என் பார்வையில் கலைஞர்/நம்ம சமுத்திரத்திற்கு ஒரு நல்ல மாலையாக

நம்ம சமுத்திரத்துக்கு
ஒரு
நல்ல மாலையாக...

1996 ஆம் ஆண்டு... ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஒருநாள்...

எனது வாகனத்தில் இரண்டு சக்கர கால்களும், எனது கைகளும் ஒன்றாக இணைய, நான்கு கால் பாய்ச்சலில் கோபாலபுரத்தில் நான்காவது குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தேன். வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, நடந்தேன். அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் என்னை ஓரங்கட்டி பார்த்தார்களே தவிர, குறுக்கு விசாரணை எதுவும் செய்யவில்லை. என்னை என் பாட்டுக்கு நடக்க விட்டார்கள். எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் முதல்வரின் வீட்டுக்குள் இப்படி சுயேட்சையாக நடமாட முடியாது. இது எனக்கு ஒரு புதுமையாகவும், சாராசரி மனிதனுக்கு கிடைத்திருக்கின்ற தேர்தல் புரட்சி பலனாகவும் தோன்றியது.

கலைஞரின் வீட்டிற்கு பலதடவை சென்றிருப்பதால் அதை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லை. பிரதான சாலையில் இந்த குறுக்குத் தெருக்களை கண்டுபிடிப்பதற்கே ஒரு ஆய்வுப் பட்டம் கொடுக்கலாம். ஆனால், தெருவின் மறுமுனையில் இருந்த கலைஞரின் வீட்டு முன்னால் ஒருசில சுழல் விளக்கு கார்களும், கூட்டமும் இருப்பதை வைத்துத்தான், அதை கலைஞரின் வீடு என்று புதிதாக வருபவர் அனுமானிக்க முடியும். அந்த தெரு முழுக்க மாடமாளிகை கூட கோபுரங்கள் போன்ற கட்டிடங்கள். கலைஞரின் வீடு இவற்றோடு ஒப்பிடும் போது மிகச் சாதாரணமானது. ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது அவர் சொந்த வீட்டில் இருக்க விரும்பினால் அரசு செலவில் அந்த வீட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். முதல்வர் என்றால் கேட்க வேண்டியது இல்லை.

ஆனால், கலைஞரின் வீட்டு முன்பு ஒரு பெரியதொரு வளைந்த கொட்டகை முக்கோண வடிவத்தில் போடப்பட்டு இருந்தது. வாசலுக்கு முன்னால் இடது பக்கத்தில் பொது மக்களுக்காக பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இதுதான் முதல்வர் கலைஞர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்ட வகை என்று கருதுகிறேன். மற்றபடி அவரது வீடு பின்னைப் புதுமைக்கு புதுமையாகாமல், முன்னை பழமைக்கு பழமையாகவே தோன்றியது.

கலைஞரைப் பார்க்கப்போகிறோம், பேசப் போகிறோம் என்ற பரபரப்போடும், பரவசத்தோடும், கூடவே படபடப்போடும் கலைஞரின் வரவேற்பு அறைக்குள் நுழைகிறேன். வீட்டுக்கு முன்னால் நின்ற காவலர்களுக்கும், வாசல்பக்கம் நின்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் என்னை நன்றாகவே தெரிந்திருக்கிறது. புருவச் சுழிப்போடு என்னை உள்ளே விட்டார்கள். செவ்வக வடிவத்திலான வரவேற்பறை... மாடிப்படிகளுக்கு வழிவிட்டது போல் ஒதுக்கமாக இருந்த வெளி, பிளைவுட் பலகைகளால் தடுக்கப்பட்டு திடீர் அறையாக்கப் பட்டிருந்தது. அந்த அறைக்குள் எனது இனிய நண்பரும், முதல்வர் அலுவலகத்தின் இணைச் செயலாளருமான சண்முகநாதன் அவர்கள் தட்டச்சில் எதையோ அடித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை நம்பகமான கடிதமாக இருக்கும். அதை நான் பார்க்கவும் கூடாது. அதே சமயத்தில் அவரிடம் பேசவும் வேண்டும். ஆகையால், தலையை மட்டும் ஒரு கோணத்தில் தூக்கி வைத்துக் கொண்டு ‘வந்து விட்டேன்’ என்பதற்கு அடையாளமாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்தேன். அவரும் கருமமே கண்ணாக இருந்ததால் என்னை மெல்லத் திரும்பிப் பார்த்து தலையை மென்மையாக ஆட்டினார். அது மேகம் ஆகாயத்திலிருந்து கீழே குவிவது போல் எனக்குத் தோன்றியது.

இந்த சண்முகநாதன் கலைஞருக்கு ராம பக்த அனுமான் மாதிரி. கலைஞரின் மனமே இவர் மனம். பொதுவாக, கலைஞர் ஒருவர் மீது என்ன அனுமானம் வைத்திருக்கிறார் என்பதை இவரது ‘டோன்’ மூலம் அறிந்து கொள்ளலாம் என்பார்கள். என் மீது மிகவும் அன்பு வைத்திருப்பவர். ஒரு வாரத்திற்கு முன்பு கலைஞரை சந்திக்க இவரை அணுகினேன். நான் எதிர்பார்த்தது போல் அனுமதி விரைவில் கிடைக்காததால் எனது நண்பர் ஆலடி அருணா அவர்களை அணுகினேன். அவர் நடவடிக்கை எடுப்பது வரைக்கும் காத்திருக்க முடியாமல், மீண்டும் சண்முகநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உடனே அவர் ‘சமுத்திரம் சார்! முதல்வர் அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கிற ஒரே நண்பன் நான் தான்... எனக்குத் தெரியாதா கலைஞர் கிட்ட ‘எப்போ பேசி எப்போ வாங்கணும் என்று,’ என்றார். நான் வருத்தம் தெரிவித்தேன். கூடவே அவசரம் என்றேன். அவர் ஒரே நண்பர் என்று சொன்ன ஒற்றை வார்த்தையில் எனக்கும் கலைஞருக்கும் இடையே உள்ள உறவின் கடந்த காலமே உள்ளடங்கி இருப்பதைத்தான் அவர் கோடி காட்டினார்.

சண்முகநாதன் உட்கார்ந்திருக்கும் அறைக்கு எதிர்ப்பக்கம் உள்ள பகுதியில் ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். இன்னும் பலர் அங்கே உட்கார்ந்து இருந்தார்கள். சில புதிய முகங்கள். பல பழைய முகங்கள். இந்த இரண்டாவது வகை முகங்களைப் பார்த்ததும், நான் ஓரளவு வெட்கினேன். அந்த முகங்களும் ‘உனக்கு இங்கே என்ன வேலை’ என்று கேட்காமல் கேட்பது போல் தோன்றின. குறிப்பாக ஆர்.டி. சீதாபதி அவர்கள் அன்றைக்குப் பார்த்து வந்திருந்தார். என் வணக்கத்திற்கு அவர் இயல்பாகவே பதில் வணக்கம் போட்டார். ஆனால் அவருக்கு வணக்கம் போடும் போது என் கை லேசாக ஆடியது. காரணம் கலைஞருக்கும் எனக்கும் ஏற்பட்ட மோதல்களும் முரண்பாடுகளும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

கலைஞருக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரியும் என்பதால் நான் குற்ற உணர்வில் தவிக்க இல்லை. ஆனாலும், ஒருவர் தான் எப்படிப்பட்டவர் என்பதை தனது உணர்வுகளால் தீர்மானிக்கிறார். ஆனால், மற்றவர்களோ அவரை அவரது செயல்களால் தீர்மானிக்கிறார்கள். உணர்வுகளும் செயல்பாடுகளும் பிறருக்கு முரண்பாடுகளாக தெரியும் போது தவறான கருத்துக்கு வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்புக்களை அங்கிருக்கும் நண்பர்களுக்கு நிறையவே கொடுத்திருப்பேன். காரணம் கலைஞரிடம் நான் சண்டைப் போட்டது மட்டுமே அவர்களுக்குத் தெரியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட உறவு மாற்றம் அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

நான் அந்த முகங்களை பார்க்க விரும்பாது சுவரேங்கும் மாட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தேன். எதிர்ப்புறச் சுவரில் கலைஞர் தென்னை மரத்தில் லேசாய் சாய்ந்து நிற்பது போன்ற ஒரு வரவேற்பு இதழ். அதற்கு கீழே -

"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கோலென வேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான்தருத லால்"

என்று எழுதப்பட்டிருந்தது.

இன்னொரு பகுதியில் இதேமாதிரியான வெண்பாவில் ‘சங்கத் தமிழ் தந்த கலைஞரே’ என்ற வாசகம் என்னைக் கவர்ந்தது. இந்த ஒளவையார் பாடலை, மூன்றாவது வகுப்புப் படிக்கும் போது என் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததும் மறுநாள் அதை ஒப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டதும், அன்றிரவு நான் இந்த பாடலை மனப்பாடம் செய்ததும் நினைவுக்கு வந்தன. மறுநாள் அதிகாலையிலேயே மனப்பாடம் செய்திருக்க மாட்டான் என்று நான் அனுமானித்த எனது பெரியப்பா மகனை எழுப்பி இந்த பாடலை ஒப்பித்தப் போது அவன் ஒரு திருத்தம் சொன்னான். அப்போதே எனக்கு கர்வபங்கம் ஏற்பட்டது. இந்தப் பாடல் தொண்டர்களுக்கு, கலைஞர் செய்த தொண்டுகளை சொல்லாமல் சொல்வது போல் தோன்றியது.

அந்த வரிகளில் இருந்து கண்களை விலக்கி தந்தை பெரியார் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர் போன்ற தலைவர்களுடன் கலைஞர் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களைப் பார்த்தேன். அன்றுமுதல் இன்று வரை கலைஞருக்கு வழங்கப் பட்ட பல்வேறு வரவேற்பு படங்களும், சுவர் இருக்கும் இடம் தெரியாமல் இடையிடையே வெண்மையைக் காட்டிக் கொண்டு காட்சி காட்டின.

இந்தச் சமயம் பார்த்து வெளியே மக்கள் கூட்டம் பெருத்து விட்டது. ஆண்களும் பெண்களுமாய் ஆளுக்கொரு மனுவை கையில் வைத்துக் கொண்டு அமைதியோடு நின்றார்கள் அவர்களை ஒழுங்கு செய்து விட்டு அமைச்சர் ஆர்க்காட்டு வீராசாமி அவர்கள் உள்ளே வந்தார். கண்ணில் தென்பட்ட என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். இரண்டு வினாடிகள் கழித்து மீண்டும் வெளியே பார்த்தார். எனக்கு என்னமோ 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் இதே வீட்டுக்கு முன்பு கலைஞருக்கும் எனக்கும் நடைபெற்ற கடுமையான வாக்குவாதம் அவருக்கு நினைவுக்கு வந்து அந்த இடத்தை அவர் அனிச்சையாக பார்க்கிறாரோ என்று கூட நினைத்தேன். அவர் சாதரணமாகத் தான் பார்த்திருப்பார். ஆனால், எனக்கோ ‘எந்த முகத்தோடு இங்கே வந்தே’ என்று அவர் கேட்பது போல் தோன்றியது. ஒருவேளை எல்லோரையும் போல் நானும் ஒரு பச்சோந்தியாகி மீண்டும் இங்கே வந்திருப்பேனோ என்று அவர் நினைத்திருந்தால் அதில் தவறில்லை.

என்னால் அவர் முகத்தை நேருக்கு நேராய் பார்க்க முடியவில்லை. ஆகையால், உள்ளே உள்ள வரவேற்பறைக்குள் நுழையப் போனேன். அதன் வாசல்படிக்கு மேல் கலைஞரும், அவரது அன்னையார் அஞ்சுகம் அம்மையாரும் தாயும் மகவுமாய் இருந்த படம் என்னை சிறிது நேரம் நிற்க வைத்தது. அய்ந்து வயதிலேயே அம்மாவை இழந்த என் மனம் சிறிது துடித்துப் போனது.

உள் வரவேற்பறையில் சோபா செட்டுகள் போடப்பட்டு இருந்தன. சுவரை ஒட்டிய மேஜையின் இருபக்கமும் இரண்டு கண்ணாடி பேழைகளில் கலைஞரின் தந்தை முத்துவேலரின் படமும், அன்னையாரின் படமும் சிலைகளாக வைக்கப்பட்டு இருந்தன. மேல் சுவரில் திருவள்ளுவர் படம். இன்னொரு பகுதியில், கலைஞர், தனது குழந்தைகளோடு விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்... கலைஞரை அந்த வயதில் நான் பார்த்தது இல்லை. இப்போது போல் அவர் தலை வழுக்கையாக இல்லாமல் சுருட்டை முடியோடு அழகாகத் தோன்றியது. அந்த கண்களிலும் ஒரு குறுகுறுப்பும் ஒரு போராளிக் குணமும் தென்படுவது போல் எனக்குத் தோன்றியது.

அந்த அறைமுழுக்க வியாபித்த பார்வையாளர்களைப் பார்த்தேன். ஒரு சிலர் இ.ஆ.ப. அதிகாரிகளாக இருக்கலாம். ஒரு சிலர் தொழிலதிபர்களாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே மூழ்கிக் கிடந்தார்கள். கலைஞரை முன் அனுமதியுடன் சந்திக்க வந்திருப்பவர்கள். முதல்வரை சந்திக்கும் போது எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று மனதிற்குள் மாறிமாறி ஒத்திகை போட்டுக் கொண்டிருந்தவர்கள்.

ஒரே ஒருவர் மட்டும் தொப்புள் வரைக்கும் சட்டையில் பித்தான் மாட்டாமல் டாலர் சங்கிலி தோன்ற தனித்திருந்தார். விசாரித்துப் பார்த்ததில், அவர் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்று அறிந்தேன். ஒரு முதல்வரை எந்த மாதிரி சந்திக்க வேண்டும் என்கிற உடை நாகரீகம் கூட இல்லாதவர். இந்த மாதிரி ஆட்களுக்கு கலைஞர் இன்னும் இடங்கொடுக்கிறாரே என்று எனக்கு இப்போது கூட வருத்தம் உண்டு. அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளி வரவேற்பறைக்கு வந்தேன். கலைஞரின் முன்னைய அமைச்சரவையில் பணியாற்றி, இப்போதும் தொடர்ந்து அமைச்சர்களாக இருக்கும் திருவாளர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் தென்பட்டார்கள். பழைய தோழரான துரைமுருகன் என்னைப் பார்த்து நட்போடு சிரித்தார். பொன்முடி பேசவில்லை. ஒருவேளை, ஒரு காலத்தில் கலைஞரோடு, நான் நடந்து கொண்ட விதம் இப்போது அவருக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

அத்தனை பேர் மத்தியிலும் நான் தனிமையில் தவித்தேன். இந்தச் சமயத்தில் லேசாய் உள் வளைந்த அய்ம்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் என்னிடம் வணக்கம் போட்டார். நான் திருதிரு என்று விழித்த போது அவர் ‘உங்களை எனக்குத் தெரியும் சமுத்திரம் சார். என் பெயர் மணி’ என்றார். இந்த மணி, கலைஞரின் வேலையாள் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். நெருக்கடிக் காலத்தில் காவல்துறையினரால் மிகவும் கொடுமைப்படுத்தப் பட்டவர் என்றும் அறிந்து இருக்கிறேன். ஆனால், பார்வையும் தோரணையும் இவரை வேலையாளாகக் காட்டாமல், வீட்டு ஆளாகவே காட்டியது. இந்த அளவிற்கு கலைஞரும் அவரது குடும்பத்தினரும் அவருக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமும் இவரது விசுவாசமும் அந்த மணியைச் சுற்றி ஒரு ஒளிவட்டமாய் எனக்குத் தோன்றியது. நான் பதிலளித்தேன்.

‘உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் மணி. எவ்வளவு காலமா கலைஞர் வீட்ல இருக்கிங்க?’

‘1953ஆம் ஆண்டு சிறுவனா வந்தேன் சார். கலைஞரை அப்பப் பார்த்தவன் இன்னும் பார்த்து முடிக்கல. பார்த்துக் கொண்டே இருக்கேன் சார்’

‘தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பன் சொன்னதுதான், எனக்கு நினைவுக்கு வந்தது.’ நானும், கலைஞரை காதலாகியும், மோதலாகியும் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். ஆனாலும், இன்னும் நான் பார்த்து முடியவில்லை.

மணியோடு பேசியது எனக்கு சிறிது தெம்பளித்தது. இந்தச் சமயத்தில் மாடிப்படிகளில் இருந்து கீழே இறங்கிய தோழர் சண்முகநாதன், நான் கலைஞரை பார்க்க மாடிக்குச் செல்லலாம் என்று சமிக்ஞை செய்தார்.

மாடிப்படிகளை ஓடாக்குறையாகத் தாவி, கலைஞர் உள்ள அறைக்குள் நுழைகிறேன். வாசற்பக்கம் முகம் போட்டுத்தான் கலைஞர் உட்கார்ந்திருக்கிறார். ஒற்றைச்சோபா இருக்கையில் இருந்து என்னைப் பார்த்ததும் ‘வாங்க சமுத்திரம்! என்று எழுகிறார். நான் பதைத்துப் போய்விடுகிறேன். ஒரு மகத்தான் மனிதர் எனக்காக எழுந்திருக்க கூடாது. அப்படியே எழுந்த அவரை அதிக நேரம் நிற்க வைக்கக் கூடாது என்று ஓடோடிப் போகிறேன்.

கலைஞர் உட்கார்ந்ததும், நானும் உட்காருகிறேன். கலைஞரை எழுத்தாளத்தனமாக பார்க்கிறேன். பல்வேறு சந்திப்புகளில் இப்படி கலைஞரை மட்டுமே பார்த்ததால் அந்த அறைக்குள் கலைஞர் மட்டுமே இன்னும் எனக்கு காட்சித் தருகிறார். புகைப்படங்கள் உண்டா... திரைச்சீலைகள் உள்ளனவா என்பது இன்றளவும் தெரியாது. கலைஞரின் பார்வையில் பழைய விரக்திக்குப் பதிலாக ஒரு பிரகாசம் தெரிகிறது. ஆனால் அந்த பிரகாசம் தன்னை பிரகாசப்படுத்தாமல், இந்த சமூகத்தைப் பிரகாசப்படுத்த முனைவது போல் என்னுள் ஒரு மதிப்பீடு எழுகிறது. மக்கள் கொடுத்த பொறுப்பை அவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நினைவேற்ற வேண்டுமே என்ற சுமையை தலைதாங்கி, முகத்திலும் அதன் தடயங்கள் ஏற்பட்டுள்ளதுபோல் தோன்றியது. ஆளவந்த பெருமை இல்லாமல் அதை நிறைவேற்றும் வியூகத்தை எப்படி உருவாக்குவது என்ற சிந்தனையே, அவர் முகத்தில் மண்டிக் கிடந்ததாக எனக்குப் பட்டது.

கலைஞரிடம் அவரது வெற்றி வாகைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். பல்வேறு விவகாரங்களைப் பேசினோம். இவற்றுள் பல அந்தரங்கமானவை. கலைஞர் என்மீது நம்பிக்கை வைத்து தெரிவிக்கும் தகவல்களை மனதில் வைத்து வாயால் பூட்டி வைக்க வேண்டுமே என்ற அச்சமும் கூடவே ஏற்படுகிறது.

இன்னொன்றும் தட்டுப்படுகிறது. ஒரு குட்டி அதிகாரியைப் பார்க்கப் போனால் கூட, அவர், கோப்பைப் பார்த்துக் கொண்டே பேசுவார். அவர் பேசி முடிப்பது வரைக்கும் நாம் மெளனமாக இருந்தால் ‘நீங்க பாட்டுக்கு பேசுங்க’ என்பார். சிலர் தொலைக்காட்சி பெட்டியில் ஒரு கண்ணும், நம் மீது ஒரு கண்ணும் போட்டு நாம் பேசுவதை கேட்பார்கள். நாம் நமது பேச்சில் உச்சத்திற்கு செல்லும் போது அவர்கள் தொலைபேசி எண்களைச் சுழற்றுவார்கள். நிமிடக் கணக்கில் பேசுவார்கள். பிறகு நம்மைப் பார்த்து ‘என்னவோ சொன்னீர்களே’ என்பார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளையும் தலைவர்களையும் பார்த்து எனக்கு அத்துபடி ஆகிவிட்டது. சிலரிடம் சொல்ல வந்த தகவல்களை சொல்லாமலே வெளியேறி இருக்கிறேன்.

கலைஞர் அப்படியல்ல. எனக்கு பத்து நிமிடம் கொடுத்தால் அந்த பத்து நிமிடமும் தொலைபேசி மணி அடிக்காது. இண்டர்காம் இரையாது. கலைஞரும் எதையோ நினைவிற்கு கொண்டு வந்ததுபோல், அரக்கப் பரக்கப் பார்க்க மாட்டார். எவரும் அந்த அறைக்குள் நுழையவும் முடியாது. ஒரு முதல்வருக்கு ஒரு நிமிடத்திற்கு குறைந்தது மூன்று தொலைபேசிகளாவது வரும். இந்த சமானிய சமுத்திரத்திற்கே ஒரு நாளில் பல டெலிபோன்கள் வரும்போது, முதல்வரும், கட்சித்தலைவருமான கலைஞருக்கு வரும் எண்ணிக்கை குறித்து குறிப்பிட வேண்டியது இல்லை. ஆனால், கலைஞரோ அவற்றை வடிகட்டி வைக்கச் சொல்கிறார் என்பதே உண்மை. பார்வையாளர்களுக்கு கிடைக்கும் நேரத்தை அவர் வீணடிக்க விரும்பியதில்லை. அதே சமயம் சந்திப்பு நேரம் கூடிவிட்டால் இண்டர்காம் லேசாக இரையும். இங்கிதம் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சந்திப்புகளில் ஒன்றே ஒன்றில் தவிர கலைஞர் என்னைப் போகலாம் என்று சொன்னதில்லை.

பிறகு நான் எந்த நோக்கத்திற்கு வந்தேனோ, அந்த நோக்கத்தை கலைஞரிடம் சொல்கிறேன். அப்போதுதான் வெளியான எனது சிறுகதை நூலான ஒரு மாமரமும் மரங்கொத்தி பறவைகளும், எனது கட்டுரைத் தொகுப்பான எனது கதைகளின் கதைகள், அயோத்தி மசூதி இடிபட்டபோது நெல்லை மாவட்டத்தின் இசுலாமிய கிராமமான மேட்டுப்பாளையம் எப்படி மதவெறி உன்மத்தர்களால் சுற்றி வளைக்கப்பட்டது என்பதை விளக்கும் நாவலான மூட்டம் ஆகிய மூன்று நூல்களையும் கலைஞர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே சமயத்தில், முதல் அமைச்சர் என்பதால் அவரை அழைக்கவில்லை என்பதையும் தெளிவாக்குகிறேன்.

சென்ற தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்று தெரியாதபோதே, எனது அருமை தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரும், வழக்கறிஞரும், கலைஞர் மீது பற்றாளருமான ச.செந்தில்நாதனுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர். என். நல்லகண்ணு அவர்களோடும் ஆலோசித்து கலைஞர் வென்றாலும் தோற்றாலும் அவர்தான் இந்த நூல்களை வெளியிட வேண்டும் என்று கூட்டாக முடிவெடுத்ததைச் சுட்டிக் காட்டினேன். கலைஞர் லேசாய் சிரித்தார். எனக்கு புரிந்து விட்டது இப்படிப்பட்ட முடிவு, அவருக்கு காட்டும் சலுகை அல்ல. பிச்சையில் அதிகாரப் பிச்சை கூடாது. புரிந்து கொண்டு என் தலையில் நானே லேசாக அடித்துக் கொண்டேன்.

என்றாலும், கலைஞர் இந்த அதிகாரப் பிச்சை பற்றி அலட்டிக்கவில்லை. சண்முகநாதன் அவர்களோடு டெலிகாமில் பேசினார். ‘நம்ம சமுத்திரத்துக்கு அவரோட நூல்களை வெளியிட ஒரு தேதி வேணுமாம் வா’ என்றார். நான் நெகிழ்ந்து போனேன். நான் கடந்தகாலத்தில் வெளிப்படுத்திய கலைஞருக்கு எதிரான கண்டன அறிக்கைகளையும் மீறி அவர் ‘நம்ம சமுத்திரம்’ என்கிறார். இந்தப் பெரிய மனம் - கலைஞரின் சிறியன சிந்தியாத இயல்பு என்னை அப்படியே ஆக்கிரமித்துக் கொள்கிறது. சண்முகநாதன் வரும்போது, பார்வை மங்குகிறது. சண்முகநாதன் டைரியை காட்டி ஏதோ சொல்கிறார். உடனே கலைஞர் என்னைப் பார்த்து வெளியீட்டு விழாவை அந்த மாதம் 26ஆம் தேதியில் வைத்துக் கொள்ளலாம் என்கிறார். சண்முகநாதனும் குறித்துக் கொண்டார்.

எனது மூன்று படைப்புகளையும் கலைஞரிடம் கொடுக்கிறேன். ஒவ்வொரு படைப்பிலும் தம்பிரான் தோழர் கலைஞருக்கு என்று நான் எழுதியிருப்பதை கலைஞர் சிறிது அழுத்தமாக பார்க்கிறார். இந்த மாதிரி எவரும் தமது படைப்புகளில் இப்படி எழுதி கொடுத்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த வார்த்தையில் கலைஞருக்கும் எனக்கும் உள்ள உறவும் அந்த உறவில் ஏற்பட்ட ரசாயன மாற்றமும் உள்ளடங்கி இருப்பதைச் சொல்லாமல் சொல்லும் புராணப் பொருள் மிக்க வார்த்தை அது. இதை பின்னால் விளக்கலாம் என்று நினைக்கிறேன்.

விடைபெறப்போன என்னிடம் எந்த இடத்தில் விழா நடைபெறும் என்று கலைஞர் கேட்டார். உடனே ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் அல்லது கலைவாணர் அரங்கம் என்று பதிலளித்தேன். போய்வாருங்கள் என்பது மாதிரி கலைஞர் தலையசைத்தார்.

பொதுவாக, கலைஞரை விழாவுக்கு அழைத்தால் அந்த விழாவிற்கான பேச்சாளர்- பங்கேற்பாளர் பட்டியலை கலைஞரிடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இது சர்வாதிகாரம் அல்ல. நியாமானதுதான். ஒரு தலைவரை அதுவும் மக்கள் அளவிலும், கட்சி அளவிலும், அரசு அளவிலும் ஈடு இணையற்ற தலைவராக இருக்கும் ஒருவரை விழாவிற்கு அழைக்கும்போது யாராவது ஒருவர், தறுதலைத்தனமாகப் பேசலாம். அல்லது சிக்கலான விவகாரங்களை எழுப்பி, அங்கேயே அவர் பதிலளிக்க வேண்டும் என்பது மாதிரி கூட வற்புறுத்தலாம். விழா மேடையை கொச்சைப்படுத்தி விடலாம்.

எனவே, கலைஞர் போன்ற தலைவர்கள், விழா விவரங்களையும், பேச்சாளர் பட்டியலையும் கேட்பதில் தவறில்லை. நான் கூட என்னை விழாவிற்கு அழைப்பவர்களிடம் மேடையை பகிர்ந்து கொள்ளும் மற்றவர்களைப் பற்றி கேட்பதுண்டு. எனக்கு சரிப்படாதவர்கள் என்றால் நான் மறுத்துவிடுவதும் உண்டு. இந்தப் பின்னணியில், கலைஞர், பேச்சாளர் விவரத்தை என்னிடம் கேட்காதது அவருக்கு என் மீது இருந்த நம்பிக்கையே காட்டுகிறது. அவரும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை. கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அப்படி சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. அவ்வளவுதான். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கும்போது கலைஞர் என்மீது வைத்திருந்த அளப்பரிய நம்பிக்கையில் பெருமிதம் ஏற்படுகிறது. கூடவே யாராக இருந்தாலும் சமாளிக்கலாம் என்கிற அவரது போர்க்குணமும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற யூகமும் ஏற்படுகிறது.

கலைஞரிடம் தேதி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் நம்ம சமுத்திரம் என்று சொன்ன ஒன்றிப்பில் படியிறங்கினேன். கீழே நின்று கொண்டிருந்த ஆர்க்காட்டார் உள்ளிட்ட அமைச்சர்களையும், தலைவர்களையும் கித்தாப்பாகப் பார்த்துக் கொண்டே கலைஞரின் வீட்டைவிட்டு வெளியேற மனமில்லாமல் வெளியேறினேன்.

நான் வீட்டுக்குப் போகாமல் பாலாஜி நகரில் உள்ள நண்பர் அருண் வீரப்பன் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். திரைப்பட உலகில் வரலாறு படைத்த ஏவி.மெய்யப்பச் செட்டியார் அவர்களின் மருமகன், இவர் மாமனாரை கேடயமாக்காமல் சுயமாக உழைத்து ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒலிபதிப்பு நிலையத்தை அமைத்திருப்பவர். இவரிடம், கலைஞரை சந்தித்த விவரங்களை தெரிவித்துவிட்டு, விழாவிற்கான செலவுப் பட்டியலைப் போட்டுப் பார்த்தோம். அம்பதாயிரம் ரூபாய் அளவிற்கு வந்தது. நான் அதிர்ந்து போனேன். என்னுடைய ரேஞ்சே ஐயாயிரம் ரூபாய் தான். என்ன செய்வது என்று குழம்பிப் போனபோது, அருண் வீரப்பன் அவர்கள், தனது துணைவியார் மீனாவை அழைத்தார். அவரது துணைவியாரே சிக்கலுக்கு ஒரு தீர்வைச் சொன்னார். அவர், தனது அம்மா ராஜேஸ்வரி அம்மையாரிடம் பேசி அவர் பேரிலுள்ள அந்த மண்டபத்தை எனக்கு இலவசமாக வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்தார். கலைஞர் என்று சொன்னால் அம்மா கட்டாயம் தருவார் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் நானும், மீனா அருண் வீரப்பன் அவர்களும், ராஜேஸ்வரி அம்மையார் அவர்களைச் சந்தித்தோம். ராஜேஸ்வரி அம்மையார் எனக்கு ஒளவையார் மாதிரியே தோன்றியது. ஒரே ஒரு வித்தியாசம், தமிழைக் கொடுத்து அன்பளிப்பை வாங்குபவர் அல்ல. அன்பளிப்பு தந்து தமிழை வாங்குகிறவர். அவர் தனது பெயரில் உள்ள அந்த அருமையான கட்டிட வளாகத்தை என் பொறுப்பில் ஒருநாள் இலவசமாய் தருவதற்கு மகிழ்ச்சியோடு உடன்பட்டார். கலைஞர் என்றவுடனே மறுபேச்சில்லை. அவர் எதிர்கட்சியில் இருந்தபோது கூட இதே அணுகுமுறையே கொண்டவர். கலைஞர் வெளியிடும் மூன்று புத்தகத்தின் படிகளையும் ராஜேஸ்வரி அம்மையார் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று அந்த இடத்தில் கேட்டுக் கொண்டால் அது அசல் கொச்சைத்தனமாக எனக்கு தோன்றியது. அவருக்கு கண்களால் நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினேன். ஒரு வாரம் கழித்துத்தான் அவர் முதல்படிகளை வாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

வீட்டிற்குத் திரும்பியதும், மனம் என்னை உதைத்தது. கலைஞர் எனது சிறுகதை தொகுப்பை படிக்கும்போது அவர் மனம் நோகுமே என்ற பின் யோசனையில் அல்லாடினேன். கலைஞர் வெளியிட இருக்கும் ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் என்ற சிறுகதைகளில் பெரும்பாலானவை அரசியல் கதைகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த காலடி கலாச்சாரத்தை சாடும் கதை எதிர் பரிமாணம். ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் தமிழகத்தை அரசியல் கட்சிகள் அத்தனையும் என்ன பாடு படுத்துகின்றன என்பதை விளக்குகிற கதை.

எல்லாவற்றிற்கும் மேலாக ஐம்பெரும் விழா, பொறுத்தது போதாது ஆகிய சிறுகதைகள் திராவிட இயக்கத்தையும், கலைஞரையும் சாடக் கூடியவை. முதல் கதையான ஐம்பெரும் விழா எடுத்த எடுப்பிலேயே திராவிட இயக்கத்தை கிண்டல் செய்யும் ஒரு அங்கதக் கதை. கலைஞர் இவற்றை படித்து விட்டு விழாவிற்கு வருவாரா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அதே சமயம் இந்தத் தொகுப்பை உருவாக்கும் போது அவர் தான் வெளியிட வேண்டும் என்ற அனுமானத்தோடு தான் இந்தச் சிறுகதைகளை உள்ளடக்கினேன். இப்போது விழா தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டதால் கலைஞர் வருவாரோ, மாட்டாரோ என்பது மாதிரி மனதிற்குள் ஒரு புலம்பல் ஏற்பட்டது. கலைஞர் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்றும் ஒரு உதறல் எடுத்தது.