என் பார்வையில் கலைஞர்/கலைஞர் வழிக் காதல் கடிதங்கள்

கலைஞர்
வழிக்
காதல் கடிதங்கள்


எனக்கு விவரம் தெரிந்த 1954ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நான் கலைஞரை வெறுத்தேன். எம்.ஜி.ஆரையாவது நிழல் மனிதர் என்று அந்தக் காலத்திலேயே என் சிந்தனையில் இருந்து ஒதுக்கி இருந்தேன். கலைஞர் மீது நான் கொண்ட வெறுப்பிற்கு வெள்ளி விழாவை விட அதிகமான ஒரு விழாவை அல்லது நினைவு நாள் அனுசரிப்பை வைக்க முடியும். இப்போது யோசித்துப் பார்த்தால் கலைஞர் மீது நான் கொண்டது வெறுமனே வெறுப்பு அல்ல. ஆங்கிலத்தில் லவ் - ஹேட் (Love - Hate) எனப்படும் உறவு என்று கொள்ளலாம். ஒரு நாணயத்தின் இருபக்கம் போல் விருப்பும் வெறுப்பும் கொண்ட மானசீகமான உறவு.

1954ஆம் ஆண்டு வாக்கில் நான் எங்கள் ஊரான நெல்லை மாவட்டத்தில் உள்ள திப்பணம்பட்டியில் ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது எங்கள் ஊர் வாத்தியார், பாதி நேரம் எங்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார். அப்போதைய முதலமைச்சரான ராஜாஜி கொண்டு வருவதாக இருந்த புதிய கல்வி திட்டத்தின் படி பாதி நேரம் படிப்பு, மீதி நேரத்தில் குடும்பம் சம்பந்தப்பட்ட ஒரு தொழிலை செய்ய வேண்டும். இந்தக் கல்வித் திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறை முந்திரிக் கொட்டையானதோ... என்னமோ ... மாணவச் சிறுவனான நான் மற்ற மாணவர்களோடு வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.

இதுதான் சமயம் என்று பார்த்த என் பாட்டையா (தாத்தா) என்னை வயல் வேலைக்குள் சிக்க வைத்தார். கமலை அடித்தேன். பாத்தி போட்டேன். நாற்று நட்டேன். தென்னையில் ஏறி தேங்காய் பறித்தேன். வயல்களுக்கு நீர் பாய்ச்சினேன். கூலியாள் மிச்சம் என்பதை புரிந்து கொண்ட என் தாத்தா இனிமேல் நான் பள்ளிக் கூடத்திற்கு பகல் பாதியிலும் போகக் கூடாது என்று தடுக்கப் போனார்.

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமான திருமலை ஆச்சி என்றும் சின்னத்தாயி என்றும் அழைக்கப்பட்ட எனது விதவைத் தாய் வாய்க்கால் மண்ணில் எனக்கு பல்தேய்த்தபடியே ‘என் மவனே... உனக்கு சொத்து இல்ல... சுகம் இல்லடா... நீ படிச்சி சர்க்கார் வேலைக்கு போனாத்தான் நீயும் தேறமுடியும்... இந்த அம்மாவும் தேற முடியும்’ என்று அறிவுறுத்தியது, தாத்தா பார்த்த தடியடி பார்வையில் அழுகையானது. இந்தச் சமயத்தில்தான் ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டம் நீக்கப்பட்டு, சிறுவர்களான நாங்கள் எல்லாம் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு முழுநேரமும் சென்றோம். இதில் ஒன்று குறிப்பிட வேண்டியது முக்கியம். ராஜாஜி கொண்டுவந்த திட்டத்திற்கு பெயர் புதிய கல்வித் திட்டம். இதற்கு திராவிட இயக்கம் வைத்த பெயர் குலக்கல்வித் திட்டம். முதலமைச்சரின் பெயர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி. திராவிட இயக்கத்தினர் அவருக்கு வைத்த பெயர் குல்லுகப்பட்டர்.

இத்தகைய வார்த்தைகளின் அருமை பெருமைகளோ அல்லது சிறுமைகளோ எனக்கு புரியாது. ஆனாலும், காமராசர் முதலமைச்சராகி எளிய பிள்ளைகள் முழு நேரம் படிக்க வகை செய்திருக்கிறார் என்பது மட்டும் தெரியும். இதற்கு தந்தை பெரியாரும் காரணமாக இருந்தார் என்பது எனக்கு அப்போது தெரியாது. உயர்நிலைப் பள்ளியில் உபகாரச் சம்பளமும் எனக்குக் கொடுக்கப்பட்டது. கல்லூரி வரைக்கும் இந்தத் தொகை நீடித்தது. ஆகையால், அந்தக் காலக்கட்டத்தில் காமராசரை கடுமையாக விமர்சித்த திராவிட முன்னேற்ற கழகத்தினர் குறிப்பாக கலைஞர் எனக்கு அறவே பிடிக்காமல் போயிற்று. அந்த இளம் வயதில் அவரை நான் எனது சொந்த எதிரியாகவே நினைத்தேன். எனக்கு கிடைத்த முழுக் கல்வியை இவரும், அண்ணாவும் எங்கே பறித்து விடுவார்களோ என்று அநியாயமாகப் பயந்தேன்.

இதோடு, காமராசர் எனது சாதியை சேர்ந்தவர். என்னைப் போலவே சொந்த சாதியால் ஒதுக்கப் பட்டவர் என்பது எனக்கு அப்போது தெரிவிக்கப்பட்டது. எங்கள் ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் உள்ள எங்கள் சாதியினர் காமராசர் ஆட்சிக்கு வந்ததை தாங்கள் ஆட்சிக்கு வந்ததாகவே கருதினார்கள். காரணம் பெரும்பாலும் பனையேறி நாடார்களை கொண்ட எங்கள் கிராமத்தில் நாங்கள்தான் பெரும்பான்மையினர். ஆனாலும், மிகச் சிறுபான்மையினரான ஆசாரிகளும், வெள்ளாளர்களும் எங்கள் ஆட்களை ஒருமையில்தான் பேசுவார்கள். அறுபது வயது நிரம்பிய எனது தாத்தாவை ஒரு ஏழு வயது ஆசாரி சிறுவன் ‘உதிரமாடா! எங்க வீட்டுக்கு வருவீராம்’ என்று சொல்லிவிட்டுப் போவான். எங்கள் தாத்தாவும் ‘அப்படியா ஆசாரி அய்யா’ என்பார். ஒற்றை கணக்கப்பிள்ளை வீட்டிற்கு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு போவார்.

பொதுவாக பிராமணர்களைத்தான் சூத்திரர்கள் இப்படி அழைப்பது உண்டு. ஆனால், சூத்திரர்களான எங்கள் ஆட்கள் இன்னொரு சூத்திரர்களை பிராமணர்களை போல் நடத்த வேண்டிய நிலைமை. இதனை பிற்காலத்தில் என்னைப் போன்ற இளைஞர்கள் தலையெடுத்து நீக்கி விட்டோம் என்றாலும் அப்போது மனோ அடிமையில் கிடந்த எங்கள் சாதியில் ஒருவர் முதலமைச்சர் ஆனதே ஒரு பெரிய சாதனை. ஒரு பனையேறி வீரர் ‘காமராசர் காமராசர் என்கிறார்களே அவரு நம்ம ரிவன்யூ இன்சுபெக்டர் அய்யாவவிட பெரியவரா’ என்று ஒரு பெரிய கேள்வியாகக் கேட்டார். இப்படி எங்களைப் போன்ற எளியவர்களை உய்விக்க வந்த காமராசரை படிக்காதவர் என்றும், பாமரர் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மேடைகளில் திட்டித் தீர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காமராசரின் எதிரிகள் சிறுவனான எனக்கும் எதிரிகளே. இந்த எதிரிப் பட்டியலில் முன்னணியில் இருந்த கலைஞரும் என் எதிரியே.

என்றாலும், காமராசர் சாதியை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட அத்தனை பேருமே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு’ என்பதே தாரக மந்திரம். தமிழ்த்தாயை, இந்தி அரக்கி கொலை செய்ய போவதாக ஒரு எதிர்பார்ப்பு. இதனால், வடநாட்டு மக்களுக்கும், இந்தி மொழிக்கும் எதிராக அனைத்து மாணவர்களும் திமுக கொடியின் கீழ் ஒன்று திரண்டிருந்த நேரம். படிக்காத மனிதர்கள் கூட மேடையில் திமுகவினர் காமராசரை படிக்காதவர் என்று சொல்லும் போது இவர்கள் என்னமோ லண்டனில் படித்து விட்டு பாரிசில் டாக்டர் பட்டம் வாங்கியது போல் கைதட்டுவார்கள். இத்தகைய அரசியல் சூழலில் நான் காமராசரை பார்க்காமலே அவர் பக்தனானேன்.

அந்தக் காலகட்டத்தில், என் வரைக்கும் திராவிட இயக்கம் என்பது திராவிட முன்னேற்ற கழகம் தான். அவ்வப்போது தந்தை பெரியார் பேசுவது தினத்தந்தியில் மட்டுமே வரும். அதோடு சரி. இந்தக் கட்டத்தில் பள்ளிக்கூட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் நான் சிறிது சமூக சிந்தனையையும் வளர்த்துக் கொண்டேன். பாரதியார் மனைவி செல்லம்மா பிறந்த கடையத்தில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பாரதியார் வாழ்ந்த விதம் பற்றி பல பெரியவர்களிடம் கேட்பேன். மாவட்ட அளவிலான உயர்நிலைப்பள்ளி பேச்சுப்போட்டியில் நான் வெற்றிப் பெறுவதற்காகவும், அந்த வெற்றிக்கு வித்தியாசமான பேச்சு இருக்கவேண்டும் என்பதற்காகவும் பாரதியை மெய்யாக விரும்பியதாலும் அவரோடு பழகியவர்கள், அவர்களது வாரிசு உறவினர்கள் ஆகியோரை சந்தித்து மாணவத்தனமாக சில கேள்விகளைக் கேட்டதுண்டு.

உண்மையாகவே, பாரதியார் கழுதையின் வாலை பிடித்துக் கொண்டு அதன் பின்னால் ஓடியிருக்கிறார். செல்லம்மா கொஞ்சம் நஞ்சம் கிடைத்த அரிசியை புடைக்கும் போது ஓடிப்போய் அவற்றில் ஒரு குத்தை எடுத்து பறவைகளுக்கு வீசியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கவிஞனை பார்ப்பனக் கவி என்று வர்ணித்த திராவிட இயக்க பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால், கலைஞர் இந்த அணியில் இருந்தாரோ இல்லையோ இந்த இயக்கத்தின் முன்னோடியாக சித்தரிக்கப்பட்ட அவர் மீது எனக்கு தீராப்பகை ஏற்பட்டது.

இன்னொரு முக்கிய காரணம், திராவிட இயக்கத்தைப் பற்றிய சரியான தகவல்களோ அல்லது அன்றைய பிராமணர்கள் கிழித்த சூத்திரக் கோட்டையோ அந்தக் கோட்டிற்கும் கீழே உள்ள ஆதிதிராவிட மக்களைப் பற்றி வரலாற்று ரீதியான தகவல்களையோ இந்த இயக்கம் சொல்லாலோ அல்லது எழுத்தாலோ தெரிவித்ததில்லை. எனக்கு தெரிந்து ‘உஞ்சிவிருத்தி பாப்பான்’ என்பன போன்ற வசவு வார்த்தைகளே அதிகமாக புழங்கப்பட்டன. இதனால், இந்த இயக்கத்தின் மீது எனக்கு ஒட்டுமொத்தமான கடுமையான வெறுப்பு என் இளம் வயதிலேயே பதிந்துவிட்டது. பிராமணர் பக்கமே அனுதாபம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நமது முப்பாட்டிகள் இடுப்புக்கு மேலே எந்த துணியையும் போடக்கூடாது என்று இருந்த இந்து மத அட்டூழியமோ, பஞ்சமருக்கு இடமில்லை என்று அந்தக் கால பேருந்துகளில் வெளிப்படையாக எழுதி வைக்கப்பட்டதோ, குற்றால அருவியில் குளிக்கக் கூட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை கிடையாது என்ற தகவலோ எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த தகவல்களை தாங்கிய நூல்களை நான் படித்ததில்லை. இவை கிடைத்திருந்தால் படுகளத்தில் ஒப்பாரி தேவையில்லை என்று கருதி நான் ஒரு வலுவான திராவிட இயக்கவாதியாக மாறியிருப்பேன். இந்த தகவலின்மையே இந்த இயக்கத்தை நான் எதிரியாக பாவிக்கும் மனப்போக்கை என்னுள் ஏற்படுத்தி விட்டது.

இந்த இயக்கத்தின் வடிவமாக அண்ணா எனக்கு தோன்றவில்லை. காரணம் அவர் தமிழ், சிந்தனையாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தாண்டி பாமர மக்களுக்கு போகவில்லை. ஆனால் கலஞைரின் தமிழோ பாமர மக்களை கவர்ந்தது. அவர்கள் மத்தியில் அண்ணாவை விட கலைஞரே வலுவாக நின்றார். மாணவர்கள் அண்ணாவை மதித்தார்கள். வியந்தார்கள். ஆனால் கலைஞரை தங்களில் ஒருவர் என்பது போல் நேசித்தார்கள். இதனால் கலைஞர் மீது எனக்கு கண்மூடித்தனமான கோபம் ஏற்பட்டது. போதாக்குறைக்கு, எம்.ஜி.ஆருக்கு ஏற்றம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சிவாஜி கணேசனை, திமுக தொண்டர்கள் குறிப்பாக மாணவர்கள், தொந்தி கணேசன் என்றும், திருப்பதி கணேசன் என்றும், கஞ்சன் என்றும் திட்டித் தீர்த்து அவரது அற்புதமான நடிப்பை மூடி மறைத்தது எனக்கு இந்த இயக்கத்தின் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது.

இளம் வயதில் ஒன்று பதிந்து விட்டால், அப்படி பதிந்தது பதிந்தது தான் என்பது என் வரைக்கும் உண்மையாயிற்று. திராவிட இயக்கத்துடன் மானசீகமாக இணைவதற்கு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பட்டன. ஆனாலும், பசுமரத்தாணி என்பார்களே அப்படி திராவிட எதிர்ப்பு என்னுள்ளே பதிந்துவிட்டதால் எனக்கு ஏற்பட்ட சிறுமைகள் கூட பெரிதாக தெரியவில்லை.

எடுத்துக் காட்டாக, ஒரு தடவை பாரதி விழாவில் நடந்த பேச்சுப் போட்டியில் எந்த சூது வாதும் இல்லாமல் பாரதி பாடிய ‘பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியை துரை என்ற காலமும் போச்சே’ என்ற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினேன்.

அன்று முதல் கடையத்தில் உள்ள சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் அத்தனை பிராமண ஆசிரியர்களும் என்னை எதிரி மாதிரி நடத்த துவங்கினார்கள். அவர்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த நான் வில்லப் பிள்ளையாகப் போய்விட்டேன். ஒருசிலரை தவிர்த்து, அத்தனை பிராமண ஆசிரியர்களும் என்னை வகுப்புகளில் அவமானப் படுத்தினார்கள். பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் முதலாவதாக வந்த என்னை ஒதுக்கி வைத்தார்கள். அப்படியும் எனக்கு, பிராமணர்களை விடுங்கள் பிராமணீயத்தின் மீது கூட வெறுப்பு ஏற்படவில்லை.

இதே சமயத்தில் கலைஞரையோ அல்லது அவரது தமிழையோ என்னால் உதற முடியவில்லை. 1952ஆம் ஆண்டில் வெளியான அவரது பராசக்தி படம், இரண்டு ஆண்டுகள் கழித்து எங்கள் பக்கத்து ஓலைக் கொட்டகை டூரிங் தியேட்டர்களுக்கு வந்தது. இது இளைஞர்கள் மத்தியிலே மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. எட்டாவது வகுப்பு வரை படித்த ஒவ்வொரு இளைஞனும் மேடை நாடகங்களிலும், கல்யாண நிகழ்ச்சிகளிலும் கலைஞர் பாணியில் பேசத் துவங்கினான். அவனை அறியாமலே தமிழை பொறுத்த அளவில் அவனுடைய நாக்கு சரஸ்வதியானது என்று சொல்வதை விட அதற்கு இணையாக கலைஞரானது என்று சொல்லலாம். சரஸ்வதி கம்பனையும், ஒட்டக் கூத்தனையும் பெரிய அளவில் நாடறியச் செய்த ஞானத் தெய்வம். ஆனால், கலைஞர் என்ற மானுடரோ ஒவ்வொரு பாமரனையும் தமிழால் தட்டி எழுப்பி தன்னைப் போல் அவனை பேச வைத்தார். அப்போது இதைக் கோபமும் குமுறலுமாக ஒப்புக் கொண்டேன்.

நானும் கலைஞரின் தாக்கத்திற்கு உட்பட்டேன். படித்த (அதாவது அந்த காலத்து எஸ்.எல்.சி) பல இளைஞர்கள் கலைஞர் வசன பாணி நாடகங்களை பட்டி தொட்டி எங்கும் அரங்கேற்றினார்கள். நானும் கட்டுரைப் போட்டிகளில் கலைஞர் பாணி தமிழையே கையாண்டு வெற்றி பெற்றேன். எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது கூட அதை பொறுக்காத சில பேர்வழிகள் எனது சிறுகதைகள், நாவல்களில் வரும் உரையாடல்கள் ஓசை நயத்தோடு இருப்பதாக குற்றம் சாட்டுவதாக நினைத்து தங்களுக்கு தெரியாமலே எனக்கு புகழாரம் சூட்டினார்கள். இந்த ஓசை நயம் நான் என்னையும் மீறி கலைஞரிடம் இருந்து கடன் வாங்கியது.

இன்னும் ஒரு சுவையான அனுபவத்தை சொல்லியாக வேண்டும். கலைஞரின் தமிழ் என் மூலம் வெளிப்பட்டு பல இளைஞர்களையும், இளம் பெண்களையும் காதலர்களாய் மாற்றியது. அந்தக் காலத்தில் காதல் என்பதே அப்போதுதான் அரும்பத் துவங்கியது. அதற்கு முன்பு காதலில் சிக்கியவர்கள் குறிப்பாக பெண்கள் பிடிபட்டால், அவர்கள் இரவோடு இரவாக எரித்துக் கொல்லப்படுவார்கள். ஆண்களாக இருந்தால், மொட்டை அடிக்கப்பட்டு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைகளில் ஏற்றப்படுவார்கள்.

உதாரணமாக, எங்கள் ஊர் வாத்தியாருக்கு வெளியூரில் கல்யாணம். தாலிகட்டிய உடனே, அவருடைய மனைவி அவருக்கு தேநீர் கொடுத்தாளாம். உடனே எங்க ஊர்ப்பக்கம் ‘இப்படியும் ஒரு பொம்பளையா’ என்று வக்கணை பேசுவார்கள். திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்று தாய் வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண் கூட, பிறந்த ஊரில் கம்மாகரை வரைக்கும் கட்டிய கணவனோடு உல்லாசமாகப் பேசி நடப்பாள். ஊருக்குள் நுழைந்ததும் அவர் யாரோ தான் யாரோ என்பது மாதிரி ஒரு பர்லாங்கு எட்டி நடப்பாள்.

இந்தப் பின்னணியில், திராவிட இயக்கம் காதலிலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதுதான் அறிமுகமான பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு பெட்டிக் கடை வைத்திருப்பவர்களும், வயர் மேன்களும், டெய்லர்களும் கதா நாயகர்கள். விவசாயக் கூலிப் பெண்களுக்கு வில்லுப் பாட்டாளிகளும், மேடை நாடக நடிகர்களும் நாயகர்கள். எஸ்.எல்.சி பெயிலான பயல்களுக்கு ஹையர் கிரேடு எனப்படும் எட்டு படித்த பயிற்சி பெற்ற ஆசிரியைகள் நாயகிகள். வேலை பார்க்கும் படித்த இளைஞர்களுக்கு செகண்டரி கிரேடு எனப்படும் உயர்தர ஆரம்பப்பள்ளி ஆசிரியைகள் நாயகிகள்.

இப்படிப்பட்ட சூழலில் பெரும்பாலான இளைஞர்களுக்கு எனக்கு நன்றாக எழுத வரும் என்பது எப்படியோ தெரிந்து விட்டது. தாங்கள் நேசிக்கும் பெண்களுக்கு அவர்கள் பெயரில் நான் காதல் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞனும் விடுக்கும் வேண்டுகோள். நான் உடனடியாக மசிய மாட்டேன். என்னிடம் காதல் கடிதம் பெற நினைக்கும் ஒரு இளைஞன் எங்கள் ஊரில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள குற்றாலத்திற்கு என்னை சைக்கிளில் ஏற்றிச் செல்ல வேண்டும். குற்றால அருவி வெள்ளத்தில் எனது டவுசரையும், சட்டைகளையும் சோப்பு போட்டு துவைத்து தரவேண்டும். திரும்புகிற வழியில் தென்காசியில் ஒரு அய்யரம்மா வீட்டளவில் நடத்திய விடுதியில் சாப்பாடு வாங்கித் தர வேண்டும். சாப்பாடு நாலணா. நிறைவாக இருக்கும். பிறகு தென்காசி பரதன் தியேட்டரில் சினிமாவுக்கு கூட்டிப் போக வேண்டும். வருகிற வழியில் பாவூர்சத்திரம் என்ற இடத்தில் ஒரு டீயும், இரண்டு மசால் வடையும் வாங்கித் தரவேண்டும்.

இப்படி ஒரு தடவை என்னைக் கவனித்தால்தான், நான் காதல் கடிதங்கள் எழுதுவது பற்றி யோசிப்பேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் உடையழகு, உருவ அழகு, நடையழகு, சொல்லழகு போன்றவற்றை மிகைப்படுத்தி அசிங்கமான தோற்றங்களை எடிட் செய்து ‘கண்ணே, கற்பூரமே, கஸ்தூரி பெட்டகமே, தேவகுல பெண்ணே, நாவல் பழ நிறத்தாளே’ என்று மனதில் உருவாகும் வார்த்தைகளை எல்லாம் ஒன்று திரட்டி கடிதமாக்கி, கொடுத்து விடுவேன். வீட்டில் பெற்றோரிடமும் அண்ணன் தம்பியிடமும் நாயே பேயே என்றும் கவுகண்ணி, மஞ்ச கடஞ்சாள், ஆமை, எருமைமாடு போன்ற பட்டங்களை சுமக்க முடியாமல் சுமக்கும் இளம் பெண்களுக்கு இத்தகைய கடிதங்கள் வரப்பிரசாதமாகவும், வடிகாலாகவும் அமைந்திருக்கும். இந்தக் கடிதங்களை அவர்கள் எழுத்துக் கூட்டிப் படிப்பார்கள். கடிதம் கிடைத்த மூன்று நாட்களிலேயே புளியந்தோப்பில் சந்தித்துக் கொள்வார்கள். ஆணும் பெண்ணும் நிலம் பார்த்தும், குலம் பார்த்தும் காதலித்ததால் பிரச்சனை அதிகமாகவில்லை. சில இளைஞர்கள் கையோடு பிடிபட்டு அடிபட்டு இருக்கிறார்கள். இவர்களை அப்படி அடித்த சம்பந்தபட்ட பெண்ணின் சகோதரர்களுக்கு நான்தான் காதல் கடிதங்களை எழுதி கொடுத்தவன் என்பது தெரியும். ஆனாலும் என் கிட்டே வரமாட்டார்கள்.

கல்லூரி விடுமுறையில் கிராமத்திற்குச் சென்ற நான் கலைஞர் பாணியில் எழுதிய ஒரு நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறேன். எனக்கு சிவாஜி போலவே வசனம் பேசுபவன் என்றும், கருணாநிதி போலவே வசனம் எழுதுகிறவன் என்றும் ஏகப்பட்ட நல்ல பெயர். ஆகையால், கலைஞர் அந்த வயதிலேயே தமிழை பொறுத்த அளவிலாவது என் வழி காட்டியாகிவிட்டார். ஆனாலும், வழியைத்தான் பார்த்தேனே தவிர வழிகாட்டியை பகைமையுடன் ஒதுக்கி விட்டேன்.

சென்னையில் சர் தியாகராய கல்லூரியில் நான் படித்த போது, திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் இளைஞர்கள் வடசென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் என்ற ஒரு பத்திரிகையை நடத்தினார்கள். அதில் திராவிட இயக்கத்தை கிண்டல் செய்து ஆசிரிய எண்சீரடி விருத்தத்தில் நான் ஒரு கவிதை எழுதி அது பிரசுரமாயிற்று. அப்போது காங்கிரஸ் மாணவரான செந்தில்நாதனின் அண்ணன் ராஜா, என்னை அந்த பத்திரிகைக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். பின்பு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்களின் அறிமுகமும் கிடைத்தது. இந்த பலத்தில் பல்வேறு அரசியல் மேடைகளில் பேசினேன். அண்ணாவை கிண்டலடித்து அருமை நண்பர் கரிகாலன் எழுதிய ஒரு நாடகத்திற்கு நான் பாடல் எழுதி அது பிரமாதமாகவும் விளம்பரம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மகாநாட்டில் பெருந்தலைவர் காமராசர் முன்னிலையில் அடுக்கு மொழியில் பேசினேன். தேசிய முழக்கத்தில் எழுதிய கவிதையை அப்படியே ஒப்பித்தேன். காமராசர் பரவசமாகி விட்டார். அதிக பிரசங்கித் தனமாக பேசுகிறவர்களை மேடையிலே சட்டையைப் பிடித்து இழுக்கும் பெருந்தலைவர் என் பேச்சுக்கு கிடைத்த பலத்த கைதட்டல்களால் மகிழ்ந்து போனார். அவர் பேசும் போது ‘எங்க கிட்டேயும் அடுக்கு மொழி பேசறவன் இருக்கான், இவன் கூட பேசறதுக்கு வரியா’ என்று அறைகூவல் விடுப்பது போல் பேசினார்.

இந்த வெற்றிக்கு காரணம் கலைஞரின் தமிழே எனது பேசும் பாணி வித்தியாசமானது என்றாலும் நான் ‘அடக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டது, மடக்கப்பட்டது’ என்ற அடுக்கிக் கொண்டே போவேன். இது கலைஞர் தன்னையறியாமல் தந்தது. நான் என்னையறியாமல் பெற்றது. இந்தத் தமிழை வைத்தே அண்ணாவின் வீட்டு முன்பு அவரையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். மறுநாள் அண்ணா இருந்த மேடையில் ஒரு திமுக பேச்சாளர் அப்போது நெல்லை சமுத்திரமாக அறியப்பட்ட என்னை கடுமையாகச் சாட அண்ணாவோ பேச்சாற்றல் மிக்க அந்த இளைஞர் என் பக்கம் வந்தால் அவரை தலையில் வைத்து தாங்குவேன் என்பது மாதிரி பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களால் சல்லிக்காசு எனக்கு பிரயோசனமில்லை என்று தெரிந்தும், என்னால் அண்ணாவின் பக்கம் தாவமுடியவில்லை. காரணம் விவாதமும், எதிர்விவாதமும் ஒரு கட்டத்தில் சடுகுடு ஆட்டமாகி விடுகிறது. இதில் உண்மை வெல்ல வேண்டும் என்பதற்கு பதிலாக தீயவைகளை பயன் படுத்தியாவது தனது அணி வெற்றிப் பெற வேண்டும் என்பதே மேலோங்குகிறது.

இந்த அரசியல் சடுகுடு ஆட்டத்தில் நான் தேசிய அணியில் இருந்தேன். அந்தக் காலத்தில் திராவிட நாடு, நம்நாடு, முரசொலி, தென்றல், இனமுழக்கம் போன்ற ஏகப்பட்ட திமுக பத்திரிகைகளை நான் படிப்பதுண்டு. சிலம்புச் செல்வரின் செங்கோல், ஜீவாவின் தாமரை போன்ற இதழ்களையும் படிப்பதுண்டு. அந்த காலத்தில் ஒவ்வொரு கட்சி கிளை அலுவலகங்களிலும் தினமணி, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளும், கட்சி பத்திரிகைகளும் வைக்கப் பட்டிருக்கும். காங்கிரஸ் பேச்சாளன் என்று அறியப்பட்ட நான், வடசென்னையில் திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று பல்வறுே பத்திரிகைகளை படிப்பேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அந்த அளவுக்கு சர்வக்கட்சி சமரசம் நிலவியது.

வடசென்னையில் உள்ள சர்தியாகராய கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தமிழ் மாணவர் மன்ற சார்பாக உரையாற்றிய போது, அவரது பேச்சு திராவிட மயமாக இருந்ததால் அதை ஆட்சேபித்து முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த தேசிய மாணவனான நான் ஒற்றை மனிதனாய் வெளிநடப்பு செய்தேன். என்னைத் தவிர எல்லோருமே திமுக மாணவர்கள். ஒருவர் கூட என்னைக் கேலி செய்யவில்லை. என்னுடைய வெளிநடப்பு அவர்களுக்கு பிடிக்கவில்லை. என்றாலும் அதற்கு மரியாதை தெரிவித்தார்கள்.

அந்தக் கல்லூரியில் தமிழ் மாணவர் மன்றத்திற்கு என்னையே தலைவராகவும் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே தமிழ் தெலுங்கு மாணவர் பிரச்சனை ஏற்பட்ட போது நானும் திமுக மாணவர்களும் ஒன்றுபட்டு போராடி அதன் விளைவாக எங்களில் ஆறு பேர் கல்லூரியில் இருந்து துரத்தப் பட்டோம். அப்போது கல்லூரியின் அறக்கட்டளை தலைவராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் உதவிக்கு வரவில்லை . காங்கிரஸ் ஆட்சியினர் எனக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.

இறுதியில், தந்தை பெரியார்தான் எங்களை காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் சேர்த்து விட்டார். ஆனாலும், வெளியேற்றப்பட்ட மாணவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். நானும் காங்கிரஸ் மாணவனாகவே இருந்தேன். அந்த அளவுக்கு தனி நபர்கள் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை பின்தள்ளி தாங்கள் கொண்ட தத்துவமே முன்னிலைப் படுத்தப்பட்டது. இதனால் திமுக பேரலையில் தலைவர்களான, அமைச்சர்களான கவிஞர் வேழவேந்தன், வேலூர் விசுவநாதன், துரைமுருகன், ஆலடி அருணா, கே.ஏ. கிருஷ்ணசாமி போன்றவர்கள் இன்னும் என் நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படி தனிநபர் உறவு பாதிக்கப் படாமல் இருந்த நமது பொது வாழ்க்கை யார் கண்பட்டோ மாசுபட்டு விட்டது.

மாற்று கட்சியான திமுக மாணவர்களோடு ஒன்றிப்போன என்னால் கலைஞரோடு மட்டும் ஒன்ற முடியவில்லை.

1966ஆம் ஆண்டு புதுடில்லி வானொலி நிலையத்தில் தமிழ் செய்திப் பிரிவில் உதவி ஆசிரியராக சேர்ந்தேன். சட்டப் பேரவை தேர்தலில் விருதுநகரில் காமராசர் தோற்ற செய்தியை மத்தியான செய்தியில் அழுதபடியே வாசித்தேன். காமராசர் தோல்வியை அங்கிருந்த கறுப்புத் தமிழர்களும், வெள்ளைத் தமிழர்களும் வாண வேடிக்கையோடு கொண்டாடினார்கள். இதற்கெல்லாம் முதல் காரணம் கலைஞர் என்றே நான் நினைத்தேன். அவர் மீது இருந்த வெறுப்பு மேலும் மேலும் கூடியது.

இந்த தோல்விக்குப் பிறகு காமராசர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் அங்கேயே முகாமிட்டு பெருந்தலைவரை தோற்கடிப்பதற்காக தேர்தல் பிரசாரத்தை முடிக்கி விடுகிறார். ஊர் ஊராக போகிறார். காமராசரை பற்றி காரசாரமாக விவாதிக்கிறார். நான் மட்டும் அவரது தேர்தல் கூட்டத்தை பார்த்திருந்தால் அவரை நோக்கி. ஒரு கல்லைக்கூட வீசியிருப்பேன். ஆனாலும் காமராசர் வெற்றி பெற்று விட்டார் காமராசர் எதிரி என் எதிரி என்று நினைத்த நான் இப்போதோ என் எதிரியான கலைஞர் காமராசரின் எதிரி என்று நினைக்கத் துவங்கினேன்.

காமராசர் வெற்றி பெற்ற செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள் அரசு விடுப்பில் சென்னை வந்தேன். என் இனிய நண்பர் க.பா. பழனியை சந்தித்தேன். மாணவர் காங்கிரஸ் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இனிய நண்பர். வெளிப்படையாக பேசுகிறவர். கன்னியாகுமரி தேர்தலில் முகாமிட்டவர். அவரை பார்த்ததும் காமராசரை முறியடிக்க நினைத்த கருணாநிதி என்பவரை கண்டபடி திட்டினேன். ‘அந்தாளு எந்த மாதிரி’ என்று கேட்டேன். உடனே பழனி ‘பிரிலியன்ட் பெல்லோ பிரைனி சாப், திமுகவின் பேக்போன்’ என்று மணிப் பிரளவ ஆங்கிலத்தில் அசத்தினார். நான் அவரை அச்சுறுத்துவது போல் பார்த்தபோது ஒரு நிகழ்ச்சியை விளக்கினார்.

தஞ்சையில் திமுக அரசுக்கு எதிராக இந்த பழனி ஒரு போராட்டம் நடத்தினாராம். அங்கே சுற்றுப் பயணமாய் சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியதோடு. ‘பானை இங்கே படியரிசி’ எங்கே’ என்று திமுகவினர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நினைவு படுத்தினாராம். காவல்துறையினரும் காங்கிரஸ்காரர்கள் பரம சாதுக்கள் என்பதால் கலைஞரின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வில்லையாம். ஆனால், அமைச்சர் கருணாநிதியோ கறுப்புக் கொடி காட்டிய தொண்டர்களின் தலைவரான பழனியை நெருங்கி ‘காங்கிரஸ் போராட்ட தலைமை உங்களிடம் வந்ததற்காக உங்களை வாழ்த்துகிறேன் பழனி’ என்று சொல்லி விட்டு போனாராம்.

அகாலமாக மரணமடைந்த தஞ்சை மனிதரான என் தோழர் பழனி அரசியலை ஒரு சடுகுடு ஆட்டமாகவே எடுத்துக் கொண்டார். கலைஞரின் புகழையே அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். பொதுவாழ்க்கையில் தனிமனித வெறுப்போ, துதி பாடலோ கூடாது என்பார். அவரால் பெருந்தலைவர் காமராசரையும் நேசிக்க முடிந்தது. அதே சமயம் பெருந்தலைவரை கடுமையாக விமர்சித்த கலைஞரோடும் அன்பு பாராட்ட முடிந்தது.

ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை. பழனி ஆயிரம் சொன்னாலும் கலைஞருக்கு எதிரான என் வன்மம் கூடியதே தவிர, குறையவில்லை. இவ்வளவுக்கும் கலைஞருக்கு இந்த சமுத்திரத்தைப் பற்றியே தெரியாது. தெரிந்தாலும் ஒரு பொருட்டல்ல. ஆனாலும், கலைஞரை வெறுப்பதை ஒரு சமூக கடமையாகவே நான் நினைத்தேன்.

புதுடில்லியில் இருந்து விடுமுறையில் வந்தபோது, அப்போதைய மவுண்ட் ரோடு வழியாக நண்பர்களோடு நடந்துக் கொண்டிருந்தபோது, ஒரு கார், முன்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது, ஒரு நண்பர், அந்தக் காரில் முன்னிருக்கையில் கலைஞர் போவதாகக் குறிப்பிட்டடார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தமாக பின்னிருக்கையில் இரண்டு பக்கமும் பறவைகளின் இறக்கை மாதிரி கைகளைப் போட்டுக் கொண்டு அமராமல், முன்னிருக்கையில் உட்கார்ந்து, சடன் பிரேக்கில் முகம் கண்ணாடியை இடிக்கக் கூடிய நிலையில் அவர் ஏன் அப்படி போனார் என்பது புரியவில்லை. இதுதான் கருணாநிதியின் இயல்போ என்று அப்போது வியந்துக் கொண்டேன்.