என் பார்வையில் கலைஞர்/பையிலிருந்து வெளிபட்ட ஒரு பூனை

பையிலிருந்து வெளிப்பட்ட
ஒரு
பூனை


1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றேன்

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், கலைஞர் பரிந்துரைத்த என்னை, மூன்று மாத காலம் உள்ளே நுழைய விடாமல் இழுத்தடித்தது. மீண்டும் கலைஞர், அமைச்சர் உபேந்திராவுக்கு நேரில் பேசி என்னை அங்கே அனுப்பினார். ஆனாலும், அந்த நிலையத்தின் இயக்குநரும், அவரது துதிபாடிகளும் என்னை பகைப்பார்வையாகவே பார்த்தார்கள். வானொலித் துறையில் அதன் இயக்குநருக்கு இணையான செய்தியாசிரியர் முற்றிலும் சுயேச்சையானவர். இங்கேயும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால், நிலைய இயக்குநரோ நான் அவருக்கு கீழே வேலை செய்வது போல பாவித்துக் கொண்டார்.

செய்தி ஆசிரியரின் தலைமையில் இயங்க வேண்டிய செய்தியாளர்கள் நிலைய இயக்குநரின் தலைமையில் இயங்கினார்கள். போதாக்குறைக்கு லவ்வு வேறு. ஒரு பெண் செய்தியாளர், எனது அறைக்கு வந்து எனது மேசையில் உள்ள டெலிபோனை எடுத்து ‘ஹலோ! தாமு’ என்று கொஞ்சு மொழியில் பேசுவார். அவர் அப்படிப் பேசுவது என்னை மிரட்டுவது போலவும் இருந்தது.

நான் ஒரு நாள் பொறுத்தேன். கூடவே அலுவலக தொலைபேசி, முக்கியமான செய்திகளுக்காகவே தவிர, மூடத்தனமான காதலுக்கல்ல. மறுநாள் இந்த பாரும்மா, இந்த காதல் பேச்செல்லாம் இங்கே பேசாதே. வேறு எங்கேயாவது போய்ப் பேசு. நான் வேண்டாங்கல’ என்று சொல்லிவிட்டேன். உடனே, எங்கள் அமைச்சகத்தில் சர்வ வல்லமை மிக்க இணைச் செயலாளர் தாமுவுக்கு, என் மீது கடுமையான கோபம். இவரை அண்டி பிழைக்கும் நிலைய இயக்குநருக்கும் அதைவிடக் கோபம். ஆனாலும், செய்தித் துறையில் இருந்த அத்தனை பேரும் என் பக்கம். குறிப்பாக பீர் முகமது என்ற தயாரிப்பாளர் கலைஞரின் பக்தர். ஆனாலும், நிலைய இயக்குநர் ஒட்டு மொத்தமான பொறுப்பாளர் என்ற தொலைக்காட்சி இலக்கணப்படி எனக்கு தீராத தலைவலி ஆனார்.

அலுவலகத்தில் இப்படி என்றால், செய்திப் பணியிலும் பன்மடங்கு தொல்லை. அப்போது, வி.பி.சிங் தலைமை அமைச்சராக இருந்த நேரம். உதிரிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் எலியும், தவளையுமாக கூட்டணி அமைத்து, அரசு நடத்திய காலம். அப்போது வேறு தொலைக்காட்சிகளும் கிடையாது. இல்லாதவன் பெண்டாட்டி எல்லாருக்கும் அண்ணி என்பது மாதிரி அத்தனைக் குட்டித் தலைவர்களும் எனது செய்திப்பிரிவில் உரிமை கொண்டாடத் துவங்கினார்கள். மாநில ஜனதாதள தலைவராக இருந்த சிவாஜி கணேசனுக்கு கலைஞருக்கு இணையாக செய்திகள் போட வேண்டும் என்பது தளபதி சண்முகம், ராஜசேகரன் போன்றோரின் மிரட்டல் நடிகர் திலகம் மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் போது, அவர் சென்னையில் இருந்து அறிக்கை வெளியிடுவதாக எனக்கு ஜனதா தளத்திலிருந்து செய்தி அறிக்கைகள் வரும். இது அயோக்கியத்தனம் என்பதால் நான் அவற்றை ஒலிபரப்ப மறுத்துவிட்டேன். இதனால், தளபதி சண்முகம் கொலை மிரட்டல் போன்ற கடிதம் ஒன்றை கூட என் பெயரில் எனக்கு அனுப்பி வைத்தார்.

திராவிடக் கழக தலைவர் வீரமணி அவர்கள் ‘எங்கள் ஆட்கள் பொல்லாதவங்க சமுத்திரம்’ என்று தனது பொல்லாத்தனத்தை தொண்டர்கள் மீது காட்டினார். பாரதிய ஜனதா கட்சி, குறிப்பாக அதன் குரு கட்சியான ஆர்.எஸ்.எஸ் தங்கள் கட்சியும் கூட்டணியை ஆதரிப்பதால் தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது - ஜானா கிருஷ்ணமூர்த்தி தலையிடுவதே இல்லை. ஆனாலும், சில்லறை தேவதைகள், இரவில் வீட்டுக்கு தொலைபேசியில் பேசி கண்டபடி திட்டுவார்கள். இந்தத் தொல்லைகள் போதாது என்பது போல், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் எனக்கு எதிராக நிலையத்திற்கு முன்பு ஒரு ஆர்பாட்டமே நடந்தது. காங்கிரஸ் செய்தியை நான் சரியாகப் போடவில்லையாம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த எனது நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தியிடம் முறையிட்டால் ‘கலைஞரையும், மூப்பனாரையும் ஏன் அப்படி குளோசப்ல காட்டுறே’ என்ற பதிலளித்தார்.

‘இது அரசியலுக்கானது... எனக்கு எதிரானது அல்ல’ என்றும் ஆற்றுப்படுத்தினார். ஆனால், இப்போது குளோசப் லாங்சாட்டாகவும், லாங்சாட் குளோசப்பாகவும் மாறியிருப்பது அரசியல் விந்தை. ஆனாலும், கலைஞர் மையப் புள்ளியில்தான் இருக்கிறார். வட்டக்கோடு தான் மாறியிருக்கிறது. போகட்டும்.

எனது செய்திப் பிரிவு, திரெளபதி போல் துகிலுரியப் பட்டது. கெளரவர்களால் அல்ல. கணவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களால் அதிமுக கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி ஆர், என்னை தினமும் தாக்கிக் கொண்டிருந்தது. அரசியல் சில்லரைகள் எனக்கு எதிராக கையெழுத்திட்டும், மொட்டையாகவும் மனுக்களைப் போட்டுக் கொண்டுயிருந்தார்கள்

இத்தனை நெருக்கடிகளிலும் நான் கருமமே கண்ணாக இருந்தேன். எனக்கு முன்பு பொறுப்பாசிரியராக இருந்தவர் அங்கேயே காலூன்ற வேண்டும் என்று நினைத்தோ என்னவோ தொலைக்காட்சியின் இரண்டு செய்தி அறிக்கையிலும், வாரத்திற்கு ஏழு நாட்களும் கலைஞரின் வாய்ஸ் காஸ்டை - அதாவது அவரது பேச்சை ஒலிப்பரப்பினார். இது கலைஞரையே நாளடைவில் மாசுபடுத்தும் என்பதோடு செய்தி நெறிகளுக்கே முரணானது.

எனவே, நான் கலைஞர் குரலை, செய்தியில் சேர்ப்பததை வாரத்திற்கு மூன்றாக்கி பிறகு, அதையும் இல்லாமல் செய்து விட்டேன். முக்கியமான நிகழ்ச்சிகளின் போது மட்டுமே, கலைஞரின் பேச்சை ஒளிபரப்பினேன். தமிழகம் முழுவதும் எனக்கு தெரிந்தவர்கள், தொடர்ந்து கலைஞரின் பேச்சை நாள்தோறும் ஒளிபரப்பினால் செய்தியின் இலக்கணமும், நம்பகத்தன்மையும் போய்விடும் என்றார்கள். கலைஞருக்கும் கெட்ட பெயர் என்றனர். கலைஞரும் இதை சரியாகவே எடுத்துக் கொண்டார். பொது நிகழ்ச்சிகளில் என்னைப் பார்க்கும் போதெல்லாம், ஒரு பார்வையாலோ அல்லது ஒரு சொல்லாலோ என் பிரசன்னத்தை அங்கீகரிப்பார். இதனால், நான் பட்டபாடுகள் மறைந்து போகும்.

எனது செய்தி வித்தியாசமாக இருந்தது. எடுத்துக்காட்டாக சென்னையில் வெள்ளம் பெருகி, தனது குடிசையை நோக்கி செல்லும் நீரை ஒரு ரிக்ஷா தொழிலாளி மண்ணை போட்டு தடுக்கிறார். இந்த நிழல் காட்சியை பார்த்துவிட்டு நான் வயிற்றில் மண்ணள்ளிப் போட்ட மழைக்கு , இவர் மண்ணள்ளி போடுகிறார்’ என்றேன். வெளிநாடுகளில் இருந்து, மனிதநேய (Human interest) நிழல்படங்கள் வரும். இவற்றிற்கு, நான், தக்கபடி விளக்கம் எழுதி ஒளிபரப்பினேன். அப்போது நரசிம்மச்சாரி என்பவரும் என்னோடு செய்தியாசிரியராக பணியாற்றினார். நல்ல பண்பாளர். தமிழகமெங்கும் ஒளிபரப்பாகும் செய்திகளை ஒரு நிமிடம் கேட்டுவிட்டு, இது சமுத்திரம் செய்தியா அல்லது நரசிம்மாச்சாரி செய்தியா என்று மக்கள் பந்தயம் வைப்பதாகவும் அறிந்தேன். தமிழகம் முழுக்க எங்கள் செய்தியின் தோரணைக்கு மிகப்பெரிய வரவேற்பு.

கலைஞர் விடுக்கும் நான்கு பக்க அறிக்கைகளை, அவற்றின் தன்மை மாறாமல் ஒருபக்க செய்தியாக சுருக்கி வெளியிடுவேன். இப்போது மாநில மக்கள் தொடர்பு அமைச்சகத்தில் உதவி இயக்குநராக இருக்கும் அப்போதைய மக்கள் தொடர்பு அதிகாரியும் எனது இனிய நண்பருமான சுபாஷ், மாநில அரசுச் செய்திகள் தக்கபடி வரும் வகையில் தொடர்பு கொள்வார். சிலசமயம் அவற்றை அனுப்ப முடியவில்லை என்றால் படித்துக் காட்டுவார். நான் அவற்றில் முக்கியமானவற்றை குறித்துக் கொண்டு உடனடி செய்தியாக்குவேன்.

1990ஆம் ஆண்டு அக்டோபர் முப்பத்தியொன்று .... வழக்கம்போல் இரவு பத்து இருபது செய்திகளை முடித்துவிட்டு பதினொரு மணியளவில் வீடு திரும்பினேன். கலைஞருடன், நான் உடனே பேசவேண்டும் என்று உதவியாளர் சண்முகநாதன் தெரிவித்ததாக என் மனைவி குறிப்பிட்டார். உடனே, நான் சண்முகநாதனை தொடர்பு கொண்டபோது ‘கலைஞர் கோபமாக இருக்கிறார். உங்களை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளச் சொன்னார்’ என்றார். நான், உடனே கலைஞருக்கு டெலிபோன் செய்து, அவரது கோபத்தை குறைக்கும் வகையில் ‘என்ன சார் ரொம்ப கோபமா இருக்கிங்களாமே’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டேன். இப்படி ஒரு முதல்வரிடம் கேட்கலாகாது. கலைஞரிடம் உரிமை கொண்டாடியதால், அப்படி நான் கேட்டு விட்டேன். கலைஞரும் கோபத்தைக் காட்டாமல், வருத்தத்துடன் பேசினார்.

‘நீங்களும் என்னை சூத்திரனா நினைச்சுட்டிங்க சமுத்திரம்’.

‘நானே பனையேறி... உங்களை ஏன் சார் சூத்திரனா நினைக்கப் போறேன்?’.

‘நான் பனையேறிக்கும் கீழே இருப்பவன்’

‘என்ன சார் நீங்க? உங்களை விட முழுமையான தமிழன் யார் சார்? அவனவன் சாதித் தமிழனா இருக்கான். நீங்க ஒருத்தர்தான் முழுமையான தமிழன். இது எல்லாருக்கும் தெரியும். சார். உங்களுக்கு ஏன் சார் தெரியல?’

‘அப்படின்னா நீங்க ஏன் செய்திகளில் கலைஞர் கருணாநிதின்னு போடக்கூடாது?’

‘அப்படி யாருக்கும் போடுவது இல்ல சார். எல்லாம் திரு அல்லது திருமதி தான்’

‘அப்படின்னா அன்னை இந்திராகாந்தின்னு என் நியூஸ்ல போட்டீங்க’

நான் புரிந்து கொண்டேன். கலைஞருக்கு தன்னை செய்தியில் கலைஞர் என்று அழைக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. அதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, எதற்காக நான் அன்னை என்று அடைமொழி போட்டு செய்தி ஒலிபரப்பினேன் என்பதுதான் அவரது மனத்தாங்கல் அல்லது வாதம். இதற்காக அருமையாக ஒரு சொல்வலை பின்னி என்னைச் சிக்க வைத்து விட்டார். உடனே, நான் பதிலளிக்கத் தயங்கினேன். அமங்கலமான ஒன்றை எப்படிச் சொல்வது என்று யோசித்தேன். பிறகு, சமாளித்துக் கொண்டு இன்றைக்கு ‘இந்திராகாந்தியோட நினைவுநாள் அந்தம்மா கொலை செய்யப்பட்ட நாள்’. இந்த மாதிரி நினைவு நாட்களில் தலைவர்களுக்கு உரிய அடைமொழிகளை போட்டுக் கொள்வோம், என்றேன். உடனே கலைஞரும் ‘நீங்க சொல்வதும் சரிதான், நான் எதற்காக அப்படிச் சொன்னேன் என்பது புரியும்’ என்று அமைதியோடு பதிலளித்தார். எனக்கு தூக்கம் நன்றாக வந்தது. இதையடுத்து, கலைஞரின் பிறந்தநாள் வந்தது. எங்கள் அமைச்சர் உபேந்திராவையும் விட்டுவிட்டு, கலைவாணர் அரங்கத்திற்கு காமிரா சகிதமாக ஓடினேன். அப்போது காவற்துறையின் துணை கமிசனரும், இப்போதைய கூடுதல் கமிசனருமான பாலசந்திரன் அவர்கள், எனக்கு மேடைக்கு வழிவிட மறுத்தார். எனக்கு என் தொழில் முக்கியம். அவருக்கு அவர் தொழில் முக்கியம். கூடவே, தொலைக்காட்சி என்ற கொம்பு எனக்கு முளைத்திருந்தது. பயங்கரமான வாக்குவாதம். யாரோ தலையிட்டு, அவரே சாந்தமாகி என்னை உள்ளே அதாவது மேடைக்கு அனுப்பிவைத்தார். இதை எதற்காக சொல்லுகிறேன் என்பது வாசகர்களுக்கு பின்னால் தெரியும். இந்த ஐபிஎஸ் அதிகாரியான பாலசந்திரன், அந்த ஒரு தடவை தவிர வேறு எந்தத் தடவையும் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.

இப்படி பத்திரிகையாளருக்கும் காவற்துறையினருக்கும் அடிக்கடி மோதல்கள் வருவதுண்டு. ஆனாலும், இவை வெறும் ஊடல்கள்தான். அன்றைய செய்தியில், கலைஞருக்கு எத்தனை அடைமொழிகள் உண்டோ அத்தனையும் போட்டு, அவரது பிறந்தநாள் விழாவை பெருமைப்படுத்தினேன். அவர் பார்த்தாரோ கேள்விப்பட்டாரோ. எனக்குத் தெரியாது. அவரைச் சந்திக்கும் போது இதைப் பற்றி சொல்வதற்கு எனக்குக் கூச்சம்.

இந்தச் சமயத்தில், விடுதலைப்புலிகளைப் பற்றி ஏஜென்ஸி செய்திகளில் வருபவற்றை தக்கப்படி எடிட் செய்து, செய்திகளில் சேர்ப்போம். இந்திய அமைதிப்படையோடு ஆரம்பத்தில் நான் யாழ்பாணம் சென்றபோது அங்குள்ள மக்கள் அந்தப் படைக்கு கையாட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். இந்தப் படையை விடுதலைப்புலிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே என் கருத்து. ஆகையால் நான் விடுதலை புலிகளின் ஆதரவாளனாக இருந்த காலம் போய்விட்டது. விருப்பு வெறுப்பற்ற செய்தியாளனாகவே, இவர்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் செய்திகளைப் போட்டோம். இது அப்போது தனிக்குடித்தனத்திற்கு துடித்துக் கொண்டிருந்த வைகோவிற்கு அவலாகி விட்டது. எங்களது செய்திப் பிரிவைப் பற்றி அமைச்சர் உபேந்திராவுக்கு கடுமையாக பல்வேறு கண்டனக கடிதங்களை எழுதினார். அவை அனைத்தும் என்னுடைய கருத்து கேட்டு வந்தன. தனிப்பட்ட முறையில் அவர் என்னைத் தாக்கவில்லை. ஒருவேளை உபேந்திராவிடம் நேரில் சொல்லியிருக்கலாம். இந்தக் கால கட்டத்தில் மத்திய அமைச்சர் தகவல் ஒளிப்பரப்பு அமைச்சர் உபேந்திரா புதுவைக்குச் சென்ற போது அவரோடு நானும் உடன் சென்றேன். புதுவை அரசினர் மாளிகையில் உபேந்திரா அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, கலைஞரின் நடுநிலைமையைச் சுட்டிக் காட்டிவிட்டு, வை.கோ. போன்றவர்கள் திமுகவின் பெயரால் விடுதலைப்புலிகளின் அடாத செயல்களை ஆதரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன். என் செய்திப் பிரிவையும் அப்படியே ஆக்குவதற்கு வை.கோ. நினைக்கிறார் என்று குற்றம் சாட்டினேன். ஆகையால், நான் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறப் போவதாகக் குறிப்பிட்டேன். உடனே அமைச்சர் ‘வைகோ. ஒரு தீவிரவாதி, அவரைப் பொருட்படுத்தாதீர்கள். சிக்கல் வரும்போது முதல்வரையோ அல்லது முரசொலி மாறனையோ சந்தித்து ஆலோசனை கேளுங்கள், நான் உங்களை மாற்றப் போவதாக இல்லை’ என்று பதிலளித்தார். பேச்சு வாக்கில் வைகோ போன்றவர்களால் திமுக மக்களிடையே செல்வாக்கு இழந்து வருகிறது என்று சொல்லிவிட்டேன்.

மறுநாள் உபந்திராவுடன் சென்னைக்குத் திரும்பினேன். மாலையில் புதுடில்லிக்குப் புறப்பட்ட அவரை, சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் சந்தித்தேன். உடனே அவர் ‘நீங்கள் காங்கிரஸ்காரரா’ என்று கேட்டார். உடனே நான் ஒரு காலத்தில்’ என்றேன். ‘நேற்று இரவு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ராஜிவ் காந்தியின் பேச்சை செய்தியில் போட்டு விட்டு, அதற்கு பதிலளித்த பிரதமர் வி.பி.சிங்கின் பேச்சை நீங்கள் ஏன் போடவில்லை?’ என்று கோபமாகக் கேட்டார். உடனே நான், செய்தி வெளியான அன்றிரவு அவருடன் புதுவையில் இருந்ததை சுட்டிக்காட்டி, அந்தச் செய்தியை இன்னொரு செய்தியாசிரியரான நரசிம்மச்சாரி போட்டிருப்பார் என்று விளக்கினேன். உபேந்திராவின் கோபம் புன்முறுவலானது. கலைஞரை சந்தித்து விளக்கம் சொல்லும்படி ஆணையிட்டுச் சென்று விட்டார்.

பத்திரிகைகள் போல் அல்லாது, வானொலி தொலைக் காட்சிகளுக்கு ஒரு வசதி உண்டு. செய்தி முடிவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு கூட கடைசி செய்தியை சேர்த்து விடலாம். ஆனால் நான் இல்லாதபோது இரவு எட்டு நாற்பதற்கு ஒளிபரப்பாகும் செய்திக்கு எட்டு மணிக்கே டெலிபிரிண்டர் பக்கம் போக மாட்டார்கள். இதன் விளைவு தான் எட்டு மணிக்கு வந்த ராஜிவ் காந்தியின் நாடாளுமன்றப் பேச்சு செய்தியாகி எட்டரை மணியளவில், டெலிபிரிண்டரில் வந்திருக்கக் கூடிய பிரதமர் வி.பி.சிங்கின் பதில், டெலிபிரிண்டருக்குள்ளேயே முடங்கிப் போயிருக்கும். நான் எத்தனை பேருக்குத்தான் சிலுவை சுமப்பது!

எனக்குக் கிடைத்த தொலைக்காட்சி ஜீப்பில், உபேந்திராவின் விருந்தினர் மாளிகையில் இருந்து நேராகக் கலைஞரின் கோபாலபுர வீட்டிற்குச் சென்றேன். இரவு நேரம். கலைஞர், கோவைக்குச் சுற்றுப்பயணமாக செல்வதற்கு வீட்டில் இருந்து படியிறங்கி விட்டார். அவரைச் சுற்றி ஏகப்பட்ட தலைவர்கள், உயர் அதிகாரிகள்... காரில் ஏறப்போன அவர் என்னைப் பார்த்து நின்றார். முகத்தைக் கோபமாக்கிக் கொண்டார். எங்களுக்கிடையே நடந்த உரையாடலின் விவரம் இதுதான்.

‘உபேந்திரா கிட்ட தி.மு.க. அன்பாப்புலர்ன்னு சொல்லி இருக்கீங்க’

‘ஆமாம்... அவர் என் அமைச்சர். அவரிடம் அரசியல் சூழலைச் சொல்ல வேண்டியது, என்னோட கடமை. இதனால் உங்களுக்கு நான் செய்தி போடுவது, எந்த விதத்திலும் குறையவில்லையே?’

‘ஓகோ... நீங்க நாங்கன்னு பிரித்துப் பேசுறீங்களா? பூனை பையில் இருந்து வெளிப்பட்டு விட்டது. உங்கள் உண்மையான சுயரூபம் இப்போதுதான் தெரிகிறது.’

‘சார். உங்களுக்கே தெரியும். நான் காமராசர் தொண்டன். கட்சியை மீறி உங்களை இரண்டாவது காமராசாகப் பார்க்கிறேன். நீங்கள் முழுமையான தமிழன் என்கிற ஒரே காரணத்தால்தான், இப்பவும் டிவியில் பல்லைக் கடிச்சிட்டு இருக்கிறேன். நீங்களும் இப்படிப் பேசினா என்ன சார் அர்த்தம்?

‘சரி. பார்க்கலாம்.’

‘வாரேன் சார்’

‘நன்றி’

கலைஞர், காரில் ஏறினார். அவர் போவது வரைக்கும் அங்கே நிற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் - அதாவது என்னை ஒரு அரசுச் செய்தியாளனாகக் கருதாமல், எழுத்தாளத் தனி மனிதனாகக் கருதி அந்த இடத்தில் இருந்து அவர் கார் புறப்படும் முன்பே வெளியேறி விட்டேன். கலைஞருக்கு ஐந்து நிமிட இடைவெளியில் கூட அவர் அறிக்கைகளை செய்தியாக்குகிற என் மீது அவர் அப்படிக் கோபப்பட்டது அப்போது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை. ஒரு வேளை வைகோவிற்காக, கட்சித் தலைவர் என்ற முறையில் என் மீது கோபப்பட்டதாக பாவனை செய்து இருக்கலாம். நானும், அன்றிரவுச் செய்திக்குப் பொறுப்பல்ல என்று விளக்கி இருக்கலாம். அல்லது தனியாகச் சந்தித்துப் பேசுகிறேன் என்று அப்போதைக்குச் சொல்லி விட்டு, பின்பு நான்கு நாள் கழித்து அவரை நேரில் சந்தித்து, வை.கோ. அணியினரால், திமுகவிற்குக் கெட்ட பேர் வருவதை நம்பகமாகச் சொல்லியிருக்கலாம். நானும் அவசரப்பட்டு விட்டேன். வேண்டுமென்றே என்னைப் போட்டுக் கொடுத்த உபேந்திரா போல், ஒரு பியூன் கூட நடந்து கொள்ள மாட்டார்.

நான் மறுநாள் அலுவலகம் திரும்பியதும், மேற்கொண்டும் தொலைக்காட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், வை.கோ. போன்றவர்களின் விடுதலைப் புலி வேகத்தை, என்னால் செய்தியாக்க முடியாது என்றும் எழுத்து மூலம் அமைச்சர் உபேந்திராவுக்குத் தெரிவித்து விட்டேன். பொதுவாக ஒரு அதிகாரி, இந்த மாதிரியான கருத்துகளை, தனது உடனடி அதிகாரி மூலம் அமைச்சரவைச் செயலாளருக்குத்தான் அனுப்ப வேண்டும். ஆனால், விவகாரம் அரசியல் கலந்ததாக இருந்ததால், அதில் செய்தி ஆசிரியர் என்பவர் விருப்பத்திற்கு விரோதமாகவே ஈடுபடுத்தப்படுவதால், ஆபத்துக்குப் பாவமில்லை என்று கருதி, அமைச்சருக்கே நேரிடையாக எழுதி விட்டேன்.

துவக்கக் கட்டமாக, என்னைப் புது டில்லியில் பயிற்சி என்ற பெயரில் பார்சல் செய்தார்கள். அங்கே போன ஒரு மாத காலத்திற்குள், சென்னை வானொலி நிலையத்திற்கு என்னை மாற்றி, ஆணை பிறப்பித்தார்கள். வீடு, அலுவலகம், பயிற்சி நிலையம் என்று ஒரே மாதிரியான மூன்று ஆணைகள் எனக்கு வந்தன. சென்னைக்குத் திரும்பியதும், யானை போல், வஞ்சம் வைத்திருந்த நிலைய இயக்குநர், தாமுவிடம் பேசி எனக்கு ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்காமல், பணியிலிருந்து விடுவித்து விட்டார். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில், நான் ஆறு மாதங்களே குப்பை கொட்டினேன். குப்பை கொட்டினேன் என்பதை விட, அவற்றை அப்புறப் படுத்தினேன். கலைஞர், மூப்பனார், ஜெயலலிதா போன்றவர்களைத் தவிர, வேறு எந்தத் தலைவரின் செய்திகளையும் போடுவது இல்லை. இப்போது நன்றாக நினைவிருக்கிறது. உதாரணத்திற்குத்தான் சொல்கிறேன். ஒரு உதிரிக் கட்சித் தலைவர், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதைக் கண்டித்து தாம் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தெரிவித்தார். உடனே நான், ‘முதலில் அந்தக் கிராமத்தில் போய் உண்ணாவிரதம் இருங்கள், இல்லையென்றால், மறியல் செய்யுங்கள். நான் தொலைக்காட்சி கேமராவோடு வருகிறேன், நீங்க எந்தச் செயலும் செய்யாமல், என்னால் செய்தி போட முடியாது’ என்று மறுத்து விட்டேன். இப்படி மறுக்கப்பட்டவர்களுக்கு, எனது மாற்றம் ஒரு வரப் பிரசாதமானது.

எனக்குக் கலைஞர் மீது கட்டற்ற கோபம். அவரை உண்டு, இல்லை என்று பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.