என் பார்வையில் கலைஞர்/சமுத்திரம் மேல் ஒரு உதய சூரியன்

சமுத்திரம் மேல்
ஒரு
உதய சூரியன்

வருவார் கலைஞர் என்றும், வாரார் கலைஞர் என்றும் நிரடலோடு ராமநாதபுரத்திற்கு மத்திய அரசின் களவிளம்பரத் துறையின் மாநில தலைமை அதிகாரி என்ற முறையில் டூர் போனேன். அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் விருந்தினர் மாளிகையில் தடபுடலாகத் தங்கியிருந்தேன்.

ஒருநாள் காலையில் எனது அலுவலக வாட்ச்மேன் எனப்படும் இரவுநேரக் காவலாளி என் அறைக்கு வந்தார். நல்ல இளைஞர். ஆனால் காது மந்தம். நான் பலதடவை ‘கேட்கும் கருவியை’ காதுகளில் பொருத்திக் கொள்ளும்படி கேட்டாலும் அது அவருக்கும் கேட்டாலும், கேளாதது போலவே பாவித்துக் கொண்டவர். உறுப்பு பலவீனம் பெரிதல்ல என்று நான் பலதடவை சொன்னாலும், ஒருதடவை கூட அதை ஏற்றுக் கொள்ளாதவர். காது நன்றாகக் கேட்பது போலவே நடிப்பார். அப்படிப்பட்டவர் என் அறைக்கு வந்து யாரோ நாதன்னு ஒருத்தர் இரவில் அலுவலகத்தில் டெலிபோன் செய்ததாக தெரிவித்தார். என்றாலும் எந்த பெயருக்குரிய நாதன் என்பதை அவரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. வெறும் நாதன் இல்லை இன்னொரு பெயரையும் முன்னால் கொண்ட ஏதோ ஒரு நாதன் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்குப் பயம் பிடித்து விட்டது. ஒருவேளை சண்முகநாதன் எனது அலுவலக டெலிபோன் எண்களை வாங்கி ‘இப்படி எழுதினா எப்படிங்க கலைஞர் வருவார்’ என்று சொல்லி விட்டு நிகழ்ச்சியை ரத்து செய்த விவகாரத்தை சொல்ல வந்திருப்பாரோ என்று துடித்துப் போனேன். உடனே தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியான என் இனிய நண்பர் சுபாசுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் தனக்கு தெரியாது என்றும் சண்முகநாதனிடமே நான் பேசிவிடலாம் என்றும் பரிந்துரைத்தார். எனக்கு சண்முகநாதனிடம் பேசப் பயம். ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை ‘ என்கிற கதையாகிவிடக் கூடாதே என்கிற அச்சம். சும்மா கிடக்கிற சங்கை ஊதிவிடக் கூடாதே என்கிற முன்யோசனை.

என் துணைவியாருக்கு டெலிபோன் செய்தால் கலைஞரின் நிகழ்ச்சி ரத்தாகி விட்டதாக யாரும் தெரிவிக்க வில்லை என்றார். ஆனாலும், யாரோ ஒருவர் எனது ராமநாதபுர அலுவலக எண்ணை வாங்கியதாகவும் குறிப்பிட்டார். எதற்கு என்று தெரியாதாம். இவரும் கேட்கவில்லையாம். அவரும் சொல்ல வில்லையாம். என்னுடைய கோபத்தை மனைவியிடம் காட்டுவது போல் தொலைபேசியை டக்கென்று வைத்தேன். பின்னர் தோழர் செந்தில்நாதனுடன் தொடர்பு கொண்டேன். அவர், தான் பேசவில்லை என்றார். எனது ஆதங்கத்தைத் தெரிவித்தபோது கலைஞர் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டார் என்றார். இது எனக்கும் தெரியும். ஆனாலும், விவகாரம் என்னைப் பற்றியது என்பதால் ஒரு டாக்டருக்கு, தனது நோயை பற்றி ஏற்படும் சந்தேகம் எனக்கும் வந்தது.

ஒருவேளை சண்முகநாதன் இல்லாமல் வேறு நாதனாக இருக்கலாமோ. டில்லியில் தமிழ்ச்சங்க துணைத் தலைவராக பணியாற்றிய என் நண்பர் விசுவநாதனா? அல்லது என்னோடு கல்லூரிப் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டவரும் அமைச்சராக இருந்து விட்டு அரசியலில் இருந்து கவுரவமாக விலகிக் கொண்ட வேலூர் விசுவநாதனா? என் பள்ளித் தோழன் லோகநாதனா? எனது இனிய நண்பரும் தினத்தந்தியின் அப்போதைய செய்தி ஆசிரியருமான சண்முகநாதனா? சென்னை வானொலியில், என்னைச் சொல்லுக்குச் சொல் அண்ணா அண்ணா என்று அழைக்கும் இளைய சகா சாமிநாதனா? அல்லது அற்புதமான இலக்கிய விமர்சகரான பேராசிரியர் இராம. குருநாதனா? அத்தனை நாதன்களையும் நினைத்துப் பார்த்தேன். இதுவரை எந்த நாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

விழா நாள் நெருங்கியது என்பதை விட நெருக்கியது என்றே சொல்லலாம். கலைஞர் வருவதும் உறுதியாகி விட்டது. ஆனாலும், கடைசி நேரத்தில் வராமல் போய்விடுவாரோ என்று ஒரு உதறல். அப்படியானால் இந்நேரம் சொல்லி அனுப்பி இருப்பார் என்கிற ஆறுதல்.

பொதுவாக முதல்வரை வைத்து இந்த மாதிரியான விழாக்கள் நடத்துகிறவர்கள் அதிலேயே பணம் கரந்து விடுவார்கள். பிரபல தொழிலதிபர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்து அவர்கள் முதல்வரிடமிருந்து படிகள் பெறுவது போல் தொலைக்காட்சி சாட்சியாக காட்டி ஒவ்வொருவரையும் ஆயிரக்கணக்கில் ரூபாய் கொடுக்கும்படி செய்து விடுவார்கள். முதல்வர் என்றால் கேட்க வேண்டாம். அத்தனை தொழிலதிபர்களும் கூடி விடுவார்கள். ஆனால், இது ஒரு கேவலமான அணுகுமுறை இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டும் அல்ல. இப்படி விழாவை வியாபார மேடையாக்கும் பேர்வழிகளை நான் வெறுத்து ஒதுக்குகிறவன். அதே சமயத்தில் விழாவிற்கான மின்கட்டணம் இரவு நேரமாகியதால் லேசான மின் தோரணம். பொன்னாடைகள் மாலை மரியாதைகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்கள் என்று முப்பதாயிரம் ரூபாயாவது செலவாகும். மின்கட்டணம் மேடை அலங்காரம் என்று வேறு...

என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடியே எனது நண்பர் அமைச்சர் ஆலடி அருணா அவர்களை அணுகினேன். அவர் நெல்லை நெடுமாறனை தொடர்பு கொண்டு தினத்தந்தி சார்பில் சுவரொட்டிகள் அடிக்கச் செய்தார். நெல்லை நெடுமாறன் திராவிட முன்னேற்ற கழகத்தில் பொறுப்பான பணியில் இருந்தவர். மிகச் சிறந்த ஆய்வாளர், இலக்கியப் பேச்சாளர்.... ஆனாலும், நான் அவரை பேச வரும்படி அழைக்கவில்லை. அது எங்கள் இருவரையுமே கொச்சை படுத்துவதாக இருக்கும் என்று கருதினேன். ஆரம்ப காலத்தில் எனது நூல்களை வெளியிட்டு ஊக்குவித்த மணிவாசகர் நூலகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்கள் அழைப்பிதழ்களை அச்சடித்துக் கொடுத்தார்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் அப்போதைய இயக்குநரும் சிறந்த எழுத்தாளருமான ஏ. நடராசன் அவர்களிடம் ‘பொன்னாடை வாங்கிக் கொடுங்கள்’ என்று உரிமையோடு கேட்டேன். ஐந்து வாங்கிக் கொடுங்கள் நான் கலைஞருக்கு போட்டது தவிர எஞ்சிய நான்கு சால்வைகளையும் மற்ற பேச்சாளர்களுக்கு மாற்றி மாற்றி போட்டு சமாளித்து விடுகிறேன்’ என்றேன். உடனே அவர், ‘செய்வதைத் திருந்த செய்யணும் அண்ணாச்சி’ என்று அறிவுறுத்தினார். எனக்கும் சேர்த்து பொன்னாடைகளை வாங்கி கொண்டு வந்து விட்டார். அருண் வீரப்பன் அவர்கள் வீடியோ படம் எடுத்துக் கொடுப்பதாக தாமே முன் வந்து தெரிவித்து விட்டார். எனது உறவினரும் சிந்தனையாளரும், மருத்துவ துறையில் அனைத்துப் பிரிவுகளையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பவருமான டாக்டர் ராஜ்குமார் பத்திரிகையாளருக்கு விருந்தளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எனது உறவினரான அவர்தான் நன்றியுரை கூறினார்.

விழா நாள் வந்தது.

மாலை ஐந்தரை மணிக்கு வெளியீட்டு விழா துவங்க வேண்டும். ஆனால், கூட்டம் அதிகமாக இல்லை. நான் நம்பியிருக்கும் முற்போக்கு தோழர்கள் ஆறரை மணி அளவில்தான் வரமுடியும், ஐந்தரை மணிக்கே, கலைஞர் வரலாமா என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கேள்வி வந்து விட்டது. சுவரொட்டிகளும், அழைப்பிதழ்களும் அருமையானவை. மக்கள் இலக்கியம் மக்களே இலக்கியம் - கலைஞர் பேசுகிறார் என்ற தலைப்புச் செய்தியோடு விழாச் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. முதல்வரின் புகைப்படமும் பெரிய அளவில் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் எனது புகைப்படத்தை நான் வெளியிடவில்லை. கவர்ச்சியான சுவரொட்டி அதன் தலைப்பே இலக்கியவாதிகளை இழுக்கக் கூடியது.

என்றாலும் சுவரொட்டிகளை ஒட்டும் பொறுப்பை முன்பணம் வாங்கி ஒப்புக் கொண்ட ஒரு அச்சகம், சரியாக ஒட்டவில்லை. ஒப்புக்கு அங்கே இங்கேயுமாக ஒட்டியிருந்தார்கள். கலைஞரின் வீட்டு அருகே கூட ஒட்டவில்லை. போதாக்குறைக்கு, நானும் பத்திரிகைகளை அணுகி அழைப்பிதழ்களை கொடுக்கவில்லை. இந்தப் பின்னணியில் கலைஞர் ஆறு மணிக்கு வரலாம் என்று சொல்லி அனுப்பினேன். அதற்குள் கூட்டம் கூடி விடும் என்ற நம்பிக்கை. காவல்துறை அதிகாரி ஒருவர் ஐந்தரை மணி என்று போட்டு விட்டு முதல்வரின் நிகழ்ச்சியை தள்ளி வைக்கலாமா என்று தனது கோபத்திற்கு நகைச்சுவை முகமூடி போட்டுக் கேட்டார். நானும் ஐந்தரை மணி என்று போடவில்லை. ‘ஐந்தரை மணியளவில் என்று போட்டு இருக்கிறோம்’ என்று பதிலளித்தேன்.

கலைஞர் ஆறுமணிக்கு வந்துவிடுவார் என்று இறுதியான தகவல் வந்தது.

கலைஞர் வந்ததும் மேடையில் இருந்து கூட்டத்தைப் பார்த்தால் அந்த மண்டபம் நிரம்பி வழிந்து, வெளியேயும் வியாபித்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களை விட இலக்கியத் தொண்டர்களே அதிகம். கலைஞர் குறுநகை தவழ வந்தார். நானும் எனது குடும்பத்தினரும் அவரை எதிர் கொண்டு வரவேற்றோம்.


கலைஞர், எனது மூன்று நூல்களையும் பலத்த கை தட்டலுக்கிடையே வெளியிட்டார். இவற்றை ராஜேஸ்வரி அம்மையார் வாங்கிக் கொண்டார்.

தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர். தமிழ்க் குடிமகன் தலைமை வகிக்க, எனது இனிய தோழர் கவிஞர் இளவேனில் வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர் ஆலடி அருணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.என். நல்லகண்ணு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் ச. செந்தில்நாதன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலரும் முற்போக்கு எழுத்தாளருமான பொன்னீலன், கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். தயானந்தன் பிரான்சிஸ், மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச.மெய்யப்பன், சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் அப்போதைய இயக்குநர் ஏ.நடராசன் ஆகியோர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்கள். அப்போது மத்திய அமைச்சராக இருந்த என் இனிய தோழரும் மனதில் பட்டதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் எடுத்துரைப்பவருமான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு என்றே புதுடில்லியில் இருந்து புறப்பட்டு விட்டதாகச் செய்தி வந்தது.

இந்த விழாவிற்கு தலைமை வகித்து பேசிய முனைவர் தமிழ்க் குடிமகன் எனது ஒருசில கதைகளில் கட்டுரைத்தனம் வந்துவிடுகிறது என்றார். அவர் பேசி முடித்ததும் நான் விவரம் கேட்டபோது உங்கள் கதைகளில் ‘செய்திகளின் வீச்சு இலக்கிய வீச்சை அமுக்கிவிடுகிறது’ என்றார். நான் அசந்து விட்டேன். இது அற்புதமான திறனாய்வு. விமர்சகரை படைப்பாளி மதிக்கும் திறனாய்வு. கலைஞர் தக்கவரைத் தான் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சராக ஆக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. இந்த விழாவில் பேசிய செந்தில்நாதன் மத்திய சாகித்திய அக்காதெமி போல் மாநில அளவில் ஒரு அக்காதெமியை அமைக்க வேண்டும் என்று இன்றைய குறள்பீடத்திற்கு வித்திட்டார் என்று சொல்லலாம்.

ஆலடி அருணாவுக்கு என்னைப் பற்றி நீண்டகாலமாகத் தெரியும் என்பதால் விலாவாரியாகப் பேசினார். எழுத்தாளத் தோழர் பொன்னீலன், 1972ஆம் ஆண்டிலேயே, அரசு ஊழியர்கள் படைப்பு இலக்கியத்திற்குள் செல்லலாம் என்று கலைஞர் ஆணையிட்டதை புளங்காகிதமாகச் சொன்னார்.

கலைஞர் ஏழரை மணி அளவில் நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். மூன்று படைப்புகளில் இரண்டில் பல்வேறு பக்கங்களுக்கிடையே அம்பு காகிதங்கள் குத்தப்பட்டு அந்தப் பக்கங்களின் ஓரங்களில் கலைஞர் கையால் குறிப்பெழுதப் பட்டிருந்தது. அவரது கையில் இருந்த அந்தப் புத்தகங்களை பார்க்கும்போது அவற்றிற்கு நீண்ட வெள்ளிச் சங்கிலிகள் அணிவிக்கப் பட்டது போல் தோன்றியது.

சிறுகதை தொகுப்பில் ஆங்காங்கே சில பகுதிகளையும் எனது கதைகளின் கதைகளில் சில பகுதிகளையும், தனது விமர்சனத்துடன் அவர் வாசித்துக் காட்டியபோது விழா மண்டபம் அதிர்ந்தது. அதிகாரிகளின் ஆணவப் போக்கை சித்தரிக்கும் ஒரு கதைச் சுருக்கத்தைச் சொல்லி விட்டு ‘இது நடந்த கதை... இனிமேல் நடக்காத கதை’ என்றார். எனது கதைகளின் கதைகளில் ஒரு இளம் பெண்ணைப் பற்றி குறிப்பிடும்போது ‘அழகாக இருக்க மாட்டாள். ஆனால் கவர்ச்சியாக இருப்பாள்’ என்று ஒரு வரி வரும். உடனே, அழகைப் பற்றி சமுத்திரம் சொல்கிறார் என்று எள்ளல் சுவையோடு பேசியபோது கூட்டம் கைகளைத் தூக்கித் தூக்கித் தட்டியது. (அந்த அளவிற்கு அடியேன் அழகனாக்கும்) அந்தப் பெண்ணும் நானும் தொட்டதில்லை கெட்டது இல்லை என்ற வரியை படித்துவிட்டு நம்புவோமாக என்றார். கலைஞரின் உரை இந்த நூலுக்கு முன்னுரையாக கொடுக்கப்பட்டிருப்பதால் மேற்கொண்டு இங்கே விளக்கவில்லை. ஆனாலும், எழுத்தாளனை அவனது அந்தஸ்தை வைத்து மதிப்பிடலாகாது என்று இப்போது இருக்கும் இலக்கியப் போக்கை விமர்சித்தார். எழுத்தாளன் சொன்னால் அது பலிக்கும் என்று தனது அனுபவத்தையே முன் வைத்தார். சமுத்திரம் எழுத்து ஆய்த எழுத்து என்றார். சமுத்திரத்திற்கு கலைஞர் மீது தாக்கமும் உண்டு கலைஞரை தாக்கியதும் உண்டு என்றார். உப்பு கரிக்கும் சமுத்திரம், கதிரொளி பட்டு நல்ல நீராகி விட்டது என்றும் ஒரு போடு போட்டார்.

எனது ஏற்புரையில் கலைஞருக்கும் எனக்கும் உள்ள மோதல், காதல், விஞ்ஞானரீதியான உறவு முறை ஆகியவற்றை எடுத்துரைத்தேன். எனது படைப்புகளை முழுமையாகப் படைத்து விட்டு, அவர் உரையாற்றியதில் நெகிழ்ந்து போன நான், பேச முடியாமல் விக்கித் திக்கினேன். இது பற்றி கலைஞர் குறிப்பிடும் போது, நான் அவரிடம் தெரிவித்த சில பரிந்துரைகளை மறைமுகமாக குறிப்பிட்டு இவற்றால் ‘நான் திரும்பிப் பார்த்தேன், திருத்திக் கொண்டேன்’ என்று உணர்ச்சிவசமாக பேசினார். என் பேச்சிலிருந்தே மேற்கோள் காட்டி, ‘சமுத்திரத்திற்கு என் மீது அப்படி ஒன்றும் அன்பில்லை ஆனால் அவர் பிரியப்படும் படியாய் நான் நடந்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.

கலைஞர் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது விமானத் தாமதத்தால் மத்திய அமைச்சரான தோழர் எஸ் ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் கலைஞர் பேசிக்கொண்டிருக்கும் போது மேடைக்கு வந்துவிட்டார். கலைஞரும் பேச்சை உடனடியாக முடித்துக் கொண்டார். எஸ்.ஆர்.பியும் பதினைந்து நிமிடம் வரை பேசினார். கலைஞரும், தான் போனால் கூட்டம் கலைந்துவிடும் என்கிற அனுமானத்தில் எஸ் ஆர்பி பேசுவது வரைக்கும் காத்திருந்தார். இந்த நயத்தகு மேடை நாகரீகம் பெரும்பாலான தலைவர்களிடம் காணக் கிடைக்காதது.

இந்த நிகழ்ச்சியில் என்னை ஆளாக்கிய எனது சித்தி ராசம்மாவிற்கு, கலைஞர் மேடையில் பொன்னாடை போர்த்தினார். அந்தக் காலத்து பின் கொசுவ புடவையோடு தோன்றிய அந்த எளிய சித்தியைப் பார்த்ததும் கூட்டமும் நெகிழ்ந்தது. கலைஞரும் நெகிழ்ந்து போனார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் ஆகியோரும் நக்கீரன் ஆசிரியர் கோபால், யு.என்.ஐ செய்தியாளரான தோழர் ரமேசன், இலக்கிய வீதி இனியவன், என்னுடைய கல்லூரி ஆசிரியரும் காவற்துறை தலைவருமான ராஜ்மோகன், நண்பர் அருண்வீரப்பன், சட்டப்பேரவைத் துணை தலைவர் பரிதி இளம்வழுதி, எனது அலுவலக ஊழியர்கள், வேலூர் விளம்பர அலுவலக அதிகாரியும் இப்போதைய திரைப்பட தணிக்கை அதிகாரியுமான தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்த விழாவில் திருஷ்டி போல் ஒரு நிரடலும் ஏற்பட்டது. எனது ஏற்புரையில் முன்னைய சட்டப்பேரவையில் ஒருதடவை இப்போதைய பேரவைத் துணைத் தலைவர் பரிதி இளம்வழுதி வன்முறைக்கு ஆளான போது ‘உனக்கும் காலம் வருண்டா’ என்று குறிப்பிட்டதாக தெரிவித்தேன். பேச எழுந்த கலைஞர் பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளவர்களையும், பார்வையாளர்கள் மத்தியில் இருந்த அமைச்சர்களையும் வெறுமனே பெயரிட்டு அழைத்துவிட்டு ‘மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பரிதி இளம்வழுதி அவர்களே’ என்று அழைத்தார். மற்ற அமைச்சர்களின் பெயர்களைச் சொன்ன போது கைத்தட்டாத கூட்டம் பரிதியை மாண்புமிகுவாக ஆக்கியதும் பலமாக கைத்தட்டியது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. விழா முடிந்ததும் நண்பர்களிடம் விசாரித்தால் நான் சட்டப்பேரவைத் துணைத் தலைவரான பரிதியை அப்படி ‘டா’ போட்டுப் பேசியதைக் குறிப்பிட்டு இருக்கக் கூடாது என்று சொல்லி வைத்தது போல் அத்தனை பேரும் சொன்னார்கள். இதை மனதில் வைத்துத்தான் கலைஞர் மாண்புமிகு வார்த்தையை சேர்த்தார் என்றும் குறிப்பிட்டார்கள். கூட்டத்தினருக்கும் இது எப்படியோ புரிந்து விட்டது. கலைஞர் பேசியதை வைத்து அவர்களுக்கு அப்படி புரிந்ததா அல்லது கூட்டத்தினர் நினைத்ததை கருத்தில் கொண்டு கலைஞர் அப்படி பேசினாரா என்பதற்கு ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம்.