குழந்தைச் செல்வம்/குதிரைகள் புலம்பல்

46. குதிரைகள் புலம்பல்

கற்றுத் தெளிந்தநல் மானிடரே! - எம்மைக்
    காக்கப் பிறந்த பெரியோரே!
சற்றும் அறிவிலா எம் மொழிக்குச் - செவி
    சாய்க்கத் திருவுளம் கொள்வீரே! 1

வளர்ந்து வரும்வாலை வெட்டி வெட்டித் - தேய்ந்த
     மாறுபோல் ஆக்கிக் குறைத்திடும் நீர்,
தளர்ந்த பொழுதெங்கள் ஈப்பகை ஓட்டிடத்
     தக்க உதவிகள் செய்வதுண்டோ? 2

இரும்புக் கடிவாளம் மாட்டுவதேன்? - வாயை
     ஈசன் படைத்த திதற்காமோ?
பெரும்புவி மீதினில் உங்களுக்கும் - இந்தப்
     பேதைகள் செய்த பிழைகள் உண்டோ? 3

வெள்ளிப்பூண் கட்டிய சேணமிட்டால் - நெஞ்சு
    வேதனை யில்லா திருந்திடுமோ?
அள்ளி யிடும்பிடிப் புல்லுக்காக-எங்கள்
    ஆவியைக் கொள்வ தழகாமோ? 4

பக்கம் திரும்பியே பார்த்திடாமல் - எங்கள்
    பார்வையைக் கட்டி மறைப்பதுமேன்?
திக்கெலாம் தந்த பிரமனிலும் - நீவிர்
    தீவிர புத்தி உடையவரோ? 5

திண்ணய லாடமும் கட்டுவதேன்? - அதில்
    தீயெழ எம்மையும் ஓட்டுவதேன்?
புண்ணியம் நீர்செய்ய வேண்டாமையா!-எம்மைப்
    போக்கிலே விட்டிடில் போதுமையா! 6

வண்டியில் கொண்டெமை மாட்டுகின்றீர் - காலை
    மாலையெல்லாம் தட்டி ஓட்டுகின்றீர்;
நொண்டினா லும்விட்டுப் போகமாட்டீர் - உடல்
    நோவ அடித்து வெருட்டுகின்றீர். 7

கால் இளைப் பாறியே நிற்கவொட்டீர் - வாயிற்
    கௌவிய புல்லையும் தின்னவொட்டீர்;
மூலை முடுக்கென்றும் எண்ணமாட்டீர் - எம்மை
     மூச்சு விடாமல் துரத்துவீரே. 8

ஆழக்குக் காணம் அளித்திடுவீர் - அதற்கு
      ஆயிரம் வேலையும் இட்டிடுவீர்;
ஏழைக் கிரங்கெனும் நீதிமொழி - நீங்கள்
      ஏட்டில் படித்ததை ஏன்மறந்தீர்? 9

சித்தம் இரங்கிட வேண்டுகின்றோம் - எம்மை
      க்ஷேமமாய்க் காத்திடக் கெஞ்சுகின்றோம்;
புத்த முனியருள் போதனையை - என்றும்
      போற்றுதல் உங்கள் கடனாமே. 10