குழந்தைச் செல்வம்/வாழ்க்கைத் தத்துவங்கள்

47. வாழ்க்கைத் தத்துவங்கள்

நாமே நமக்குத் துணையானால்,
     நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்;
     சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ? 1

நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு,
     நேயம் கொண்ட நெறியோர்க்கு,
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு.
     வெல்லும் படைகள் வேறுளவோ? 2

உள்ளந் தேறிச் செய்வினையில்
     ஊக்கம் பெருக உழைப்போமேல்,
பள்ளம் உயர்மே டாகாதோ?
     பாறை பொடியாய்ப் போகாதோ? 3

கால நதியின் கதியதனில்
     கடவுள் ஆணை காண்பீரேல்,
ஞால மீது சுகமெல்லாம்
     நாளும் அடைந்து வாழ்வீரே! 4