சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/12

[12]

பெட்டி காணவில்லை!

அதிகாலையில் தங்கமணி திடீரென்று விழித்துக் கொண்டான். விழித்ததும் முதல் வேலையாக அந்தப் பெட்டியிருக்குமிடத்திற்குப் போனான். ஆனால், என்ன அதிசயம்! அந்தப் பெட்டியை அங்கே காணவில்லை. அதனுள் போட்டு வைத்திருந்த வரைபடமும் இல்லை.

அவன் திடுக்கிட்டான். இது யார் வேலையாக இருக்கும் என்று யோசித்தான். உடனே வண்டிக்காரன் இருக்குமிடத்திற்குப் போனான். அங்கே வண்டிக்காரன் இல்லை. “எங்கேயோ இரவோடு இரவாகப் போய் வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்” என்று அங்கிருந்த மற்ற பண்ணை ஆட்கள் தெரிவித்தார்கள்.

தங்கமணிக்கு சந்தேகம் வந்துவிட்டது. வண்டிக்காரன் புதிய ஆள். அவர்கள் உற்சாகத்தினால் சத்தமாகப் பேசியதை நினைத்து வருந்தினான். அவன் இருட்டிலே மறைவாக வந்து அவர்கள் பேசியதைக் கேட்டிருக்க வேண்டும். அத்துடன் அவன் புதையலைக் கண்டு பிடிக்க வந்த ஆளாகத்தான் இருக்க வேண்டும். அவனுடன் இன்னும் சிலரும் கூட்டுச் சேர்ந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கண்ணுப்பாட்டி தனியாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் தங்கி மெதுவாகப் புதையலைப் பற்றித் துப்பு விசாரிக்கலாம் என்று அவனும் அவனுடைய கூட்டாளிகளும் தீர்மானித்திருக்க வேண்டும் என்று தங்கமணி இந்தத் திருட்டைப் பற்றி எண்ணமிட்டான்.

உடனே அவன் சுந்தரத்தையும் கண்ணகியையும் எழுப்பினான். “போடா, தொந்தரவு செய்யாதே - இந்த நாள் முழுவதும் தூங்கலாம் போலிருக்கிறது. காலெல்லாம் வலி” என்று கண்ணைத் திறக்காமலேயே சுந்தரம் பேசிவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

“டேய், பெட்டி திருட்டுப் போய்விட்டது” என்று தங்கமணி சொன்னானோ இல்லையோ சுந்தரம் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கமெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கண்ணுப் பாட்டியின் கட்டிலில் படுத்திருந்த கண்ணகி அங்கே ஓடி வந்தாள்.

“அப்பவும் எனக்குத் தெரியும். இந்தக் கோமாளி சத்தம் போட்டுப் பேசுவதை யார் வேண்டுமானாலும் வெளியிலிருந்து கேட்டிருக்கலாம்” என்று கண்ணகி முகத்தைச் சுளித்தாள். ஏமாந்து போனதை எண்ணி வருந்துவதை அவள் முகம் நன்றாகக் காட்டிற்று.

“இப்பொழுது குற்றம் சாட்டிக் கொண்டிருக்க நேரமில்லை. காலை உணவு அருந்திவிட்டு உடனே சங்ககிரி மலை உச்சிக்குச் சென்றாக வேண்டும். தாமதம் செய்தால் நாம் ஏமாந்து போவோம்” என்றான் தங்கமணி.

மூவரும் அவசரம் அவசரமாகக் காலை உணவை முடித்துக் கொண்டார்கள். ஜின்காவுக்கும் அவர்கள் அவசரம் புரிந்து விட்டது. அது தோசையை வாயில் போட்டு வேகமாகக் குதப்பிக் கொண்டிருந்தது.

ஏன் இவ்வளவு அவசரம் என்று கண்ணுப் பாட்டிக்கு விளங்கவே இல்லை. எப்பொழுதும் உற்சாகமாக விகடம் பேசும் சுந்தரமும் பேசாதிருந்தான். “பாட்டி, நாங்கள் மறுபடியும் சங்ககிரி மலைக்குப் போகிறோம். மத்தியான்ன உணவெல்லாம் வேண்டியதில்லை. உங்களைத் தேடி இந்த ஜின்கா மட்டும் தனியாக வந்து ஒரு கடிதம் கொடுத்தால் அதில் உள்ளபடி உடனே வேகமாகக் காரியம் செய்யுங்கள். இது ரொம்ப முக்கியம்” என்று கூறிவிட்டுப் பாட்டியின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் தங்கமணி முன்னால் புறப்பட்டான். சுந்தரமும் கண்ணகியும் அவனைத் தொடர்ந்து வேகமாக நடந்தார்கள்.

“இதென்னடா, பெரிய மர்மமாக இருக்கிறதே” என்று கண்ணுப்பாட்டி ஆச்சரியப்பட்டாள்.

“ஏதோ, சிறு பிள்ளைகள் விளையாட்டாக இருக்கும், எதற்கும் இன்று வீட்டை விட்டுப் போகாமல் இருந்து பார்க்கலாம். அந்த வண்டிக்காரனையும் காணவில்லை. அவன் இருந்தாலாவது மத்தியான்ன உணவைக் கொடுத்தனுப்பலாம். பகல் ஒரு மணிக்குள்ளாகவே ஒரு வேளை வந்தாலும் வந்து விடுவார்கள்” என்று இப்படிப் பலவாறு எண்ணிக் கொண்டே கண்ணுப் பாட்டி சமையல் வேலையில் முனைந்தாள்.

மூவரும் ஜின்காவுடன் போவதற்கு முன்னாலேயே நான்கு பேர் வேகமாக மலையில் ஏறுவதைப் பார்த்தார்கள்.

உடனே தங்கமணிக்கு உண்மை புலப்பட்டுவிட்டது. அந்த நால்வரில் ஒருவன் பாட்டி வீட்டில் புதிதாக வேலைக்கமர்ந்த வண்டிக்காரன் என்பது நிச்சயமாகி விட்டது. அதனால் “நாம் மூவரும் பின்னாலேயே சென்று தடுத்தாலும் அந்த நான்கு முரடர்கள் நமக்குத் தீங்கு செய்ய அஞ்சமாட்டார்கள்” என்றான் தங்கமணி.

“அண்ணா, ஜின்காவிடம் பாட்டிக்குக் கடிதம் கொடுத்து அனுப்பு” என்று அவசரமாகப் பேசினாள் கண்ணகி. “ஆமாண்டா, அதுதான் நல்ல யோசனை. நீயும் பாட்டியிடம் சொல்லி வந்திருக்கிறாய்” என்று சுந்தரம் ஆமோதித்தான்.

“அதைத்தான் இப்பொழுது முதற் காரியமாகச் செய்யப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஒரு கடிதம் எழுதி ஒரு உருண்டையான சம்புடத்தில் போட்டு ஜின்காவிடம் கொடுத்தான்.

தங்களுக்கு ஆபத்து என்று தெரிந்தால் அவன் ஜின்காவுக்கு ஒரு சமிக்ஞை செய்வான். அது உடனே கண்ணுப் பாட்டியிடம் கொண்டுபோய் அதைக் கொடுக்கும். இவ்வாறு செய்யத் தங்கமணி ஜின்காவைப் பழக்கி வைத்திருந்தான். அவன் சைகை செய்யும் வரையிலும் ஜின்கா கூடவே இருக்கும். பிறகு அவன் சைகைப்படி நடக்கும்.