சேதுபதி மன்னர் வரலாறு/i. முத்து வயிரவநாத சேதுபதி


இயல் - VI
I முத்து வயிரவநாத சேதுபதி

மறைந்த கிழவன் சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லை என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி ரெகுநாத கிழவன் சேதுபதிக்கு 1) ரணசிங்கத் தேவர். 2) பவானிசங்கரத் தேவர் என்ற இரு ஆண் மக்கள் இருந்து வந்தனர் என்பதை அறிகிறோம். ரணசிங்கத் தேவர் சேதுநாட்டின் வடபகுதியான திருப்பத்தூர் பகுயில் ஆளுநராக இருந்தார் என்றும் கி.பி. 1702ல் சேதுபதி மன்னருக்கும் மதுரை அரசி இராணிமங்கம்மாவிற்கும் ஏற்பட்டப் போரில் வீரமரணம் அடைந்தார் என்றும் தெரியவருகிறது. அடுத்த மகனான பவானிசங்கரத்தேவர் இராமநாதபுரம் அரண்மனை சம்பிரதாயப்படி சேதுபதி மன்னருக்கும் செம்பிநாட்டு மறக்குல பெண்மணிக்கும் பிறக்காதவர் ஆதலால் அவரது அரசு உரிமை மறுக்கப்பட்டது. ரெகுநாத கிழவன் சேதுபதியின் தங்கை மகனான திருஉத்திரகோச மங்கை கடம்பத்தேவர் மகன் முத்துவயிரவநாத சேதுபதி இராமநாதபுரம் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டார். கி.பி. 1713 வரை ஆட்சி செய்த இவரது ஆட்சிக் காலத்தை குறிக்கும் இரண்டு செப்பேடுகள் கிடைத்துள்ளன. முதலாவதாக கி.பி. 1710ல் செவ்விருக்கை நாட்டு அழகன் குளத்தை அடுத்து பின்னாணியாரேந்தல் ஊரினை அழகன்குளம் மூர்த்தி மடம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. இரண்டாவதாக கி.பி. 1711ல் இராமாயண பிரசங்க சேவையினைப் பாராட்டி மேலச்செல்வனுர் சர்க்கரைப் புலவருக்கு உளக்குடி, கோடாகுடி என்ற இரண்டு ஊர்களை வழங்கியது ஆகும்.

என்ன காரணத்தினால் இவரது ஆட்சி மேலும் தொடரவில்லை என்பதை அறிந்து கொள்வதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதுவரை வெளிவந்துள்ள சேதுபதி மன்னர்களது வரலாறுகளில் கிழவன் ரெகுநாத சேதுபதியை அடுத்து கி.பி. 1710-ல் முத்து விஜய ரகுநாத சேதுபதி சேதுநாட்டு மன்னரானார் என்ற செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.