உமார் கயாம்/45. எரியும் நெருப்பைத் தனிப்பது மதுவே!

45. எரியும் நெருப்பைத் தனிப்பது மதுவே!

சாம்ராஜ்யமெங்கும் இந்தச் செய்தி பரவியது. இஸ்லாத்தின் சான்றை அரசனுடைய வானசாஸ்திரி போட்டிக்கு அழைத்ததாகவும், யாரிடம் சக்தி அதிகம் என்று பந்தயம் போட்டதாகவும், மாய தந்திரத்தினால். உமார் காசாலியை மடக்க முயற்சித்ததாகவும், ஆனால், காசாலி, திருக்குரான் வாக்கியங்களை ஓதி, உமாரை அவமானமடையச் செய்து தன் சக்தியை நிலைநாட்டி விட்டதாகவும், அங்காடிச் சந்தைகளிலே மக்கள் பேசிக் கொண்டார்கள்.

ஆனால், உமார் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தான். இந்தச் செய்திகள் அனைத்தும் கூடுதலாகவும் குறைத்தும் இஷாக் மூலமாக அயீஷா தெரிந்து கொண்டாள்.

ஒருநாள் நிசாப்பூரிலிருந்து நாலாதிசைகளிலும் உள்ள பல நகரங்களுக்கும் தபால் குதிரைகள் கனவேகமாகப் பறந்தன. தூசி கிளப்பிக் கொண்டு பாய்ந்து செல்லும் செய்தியாளர்களை அங்கங்ளேயுள்ள மக்கள் என்ன செய்தியென்று கேட்டார்கள்.

‘சுல்தான் மாலிக்ஷா இறந்துவிட்டார்’ என்ற செய்தி சாம்ராஜ்யமெங்கும் காட்டுத் தீ போலப் பரவியது. வேட்டைக்குச் சென்ற மன்னர், நோய்வாய்ப்பட்டார். மருத்துவர்கள் முயற்சியெல்லாம் பலிக்காமல் உயிர் நீத்துவிட்டார். பால்க்கிலிருந்து பாக்தாது வரையிலே எல்லா நகரங்களிலும் பரபரப்பாயிருந்தது.

கடைகள் அடைக்கப் பெற்றன. அதிகாரமும் சக்தியும் உள்ள அமீர்கள் ராணுவ வீரர்களைத் தங்கள் கைவசப் படுத்திக் கொண்டார்கள். தத்தம் முகாம்களிலே தங்களால் முடிந்தவரை சேனைகளைத் திரட்டிக் கொண்டார்கள்.

கழுகுக் கூட்டை முற்றுகையிட்டிருந்த படைகள் மாலிக்ஷாவின் ஒரு மகனான பார்க்கியருக் என்பவனுடைய சேனையில் வந்து சேர்ந்து கொண்டன. நிசாம் அல் முல்க்கின் மக்கள் பார்க்கியருக்கை ஆதரித்தார்கள். அவனையே அரசனாக்க முயற்சித்தார்கள்.

அதே சமயத்தில், மாலிக்ஷாவின் மற்றொரு மகனான முகமதுவை பாக்தாது தேசத்து காலிப், சுல்தானாகப் பிரகடனம் செய்தார். இதனால், இரண்டு இளவரசர்களுக்கும் ஊடே, கலகம் ஏற்பட்டு உள் நாட்டுக் குழப்பம் உண்டாகியது. அதே சமயம், கழுகுக்கூட்டு முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஹாஸான், உள்நாட்டுக் குழப்பம் நடக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழி துறைகளை ஆராய்வதற்கு யாருக்கும் தெரியாமல் வெளியேறி கெய்ரோவில் உள்ள தன் எகிப்தியத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப் போய்விட்டான்.

ஆயீஷா, காசர் குச்சிக் மாளிகையைவிட்டு வெளியேறி, இஷாக்கையும், ஆயுதம் தாங்கிய பல வீரர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, உமார் இருக்கும் நிசாப்பூர் அரண்மனைக்கே வந்துவிட்டாள்.

நிசாப்பூர் அரண்மனை சிறியதாக இருந்தாலும், உமாருடன் கூடஇருக்க வேண்டுமென்று அவள் வந்து விட்டாள். உள்நாட்டுக் கலகம் தொடங்கிய பிறகு, அரசாங்கத்துப் பொருளாளன் உமாருக்குக் கொடுத்து வந்த சம்பளத்தை நிறுத்திவிட்டான்.

அந்தச் சமயத்தில் இளவரசன் பார்க்கியருக், பாக்தாதுச் சேனையை ஒரு போரிலே தோற்கடித்து விட்டான். கவிஞன் மூ இஸ்ஸி பார்க்கியருக்கின் வெற்றியைப் புகழ்ந்து பரணிபாடி, இளவரசனிடம் நிறையப் பொருள் பெற்றான். அதே சமயம் தன் வருத்தத்தைத் தெரிவித்து இரங்கற்பா ஒன்று மகமதுவுக்கு அனுப்பினான்.

ஒருவேளை, நாளையப் போரிலே, அவன் வெற்றி யடைந்துவிட்டால், அவனுடைய ஆதரவு வேண்டுமே என்று!

அயீஷா, இதைச் சுட்டிக்காட்டி, உமாரை பார்க்கியருக் முகாமிற்குச் செல்லும்படி தூண்டினாள். அங்கே சென்று சோதிடம் கூறினால், வரும்படி கிடைக்கலாமே என்று அவள் யோசனை கூறினாள். இந்த மாதிரிச் சமயத்தில்தான் சோதிடர்களுக்குக் கிராக்கியுண்டே என்று அவள் எண்ணினாள்.

ஆனால், உமார் மறுத்து விட்டான்.

மாலிக்ஷா இறந்தது முதல் அவன் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தான். ரஹீம்-யாஸ்மி-ஜபாரக் இவர்களெல்லாம் போனது போல் மாலிக்ஷாவும் போய்விட்டார்.

இப்படி துக்கம் கொண்டிருந்த அவனுக்குப் பொருள் தேடும் எண்ணம் தோன்றவில்லை.

ஒருநாள், இஸ்லாத்தின் நீதிபதிகளான காஜிகள் உமாரைத் தங்கள் சபைக்கு வரும்படி அழைத்திருந்தார்கள். அவன் புறப்படும்போது, அவனுடைய துணையாராய்ச்சியாளர்கள் ‘சாதிகளுக்குக் கோபம் வரும்படி பேசாதீர்கள்’ என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்.

நீதிபதி சபையின், சுவர்ப்புறத்து ஆசனங்களிலே வரிசை வரிசையாகக் கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

உமாருக்கு நேர் எதிரே, வெள்ளைத் தலைப்பாகைகளுடன் நீதிபதிகளான சாதிகள் அமர்ந்திருந்தார்கள். நீதிபதிகளுடன் வேதாந்தி காசாலியும் உலேமா சபையின் தலைவரும் அமர்ந்திருந்தார்கள். அவை முழுவதும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.

சபை நடுவில் தனக்காக ஒதுக்கப் பெற்ற சிறிய இடத்திலே, உமார் நீதிபதிகளின் முன்னாலே மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.

உமாரை அழைத்தபோது அவர்கள் காரணம் எதுவும் சொல்லிவிடவில்லை. ஆனால், சபைக்குள்ளே நுழைந்ததுமே அவன் தன்னை விசாரிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். அங்கு கூடியிருந்தவர்களுடைய தோற்றமே அதை எடுத்துக்கூறியது, சுற்றியிருந்தவர்களுடைய முகத்திலே அத்தனை நாளும் உள்ளத்துக்குள்ளே மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அத்தனை வெறுப்பும் வெளிப்பட்டுக் காட்சியளித்தது.

‘பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம் கருணையும் இரக்கமும் கொண்ட அல்லாவின் பெயரால்’ என்று வயது முதிர்ந்த ஒரு நீதிபதி எழுந்து கூறினார்.

அடுத்து ஒரு முல்லா, எழுந்து உமாரின்மேல் உள்ள குற்றச்சாட்டுகளைப் படித்தார்.

கேள்வி கேட்பாரற்ற முறையிலே மத விரோதிகளான கிரேக்கர்களின் போதனையின்படி, மத நம்பிக்கையில்லாத இந்த ஆசிரியரால் இயற்றப்பட்ட புத்தகங்களுக்கு முதல் நீதி வழங்கவேண்டும். ஏனெனில் அவை தற்பொழுது, இஸ்லாமிய தேசம்முழுவதும், பள்ளிகளிலே பயிலப்பட்டு வருகின்றன.

பலப்பல விஷயங்களிலே இருந்தும் இவன் மத மறுப்புவாதி என்பது தெளிவாகத் தெரிகிறது. முதலாவதாக, இஸ்லாத்தின் சரியான பஞ்சாங்கத்தை ஒதுக்கிவிட்டு, மத விரோதிகளின் மனப்போக்கின்படி காலத்தைப் புதிதாக அளந்து, புதிய பஞ்சாங்கத்தை நாட்டில் ஏற்படுத்தும்படி சுல்தானைக் கட்டாயப்படுத்தியது ஒரு குற்றம்.

அடுத்துத் தன்னுடைய ஆராய்ச்சிக்கூடத்தை இடுகாட்டின் அருகிலே வைத்துக்கொண்டு, புதைகுழிகளுக்கிடையே அடிக்கடி சென்று இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொண்டது ஒரு குற்றம்.

அடுத்து, ஆண்டவனுடைய அருள்வாக்கை மறுத்து வானவீதியின் மத்தியில் பூமி அமைந்திருக்கவில்லை என்றும், முகமது பெருமான், தோன்றி மறைவதாகக் கூறிய நட்சத்திரங்கள் அசையவேயில்லை என்று கூறிக்கடவுள் நிந்தனை செய்தது ஒரு குற்றம்.

இந்தக் குற்றங்களை விவாதிக்க வேண்டுமென்ற தேவையில்லையென்றும், இந்த மதத்துரோகி, இந்தக் குற்றங்களைச் செய்தான் என்பது நாட்டிலேயுள்ள நம்பிக்கையுள்ளவர் அனைவருக்கும் தெரிந்த விஷயமென்றும், இப்பொழுது விவாதிக்க வேண்டியதெல்லாம், இந்த மதத்துரோகியினுடைய புத்தகங்களுக்கும், இந்தப் புத்தங்களை எழுதிய ஆசிரியரான உமார்கயாமுக்கும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்பதேதான். நீதிபதிகள் ஆராய்ந்து சரியான தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்லி நிறுத்தினார் அந்த முல்லா.

முல்லா உட்கார்ந்ததும், பல்கலைக் கழகத்திலே டாக்டர் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் எழுந்து, முல்லா கூறிய குற்றச்சாட்டுகளை யாரும் மறுப்பதற்கில்லையென்றும்,

ஆனால், பலரும் அறியாத ஒரு பெருங்குற்றம் மற்றொன்று இருக்கிறதென்றும் கூறினார். எல்லோரும் ஆவலுடன் அவர் கூறப்போவதை எதிர்பார்த்தார்கள்.

‘உமார் கயாம் அவ்வப்போது நாலடிப் பாடல்கள் பல எழுதியிருககறான. அவை ஒரு புத்தகமாகத் தொகுக்கப் படவில்லை. ஆனால், மூலை முடுக்குகளிலேயுள்ள பலர் இவற்றை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். திருக்குரானுக்குச் சவால்விடும் பாடல்களாக இதைக் கையாளும் சிலரும் இருக்கிறார்கள்,

இந்தப் பாடல்கள் சிலவற்றை நான் தொகுத்து வைத்திருக்கிறேன். நம்முடைய மதம், கலாசாரம், பழக்கவழக்கம் இவற்றிற்கெல்லாம் விரோதமான முறையிலே இந்தப் பாடல்கள் எழுதப்பெற்றுள்ளன. சபையினர் அனுமதித்தால் மத விரோதமான இந்தப் பாடல்களைப் பாடிக் காண்பிக்கிறேன். அதே சமயம், திருமறை கேட்டவர்கள் செவிகளிலே படும்படி என் வாயால் இந்தத் தீயயாடல்களைப் பாடும்படி நேரிட்டதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

‘பாடு, பயப்பட வேண்டாம்’ என்று அந்த முதிய நீதிபதி கூறினார்.

அந்த டாக்டர், உமார் கயாமின் ருபாயத் பாடல்களைப் பாடிவந்தார்.

யாஸ்மியைப் பற்றியும், மதுவைப் பற்றியும், விதியைப் பற்றியும், வாழ்வின் சுகதுக்கங்களையும் தான் எழுதிய பாடல்களைக் கேட்டுக் கொண்டு, உமார் புன்சிரிப்புடன் இருந்தான்.

‘இவையெல்லாம் பழிக்கப்பட்ட பாவங்களைப் பற்றியவை; ஆனால், இதோ இது, இந்தப்பாட்டு தெய்வ நிந்தனையானது, பாருங்கள்.

‘அருள்க மன்னிப்பருள் கென்றே யாமும் கூவித் தொழுகின்றோம்! அருளும் உன்றன் மன்னிப்பே யாண்டுச் சென்று சேர்ந்திடுமோ?’

உமார் வியப்புடன் நிமிர்ந்து, ‘இந்தப் பாடல் நான் எழுதியதல்ல’ என்றான்.

ஒருவரும் பதில் பேசவில்லை. காசாலி, வெறுப்புடன் உமாரைத் திரும்பிப்பாராமலே எழுந்து, கதவு நோக்கிச் சென்று வெளியேறிவிட்டான். அவர்களுடைய தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை உமார் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

உமார் எழுந்திருந்தான். அவனை நோக்கி உலேமாத்தலைவர், ‘உமார்’ நீ எதுவும் பேசவேண்டுமா?’ என்று கேட்டார்.

‘ஆம், சற்றுமுன் பாடியது என்னுடைய பாட்டல்ல. ஆனால், படிக்கப்படாத என்னுடைய பாட்டொன்று இதோ இருக்கிறது. இதைக் கேளுங்கள்:

    இறுதித் தீர்ப்பு நாளன்றே
    எழுமக் காலைப் பொழுதினிலே
    அருகில் உள்ள பொருளோடு
    யாமும் எழுவோம் என்றிருந்தால்

    நறியமதுவும் அழகுடைய
    நங்கை நல்லாள் ஒருத்தியும் என்
    அருகில் வைத்துப் புதைத்திடுவீர்
    அதுவே விருப்பம் ஐயன்மீர்!

இது நான் முன்பே பாடிய பாட்டல்ல. ஆனால், இந்தச் சமயத்தில் என்னுள்ளத்தில் எழுந்த கவிதையிது. இதுவே நான் உங்களை வேண்டுவதும்!’

கோபம்தான் அவனுக்குப் பதிலாகக் கிடைத்தது. உலேமாத் தலைவர் அவருடைய கையை உயர்த்தி, நீ வெளியே சென்றிரு. தீர்ப்பைப் பிறகு தெரிவிக்கிறோம் என்றார். காவலர்கள் உமாரை மசூதிக்கு அழைத்துச் சென்றார்கள், போகும் வழியிலே, ஒரு சாமியார், ‘கழுகுக்கூட்டிலே பாதுகாப்பு இருக்கிறது’ என்று மெதுவாகக் கூறினான்.

உமார் அதைக் காதிலே போட்டுக் கொள்ளவில்லை. மசூதியின் உள்ளேயுள்ள ஒரு கல்லின்மேல் போய் உட்கார்ந்தான். கைதியான அவனைச் சுற்றிக் காவலர்கள் நின்றார்கள். ஒரு நாள் அவனைப் பாதுகாப்பதற்காக நின்ற காவலர்கள், இன்று அவன் பறந்தோடிவிடாமல் பார்த்துக் கொள்ளச் சுற்றி நின்றார்கள்.

தீர்ப்பின் முடிவைத் தெரிவிப்பதற்கு உலேமாத்தலைவரே வந்தார்.

‘மத நம்பிக்கையில்லாத ஒருவனால் இயற்றப்பெற்றவையாகக் கருதப்பெற்று உன்னுடைய புத்தகங்களெல்லாம் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப் பெற்றன. பள்ளிக்கூடங்களிலே அவை தவிர்க்கப்படும். மீதியுள்ளவை எரிக்கப்படும்.

‘விண்மீன் வீடு பறிமுதல் செய்யப்பெற்று நிசாப்பூர் சட்டமன்றத்துக்கு உரிமையாக்கப்பட்டது. அக்கட்டிடச் சுவரைத்தாண்டி அடியெடுத்து வைக்கவோ, நிசாப்பூர் அரசாங்க எல்லைக்குள்ளே உள்ள மக்களிடம் பேசுவதற்கோ உனக்கு உரிமைகிடையாது தடுக்கப் பெற்றிருக்கிறது.

‘சரி! எனக்கு என்ன தீர்ப்பு?’

தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே சிறிதுநேரம் யோசித்துவிட்டு, அந்த உலேமாத்தலைவர், ‘ஆண்டவனுடைய சோதனையால் துன்பமுற்றுப் பைத்தியம் பிடித்துத் திரிகறாய் என்று சில நீதிபதிகள் கருதுகிறார்கள். அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது. நீ சுதந்திரமாக எங்கும் இருக்கலாம். ஆனால், நீ நிசாப்பூரையும் இஸ்லாமியக் கல்லூரிகளையும் விட்டுவிலகிச் சென்று விடவேண்டும்.’

‘எத்தனை நாளைக்கு?’

‘என்றென்றும்!’

காவலர்கள் அவனைவிட்டுப் போய்விட்டார்கள். உமார் அங்கிருந்து எழுந்து நடந்தான்.

‘மதத்துரோகி நம்பிக்கையில்லாதவன்!’ என்று யாராரோ ஏதேதோ கூறி வைதார்கள். ஒன்றையும் கவனிக்காமல், புத்தக வியாபாரிகள் இருக்கும் வீதிவழியே சென்றான்.

ஊற்றுக்கேணியின் அருகிலே வந்தான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாலே, அந்த இடத்திலே அவன் யாஸ்மிக்காகக் காத்திருந்தான்.

அப்பொழுது, யாராரோ அந்த வழியிலே போனவர்கள் எல்லோரும் விளக்கொளியில் வந்து நகர்ந்துமறையும் வெறும் நிழல்கள்போல் தோன்றினார்கள். இன்றும் பலர் அந்தப் பாதையில் நடமாடினார்கள். இப்பொழுது அவர்கள் உண்மையாகவும் தான் எவ்விதக் குறிக்கோளும் இல்லாமல் அசையும் ஒரு நிழல் போலவும் தோன்றியது. நெடுநேரம் அங்கிருந்துவிட்டு, அயீஷாவைத் தேடிவந்தான்.

அயீஷா அழுது கொண்டிருந்தாள். அவனுக்காக அழக்கூடியவள் அவள் ஒருத்திதானே! அவளுக்குப் பயமாகவும் இருந்தது. இங்கு மூலைமுடுக்கெல்லாம் மக்கள் உமாரைப்பற்றிப் பேசிக்கொள்வதைப் பார்த்தால் எந்த நேரத்தில் என்ன நேரிடுமென்று கூறமுடியாது.

எனவே அவள், இருக்கின்ற சில பொருள்களையும் பொன்னையும் எடுத்துக் கொண்டு, தன்னோடு காசர்குச்சிக் அரண்மனைக்கு வந்து விடும்படி கேட்டுக் கொண்டாள்.

ஆனால், உமாருக்கு நிசாப்பூரை விட்டுப்போக மனமில்லை. அவன் தொடங்கி வைத்திருந்த ஆராய்ச்சிகளும், செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகளும் எராளமாக இருந்தன. எல்லாம் விண்மீன் வீட்டிலே அறைகுறையாகக் கிடந்தன.

இருட்டு வரும் நேரம், இஷாக் ஒடி வந்தான். ‘தலைவரே! ஏராளமான மக்கள் விண்மீன் வீட்டைநோக்கித் திரண்டு செல்கிறார்கள். அவர்களிலே, சிப்பாய்களும், முல்லாக்களும், இன்னும் ஒன்றுமில்லாதவர்களும் பலப்பலர்.

அவர்கள் உம்பெயரைக் கூறிப்பழித்துக் கூவிக்கொண்டே போகிறார்கள். நகரத்துக் கோட்டைக் கதவுகளை உடைப்பதற்கு முன்னால், முடிந்தவரை பொருள்களை எடுத்துக் கொண்டு காசர்குச்சிக்கு ஓடிவிடுவோம், புறப்படுங்கள்’ என்றான்.

‘ஒரு குதிரைக்குச் சேணம் பூட்டி, ஆயத்தமாக்கு’ என்றான் உமார்.

குதிரையின் மேல்ஏறி விண்மீன் வீட்டை நோக்கிப் பறந்தான். மரங்களமைந்த பகுதியைவிட்டு வெளியே வந்து நெருங்கும்போது, எதிரிலே ஒரே தீப்பிழம்பாகக் காட்சியளித்தது. அவனுடைய புத்தகங்கள், குறிப்பேடுகள், ஆராய்ச்சிக் கருவிகள் எல்லாம் நெருப்பிலே எரிபட்டுக் கொண்டிருந்தன.

அங்குமிங்குமாக, அங்கேயிருந்த பொருள்களைக் கொள்ளையிட்டுச் செல்லும் கூட்டம் வேறு.

உமார் பார்த்துக் கொண்டே இருந்தான். ஏபிரேட்ஸ் ஆற்றங்கரையிலே யாஸ்மி இறந்த பிறகு, கூடாரம் எரிந்து கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்தது.

யாஸ்மி, இந்த வீட்டுக்கு விண்மீன் வீடு என்று பெயர் வைத்தாள். இங்கே தன்னோடு இருக்க வேண்டுமென்று எவ்வளவோ ஆசைப்பட்டாள். விதி இருக்க விட்டதா? இப்பொழுது அவளும் இல்லை. விண்மீன் வீடும் இல்லை.

நெருப்பு அடங்கியது, மக்களும் கலைந்து போய்விட்டார்கள். உமார் உள்ளே சென்று பார்த்தான், ஒன்றுமில்லை. இனி அவன் அங்கிருந்து என்ன பயன்? திரும்பிச் செல்வதற்காகக் குதிரையைத் தேடினான். யாரோ அதையும் திருடிச்சென்று விட்டார்கள். அவன் நடந்து கோட்டைக் கதவின் அருகில் வந்தான். கதவு மூடப்பட்டிருந்தது. காவலர்கள் அவனை விரட்டினார்கள். இனித் திறக்கப் பட்டிருந்தாலும். அவன் உள்ளே நுழைய முடியாது. வெளியிலே கால்போன போக்கிலே நடந்து ஒரு கிராமத்திற்கு வந்தான். அங்கே ஒரு குடிசையிலே சிரிப்புச் சத்தம் கேட்டது.

உமார் சென்று கதவைத் தள்ளினான், அங்கே ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் வெளிச்சத்திலே சுவர் ஓரத்திலே அடுக்கியிருந்த சாடிகள் தெரிந்தன். கூடத்தின் மத்தியிலே ஓர் இளைஞன் வீணை வாசித்துக் கொண்டிருந்தான். முக்காடு போடாத ஒரு குடியானவப் பெண் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தாள். ஒரு கிழவன், சாடியில் இருந்த மதுவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

“கவனம், சிந்திவிடாதே?” என்று கூறிக்கொண்டே உமார் அருகில் சென்றான். அந்த மதுப்பாத்திரத்தை வாங்கிச் சுவைத்துக் குடித்தான் உமார். மூன்று பேரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஐயா! வழி தவறிவிட்டீரா!?’ என்று கிழவன் கேட்டான்.

உமார், மதுச்சாடியின் அருகிலே நகர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

படிமம்:Page363 உமார் கயாம் (புதினம்).jpg

“இதோ பாருங்கள்! என்னோடு படுத்திருந்த மதம் என்ற மனைவியையும், கல்வி என்ற கண்ணாட்டியையும் மணவிலக்குச் செய்துவிட்டேன். திராட்சைக் கொடியாளின் மகள் மதுக்குட்டியை மறுமணம் செய்து கொண்டுவிட்டேன்” என்றான்.

‘விசித்திரமான பெயருள்ள பெண்கள்!’ என்று கூறி அந்தக் குடிபானவப் பெண் சிரித்தாள்.

‘சிரிக்கும் பெண்ணே வாய் திறந்து பாடு! இது போன்ற மணவிலக்கு என்றுமே நடக்காது!’ என்று சொல்லிவிட்டு மீண்டும் மதுவையூற்றிக் குடித்தான்.

குடித்துக் கொண்டிருந்தபடியே உமார் தூங்கிவிட்டான். விளக்கையணைத்துவிட்டுப் பாடிக் கொண்டிருந்த பெண்ணும் மற்றவர்களும் வீட்டின் மறு பகுதிக்குச் சென்று படுத்துத் தூங்கிவிட்டார்கள்.

இருட்டில் ஒருமுறை விழித்தெழுந்த உமார். மதுச்சாடியைக் கவிழ்த்துப் பார்த்தான். ஒரு சொட்டு மதுக்கூட இல்லை. மறுபடியும் கீழே விழுந்து படுத்துத் தூங்கிப் போனான்.