குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/கொழும்பிலே!

கொழும்பிலே!


இந்த நூற்றாண்டிலே நமது சமயத்தைப்பற்றிய சிந்தனை அருகிவருகிறது. வாழ்வுப் பிரச்சனைகளாலும் வேறுசில சூழ்நிலைகளாலும் கடவுள் நெறி பற்றிய எண்ணம் குறைந்து வருகின்றது. சிவநெறித் தத்துவத்தின் வழி வாழ்தல் என்பதும், சைவசமயக் கொள்கைவழித் தொண்டு என்பதும் இப்போது மாறிக் குழம்பிக்கிடக்கின்றன. இது ஒருவிதக் கலப்பாலும்-கலப்பினாலுண்டான சபலத்தாலும் வெள்ளத்தால் அள்ளுண்டு போவதைப் போன்றநிலை எப்படியோ வந்து புகுந்துவிட்டது. நான் பிறமத எழுத்தாளனல்லன். ஆனால் நமக்கென ஒருகால் தேவை - ஒரு நெறி தேவை என்பவன். கலப்பு என்பது சுயத்துவத்தை அழிக்கவல்லது. உலகியல் நாகரிகங்களின் வரலாற்றிலே ஒன்றையொன்று கெளவி விழுங்கிய செய்திகளைப் படிக்கிறோம். மற்றையக் கொள்கைகளை - நெறிகளைப் பாராட்டுவதோடு, நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வலுப்படுத்த உழைக்கவேண்டும்.

சைவசமய வளர்ச்சிபற்றி “வரைபடம்” (Graph) படம் போட்டுப்பார்த்தால் நிலைமை பளிச்செனப் புலப்படும். இந்நிலைமாற - மாற்றப்பட நாம் தீவிரமாக முனைய வேண்டும். பன்னெடுங் காலமாகக் கழிபேருவகையுடன் நல்வாழ்வுச் சூழலை உருவாக்கி உதவிய சைவநெறி பற்றிய எண்ணமும் செயலும் நம்மிடையே தோன்றி வளர வேண்டும். மனிதனின் வாழ்வை மலரச்செய்யவும் - மணம் பரப்பச் செய்யவுந்தான் மதங்கள் உதவுகின்றன. வெறும் சடங்குகள், உபதேசங்கள், போதனைகள் போன்றவற்றோடு மதம் நின்றுவிடக்கூடாது. அச்சம், ஆத்திரம், புகைச்சல், பொறாமை போன்றவை இன்றைய மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இத்தகு இழிந்த மனப்பான்மையை ஒழிக்க மதம் உதவவேண்டும். உயிர்த்தொண்டுக்கு - உலகத் தொண்டுக்கு ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் பெரும் பொறுப்பு சமயத்துக்கு உண்டு.

அச்சமும் ஆத்திரமும் போன்றே ஐயமும் சஞ்சலமும் குழப்பமும் மனித மனங்களில் குடிகொண்டிருக்கின்றன. சந்தேகத்தை மாற்றச் சைவத்தை ஒட்டிய சில முடிவுகள் உதவுகின்றன. சைவசித்தாந்தமென்பது ஒரு சிவநெறித் தத்துவம். முடிந்த முடியான கொள்கையைக் கொண்டது. சிவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள் “சைவ சித்தாந்தமே சித்தாந்தம்; மற்றவையெல்லாம் பூர்வபக்கங்கள்” என்றார். சிந்தை செல்லுமிடமெல்லாம் சென்று முடிந்த முடிபைக் காண்பது சித்தாந்தம், சைவசித்தாந்தக்காரர்கள் மனிதகுலச் சஞ்சலங்களை அகற்றுவதோடு - நாத்திகத்தைத் தர்க்கமுறையில் வெல்லலாம்; வெல்ல முடியும். குழப்பமே தெளிவுக்கு அடிப்படை இப்போது சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சில ஒரு குழப்ப நிலையை உண்டாக்கியிருக்கின்றன். இனித்தெளிவு வரலாம்; வெல்ல முடியும். குழப்பமே தெளிவுக்கு அடிப்படை. இப்போது சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சில ஒரு குழப்ப நிலையை உண்டாக்கியிருக்கின்றன. இனித்தெளிவு வரலாம்; கட்டாயம் வந்தே தீரும்.

“சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்றார் அப்பரடிகள். தெளிவிலே சிவநெறி ஊறிச் செம்மை நலங்கள் காணும் நாள் அதிக தூரத்திலில்லை. என்றும் நம்மை அவன் ஆட்டுவிக்கிறான்; நாம் ஆடுகிறோம் - அடக்குவிக்க நாம் அடங்குகிறோம். அனாதி காலம் தொட்டே அனாதியான ஆன்மா ஆண்டவனிடத்தில் அடிமைப்பட்டி ருக்கிறதென்பதைத் தாயுமானவர் அழகுறச் சொல்கின்றார்.

இரும்புநேர் வஞ்சகக் கள்வனா னாலும்உனை
இடைவிட்டு நின்ற துண்டோ
என்றுநீ அன்றுநான் உன்னடிமை யல்லவோ
ஏதேனும் அறியா வெறுந்
துரும்பனேன் என்னினும். கைவிடுதல் நீதியோ

என்கிறார். நமக்கு வரும் இன்பதுன்பங்களுக்கு அவனே பொறுப்பாளி. இந்த விடை மிகமிக ஆழமான குளத்துநீரில் ஒரு திவலை. கற்கண்டில் ஒருதுண்டு. நானே கடவுள் - நானே பிரமம் என்றால் பொருந்துமா? “குறைவிலா நிறைவே கோதிலா அமுதே” என்கிறது திருவாசகம். பரிபூரண நிறைவுக்குப் பெயர் கடவுள். அப்படியானால் அவனின் பிரதிபிம்பமான நாம் ஏன் நிறைவற்றுத் தொல்லைப் படுகிறோம்? இறைவனின் குழந்தைகளாக, இறைவனின் அடியார்களாக நம்மை நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். நமது சைவநெறி வாழ்வைத் தழுவியது; வாழ்வோடு இணைந்து பிணைந்தது. நிறைவான குடும்பவாழ்வே சித்தாந்தச் சிவநெறி வாழ்வாகும்.

சேக்கிழார் பெருமான் சிவநெறித் தொண்டர்களைப் பற்றி நிறையச் சொல்லியுள்ளார். பூசலார் நாயனார் மனத்திலே கோவிலெடுத்து மகேசனைக்கண்டார். கோவிலுக்குப் போக வசதியில்லாதவர்கள் வாய்ப்பில்லாதவர்கள் மானசீகமாக இறைவனை வழிபடலாம். திருக்கேதீஸ்வரப் பதிகம்பாடிப் பாலாவியின் கரைமேல் ஆண்டவனை அகத்திலே காணலாம். நாவுக்கரசர் உழவாரத்தொண்டால் கடவுளைக்கண்டார். திருக்குறிப்புத் தொண்டர் மெய்யடியார்க்குத் துணி துவைத்துக் கொடுத்துப் பரமன்பதம் அடைந்தார். நாமெல்லாம் நாயன்மார்களின் குருபூசை களைக் கொண்டாடுகிறோமே தவிர அக்கொண்டாட்ட நாளில் தேவையானவற்றைச் செய்வதில்லை.

கண்ணப்பநாயனார் குருபூசையில், கண்பார்வை குறைந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கி வழங்கும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டால் எவ்வளவு நன்மைபெருகும். நாம் கைக்கொள்ளவேண்டியது நால்வரின் நெறி. நால்வரின் இயக்கம் சமுதாய இயக்கம். நால்வரின் வழிச்சென்றால் நம்மிடையே ஒரு ஒழுங்கு உண்டாகும். நமது மதம் இப்போது ஒழுங்கில்லாமற் கிடக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட மதமாக நமது மதம் மிளிர வேண்டும். வெள்ளையன் தனது மதமான கிறித்தவத்தைத் தவிர்ந்த ஏனைய மதங்களை ஒன்றாக்கி இந்துமதம் என அதற்குப் பெயரிட்டான். இதனால் சில தனித் தன்மைகள் கெட்டுவிட்டன. கலப்பு ஒருபோதும் தனித் தன்மைகளைக் காப்பாற்ற உதவாது. மற்றைய மதங்களிடையே உள்ள ஒழுங்கு நம்மிடையே இல்லை. பன்னிரண்டு இலட்சம் இந்துக்களும் ஒன்றானால் ஒருநல்ல விழுமிய ஒழுங்கு உண்டாகலாம். அப்பொழுதுதான் மேன்மைகொள் சைவநீதி உலகமெல்லாம் விளங்க வழியுண்டாகும்.

நாம் மதம் மாறியதைப் போன்று வேறுயாராவது மாறி யிருக்கிறார்களா? நம்மிடையே எண்ணத்தொலையாத எத்தனையோ பேர் மதம் மாறியிருக்கிறார்கள். நம்முடைய மதத்துக்கு வேறு மதத்தவர்கள் வந்ததுண்டா? நம்மைப் பொறுத்த அளவில் மதமாற்றம் சர்வசாதாரணமாகி விட்டது. இந்நிலைமாற சைவத்தமிழுலகம் பாடுபடவேண்டும். சிவநெறி பரப்பும் மடங்கள் ஆன்மாவுக்குத் தலைவனான ஆன்மநாயகனை வழுத்துவதோடு நின்றுவிடுவதற்கில்லை. திருமடங்கள் திருத்தொண்டால் சிவநேயச்செல்வர்களை உருவாக்கவே எழுந்தவை. எந்நாளும் சமயப்பிரச்சாரம் செய்து சித்தாந்த சிவவழி நிற்கவே அவை உதவுகின்றன. மனித குலத்துக்கு மாண்புறு தத்துவங்களைப் போதிக்கவே சைவமடங்களை நம்முன்னோர்கள் உண்டாக்கினார்கள். ஆனால் அவர்களது எண்ணம் சிலகாலம் சிதைவுற்றுப் பிறழ்ந்ததை மறுப்பதற்கில்லை. இப்பொழுது இந்நிலை மாறிவருகிறது. கைலாயத்து உச்சியுள்ள காளத்தியானைக் கண்ணிலே கண்டு மற்றவர்களுக்குக் காட்டச் சைவப் பெரியார்கள் முன்வரவேண்டும். இதனாலேதான் சைவ சமயத்துக்கு முழுநேர ஊழியர்கள் தேவை என்கிறேன். இறைவனைக் கைலாச வாசியாகவே சிலர் கருதுகிறார்கள். வான் பழித்து மண் புகுந்து மனிதரை ஆட்கொள்பவன் நம்பெருமான். ஆண்டவனை எட்டவைத்து எண்ணும் நிலை மாறவேண்டும். மண்ணிலே விண்ணைக்கண்டு விண்ணகத்து வித்தகனை நெஞ்சத்தில் அமர்த்தவேண்டும். தட்டினால் தான் திறக்கப்படும். கேட்டால்தான் கொடுக்கப்படும் என்று தமது சைவநெறி சொல்லவில்லை வேண்டப்படுவதை அறிந்து வேண்டிய முழுதும் தருபவன் இறைவன்.

ஆகவே! நால்வர் நடந்து நடந்து வளர்த்த நமது நெறி நாலாபக்கமும்பரவி விரவவேண்டும்; ஓர் ஒழுங்குமுறையான கட்டுக்கோப்பு நமக்குத்தேவை. கலப்பு, ஒழுங்கினை உண்டாக்க இடையூறாயிருக்கும். மற்றைய மதங்களிலுள்ள ஒழுங்கினை நமது மதத்தில் காண நாம் விரும்பவேண்டும். மதம் மாறும் நிலையை நம்மிடையேயிருந்து விலக்க வேண்டும் எனக்கூறி வாழ்த்தி, விடைபெறுகிறோம்.