கதை சொன்னவர் கதை/ஆசிரியர் கூறுகிறார்

ஆசிரியர் கூறுகிறார்

‘கதை’ என்று சொன்னதுமே, சிறுவர்களின் மலர் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இனிக்க, இனிக்க அவர்களுக்குக் கதை சொல்லி இன்பம் பெற்ற பாட்டிமார்களின் எண்ணிக்கைக்குத்தான் கணக்குண்டா? பரம்பரை பரம்பரையாக வந்த கதைகளைத்தான் காது வழியாகக் கேட்டு, வாய் வழியாகப் பேரக் குழந்தைகளுக்குப் பாட்டிமார் கூறி வந்தார்கள்.

இங்ஙனம் கூறப்பட்டு வந்த கதைகளை, ‘அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டுமே’ என்ற ஆசையில், அவற்றையெல்லாம் திரட்டித் தொகுத்தார்கள் சிலர். தாங்களாகவே, சில கதைகளைக் கற்பனை செய்து, அவற்றைக் குழந்தைகளிடத்திலே கூறி வந்தார்கள் வேறு சிலர். இன்னும் சிலர், அவ்வப்போது பல கதைகளை நாட்டு மக்களிடம் கூறி, அவர்களை நல்வழிப் படுத்தி வந்தார்கள்.

இவ்வாறு கூறப்பட்டு வந்த கதைகள் அந்தந்த நாட்டு எல்லைகளைக் கடந்து, மலைகளைக் கடந்து, கடல்களைக் கடந்து உலகமெங்கும் பரவி, ஆங்காங்கேயுள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டி வருவதை, இன்று நாம் காண்கின்றோம். சாகாவரம் பெற்ற அக்கதைகளைத் தந்த ஆசிரியர்களைப் பற்றிக் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த நோக்கத்துடனே குழந்தைகள் விரும்பும் கதைகளைச் சொல்லிய பன்னிரண்டு கதாசிரியர்களைப் பற்றி எழுத நினைத்தேன். ‘கங்கை’ இதழில் தொடர்ந்து எழுதினேன். ஒவ்வொரு கதாசிரியரின் வாழ்க்கையும் அவர் சொல்விய ஒரு கதையுடன் தொடங்குகிறது. அவர்களது கதைகளைப் போலவே, அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் சுவையாகவே இருக்கின்றன.

‘இவையனைத்தையும் ஒரே புத்தகமாக வெளியிடுவதை விட, மூன்று புத்தகங்களாக வெளியிட்டால், குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் எளிதாயிருக்குமே’ என்று கருதினார் தமிழ் நிலைய அதிபர் திரு. வெ. சுப. கடேசன் அவர்கள். அவர் விருப்பப்படியே புத்தகத்துக்கு நான்கு கதாசிரியர்கள் வீதம் வெளியிட இசைந்தேன். இப் புத்தகத்தைத் தொடர்ந்து இரு புத்தகங்கள் வெளி வருகின்றன.

கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் குழந்தைகளுக்காகப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டுப் பல பதிப்பகத்தாருக்கும் வழிகாட்டியாயுள்ள தமிழ் நிலைய அதிபர் அவர்களுக்கும், என்னை அடிக்கடி தூண்டி இந்தக் கட்டுரைகளை எழுதச் செய்த ‘கங்கை’ ஆசிரியர் திரு. பகீரதன் அவர்களுக்கும், நல்ல முறையில் படங்கள் வரைந்து தந்த ஒவியர் திரு. சாகர் அவர்களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

நல்ல, நல்ல கதைகளைக் குழந்தைகளுக்குக் கூறி, அவர்களுக்கு இன்பம் ஊட்டி, தாமும் இன்பம் பெற்ற அப்பெரியார்களைப் பற்றிக் கூறுவதிலே, நானும் இன்பம் பெறுகின்றேன். குழந்தைகளும், இவற்றைப் படித்து இன்பம் பெற வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.

சென்னை-17
30ー5ー61

அழ. வள்ளியப்பா