திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கை
(வேறுபாடு ஏதுமில்லை)

16:27, 25 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

"நிலம், அதன்மீது அடிக்கடி பெய்யும் மழைநீரை உறிஞ்சி, வேளாண்மை செய்வோருக்குப் பயன்தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும். மாறாக, முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பிக்குமாயின், அது பயனற்றுச் சாபத்திற்குள்ளாகும். முடிவில் அது தீக்கு இரையாக்கப்படும்." (எபிரேயர் 6:7-8)

அதிகாரம் 5

துன்புற்ற தலைமைக் குரு


1 தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு,
பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக
மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.
2 அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால்,
அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும்
பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார்.
3 அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல,
தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். [1]
4 மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை.
ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும். [2]


5 அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை.


"நீர் என் மைந்தர்;
இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்"


என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.
6 இவ்வாறே மற்றோரிடத்தில்,


"மெல்கிசதேக்கின் முறைப்படி
நீர் என்றென்றும் குருவே"


என்றும் கூறப்பட்டுள்ளது. [3]


7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்,
தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி,
கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்.
அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு,
கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். [4]
8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
9 அவர் நிறைவுள்ளவராகி,
தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
10 "மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு" என்று
கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.

கிறிஸ்தவ வாழ்வில் உறுதி


11 இதைப்பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது; ஆனால் விளக்கம் கூறுவது அரிது.
ஏனெனில் உங்கள் அறிவு மழுங்கிப் போய்விட்டது.
12 இவ்வளவு காலத்திற்குள் ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டிய நீங்கள்
இன்னும் கடவுளுடைய வாய்மொழிகளின் அரிச்சுவடியையே
கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.
உங்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது பால்தான்; கெட்டியான உணவு அல்ல.
13 பால் குடிக்கும் நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே.
நீதிநெறிபற்றிய படிப்பினையில் அவர் தேர்ச்சி அற்றவர். [5]
14 முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு.
அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப்
பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்.


குறிப்புகள்

[1] 5:3 = லேவி 9:7.
[2] 5:4 = விப 28:1.
[3] 5:6 = திபா 110:4.
[4] 5:7 = மத் 26:36-46; மாற் 14:32-42; லூக் 22:39-46.
[5] 5:12,13 = 1 கொரி 3:2.


அதிகாரம் 6


1-2 ஆதலின், கிறிஸ்துவைப் பற்றிய படிப்பினையின் தொடக்க நிலையிலேயே நின்றுவிடாமல்,
நாம் முதிர்ச்சி நிலையை அடைய வேண்டும்.
சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து மனம்மாற்றம்,
கடவுள் மீது நம்பிக்கை,
முழுக்குகள், கையமர்த்தல் பற்றிய படிப்பினை,
இறந்தோரின் உயிர்ப்பு, என்றும் நிலைக்கும் தீர்ப்பு
ஆகிய தொடக்க நிலைப் படிப்பினைகளைக் கற்பித்து
மீண்டும் அடித்தளம் இடத் தேவையில்லை.
3 கடவுள் திருவுளம் கொள்வாராயின்
இம்முதிர்ச்சிநிலைப் படிப்பினையை இனித் தொடர்வோம்.


4-6 ஏனெனில் ஒரு முறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள்,
தூய ஆவியைப் பெற்றவர்கள் ஆவர்.
கடவுளின் நல்ல வார்த்தையையும்
வரவிருக்கும் உலகின் வல்லமையையும் சுவைத்த இவர்கள் நெறி பிறழ்ந்துவிடின்,
இவர்களை மனம் மாற்றி, மீண்டும் புத்துணர்வு பெறச் செய்வது அரிது.
ஏனெனில், இவர்கள் இறைமகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து,
வெளிப்படையாக இழிவுபடுத்துகிறவர்கள் ஆவர்.


7 நிலம், அதன்மீது அடிக்கடி பெய்யும் மழைநீரை உறிஞ்சி,
வேளாண்மை செய்வோருக்குப் பயன்தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின்
அது கடவுளின் ஆசி பெற்றதாகும்.
8 மாறாக, முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பிக்குமாயின்,
அது பயனற்றுச் சாபத்திற்குள்ளாகும். முடிவில் அது தீக்கு இரையாக்கப்படும். [1]


9 அன்பார்ந்தவர்களே,
இவ்வாறு நாங்கள் பேசினாலும், உங்களைப் பொறுத்தவரையில்,
நீங்கள் மேலான வழியில் நடந்து, மீட்புக்குரியவர்களாய் இருக்கிறீர்கள் என
நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
10 ஏனெனில், கடவுள் நீதியற்றவர் அல்ல.
இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்;
இப்போதும் தொண்டு செய்துவருகின்றீர்கள்.
எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும்
உழைப்பையும் அவர் மறக்க மாட்டார்.
11 நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதிபெறும்பொருட்டு,
உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே
இறுதி வரை காட்ட வேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.
12 இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல்,
நம்பிக்கையாலும் பொறுமையாலும்
இறைவாக்குறுதிகளை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல் வாழுங்கள்.

கடவுளின் வாக்குறுதி


13 ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது,
தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற இயலாததால்
தம் மீதே ஆணையிட்டு,
14 "நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து,
உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்" என்றார். [2]
15 இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து,
பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார்.
16 தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர்.
எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர்.
அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.
17 அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத்
தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி,
ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிப்படுத்தினார்.
18 மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்தவரையில்
கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது.
அடைக்கலம் தேடும் நாம்,
நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத்
தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும்.
19 இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான,
உறுதியான, நங்கூரம் போன்றுள்ளது.
இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது. [3]
20 நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து
இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார்.
மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில்
நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார். [4]


குறிப்புகள்

[1] 6:8 = தொநூ 3:17,18.
[2] 6:14 = தொநூ 2:16,17.
[3] 6:19 = லேவி 16:2.
[4] 6:20 = திபா 110:4.


(தொடர்ச்சி): எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை