உமார் கயாம்/47. தரகன் வந்து கூவுகிறான்

47. தரகன் வந்து கூவுகிறான்

ஒட்டக மயிரினால் ஆன ஒரு கிழிந்த மேலங்கியைப் போட்டுக்கொண்டு வெறுங்காலால் நடந்துசென்று கொண்டிருந்த உமார், இருட்டிலே, கொரசான் பாதையிலே தட்டித் தட்விப் போய்க் கொண்டிருந்தான். வழிப்போக்கர் தங்கும் விடுதி ஒன்றின் எதிரிலே, யாரோ நெருப்புக்காய எரித்த நெருப்புக் கிடந்தது.

அந்த அமுங்கிக் கிடந்த நெருப்புக்கு நேரே தன் பாதங்களை நீட்டிக் குளிர் போக்கிக் கொண்டிருந்தான்.

சற்று சூடேறியதும் சுற்றிலும் கிடந்த காய்ந்த இலைகளைப் பொறுக்கி வந்துபேர்ட்டு, மேற்கொண்டு எரித்துக்குளிர் காய்ந்து கொண்டிருந்தான்.

காலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு குதிரை ஓடிவரும் சத்தம் கேட்டது.

விடுதியின் அருகில் சத்த்ம் கேட்டது. விடுதியின் அருகில் வந்ததும் குதிரையைவிட்டு இறங்கி, ஒரு வீரன் அவன் அருகிலே வந்தான்.

‘ஏ! காவல்காரா! இது அலெப்போ நகருக்குப் போகும் பாதைதானா?’

‘ஆம்!’

‘ஒ! அல்லா! நிசாப்பூரிலிருந்து எவ்வளவு தூரம் வருகிறது.’ குவாஜா உமார் கயாம் அவர்கள் இந்தப் பாதையாகத் தன் ஒட்டகங்களுடன் பயணம் செய்து கொண்டு இருக்கிறாரா? நீ பார்த்தாயா?’

உமார் பதில் சொல்வதற்கு யோசித்தான். அற்குள்ளே வெளியில் வந்த் விடுதிக்காரன் ‘இங்கே ஒரு வியாபாரிதான் தங்கியிருக்கிறார், அவர் குவாஜாவும் அல்ல; கயாமும் அல்ல!’ என்றான்.

‘நான்தான்’ என்றான் உமார், சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.

‘ஒ, அல்லா! ஒரு காலிப் அவர்களுடைய கடிதத்தைத் தாடி கூடவெட்டிக் கொள்ளவியலாத ஓர் ஏழைக் காவற்காரனிடம் கொடுக்க வேண்டுமா? இது என்ன தெரியுமா? கெய்ரோ நகரத்துக் காலிப் அவர்கள், தன்னுடைய சாதாத்தைக் கணிப்பதற்காக அறிஞர் உமார் கயாமை வரச்சொல்லி எழுதிய கடிதம். நான் அவரை, கெய்ரோ ராஜசபைக்குச் சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்ல வந்த தூதுவன்.’ என்றான்.

‘உண்மையாகவா?’ என்று விடுதிக்காரன் வியப்புடன் கேட்டான்.

தன் இடுப்பிலிருந்து, முத்திரையிட்ட ஓர் உறையை எடுத்துக்காட்டி, ‘பார், சந்தேகந்திரப் பார்’ என்றான் அந்த ஆள்.

‘உண்மைதான்! கழுகுக்கூட்டுத் தலைவன் ஹாஸான் உங்கள் காலிப்புடன் இருக்கிறான் என்பதும் உண்மைதானே!’ என்று உமார் கேட்டான்.

அதைத் தெரிந்துதொள்ள நீ யார்? நீ சொன்னது உண்மைதான், ஆனால்...நீ...’

பேனாவும் மையும் கொண்டு வா!’ என்று விடுதிக்காரனுக்குக் கட்டடளையிட்டான் உமார்.

‘பேனாவை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்த விடுதிக்காரன், அவனுக்கு எழுதத் தெரிந்தால் அவன் சாதாரண காவற்காரனாக இருக்க மாட்டான்’ என்று கூறினான்.

உமார் கடித உரையை வாங்கினான். அது நீளமாகவும், கனமாகவும் இருந்தது. அதைத் திருப்பி அதன்மேல் எழுதினான்.

‘ஆழ்ந்த நூலின் ஆராய்ச்சி அதனை வாழ்வாய்க் கொண்டிருந்தேன் வாழ்ந்த வாழ்க்கை நூலதனை வாளால் அறுத்துக் கெடுத்தாரே! பாழும் விதியின் செய்கையடா பாடும் மனிதப் பொம்மையடா தாழ்ந்த என்னை விற்பதற்கே தரகன் வந்து கூவுகிறான்!’

இதையெழுதி அவனிடம் கொடுத்தான்.

கடிதத்தைத் திரும்ப வாங்காமல், அந்த மனிதன், தாங்கள் கடிதத்தைப் பிரித்துப் படிக்கவில்லையே!’ என்று கேட்டான்.

‘அதில் என்ன எழுதியிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்!’ அதை அவன் வாங்கிக் கொண்டு திரும்பினான். அவன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான், ‘இவன்தான் உமாராக இருக்க வேண்டும்.

மாயவித்தையிலும், விதியையறிவதிலும் திறழையுள்ளவன் என்று சொன்னர்ர்களே! கடிதத்தைப் படிக்காமலே பதில் எழுதிக் கொடுத்து விட்டானே!’ ஆச்சரியப்பட்டுக் கொண்டே அவன் போய்விட்டான்.

காலை மலர்ந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்தன. இந்த மாதிரி நேரத்தைப்பற்றி யாஸ்மி என்ன சொன்னாள்.

‘நட்சத்திரங்கள் மறையும் நேரத்திலே உள்ளத்திலே காதலுடன் தனியாக இருப்பது மிகக் கொடுமையான துன்பம்’ என்றாள்.

யாஸ்மி இப்பொ எப்படி இருப்பாள். கண்ணுக்குத் தெரியாத திசையிலே ஒரு நிழலாக ஒட்டிக் கொண்டு இருப்பாளா? ரஹீம்! ரஹீமுடைய் ரத்தம் மண்ணுக்குள்ளே பாய்ந்து மறைந்துவிட்டது. மறுபடியும் அது ஓடிவரவா போகிறது. ஜபாரக்! மாலிக்ஷா! நிசாம்!

இவர்களைப் பற்றியெல்லாம் நினைக்கக் கூடாது. இவர்களெல்லாம் திரும்பி வரவா போகிறார்கள்? சற்று முன்னாலே,வந்தானே தூதுவன், அவனைப்போல அவர்கள் குதிரைகளிலே ஏறி இந்தக் கொரசான் பாதையிலே வரமுடியுமா?

சிந்தனையை நிறுத்திவிட்டு, உமார் எழுந்து முரசைத் தட்டினான். விடுதியில் இருந்த வியாபாரியும் ஆட்களும் எழுந்தார்கள்.

தங்கள் மிருகங்களின்மேல் முட்டை ஏற்றி ஆயத்தமானார்கள். அவர்களுடைய ஒட்டகச்சாரியின் முன்னே உமார் நடக்கத் தொடங்கினான்.

“ஓய், காவற்காரா! ஒட்டகச் சாரி எங்கே போகிறது? என்று கேட்டான் அந்த வியாபாரி.

“இரவு போன இடத்திற்குப்போகிறது.”

“அந்த இடம் எங்கே இருக்கிறது.”

“எங்கும் இல்லை.”

உமார் நடந்துகொண்டிருந்தான்.

- முற்றும் -