கவியகம், வெள்ளியங்காட்டான்/கவிஞன் நான் பேசுகிறேன்

கவிஞன்
நான் பேசுகிறேன்

'என் காவியங்களே என் வாழ்க்கை.
என் வாழ்க்கையே என் எழுத்து
என்னைப் பற்றிச் சொல்வதற்கு
என் இலக்கியங்கள் உயிர்வாழ்தல் மட்டுமே!”

இதற்கு மேலும் என்னைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது, என்ன இருக்க முடியும்?

உடல், உயிர், உள்ளம் இம்மூன்றும் வாழ்வின், உன்னதமான குறிக்கோளை வாழ்வாகக் கொண்டு, உண்மையைப் பின்பற்றி வாழ்ந்தாக வேண்டும் என்பதைத் தவிர?

கவி. கலீல் கிப்ரான் ஒரு உண்மையான ஆற்றல் சால் பெருங்கவிஞன். கவிதா உலகில் அவன் என்றென்றும் ஒளிவீசும் நிறைமதி போன்றவன். இவ்வுலகில் நின்று நிலவும் எல்லா மொழிகளிலும், அவனுடைய குரல் ஓங்கி ஒலித்து, மந்திரச் சொற்களாய் புகுந்து, மக்களின் உள்ளங்களைச் செப்பனிடச் செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன். அந்த அளவே விரும்பவும் செய்கிறேன். அவரது இறுதி நாட்களில் அந்தக் கவியகம் பீரிட்டு வெளிபடுத்திய ஆழமான குரல்...! ஓ...! என் மரணமே! வா...! வந்தென்னை தழுவிக் கொள். என் உயிர் உன் வருகையை எதிர்பார்த்து ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது வா... வா...! விரைந்து வந்து இந்தச் சடப் பொருள்களின் வலிய பிடியிலிருந்து என்னை விடுவித்து விடு! ஏனெனில் நானிங்கு ஒரு தேவ தூதனாக வந்தேன். தேவ மொழியில் உரையாடினேன். என் அர்த்தமுள்ள அற்புதமான மொழி இவர்களுக்குப் புரியாமல் போயிற்று. இவர்கள் என்னைப் புறக்கணித்து விட்டனர். முற்றும் மறந்து விட்டனர். காரணம் - இவர்களைப் போல், செல்வத்தின் பால் ஆசை கொண்டு பலவீனமானவர்களைத் தோலுரித்து பணம் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆதலால் ஓ... மரணமே மக்களுக்குத் தேவையற்ற நான் உனக்கும் வேண்டப்படாதவன் ஆவேனோ?

உன் இதயத்தில் என்பால் அன்பென்றும் அழுது ததும்பி வழிந்து கொண்டிருக்கிறது, வா...! விரைந்து வந்து என்னை ஆரத் தழுவிக் கொள். உன் அணைப்பில் என் அமைதியான உறக்கம் ஆரம்பமாகட்டும்.

என் அன்னையின் இனிய முத்தங்களின் சுகத்தை நான் அறிந்தேனில்லை. ஒரு சகோதரின் உச்சியை முகர்ந்தேனில்லை. ஒரு மனைவியின் அன்பில், காதலில் மூழ்கித்திளைத்தேனில்லை. ஓ...! என் இனிய மரணமே! இவை அனைத்துமான மகிழ்ச்சிக்குரிய என் அருமை நண்பனே, வா... விரைந்து வா... உன் தாலாட்டில் நான் உறங்கவேண்டும்.

இந்த மாபெரும் கவிஞனின் 'தீர்க்கதரிசி' என்னும் நூலிலிருந்து ஒரு சிறுபகுதியை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதை வெண்பாக்களாக இயற்றி இந்த சிறு தொகுப்பில் சேர்த்துள்ளேன். இது ஒரு குறையாகவோ குற்றமாகவோ தமிழ்கூறு நல்லுகம் கருதாது என்றும் நம்புகிறேன்.

கலீல் ஜிப்ரான் கவிதையில் ஒப்பற்ற இமயம்; நான் ஒரு சிறிய குன்று; ஆனால், ஏறக்குறைய நானும் அவருடைய அதே நிலையில்தான் இருக்கிறேன்; தெளிந்த உள்ளத்துடனும், அச்சமற்ற நிலையிலும் அமைதியுடனும் என் வாழ்நாள் இறுதியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. மனித நேயமிக்க மனிதனாக, ஒரு உண்மை கவிஞனாக வாழ்ந்த வாழ்வை நினைத்து நிறைவான இதயத்தோடு, என் பயணம் தொடரும்.

வெள்ளியங்காட்டான்