என் பார்வையில் கலைஞர்/காகங்களா கழுகுகளா ஒரு கவித்துவமான பதில்

காகங்களா? கழுகுகளா?
ஒரு
கவித்துவமான பதில்


1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி கலைஞர் இரண்டாவது தடவையாக முதல்வராகப் பதவியேற்றார்.

ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் கலைஞர் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றதும், அதிமுக ஜெயலலிதா அணி எதிர்க்கட்சி ஆனதும் காங்கிரஸ் அடுத்து வந்ததும் பழைய செய்திகள்.

வெற்றிவாகைச் சூடிய கலைஞர், தான் உருவாக்கி, அதுவரை தனக்கே இடமில்லாமல் போன வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்றார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களோடு நானும் கோபாலபுரத்திற்குப் போனேன். கலைஞர் காரில் ஏறவதற்கு முன்பாக, அருகே உள்ள வீட்டிற்குச் சென்று, இரண்டு மூதாட்டிகள் காலில் முழங்காலிட்டு விழுந்தார். அவர் கன்னங்களில் அலை அலையாக நீர் கொட்டியது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்து விட்டது. இரண்டு தமக்கையரும், அப்படியே, அவரது முதுகை தட்டித் தலையை கோதிவிட்டு, கலைஞரின் கண்ணீருக்கு, கண்ணீரையே பதிலாக்கினார்கள். பாசமலர் தோற்றுவிடும்.

கலைஞர் பதவியேற்ற மறுநாளே, சென்னைக் கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். நான் ஒரு கும்பிடு போட்டதும் என்னைத் தெரியும் என்பது போல் தலையாட்டினார். பல்வேறு கேள்விகளை, செய்தியாளர்கள் கேட்டார்கள். சில சமயங்களில் வித்தியாசமான கேள்விகளை நான் கேட்பேன். இதை எல்லோரும் ரசிப்பார்கள் கலைஞரிடம் இப்படிக் கேட்டேன் ‘மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்களிடம் இருந்த காக்காக் கூட்டம், இப்போது உங்களை மொய்க்கும். நீங்கள் இவர்களை என்ன செய்ய போகிறீர்கள்?’

‘காகங்கள் துப்புரவு பணிக்குத் தேவை. ஆனாலும் அவை கழுகுகள் ஆகாமல் பார்த்துக் கொள்ளப்படும்’

இந்தப் பதிலில் எத்தனையோ அர்த்தங்கள் உள்ளடங்கி உள்ளன. ஒவ்வொரு செய்தியாளரும் தத்தம் பத்திரிகைகளின் நிலைபாடுகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள முடியும். மக்களாட்சி முறைமையில் தொண்டர்களை கவனித்துக் கொள்ள வேண்டியதோடு, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தும் உதிரிகளையும், உதிரி கட்சித் தலைவர்களையும் கவனித்தாக வேண்டும். இது தவிர்க்க முடியாதது.

கலைஞரின் செய்தியாளர் சந்திப்புகள் மிகவும் இனிமையானவை. பொதுவாக பிற தலைவர்களை நோண்டும் செய்தியாளர்கள், கலைஞரிடம் அடக்கமாகவே கேள்வி கேட்பார்கள். கணிப்பொறி போல் அரைக் கணத்தில் உலகமெல்லாம் இயங்கும் இண்டர்நெட் போல் அவர் உடனடியாக பதிலளிப்பார். கேள்வியை பதிலாக திருப்பிக் கொடுப்பார். கேட்டவரும் அவரோடு சேர்ந்து சிரிப்பார்.

பொதுவாக தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புகளில் நொறுக்குத் தீனி கிடைக்கும். தொழிலதிபர்கள், செய்தியாளர்களை சந்திக்கிறார்கள் என்றால், என்னவெல்லாமோ கிடைக்கும். ஆனால், கலைஞரின் செய்தியாளர் கூட்டங்களில் இப்போது எப்படியோ அப்போது குடிக்கத் தண்ணீர் மட்டுமே கிடைக்கும். ஒருதடவை முதல்வர் கலைஞரின் பேட்டி ஒன்றரை மணியைத் தாண்டிவிட்டது. வயிற்றுப்பசி அகோரமாக இருந்தது. உடனே நான் ‘சார் முதல்ல வயிற்றுக்கு உணவிட்டு விட்டு அப்புறம் செவிக்கு உணவிடுங்கள்’ என்று உரிமையுடன் கேட்டேன். அவர் வழக்கம் போல் நையாண்டியாக பதிலளிக்கவில்லை. சிரித்தார். அன்றுமுதல் அவரது செய்தியாளர் கூட்டத்தில் தேநீர், பிஸ்கட் வகையறாக்கள் கிடைத்தன.

ஒரு தடவை, ஊட்டியில் இப்போது காணாமல் போன பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் திரைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னொரு தொழிற்பிரிவை இயக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வானொலிச் செய்தியாளராக சென்றிருந்தேன். பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசில் தொழிலமைச்சராக இருந்த வெங்கல்ராவ் தலைமையேற்க, முதல்வர் கலைஞர் அந்தப் பிரிவைத் துவக்கி வைத்தார். நான் வாழ்க்கை வெறுத்துப் போய் கூட்டத்தின் பின்பக்கம் ஒதுங்கி உட்கார்ந்திருந்தேன். சென்னை தொலைக் காட்சியினருக்கு ராஜமரியாதை. வானொலிக்காரனான என்னை சீண்டுவார் யாரும் இல்லை. இவ்வளவுக்கும் அதிகார ஏணியில் நான் இருக்கும் படிகளுக்கு கீழே நிற்கும் தோழர்கள்தான் தொலைக்காட்சி சார்பாக வந்திருந்தார்கள். அமைச்சர்களுக்கான அடுத்தபடியான வரவேற்பு அவர்களுக்குத்தான்.

நான் நொந்து போனாலும், காரியத்தில் கண்ணாய் இருந்தேன். நிகழ்ச்சி முடிந்த பத்து நிமிடங்களுக்குள் புதுடில்லியில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தியில் இந்த நிகழ்ச்சியை தலைப்புச் செய்தியாக ஒலிப்பரப்பும்படி செய்து விட்டேன். வானொலி செய்தியை கேளுங்கள் கேளுங்கள் என்று காலைப் பிடிக்காத குறையாக அந்த நிறுவன அதிகாரிகளை கெஞ்சிக் கூத்தாடி கேட்கச் செய்தேன். அவர்கள், முதல்வரையும், மத்திய அமைச்சரையும் கேட்கச் செய்தார்கள். அப்படியும் செய்தி போட்டவர் யார் என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

இதை தெரிந்து வைத்தது போல், வெளியே புறப்பட்ட கலைஞர், என்னிடம் நேரிடையாக வந்தார். ‘சமுத்திரம் உங்கள் நான் அப்பவே பார்த்துட்டேன்’ என்று கூறிவிட்டு குசலம் விசாரித்து விட்டு சென்று விட்டார். அத்தனை பேரும் என்னை மொய்த்து விட்டார்கள். நான் அவர்களுக்கு திடீர் வி.வி.ஐ.பியாக மாறிவிட்டேன். இந்த நிறுவனத்தின் இயக்குநர், என்னை தனது அறைக்கு அழைத்துச் சென்று, அந்த நிறுவனத்தை எப்படி மேன்படுத்த வேண்டும் என்று எனக்கு விளக்கினார். அவரது நோக்கம், நான் கலைஞருக்கு சொல்லி, கலைஞர் மூலம் மத்திய தொழிலமைச்சருக்கு செய்தி போகவேண்டும் என்பதுதான். என்னை அடிக்கடி மேன்மைபடுத்துகிறவர் கலைஞர். இப்படி பல நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படி நட்பாக போய்க் கொண்டிருந்த வானொலிச் செய்திகள் கலைஞரை காயப்படுத்தியதும் உண்டு. செல்வி ஜெயலலிதாவின் அப்போதைய மனச்சாட்சிக் காவலரான நடராஜன் வீட்டில், காவல்துறை ரெய்டு செய்து, அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதா பேரவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை கைப்பற்றி, பேரவைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தது நினைவிருக்கலாம். அன்றிரவு சுமார் ஒரு மணியளவில் நடராசனும், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.

ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அந்த கடிதத்துடன் கூடிய அறிக்கையை அவர் விலக்கிக் கொண்டார் என்றார்கள். அதாவது அரசியலில் தொடர்ந்து நீடிப்பார் என்று பொருள். இந்தப் புதிய தகவலை நான் வானொலியில் ‘ஸ்கூப்’ என்பார்களே அப்படிப்பட்ட சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டேன். காலையில் வெளியான எல்லா நாளிதழ்களும் ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகிவிட்டதாக மிகப் பெரிய பேனர்களோடு செய்திகளை வெளியிட்ட போது, சென்னை வானொலி மட்டுமே அவர் வாபஸ் வாங்கி தொடர்ந்து அரசியலில் ஈடுபடத் தீர்மானித்திருக்கிறார் என்ற செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

டில்லி மேலிடத்தின் ஆணைப்படி நான் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று மேற்கொண்டு நடந்தவற்றை ஆங்கிலச் செய்தியாக்கினேன். எனக்கு கிட்டத்தட்ட கதாநாயக வரவேற்புதான்.

இந்த விவகாரம் முதல்வர் கலைஞருக்கு உளவுச் செய்தியாக போயிருக்கும். சென்னைக் கோட்டையில், அவரது அலுவலகத்தில் நானும் ஒரு சில செய்தியாளர்களும் அவரை நண்பகலில் சந்தித்தோம். என்னைப் பார்த்ததும் கலைஞர் முகத்தில் ஒரு கோபச்சலனம். இதரச் செய்தியாளர்களைப் பார்த்து ரெய்டுக்கும் தனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு ஆப் - தி - ரெக்கார்டாக சில விவரங்களைச் சொன்னார். இதனுடைய விளைவுதான் அந்த கடிதம் என்றார். ஆனால், அதை கைப்பற்றும் ரெய்டுக்கு தான் காரணமில்லை என்றார். ஒருவேளை அவருக்குத் தெரியமாமேல அதிகாரிகள் சபாஷ் பட்டம் வாங்குவதற்காக அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், முக்கால்வாசி , கலைஞருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது. பல்லாண்டு காலமாக பொறுமையைக் கடைபிடித்த கலைஞர், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு விட்டார் என்றே சொல்லலாம். அதன் விளைவுகள்தான் இன்றும் நம்மை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன. கலைஞரின் விளக்கத்தை செய்தியாளர்கள் எழுதிக் கொண்டிருந்தபோது, நான் பேசாமல் முதல்வர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தேன். உடனே அவருக்கு கோபம் வந்து விட்டது. நான் சொல்வதை குறிப்பெடுக்காமல் இருக்கீங்க. பிறகு எதற்கு வந்தீங்க என்று கோபமாகக் கேட்டார். ஒருவேளை, நான் ஜெயலலிதாவின் ஆளாகிவிட்டேன் என்று அவர் அனுமானித்து இருக்கலாம். உடனே நான் ஒலிபரப்புச் செய்தி சுருக்கமானது என்றும், அவர் சொன்னதை மனதில் குறித்துக் கொண்டேன் என்றும் தெரிவித்தேன். பிறகு ஒப்புக்கு குறித்துக் கொள்வது போல், பக்கத்தில் உள்ளவரிடம் ஒரு பேப்பரை கடன் வாங்கி, மை இல்லாத பேனாவால் எழுதுவது போல் பாவனை செய்தேன். உடனே ‘இது கலைஞரின் ஓரக் கண்ணுக்குத் தெரிந்து எங்கே எழுதியதைக் காட்டுங்கள் என்று கேட்டுவிடுவாரோ என்ற பயம். என்றாலும் திருச்சியில் பகல் இரண்டு பத்து செய்தியில் கலைஞர் குறிப்பிட்ட அத்தனையும் முதல் செய்தியாக ஒலிப்பரப்பானது.

இந்த அரசியல் பரபரப்பை அடுத்து, இதைவிட பயங்கரமான ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சட்டப் பேரவைக் கூட்டம் கூடியிருக்கிறது. முதல்வர் கலைஞர், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய எழுந்து நிற்கிறார். அதுவரை சட்டப் பேரவைக்கே வராத எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா அன்று வந்திருக்கிறார். முதல்வர் நிதிநிலை அறிக்கையை படிக்கப் போகும் போது அவர் படிக்கக் கூடாது என்று வாதாடுகிறார். இந்தச் சமயத்தில் ஜானகி அணியின் ஒற்றை உறுப்பினரான பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவுக்கு எதிராக ‘இது கோர்ட் அல்ல சட்டப்பேரவை’ என்று அந்த அவையே அதிரும்படி கத்துகிறார். இதுவே பேரவையின் கலிங்கத்துப் பரணிக்கு பிள்ளையார் சுழியாகிறது.

ஜெயலலிதா, கலைஞரை கிரிமினல் என்கிறார். உடனே கலைஞர் ஏதோ பதிலுக்குச் சொல்கிறார். பேரவையிலிருந்து மூன்றடித் தூக்கலில் உள்ள செய்தியாளர் மாடத்தில் இருந்த நாங்கள் உஷாராகிறோம். உன்னிப்பாக கவனிக்கிறோம். கலைஞரின் மூக்குக் கண்ணாடி, ஜெயலலிதா, அவரது பைலை தட்டிவிட்டதால் கீழே விழுகிறது. உடனே திமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவை நோக்கி முன்னேறுகிறார்கள். ஆனால், அவரோ சோபா செட்டுக்குள் போய் பதுங்கிக் கொள்ளுகிறார்.

இப்படி நுழையும் போது அவரது மேல் சேலை கலைகிறது. இதை என் கண் முன்னாலேயே பார்த்தேன். திமுக உறுப்பினர்கள் அந்த சோபாவுக்குள் முதுகு காட்டிக்கிடந்த ஜெயலலிதா மீது காகிதச் சுருள்களை எறிகிறார்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவரான திருநாவுக்கரசு, செல்விக்கு பாதுகாப்பாக முதுகு வளைய நின்று கொள்கிறார். அமைதி திரும்புகிறது. ஜெயலலிதா சோபா செட்டில் இருந்து எழுந்து கலைந்திருந்த தலைமுடியை முழுமையாக கலைத்து விட்டு முகத்தை அழுகை ஆக்கிக் கொண்டு பேரவையில் இருந்து வெளியேறுகிறார். முதல்வர் நிதி நிலை அறிக்கையை தட்டுத் தடுமாறி படிக்கிறார்.

இந்த நிகழ்வை, திருச்சி வனொலி செய்தியில் உள்ளது உள்ளபடி விளக்கிவிட்டு, இறுதியில் கலைஞரின் கண்ணாடி உடைந்ததையும், ‘ஜெயலலிதாவும் தலைவிரி கோலமாக பேரவையிலிருந்து புறப்பட்டு இதோ போய்கொண்டிருக்கிறார்’ என்று செய்தி போட்டேன். மாலை பத்திரிகைகள் வருவதற்கு முன்பே இது காட்டுத் தீ போல் பரவிவிட்டது. அ.தி.மு.க தொண்டர்களுக்கு தலைவிரி கோலந்தான் மனதை உறுத்தியதே தவிர அதற்கு முன்னாலும் பின்னாலும் நடந்த நிகழ்ச்சிகளை உள்வாங்க மறுத்தார்கள்.

நானும் என் உதவியாளர்களும் கோட்டையில் இருந்து பல்லவ பேருந்தில் புறப்பட்டோம். விவேகானந்தர் இல்லத்திற்கு அருகே பேருந்து வரும் போது நான்கைந்து குண்டர்கள் அல்லது தொண்டர்கள் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி, பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் எறிந்தார்கள். தலைபிழைத்ததே தம்பிரான் பாக்கியம். நான் ஒலிபரப்பிய செய்தியே கல்லாக பாய்ந்தது கண்டு, சிறிது நேரம் கல்லாகிப் போனேன். பேரவையில் நடந்த சமாச்சாரங்களுக்கு பயணிகள் எப்படிப் பொறுப்பாவார்கள் என்கிற குறைந்தபட்ச பகுத்தறிவு கூட இவர்களுக்கு இல்லை. இந்தக் காட்டுமிராண்டித் தனமான கல்லெறியை நினைத்தால் இப்போது கூட பயமெடுக்கிறது.

மாலையில் அத்தனை பத்திரிகைகளும் ஜெயலலிதா துகிலுரியப் பட்டதாக செய்திகளை வெளியிட்டன. ஆனால், சென்னை வானொலி நிலையம் மட்டும் பட்ஜெட் செய்திகளை வெளியிட்டு விட்டு, பின்னர் பேரவையில் நடந்த சம்பவங்களை விளக்கியது. ஜெயலலிதா துகிலுரியப் பட்டார் என்று ஒரு வரிகூடச் சொல்லவில்லை. ஆனாலும், ஜெயலலிதா தாக்கப்பட்டு அவமானப்படுத்தப் பட்டதை நேரில் பார்த்தது போல், நமது தலைவாதி தலைவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கைகளை செய்திகளாக்க வேண்டிய கட்டாயமும் எனக்கு ஏற்பட்டது. இது ஒரு விசித்திரம். கண்முன் நடந்தது ஒன்றாக இருக்க அதை, கண் கொண்டு பார்க்காதவர்கள் வேறு விதமாகச் சொன்னாலும் எனக்கு அந்த அறிக்கைகளை இருட்டடிப்பு செய்ய உரிமை இல்லை .

இத்தகைய எனது நடுநிலைமை செயல்பாடுகள், கலைஞருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும். சென்னை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் மாற்றப் பெற்றதும் கலைஞரே அப்போதைய தகவல் ஒலிபரப்பு அமைச்சரான உபேந்திராவிடம் தொலைபேசியிலும் நேரிலும் பேசி, என்னை தொலைக்காட்சி செய்தி ஆசிரியராக பொறுப்பேற்கச் செய்தார்.

எனக்கும் கலைஞர் எனது நடுநிலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் அபரீதமான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு தமிழனின் ஆட்சியை தாக்குப் பிடிக்கச் செய்வதற்கு அணில் முயற்சியாக தொலைக்காட்சியில் பணியாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். கலைஞரின் பதவிக் காலத்திலேயே இலவசமாக அல்லது சலுகை விலையில் அரசு நிலத்தை வாங்கி, வானொலி - தொலைக்காட்சி நகர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் - நினைத்தது ஒன்று. நடந்தது வேறு.