உமார் கயாம்/46. அடிமைப் பெண்ணின் ஆசைத் திட்டம்!

46. அடிமைப் பெண்ணின் ஆசைத் திட்டம்!

‘தொழுகைக்கு வாருங்கள்! தொழுகைக்கு வாருங்கள்’ என்று பள்ளிவாசல் கோபுரத்திலிருந்து கூவும் ஒலி கேட்டது.

அந்தக் கிழவன், உமாரை எழுப்பினான்.

‘ஐயா! விடிந்து விட்டது, தொழுகைக்குச் செல்லவேண்டும், எழுந்திருங்கள்’ என்றான்.

‘அவனைக் கவனிக்காதே! அவன் மறைவிடத்திலிருந்து உன்னைக் கூப்பிடுகிறான். கோபுரத்தின் மறைவிலிருந்து உன்னை அழைக்கிறான். மறைந்திருக்கும் ஆபத்துக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுத் திரும்பப் படுத்துக் கொண்டான்.

குடிப்பதும், தன் உள்ளத்திலே எரியும் தீயை மதுவால் அணைப்பதும், பேசுவதும், தூங்குவதுமாக அந்தக் குடிசையிலே பல நாட்களைக் கழித்தான். நாட்கள் ஓடுவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை.

கவலையில்லாமல் குடித்துக் குடித்து நாட்களைப் போக்கிக் கொண்டிருந்த உமாருக்கு ஒருநாள் கவலைப்படும்படியான நிகழ்ச்சி ஏற்பட்டது. அயீஷாவும் இஷாக்கும் அவனைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்கள். அயீஷா கோபத்தோடு பேசினாள்.

‘இது என்ன பைத்தியக்காரத்தனம், எத்தனை வாரங்களாக உங்களைத் தேடுகிறோம்? உங்களுடைய விண்மீன் வீட்டை நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டார்கள். நிசாப்பூர் அரண்மனையைக் கடன்காரர்கள் கைவசப்படுத்திக் கொண்டு விட்டார்கள்!’ என்றாள்.

‘எல்லாம் நேற்று நடந்தசெய்தி, நெருப்பு எரிந்து தணிந்து, சாம்பலும் குளிர்ந்து போய்விட்டதே!’ என்று உமார் கவலையில்லாமல் பேசினான்.

காசர்குச்சிக் அரண்மனையையும் எடுத்துக்கொண்டு விட்டார்கள். புதிய சுல்தானுடைய சபையிலே உங்கள் பெயர் ஏளனத்துக்கு உரியதாகிவிட்டது. உங்களுடைய பஞ்சாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பழைய கணக்கை அமுல் நடத்துகிறார்கள்.’

‘என்ன, என்னுடைய பஞ்சாங்கத்தையா?’

‘ஆம்! அதை உதறித் தள்ளிவிட்டார்கள். பெண்கள் எங்கு கண்டாலும், என்னைப் பார்த்து, ‘அதோ’ பார்! ‘உமார்கயாமின் அடிமை’ என்கிறார்கள். கவிஞன் மூ இஸ்ஸியினுடைய வைப்பாட்டிகள் பல்லக்கிலே பவனி வருகிறார்கள். அவர்களுக்கு வேலை செய்ய எத்தனை அடிமைகள்.

எனக்கு, இந்த ஒரே குதிரையும், இஷாக்கும்தான் இருக்கிறார்கள். நீங்கள், இங்கே ஒரு குடியானவப் பெண்ணோடு குடியிலே புரளுகிறீர்கள்!’ என்று தன் குறைகளைக் கூறினாள்.

‘போதும், அயீஷா என் பெயருடன் சேர்த்து, இனிமேல் எந்தப் பெண்ணும் உன்னை ஏளனம் செய்ய வேண்டாம். இனிமேல், மூ இஸ்லியினுடைய மயில்களின் தோகைகள் உன்னுடைய கூந்தலைக் காட்டிலும் அழகாக இருக்கம் போவதில்லை என்று கூறிவிட்டு,

‘இஷாக், உன்னிடம் ஒரு பெட்டி நிறைய வெள்ளி நாணயங்கள் இருக்கின்றன அல்லவா?’

‘அதன் மதிப்பு அல்லா ஒருவனுக்குத்தான் தெரியும்’ என்று அயீஷா முணுமுணுத்தாள்.

‘அயீஷாவிடம், ஒரு இரும்புப்பெட்டி நிறையப் பொன்னும், மற்ற பொருள்களும் இருக்கின்றன அல்லவா?’ என்று கேட்டான்.

இஷாக்கும், அயீஷாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தங்கள் எண்ணத்தை உமார் அறிந்துகொண்டு விடுவான் என்பது அவர்கள் எதிர்பார்த்ததே! ஆனாலும், அவன் கேட்டபோது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘ஆம்! பெட்டி நிறையப் பொன்னும், நகைகளும் அவளிடம் இருக்கின்றன.’

‘சரி! ஐயா கிழவரே! நீங்கள் சாட்சி, நிசாப்பூர் உலேமாத் தலைவரிடம் போய் நீங்கள் சாட்சி சொல்லுங்கள். என்னுடைய எல்லாச் சொத்துக்களையும், என்னுடைய அடிமைப் பெண்ணான அயீஷா வுக்கும் என் வேலைக்காரன் இஷாக்குக்கும் உடைமையாக்குகிறேன், அழைத்துச் செல்லுங்கள்’ என்றான் உமார்.

இதைக் கேட்டதும், அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். இஷாக் பரபரப்புடன், ‘தலைவரே! தங்களுக்கு?’ என்று கேட்டான்.

அவனுக்கு என்று என்ன இருக்கிறது? அவனுடைய புத்தகங்கள் தடைப்படுத்தப்பட்டுவிட்டன. அவனுடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் தீக்கிரையாகி விட்டன. அவனுடைய பஞ்சாங்கம் அகற்றப்பட்டுவிட்டது.

அவனும் இஸ்லாமியக் கல்லூரிகளிலிருந்து நாடு கடத்தப்பட்டான். அவனுக்கு என்று என்ன இருக்கிறது?

‘அந்த உலேமாத் தலைவரிடம், நான் என் ஒட்டகச்சாரியுடன் அலெப்போ நகருக்குப் போவதாகச் சொல்லுங்கள். நீங்கள் நிசாப்பூருக்குப் போங்கள். எல்லோரும் போங்கள்.’

அவர்கள் குதிரைகளிலே ஏறிக் கொண்டார்கள். அயீஷா அழுதாள்.

‘உனக்கு என்ன வந்துவிட்டது?’ என்று இஷாக் கேட்டான்.

‘தெரியவில்லை! ஆனால், அந்தப் பொன்னெல்லாம் உண்மையில் எனக்குத்தானா?’

‘உறுதியாக! தலைவர்தான் கூறிவிட்டாரே!’

பிறகு, மெதுவாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டர்ள். உலேமாத் தலைவரின் வீட்டுக்குப் போகும் வழியில், அங்காடிச் சந்தையில், பட்டுத் துண்க்கடையில் கூடிநின்ற முக்காடிட்ட பெண்களை எட்டிப் பார்க்காமல் இருக்க அவளால் முடியவில்லை.