கவில்லை என்றும், தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வான் வெளியின் ஊடாகச் சுற்றி வந்துகொண்டிருக்கிற தென்றும் தான் கொண்ட கருத்தை நிலை நாட்டுவதற்காக உமார், ஆராய்ச்சி நடத்த வேண்டுமென்று அப்பொழுதுதான் எண்ணத் தொடங்கியிருந்தான்.

“எந்த விதத்திலும் ஹாஸான் என்னை விடுவிக்கப் போவதில்லை. இத்தனை இரகசியங்களையும் தெரிந்து கொண்டுவிட்ட நான் இங்கிருக்க முடியாதென்று கூறிவிட்டால் என்னை இங்கேயே சிறைவைத்து விடுவான். இது உறுதி. இந்த வாரம் முடிவதற்குள்ளே நான் எப்படியாவது தப்பிச்செல்ல வழிபார்க்க வேண்டும்” என்று உமார் முடிவு செய்தான்.

இந்த முடிவுக்கு வந்த பிறகு, அழகு மிகுந்த ஸோயியைப்பற்றி நினைக்கும்போது அவளை இழக்க வேண்டியிருக்கிறதே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.