என் பார்வையில் கலைஞர்/கலைஞருக்கு எதிராக ஒரு செய்தி இயக்கம்

கலைஞருக்கு எதிராக
ஒரு
செய்தி இயக்கம்

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை வானொலி நிலையத்தில், மூத்த செய்தியாளராகப் பொறுப்பேற்றேன். அப்போது செய்தி ஆசிரியர் நீண்ட கால மருத்துவ விடுப்பில் இருந்ததால் அவரது பணியையும் கவனித்துக் கொண்ட எனக்கு, கலைஞருக்கு எதிராக ஒரு செய்தி இயக்கத்தையே செயல்படுத்த முடிந்தது.

கலைஞர்தான் என்னை மாற்றி விட்டார் என்று திட்ட வட்டமாக நம்பினேன். பத்து நிமிடத்திற்குள் அவரது செய்தியைத் தொலைபேசி மூலமே உள்வாங்கிக் கொண்டு வெளியிட்ட என்னை, தமிழனைத் தமிழன்தான் ஆள வேண்டும். இந்த வகையில் கலைஞரே முதல் தமிழன் என்று மனப்பூர்வமாக நினைத்து, இதனைத் தொலைக்காட்சியில் சொல்லாலும், செயலாலும் கடைப்பிடித்த என்னை, கலைஞர் கடைத் தேங்காய் ஆக்கி விட்டாரே என்ற கோபம்.

நான் பொறுப்பேற்ற இரண்டு மாத காலத்திற்குள், டிசம்பர் மாத மத்தியில் நான் எழுதிய வேரில் பழுத்த பலா என்ற இரண்டு குறுநாவல்களை உள்ளடக்கிய படைப்பிற்கு, சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது. இதனால் பல பத்திரிகைகள் என்னைப் பேட்டி கண்டன.

சென்னை தொலைக்காட்சியில், திமுக அரசு எனக்குத் தொல்லை கொடுத்ததாக, அத்தனை பத்திரிகைகளிலும் தெரிவித்தேன். இதர கட்சிகளும் ஆளுக்கு ஆள் நாட்டாண்மை செய்ததாகவும் குறிப்பிட்டேன். தினமலரைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் இந்தப் பகுதியைப் போடவில்லை. ஆனால், தினமலர் இந்தப் பகுதியை மட்டும் பெரிய செய்தியாகப் போட்டது. கலைஞர் நிச்சயம் இதைப் படித்திருக்க வேண்டும். அப்போது, குங்குமம் வார இதழில் எனது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக வெளியிடப்படுவதாக இருந்தது. அது வெளி வரவில்லை. நானும் அதை எதிர் பார்க்கவில்லை. ஆனாலும், குங்குமத்தில் பராசக்தி பதிலில் என்னை 'இலக்கிய ஜெயலலிதா’ என்று வர்ணிக்கப் பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இன்னொரு தாக்குதலைத் தொடுத்தேன். தொடுத்ததாக நினைத்தேன். தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான வலம்புரி ஜானின் மகள் திருமணம் சென்னை எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் நடைபெற்றது. முதல்வர் கலைஞர்தான் திருமணத்தை நடத்தி வைத்தார். வலம்புரி ஜான், லேட்டஸ்ட் விவரம் தெரியாமல், என் பெயரையும் வாழ்த்துரையில் சேர்த்திருந்தார். பெரும்பாலும் கழகத் தொண்டர்களே அதிகமாக இருந்தார்கள். தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள், பிரமுகர்கள் கூடியிருந்தார்கள். மரபுக் கவிதையில் கொடி கட்டிப் பறக்கும் கவிஞர் இளந்தேவன், வரவேற்புரை ஆற்றியதோடு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து பேச வைத்தார்.

என் முறை வந்த போது, நான் கறுப்புத் தங்கம் என்றும், சாகித்ய அகடாமியின் விருது பெற்ற தகுதி மிக்க எழுத்தாளர் என்றும் தெரிவித்தார். கூட்டத்தினர் கை தட்டவில்லை. ஏனென்றால், இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தினமலர் பத்திரிகையில், கலைஞருக்கு எதிராக ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அவர்தான் என்னை சென்னை வானொலிக்கு தூக்கியடித்தார் என்று குறிப்பாகச் சொல்லியிருந்தேன். இதை தெரிந்து வைத்திருந்த தொண்டர்கள், பேசாமல் வீறாப்போடு முதுகுகளை நிமிர்த்தினார்கள். சிலர் ஏனோதானோ என்று பார்த்தார்கள். பலர் நான் சீக்கிரமாகப் பேசி விட வேண்டும் என்பது மாதிரி கடிகாரத்தைப் பார்த்தார்கள். மைக் அருகே வந்த நான் இப்படி வாழ்த்தினேன்.

“தந்தை பெரியாருக்குப் பிறகு, தமிழகத்தில் முழுமையான தமிழன் இன்னும் பிறக்கவில்லை. தோழர் வலம்புரி ஜானின் மகளும், மருமகனும் ஒரு தமிழ்க் குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால் நாடே நன்றி தெரிவிக்கும்.”

ஒரு நிமிடத்தில் பேசி முடித்து விட்டு, நான் மேடையை விட்டு இறங்கினேன். கலைவாணர் அரங்கில் கலைஞரைக் காணச் சென்ற என்னுடன், கடுமையாக வாதிட்ட காவற்துறை உயர் அதிகாரியான அதே பாலச்சந்திரன் என்னை ஆச்சரியாகப் பார்த்தார். இரண்டு மூன்று மாத இடைவெளிக்குள் நான் ஏன் அப்படி மாறினேன் என்பது அவருக்கு தெரிந்திருக்காது. ஆனாலும், உடனடியாக அவர் இயல்பான நிலைக்குச் சென்றுவிட்டார். இப்போது கூட, கலைஞரோடு சேர்த்து அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம், எனக்குக் கூச்சமாகவே இருக்கும்.

நானும், இன்னும் ஒரு சிலரும் பேசி முடித்த பிறகு, இறுதியாகக் கலைஞர் எழுந்தார். அவர் என்னைப் பற்றி என்ன பேசப் போகிறார் என்பதை அறிவதற்காக அந்த வளாகத்தை ஒட்டி நின்று கொண்டிருந்தேன். பொதுவாக, எதிராளிகளுக்குப் பொதுக் கூட்டங்களில் நாசூக்கான குட்டு வைப்பதில் கலைஞர் நிபுணர். அழைப்பிதழை எடுத்துப் படித்தார். அதிலுள்ள பெயர்களுக்கு முன்னால் தம்பி, உடன் பிறப்பு போன்ற வார்த்தைகளை அடைமொழியாக்கி விட்டு, அந்தப் பெயர்க்கு உரியவர்களைச் சுட்டிக் காட்டினார். அழைப்பிதழில் என் பெயர் இருந்தாலும், சமுத்திரம் அவர்களே என்று அவர் சொல்லவில்லை. இதுதான் என் பேச்சுக்கு அவர் காட்டிய குறைந்தபட்ச எதிர்ப்பு.

நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். செல்வி. ஜெயலலிதா கலந்து கொள்ளுகிற இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் கலைஞரை மறைமுகமாகச் சாடியது போல், அவரைச் சாடினால் என்ன நடந்திருக்கும்? அவரது அதிமுக உடன் பிறப்புகள் சும்மா இருந்திருப்பார்களா? அல்லது இவர்தான் சும்மா இருக்க விட்டிருப்பாரா? இம்பீரியல் ஓட்டலை நான் பார்க்கும் போதெல்லாம், கலைஞரின் மென்மையான எதிர்ப்பும், கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டைக் காத்து நின்ற திமுக தோழர்களின் பண்பாடும்தான் நினைவுக்கு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா அல்லாத மற்றவர்கள் முதலமைச்சர்களாக இருந்தாலும், நான் தாக்கப்படாமலோ அல்லது வசவு வாங்காமலோ திரும்பி இருக்க முடியாது.

இந்தச் சமயத்தில், பின்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கேயே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஜெயலலிதா முதல்வராக மாறிய பிறகு, கோவையில் புதிய விமான நிலையம் ஒன்றை துவக்கி வைத்தார். வானொலிச் செய்தியாளராக அங்கே சென்றிருந்தேன். அப்போது காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவிற்கும். சில கசமுசாக்கள். மத்திய விமானத் துறை அமைச்சரான மாதவ ராவ் சிந்தியா, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, கோவை நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செ.குப்புசாமி ‘மாகாராஜா சிந்தியா அவர்களே’ என்று முதலில் அவர் பெயரைக் குறிப்பிட்டார். அவ்வளவுதான். அங்கே திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பயங்கரமாகக் கத்தினார்கள். குப்புசாமியைப் பேச்சை முடிக்கும்படி வாயதிரக் குரலிட்டார்கள். ஜெயலலிதா, அவர்களின் நடத்தையை அங்கீகரிப்பது போல் பேசாதிருந்தார். இந்த அடாவடி நிகழ்ச்சியை திருச்சி வானொலி நிலையத்தில் முதல் செய்தியாக ஒலிப்பரப்பினோம்.

மீண்டும் கலைஞர் அரசுக்கே வருகிறேன். தமிழக அரசிற்கு, குறிப்பாக கலைஞருக்கு எதிரான செய்திகளை, முக்கியப்படுத்தினேன். அதே சமயம் கலைஞரை கட்சித் தலைவர், முதல்வர் என்ற முறையில் அவருக்குரிய செய்திகளையும் ஒலிபரப்பினேன். ஆனால், கலைஞருக்கு எதிரான செய்திகளே அதிகம். காலையில் ஆறு நாற்பதுக்கு ஒலிப்பரப்பாகும் செய்திகள் மக்கள் மனதில், குறிப்பாக பாட்டாளி மக்களிடம் மகத்தான் தாக்கத்தை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியவை. பொதுவாக, இந்த மாதிரி அரசுக்குப் பாதகமான செய்திகள் வெளியானால், மக்கள் தொடர்பு அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திருத்தம் - அல்லது மறுப்புக் கொடுப்பார்கள். ஆனால், செய்தியாசிரியர் நான் என்பதால் என்னமோ, என்னுடன் அவர்கள் தொடர்பு கொண்டதில்லை.

கலைஞர் அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் ஒரு ஊழல் பட்டியல் கொடுக்கப் பட்டிருந்தது நான் அத்தனை பாயிண்டுகளையும் ஒன்று விடாமல், ஆனந்தமாகச் செய்தியாக்கினேன். இதற்குப் பதிலளிப்பது போல், அதே நாள் மத்தியானம் கலைஞர் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஆனால், எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வரவில்லை என்றாலும் ஒரு செய்தியாளன், தன்மானம் பற்றிக் கவலைப்படாமல், போய்த்தான் ஆக வேண்டும். இல்லையானல், டில்லிக்காரன் தாளித்து விடுவான். ஒரு கட்சி, திமுகவிற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டதால், கலைஞரும் கோட்டையில் முதல்வராகப் பதிலளிக்க விரும்பாமல், கண்ணியம் காத்தார் என்றே நினைக்கிறேன். ஆகையால், செய்தியாளர் சந்திப்பு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதிமுகவின் ஊழல் பட்டியல் அறிக்கை செய்தியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு, கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். தாமதமாகப் போன நான், பேசிக் கொண்டிருந்த கலைஞரை இடை மறித்து, இப்படிக் கேட்டேன்.

‘சார் நீங்க என்னைக் கூப்பிடல. ஆனாலும் வந்துட்டேன்’

‘நீங்க எங்க செய்தியப் போடமாட்டீங்க... ஆனாலும் வரவேற்கிறேன்’.

செய்தியாளர்கள் சிரித்து விட்டார்கள். 'கலைஞரிடம் ஏன் வாயக் கொடுக்கறிங்க' என்று சிலர் என்னைச் செல்லமாகத் தட்டினார்கள். கலைஞர் முகத்தையே பார்த்தேன். காலையில்தான், அவரைப் பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகளை, நேரில் கண்டது போல் செய்தியாக்கி இருந்தேன். ஆனால், அவர் முகத்தில் எந்தக் கடுகடுப்பும் இல்லை. என்னைப் புன்முறுவலோடு பார்த்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு துளி கோபத்தைக் கூட அவர் கண்களோ, முகபாவமோ காட்டவில்லை. இன்று வரை இது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

செய்தியாளர் கூட்டம் முடிந்ததும், அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னைப் பார்த்து 'எங்க செய்தியையும் ரேடியோவில் போடுவீங்களா அண்ணே?' என்றார். இந்த அண்ணே என்ற வார்த்தை என்னைக் கசக்கிப் பிழிந்தது. இவர் முகத்திலும் ஒரு சின்ன எள் கூட வெடிக்கவில்லை. மாறாக, என்னை நட்பாகவே பார்த்தார். அதிமுகவுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலையும், மாலைச் செய்தியில் தலைப்புச் செய்தியாகப் போட்டு, விளாசித் தள்ளி விட்டேன்.

இந்த அணுகுமுறை, என்னை ஓரளவு மென்மைப்படுத்தியது. ஆனாலும் அரசுக்கு எதிரான செய்திகள் வழக்கம் போல் ஒலிபரப்பாகிக் கொண்டுதான் இருந்தன.

இந்தக் கால கட்டத்தில் இலங்கைக்குச் சென்ற, இந்திய அமைதிப்படையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், ராஜீவ் காந்திக்கு ஏற்பட்டது. கலைஞர் இந்தப் படை சென்னை திரும்பிய போது, அதை வரவேற்கச் செல்லவில்லை.

இலங்கைத் தமிழ் பெண்களிடம், இந்திய ராணுவம் அத்து மீறி நடந்து கொண்டது என்பது கலைஞரின் வாதம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோண மலை என்று பல்வேறு இடங்களுக்குப் பயணித்த எனக்கும், இந்தத் தகவல்கள் கிடைத்ததும், அப்போது சென்னையில் சுவாகத் ஹோட்டலில் தங்கியிருந்த மூப்பனார் அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் உடனடியாய் ராஜீவ் காந்தியைச் சந்தித்துத் தக்க பரிகார நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். இதையடுத்து, இந்தியப் பெண் போலீஸ் அங்கே அனுப்பப்பட்டது.

இந்திய அமைதிப் படையினர் இலங்கைத் தமிழர்களுக்காக நல்லதும் செய்திருக்கிறார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு, ஆயுதங் கடத்திய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விடுதலைப் போராளிகளை, பலாலி விமான நிலையத்தில் இருந்து, ஒரு இலங்கை விமானம் மூலம் கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு அந்த நாட்டு அரசு தீர்மானித்து விட்டது. விமானமும் வந்து விட்டது. அந்த விமானத்தைத் தடுப்பதற்காக, இந்தியப் படை சுற்றி வளைத்ததும் எனக்குத் தெரியும். ஆனால், மத்திய அரசின் முட்டாள் தனமான அரசியல் முடிவால், இந்தப் போராளிகள் சயனைடு அருந்தித் தற்கொலை செய்து கொண்டார்கள்.

கலைஞருக்குச் சாதகமான வி.பி.சிங் அரசு, நாடாளுமன்றத்தில் பதவி இழந்தது. கலைஞருடன் பகைமை பாராட்டி, அதிமுகவுடன் உறவாடிய ராஜீவ் காந்தியின் தயவில், சந்திரசேகர் அமைச்சரவை மத்தியில் பதவியேற்றது.

அந்தக் கால கட்டத்தில் கலைஞரின் செய்தியாளர் கூட்டம், என்ன காரணத்தாலோ கட்சி அலுவலகமான அறிவாலயத்திலேயே நடைபெற்றது. நான் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தேன். அந்த அறைக்குள் நுழைந்த கலைஞர் 'என்ன சமுத்திரம்! எப்படி இருக்கீங்க?’ என்று என்னை மட்டும் தனிப்படுத்தி நலம் விசாரித்தார். நானும் ஒரு மகத்தான தலைவர் இப்படி நலம் விசாரிக்கும் போது, அவருக்கு எதிராக ஒரு சின்ன கேள்வியைக் கூட எழுப்பக் கூடாது என்று உறுதி பூண்டேன். ஆனால் ஒரு செய்தியாளர் இந்திய அமைதிப் படை பற்றி ஒரு கேள்வி எழுப்பி, கலைஞர் பதிலளித்த போது, என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

நானும் ஒரு தர்ம சங்கடமான கேள்வியைக் கேட்டேன். கலைஞருக்கு பயங்கரமான கோபம். அப்போது முகத்தில் மட்டும் எள்ளைப் போட்டிருந்தால், அது எண்ணெய் ஆகியிருக்கும். என்னை நேரடியாகப் பார்த்து, ‘ஆமாய்யா... இந்தியப் படை இலங்கைத் தமிழ்ப் பெண்களைக் கற்பழிச்சது. இப்பவும் சொல்றேன், உன்னால நியூஸ்ல போட முடியுமா’ என்று சவால் விடும் தோரணையில் கேட்டார். நானும் ‘இன்னைக்குச் சாயங்காலமே போடுறேன் சார்’ என்றேன். இந்த அமளியில் செய்தியாளர் கூட்டம் விரைவில் முடிவுக்கு வந்தது.

நான் ஆடிப் போய் விட்டேன். கலைஞர் இப்படி எந்த செய்தியாளரையும் ‘நீ, நான்’ என்று ஒருமையில் பேசியது இல்லை. இதர செய்தியாளர்களுக்கும் ஆச்சரியமாகி விட்டது. நான், திக்கு முக்காடி அந்த அறையை விட்டு அகல முடியாமல் நின்ற போது, கலைஞர் என் அருகே வந்தார். ‘நான் சொன்னதை அப்படியே போட உங்களுடைய வானொலி நெறிமுறைகள் இடம் தராதே. நீங்க எப்படிப் போடுவீங்க?’ என்று கேட்டார். நான், வாழப்பாடி ராமமூர்த்தியையோ, அல்லது எனக்குப் பெருமளவு உதவியிருக்கும் திருமதி. மரகதம் சந்திரசேகரையோ அணுகி 'ஆகவே, கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்று கலைஞரின் குற்றச்சாட்டிற்கு ஈடு கொடுத்து, அந்தச் செய்தியைச் சமச் சீராக்க முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு, ‘போட முடியும்’ என்றேன்.

கலைஞர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். அவர் அப்போது என் மீது சீறியது கொள்கை அடிப்படையில் அல்ல என்பதும். வீம்புக்காகப் பேசியது என்பதையும் புரிந்து கொண்டேன். அந்தச் செய்தியை நான் எனது செய்தி அறிக்கையில் சேர்க்கவே இல்லை.

சந்திரசேகர் அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள், மத்தியத் தகவல் ஒலி பரப்புத் துறைக்கும், உள் துறைக்கும் இணையமைச்சரான சின்ஹா சென்னைக்கு வந்திருந்தார். உள்துறை இணையமைச்சர் என்ற முறையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பரிசீலனை செய்வதற்கு, மாநில அமைச்சர்கள்- உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தினார். முதல்வர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். தமிழக அரசின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முடிவடையும் போதுதான் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வரும், மத்திய அமைச்சர் சின்ஹாவும் பேசிய முறையில் இருந்து, இரண்டாமவர், முதலாமவரின் ஆளுமைக்கு உட்பட்டு விட்டார் என்பது புரிந்து விட்டது. இந்த அமைச்சர், பிரதமர் சந்திர சேகருக்கு மிகவும் வேண்டியவர்.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, சின்ஹா, மறுநாள் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நான் சும்மா இருக்க வேண்டும் என்ற உறுதியோடுதான் போயிருந்தேன். ஆனால், சில செய்தியாளர்கள் கலைஞர் ஆட்சிக்கு எதிராகச் சில கேள்விகளைக் கேட்ட போது, நானும் சேர்ந்து கொண்டேன். 'மத்திய அரசு கலைஞர் ஆட்சி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது' என்றும் கேட்டேன். அப்போது அமைச்சருடன் இருந்த மத்திய அரசின் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அமைச்சரின் காதைக் கடித்தார். நான் இன்னார் என்று சொல்லி விட்டார். உடனே அமைச்சரும் கோபத்தோடு, 'எதுவும் பேசாமல், சும்மா இருங்க சார்' என்று ஆங்கிலத்தில் கடுமையாகச் சொன்னார். அப்போது கலைஞரின் நாற்காலியை விட என் நாற்காலிதான் ஆடிப் போனது.

மாலையில், இதே ஐ.ஏ.எஸ் அதிகாரி சென்னையில் உள்ள தகவல் ஒளி பரப்புத் துறை உயரதிகாரிகளின் கூட்டத்தை, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் கூட்டினார். இதில் அமைச்சகத்தின் செயலாளரான மகேஷ் பிரசாத்தும், கலந்து கொண்டார். எங்கள் அமைச்சகத்தின் தலைமை அதிகாரி இவர்தான். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அப்போது துணை இயக்குநராக இருந்த எழுத்தாளர் ஏ. நடராசனும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்.

இந்த இ.ஆ.ப, ‘தமிழக அரசை, குறிப்பாக முதலமைச்சரை, இங்குள்ள ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்களாம். இதன் மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன். இனி மேலும், இப்படி முதலமைச்சருக்குத் தர்ம சங்கடமான நிலைமையைத் தோற்றுவித்தால், அவர்கள் மீது நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்’ என்று ஓங்கிக் கத்தினார். கூட்டத்தில் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. ஒரு வேளை, எப்போதாவது தப்பித் தவறி கலைஞரைக் குறை கூறி இருப்போமோ என்பது மாதிரி, தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.

என்னால் பொறுக்க முடியவில்லை. நான் எழுந்தேன். ‘நீங்கள் சொல்வது என்னைத்தான்... நான் தமிழக அரசை விமர்சிப்பது, கலைஞரை விமர்சிப்பது ஆகாது... முதல்வருக்கும், விடுதலைப் புலிகளின் மீது அப்படி ஒன்றும் பாசம் கிடையாது. ஆகையால், புலிகளைப் பற்றிச் செய்திகள் வெளியாவதை அவரும் ஆட்சேபிக்க மாட்டார். நீங்களாகக் கற்பனை செய்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல. தேவையானால் என்னை மாற்றுங்கள்’ என்று உரக்கக் கூவினேன். எங்கள் செயலாளர் மகேஷ் பிரசாத், 'ரிஷி கர்ப்பம் இரவு தங்காது' என்பது போல், உடனடியாகக் கோபத்தைக் காட்டி, நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனாலும், பொறுமையாக இருந்தார். இந்தக் கூட்டம் முடிந்ததும், என்னைப் பற்றி உயர்மட்டக் குழு ஒன்று ஆய்வு செய்திருக்கிறது. அப்போதைக்கு என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லை என்று செயலாளர் தீர்மானித்து விட்டதாக அறிந்தேன்.

மத்திய அரசு கலைஞர் அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், தமிழக அரசியல் நிர்பந்தம் கருதி, ராஜீவ் காந்தியின் தூண்டுதலில், ஜெயலலிதாவின் வற்புறுத்தலில், கலைஞர் அரசு 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அதே இணைச் செயலாளர் சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் வரவேற்கச் சென்றேன். என்னைப் பார்த்ததும், ‘கங்குராஜுலேஷன்யா’ என்றார். உடனே நான், எனக்கு, இணை இயக்குநர் பதவி வந்து விட்டதாகக் கருதி, நன்றி தெரிவித்தேன். எந்த இடத்தில், எந்தப் பதவியில், நான் நியமிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை அவரே சொல்லட்டும் என்பது போல் ஆவலோடு பார்த்தேன். உடனே அவர் ‘உங்க நண்பர முடிச்சிட்டோம். பார்த்தீங்களா’ என்றார். அப்போதும் புரியாமல், நான் அவரைப் பார்த்த போது 'கருணாநிதியைத்தான் சொல்றேன். டிஸ்மிஸ் பண்ணிட்டோமே, உங்களுக்கு சந்தோஷம்தானே' என்றார்.

நான் சந்தோஷப் படவில்லை. இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எப்படிப் பச்சோந்திகளாக மாறுகிறார்கள் என்பதை முன்பே பார்த்திருக்கிறேன் என்றாலும், இப்போது அவரை அழுத்தமாகப் பார்த்தேன். ஒரு வகையில் சொல்லப் போனால், அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.காரர்கள் தான். அரசியல்வாதிகளுக்குக் குறுக்கு வழியைச் சொல்லிக் கொடுப்பவர்களே இவர்கள்தான். இந்த அரசியல்வாதிகளுக்காவது, கட்சி, மக்கள், தேர்தல் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இவர்களுக்கோ, வடமொழி மந்திரம் போல் அரசு சட்ட, திட்டங்கள்தான் வழிகாட்டி. ஆனாலும், அந்த விதிகளுக்கும் வழிகாட்டிகளாகச் செயல்படுகிறவர்கள் இவர்கள். என்றாலும், இன்றைய இளைய தலைமுறையில் உருவாகி இருக்கும் நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நம்மால் பார்க்க முடிகிறது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும் போதே, சென்னைக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், இரவு எட்டரை மணிக்குப் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருந்த ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளின் மனிதக் குண்டால் கொல்லப்பட்டார். அவர் பிரதமராகக் கூடாது என்பது விடுதலைப் புலிகளின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதில் கலைஞரும் முதல்வராக முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும் என்றாலும், தமிழக அரசியலைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. கலைஞரைக் கொன்றுதான் தமிழ் ஈழம் உருவாக வேண்டும், என்றால் அதற்கும் அவர்கள் தயாராக இருப்பார்கள்.

பல தடவை வட இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இருக்கிறேன். இந்த விடுதலைப் புலிகள் கொன்ற தமிழர்களின் எண்ணிக்கை, இலங்கை இராணுவம் கொன்ற எண்ணிக்கைக்குச் சளைத்ததல்ல. மாற்றுக் கருத்துள்ள தமிழ்ச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள் போன்றோர்களைக் கடத்துவதும், அவர்களைக் கொலை செய்வதும் இவர்களுக்கு வாடிக்கை. எனது குடும்பத்தினரும் நண்பர்களும் கூட ‘நீங்க கலைஞரை எதிர்த்துச் செய்தி போடுங்க. ஜெயலலிதாவை எதிர்த்துச் செய்தி போடுங்க. ஆனால் எல்டிடியை எதிர்த்துச் செய்தி போடாதீங்க. வீட்டிலேயே வந்து கொல்லுவாங்க!' என்றனர்.

இவர்களுக்குப் பயந்து கொழும்பில் ஒதுங்கியிருந்த அமிர்தலிங்கம் வீட்டிலேயே சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, ஈரக்கை உலரும் முன்பே அந்தப் பெருமகனை சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு தமிழகத்தில் கலைஞர் இருந்தாலும் சரிதான், போனாலும் சரிதான். ராஜீவ் காந்தி கொலையில், நமது ரத்தமான பதிமூன்று தமிழ் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதை, இவர்களுக்கு இன்னும் கொம்பு சீவி விடும் இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் பேசுவதே இல்லை.

ஸ்ரீபெரும்பதூருக்கு நான் கூடப் போயிருப்பேன். ஒரு வேளை கொல்லப்பட்டும் இருக்கலாம். முன்பு, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை வடமராய்ச்சி வரை துரத்தி, நிர்மூலம் செய்யப் போன போது போர்ப் பிரகடனம் செய்வது போல், இலங்கையின் ஆகாய எல்லையை மீறி, பின்னர் இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தவர் ராஜீவ் காந்தி. இவரது அன்னைதான், இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிப் புலிகளைப் போராளியாக்கியவர். பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை கேட்ட போது, அதைப் புறக்கணித்தவர் ராஜீவ் காந்தி. ராஜீவின் அணுகு முறை தவறாகப் போய் விட்டாலும், விடுதலைப் புலிகளை வைத்தே, வட இலங்கையில் தமிழ் போலீஸை அமைக்கவும், இந்த வீரர்களின் மறு வாழ்விற்காகக் கணிசமான நிதி ஒதுக்கவும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வகை செய்தவர்.

பாலஸ்தீனிய மக்களுக்கு உரிமைக் குரல் எழுப்பும் யாசர் அராபத்தைப் பின்பற்றி, பிரபாகரனும், சகோதரக் கொலைகளில் ஈடுபடாமல் நீக்குப் போக்காக நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும். ராஜீவ் காந்தி கொலை மூலம், இவர்கள் தமிழகத்தில் ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு அந்நியக் கலாச்சாரத்திற்கு அடி கோலியவர்கள். இலங்கை புலி மாகாண சபையைக் கைப்பற்றி, அதைத் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ளும் பக்குவமற்றவர்கள். பிரபாகரன் அவர்களின் பிள்ளைகள் இருவர், தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். அதே சமயம், இலங்கைத் தமிழ்ப் பொடியன்கள், கட்டாயமாக விடுதலைப் படையில் சேர்க்கப் படுகிறார்கள். பிரபாகரன் பிள்ளைகள் படிப்பதில் மகிழ்ச்சியே. இந்த அடிப்படை உரிமையை இவர் ஏன் இலங்கைப் பொடியன்களுக்குக் கொடுக்கவில்லை என்பதுதான் கேள்வி. என்றாலும், இலங்கைத் தமிழர்கள் சாகட்டும் என்று சிலர் இவர்களைக் குறை சொல்கிறார்கள். நானோ இலங்கைக் தமிழன் சாகிறானே என்று இவர்களை ஆட்சேபிக்கிறேன்.

இந்தக் கொலை நிகழ்ச்சி தெரிந்ததும், கலைஞர் ஆடிப் போய் விட்டதாக அறிகிறேன். மத்திய அரசின் பதவி நீக்கத்தால், மக்களிடையே அனுதாபம் பெற்ற திமுக, இந்தக் கொலையால், தேர்தலில் ஒன்றும் இல்லாமல் போகும் என்பது கலைஞருக்கும் தெரிந்து விட்டது. ஆகையால், கையறு நிலையில், இரண்டு கைகளையும் உதறி ‘எல்லாம் போயிட்டே, எல்லாம் போயிட்டே’ என்று அரற்றியதாக அறிகிறேன். சென்னை பொது மருத்துவ மனையில், ராஜீவ் காந்தியின் சடல கோரத்தைப் பார்த்து விட்டு, சென்னை வானொலியில் செய்தியாக்கிய போது, கலைஞர் ஒரு திரைப்படத்தில் ‘பிஞ்சு மாங்காயைப் பிளந்தது போல்’ என்று குறிப்பிட்ட உரையாடல் வாசகத்தையே செய்தியிலும் குறிப்பிட்டேன்.

அதிமுக தொண்டர்கள் எனப் படுவோர் ராஜீவ் காந்தி கொலைக்கு அடுத்த படியாக, மூன்று நாட்கள் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் வீடுகளையும், சொத்துகளையும் சூறையாடினார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மாத காலம் வீட்டிற்கு வெளியேயே தலை காட்டவில்லை. தமிழகம் முழுவதுமே மயான அமைதி.

இதையடுத்து, நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று, 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றதைக் குறிப்பிட வேண்டியது இல்லை. அவர் பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இப்போதைய மதுரை வானொலி நிலைய இயக்குநர் பாலசுப்ரமணியமும், ஊட்டி வானொலி நிலைய உதவி இயக்குநர் சங்கரனும் உடன் வர, புதிய முதல்வரைத் தொழில் நிமித்தம் நேர் காணல் செய்யச் சென்றோம்.

என்னிடம் ஜெயலலிதா இயல்பாகவும், இனிமையாகவும் நடந்து கொண்டார். எதிரே பணிவன்போடு நின்று கொண்டிருந்த எதிர்கால அமைச்சர், முத்துசாமியை உட்காரச் சொன்னார். இவர்தான், முன்னதாகக் கொடுக்கப்பட்ட வானொலிக் கேள்விகளுக்கு ஜெவுக்குப் பதில் எழுதிக் கொடுத்தவர் என்று அனுமானிக்கிறேன். சசிகலா நின்று கொண்டே இருந்தார். இந்த சசிகலா எனக்கு ஒரு காலத்து குடும்ப நண்பர். இவரது கணவர், தோழர் ம. நடராசன் செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், நான் மத்திய அரசின் செய்தி விளம்பர அதிகாரியாகவும் பணியாற்றினோம். எங்கள் வீட்டிற்கு இருவரும் வந்திருக்கிறார்கள். இந்த நடராசன் பிரபலமானதும், ஒரு தடவை என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது ‘கலைஞருக்கு வேண்டிய நீங்கள், தமிழ் மண்ணில், ஒரு புதிய கலாச்சாரத்திற்கு வித்திடலாமா’ என்று பொருள்படக் கேட்டேன். உடனே அவர் ‘ஆலமர நிழல் (ஆர்.எம்.வீ) கிடைக்கல. அதனால பனை மரத்து நிழல்ல (ஜெயலலிதா) அண்டி இருக்கேன்’ என்றார்.

முதலமைச்சராகத் தேர்வு பெற்ற ஜெயலலிதாவுக்கு, நேர் காணல் பதிவு சிறப்பாக வந்ததில் மகிழ்ச்சி. என்னிடம் விடை பெறப் போனார். உடனே நான், ‘நீங்க இனி மேல் முதலைமைச்சர் ... உங்கள் சொல்லையும், செயலையும் நாடே உன்னிப்பாகக் கவனிக்கும். உங்கள் நன்மைக்காகச் சொல்கிறேன். கலைஞர், தலைவர் மட்டுமல்ல, ஒரு முன்னாள் முதல்வர்... உங்களை விட வயதில் மூத்தவர். அவரை கருணாநிதி என்று சொல்லாதீர்கள். கலைஞர் என்றே சொல்லுங்கள். இது உங்கள் அந்தஸ்தைத்தான் கூட்டும்.’ என்றேன். பொதுவாக இந்த மாதிரி உபதேசம் செய்தால், அவர் சீறி விழுவார் என்பார்கள். அதையும் எதிர் நோக்கித்தான் செய்தியாளன் என்கிற பொறுப்பை மறந்து, ஒரு எழுத்தாளன் என்கிற பொறுப்பில் அறிவுரை சொன்னேன். அவருக்கு என்ன அவசரமோ... எதுவும் பதில் சொல்லாமல் மாடிக்கு விரைந்தார்.