சோழர் வரலாறு/முதற் பராந்தக சோழன்

3. முதற் பராந்தக சோழன்
(கி.பி. 907 - 953)

பராந்தகன் குடும்பம்: ஆதித்த சோழனது திருமகனான முதற்பராந்தக சோழன் ஏறத்தாழப் பன்னிரு மனைவியரைப் பெற்றிருந்தான். அவர்கள் கோக்கிழான் அடிகள், சேர அரசன் மகள் முதலியோர் ஆவர். பிள்ளைகள் - (1) இராசாதித்தன் (2) கண்டராதித்தன் (3) அரிகுல கேசரி (4) உத்தமசீலன் (5) அரிஞ்சயன் என்பவர். வீரமாதேவி, அநுபமா என்பவர் பெண்மக்கள் ஆவர். வீரமாதேவி என்பவள் கோவிந்த வல்லவரையன் என்னும் சிற்றரசனை மணந்திருந்தாள்; அனுபமா என்பவள் கொடும்பாளுர் முத்தரையனை மணந்திருந்தாள். இராசாதித்தன் தாய் கோக்கிழான் அடிகள்; அரிஞ்சயன் தாய் சேரன் மகளாவாள், அரிகுலகேசரி என்னும் இளவரசன் கொடும்பாளுர் அரசன் மகளான பூதி ஆதிக்க பிடாரி என்பவளை மணந்திருந்தான். இத்தகைய கொடுக்கல்-வாங்கல்களால் சேர அரசனும் முத்தரையரும் பராந்தகனுக்கு உறுதுணைவராக இருந்தனர். இவருடன் கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி உற்ற நண்பனாக இருந்தான். பராந்தகன் ‘பரகேசரி’ என்ற பட்டம் உடையவன்.

பாண்டிநாட்டுப் போர்: முதற் பராந்தகன் பாண்டியருடனும் ஈழவருடனும் பாணருடனும் வைதும்பருடனும், இறுதியில் இராட்டிரகூடருடனும் போர் செய்ய வேண்டியவன் ஆனான். இவற்றுள் முதற்போர் பாண்டிய நாட்டுப் போராகும். பராந்தகன் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவன் இரண்டாம் இராசசிம்மன் ஆவன். பராந்தகன் பாண்டிய நாட்டைக் கைப்பற்ற விரும்பியே போர் தொடுத்தான். அப்போரில் பராந்தகனுடைய நண்பரான சேரன், முத்தரையர், பிற சிற்றரசர் பராந்தகருக்கு உதவி புரிந்தனர். இராசசிம்மன் தஞ்சை அரசனை நெய்ப்பூரில் தோற்கடித்தான். கொடும்பாளுரில் கடும்போர் செய்தான். வஞ்சி நகரைக் கொளுத்தினான். ‘நாவல்’ என்னும் இடத்தில் தென் தஞ்சை அரசனை முறியடித்தான்” என்று இராசசிம்மன் பட்டயம் பகர்கின்றது. பாண்டிய நாட்டுப் போர் பல ஆண்டுகள் நடந்ததாகத் தெரிகிறது. ஆதலின் இரு திறத்தாரிடத்தும் வெற்றி தோல்விகள் நடந்திருத்தல் இயல்பே ஆகும். இப்போரைப் பற்றிப் பாண்டியருடைய சின்னமனூர்ப்பட்டயம், கங்க அரசனது உதயேந்திரப்பட்டயம், இலங்கை வரலாறாகிய மகாவம்சம் முதலியன கூறுதல் ஏறத்தாழ ஒன்றாகவே இருத்தல் கவனித்தற்குரியது.

முதற்போரில் இராசசிம்மன் தோல்வியுற்று மதுரையை இழந்தான். பராந்தகன் மதுரையைக் கைக்கொண்டான்; அதனால் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்று தன்னை அழைத்துக் கொண்டான்[1]. மதுரையை இழந்த இராசசிம்மன், அப்பொழுது இலங்கையை ஆண்டுவந்த ஐந்தாம் கஸ்ஸ்பன் (கி.பி. 913-923) துணையை வேண்டினான். அவ்விலங்கை வேந்தன் பெரும்படை திரட்டிப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பினான். அப்படையின் துணை கொண்டு இராசசிம்மன் பராந்தகனை எதிர்த்தான். போர், வெள்ளுர் என்னும் இடத்திற் கடுமையாக நடந்தது. சோழன் பக்கம் பழுவேட்டரையர், கந்தன் அமுதனார் என்னும் சிற்றரசன் இருந்து போர் செய்தான். சோழனது ஒருபகுதி சேனைக்குத் தலைவனாக இருந்தவன் சென்னிப் பேரரையன் என்பவன்.[2] சோழ மன்னன் அப்பொழுது நடந்த கடும்போரில் அப்படையையும் வெற்றி கொண்டான்; பண்டு இலங்கைப் படைகளை வென்ற இராகவன் போலத்தான் இலங்கைப் படையை வென்றமையால், தன்னைச் சங்கிராம இராகவன் என்று அழைத்துக் கொண்டான். இறுதியாக ஈழப்படையின் தலைவனான சக்க சேனாபதி என்பவன் எஞ்சிய தன் சேனையைத் திரட்டி இறுதிப் போர் செய்ய முனைந்தான்; அப்பொழுது உண்டான கொடிய விட நோயால் இறந்தான்; படைவீரர் மாண்டனர். எஞ்சிய வீரர் ஈழநாடு திரும்பினர். வெள்ளுரில் நடந்த போரின் காலம் ஏறத்தாழக் கி.பி. 915 என்னலாம்[3]. இப்போரில் உண்டான படுதோல்வியால், இராசசிம்மன் இலங்கைக்கு ஓடிவிட்டான். பாண்டியநாடு முழுவதும் சோழன் ஆட்சிக்கு உட்பட்டது. களப்பிரரை முறியடித்துக் கி.பி. 575-இல் கடுங்கோனால் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு கி.பி. 915-இல் பராந்தக சோழனால் அழிவுற்றது.

ஈழநாட்டுப்போர்: ஈழநாட்டு மன்னன் இராசசிம்மனுக்குத் தனிமாளிகை அளித்து மரியாதை செய்தான். ஆயினும் அங்கு இருப்பது பயனற்றது என்பதை உணர்ந்த இராசசிம்மன், தன் ஆடையாபரணங்களையும் முடியையும் இலங்கையிலே வைத்து விட்டுத் தன் தாய் வானவன்மாதேவி நாடான சேர நாட்டை அடைந்தான்.[4] இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேட்டுச் செய்தியும் உறுதிப்படுத்துகிறது. பராந்தக சோழன் மதுரையில் முடிசூடிக் கொள்ளவிழைந்தான் பாண்டியனுக்குரிய முடி முதலியன இலங்கையில் இருப்பதை அறிந்தான்; உடனே இலங்கை இறைவற்கு ஆட்போக்கினான். அவன் அவற்றைத் தர இசையவில்லை. அதனால் பராந்தகன் சினங்கொண்டு, பெரும் படையை இலங்கைக்கு அனுப்பினான். இலங்கைப் படையும் சோழன் படையும் கடும்போர் புரிந்தன. போரில் இலங்கைத் தளபதி இறந்தான். உடனே இலங்கை மன்னனான நான்காம் உதயன் (கி.பி. 945-953) ‘ரோகணம்’ என்னும் கடிநகரை அடைந்தான். சோழப்படை அங்குச் சென்றது; ஆனால் நகருக்குள் புகும் வழி அறியாது தத்தளித்தது; அச்சமேற்கொண்டு திரும்பிவிட்டது.

பாணருடன் போர்: பாலாற்றுக்கு வடக்கே புங்கனூரிலிருந்து காளத்தி வரையுள்ள நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆண்டு வந்தவர் பாணர் எனப்பட்டனர். அவர் ஆண்ட நாடு பாணப்பாடி அல்லது பெரும்பாணப் பாடி எனப்படும். அவர்கள் பல்லவர் காலத்தில் அனந்தப்பூர்க்கு அண்மையில் இருந்தவர்கள். சாளுக்கியர் பலம் மிகுதிப்பட்டதால், அவர்கள் தெற்கே வரவேண்டியவர் ஆயினர். இரண்டாம் விசயாதித்தன் பாணப்பாடியைக் கி.பி. 909 வரை ஆண்டான். இவனது பெயரன் இராட்டிர கூட அரசனான மூன்றாம் கிருஷ்ணன் காலத்தவன். இந்த இருவருக்கும் இடையில் இரண்டாம் விக்கிரமாதித்தன், மூன்றாம் விசயாதித்தன் (புகழ்விப்பவர் கண்டன்) என்பவர் ஆண்டனர். கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி பராந்தகன் நண்பன். அவன் பராந்தகன் ஏவலால் இவ்விரண்டு பாண அரசரையும் எதிர்த்துப் போராடி வென்றான். பராந்தகன் அவனுக்குப் பாணாதிராசன் என்ற பெயரைத் தந்து பாணப்பாடியை அவனது ஆட்சியில் விட்டனன் என்று சோழசிங்கபுரக் கல்வெட்டு கூறுகிறது.[5] தோற்றோடிய பாண அரசர் இராட்டிர கூட அரசனிடம் சரண்புக்கனர்.

வைதும்பருடன் போர்: வைதும்பர் என்பவர் ரேனாண்டு ஏழாயிரம் என்னும் நிலப்பகுதியை ஆண்டவர். ‘ரேனாண்டு’ என்பது கடப்பை, கர்நூல் கோட்டங்களைக் கொண்ட நாடு. வைதும்பர் தெலுங்கர். அவர்கள் பாணருடன் நட்புக் கொண்டவர். அதனால் பாணரை எதிர்த்த கங்கருடனும் துளம்பருடனும் போரிட்டவர். கி.பி. 915-இல் பராந்தகன் வைதும்பரைத் தோல்வியுறச் செய்து நாட்டைக் கைப்பற்றினான். அதனால் வைதும்ப அரசன் இராட்டிரகூட அரசரிடம் சரண்புகுந்தான்.

வேங்கி நாட்டுடன் போர்: வேங்கிநாடு என்பது கிருஷ்ணை, கோதாவரி, ஆறுகட்கிடையில் இருந்தது. அது பல்லவர் வீழ்ச்சிக்குப் பிறகு நெல்லூர்வரை பரவி விட்டது. பராந்தகன் தானைத் தலைவருள் ஒருவனான மாறன் பரமேசுவரன் என்பவன் சீட்புலி என்பவனைத் தோற்கடித்து நெல்லூரை அழித்து மீண்டான் மீள்கையில், தன் வெற்றிக்காகத் திருவொற்றியூர் இறைவற்கு நிலதானம் செய்தான். அவன் தானம் செய்த காலம் கி.பி. 941 ஆகும்.[6] சீட்புலி என்பவன் கீழைச் சாளுக்கிய இரண்டாம் பீமனின் சேனைத் தலைவன் ஆவன்.

துன்பத் தொடக்கம்: கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி கி.பி. 940-இல் இறந்தான். அவன் மகனான விக்கி அண்ணன் முன்னரே இறந்து விட்டதனால் பட்டம் ஏற்க மகன் இல்லை. அப்பொழுது இராட்டிரகூடப் பேரரசனாக வந்த மூன்றாம் கிருஷ்ணன் என்பவனது உடன் பிறந்தாளான ‘ரேவகா’ என்பாளை மணந்திருந்த இரண்டாம் பூதுகன் எதிர்ப்பவர் இன்றிக் கங்க அரசன் ஆனான்.[7] இங்ஙனம் புதிதாக வந்த கங்க அரசன் இராட்டிரகூடர் உறவினனானதும், பாணரும் வைதும்பரும் இராட்டிரகூடருடன் சேர்ந்து விட்டமையும் பராந்தகன் பேரரசிற்கு இடையூறாயின.

பராந்தகன் முன் ஏற்பாடு: பராந்தகன் சிறந்த அரசியல் நிபுணன் ஆதலின், தன் பேரரசைக் காக்க முன் ஏற்பாடு செய்திருந்தான். நடு நாட்டில் ஒரு நாடான திருமுனைப் பாடிநாட்டில் திருநாவலூரை அடுத்த ‘கிராமம்’ என்னும் இடத்தில் பராந்தகன் முதல் மகனான இராசாதித்தன் பெரும் படையுடன் இருந்து வந்தான். அப்படைக்கு ‘வெள்ளங்குமரன்’ என்னும் சேர நாட்டுத் தானைத் தலைவன் தலைமை பூண்டிருந்தான். அவன் கி.பி.943-இல் பெண்ணையாற்றங்கரையில் சிவனுக்குக் கோவில் ஒன்றைக் கட்டினான். திருநாவலூர் ‘இராசாதித்தபுரம்’ எனப் பெயர் பெற்றது. இராசாதித்தனுக்கு உறுதுணையாக அவன் தம்பி அரிகுல கேசரியும் உடன் இருந்தான். இந்த முன் ஏற்பாட்டால் பராந்தகன், பாணர், வைதும்பர் என்பாரால் துன்பம் உண்டாகும் என்பதை எதிர்நோக்கி யிருந்தான் என்பதை அறியலாம்.[8]

தக்கோலப் போர்: இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருஷ்ணனுக்கும் சோழர்க்கும் கி.பி. 949-இல் தக்கோலத்திற்கும் கடும் போர் நடந்தது. அதற்கு முன் ஒரு முறை இராசாதித்தன் கிருஷ்ணனை முறியடித்தான். ஆனால் பின்னர் நடந்த தக்கோலப்போர் கடுமையானது.தக்கோலம் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கில் ஆறுகல் தொலைவில் உள்ளது.இராசாதித்தன் பகைவரைக் கடுமையாகத் தாக்கிப் போர் புரிந்தான். ஆனால், புதிய கங்க அரசனான இரண்டாம் பூதுகன், யானைமீதிருந்த இராசாதித்தன் மீது திடீரெனப் பாய்ந்து கொன்றான்.இதனால் சோழர் சேனை போரில் தோற்றது. மூன்றாம் கிருஷ்ணன் தன் மைத்துனனுக்கு வனவாசி பன்னிராயிரமும் பெள்வோலம் முன்னூறும் தந்து பெருமைப்படுத்தினான்.இப்போரினால் பராந்தகன் தான் வென்ற பாணப்பாடி, தொண்டை நாடு, வைதும்ப நாடு இவற்றை இழந்தான். இந்த இடங்களில் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இரண்டாம் பூதுகன் சோணாட்டிலும் புகுந்து அல்லல் விளைத்ததாகச் சில பட்டயங்கள் செப்புகின்றன. கிருஷ்ணன் தன்னை, ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட’ என்று கூறிக் கொண்டதாகச் சில பட்டயங்களிலிருந்து தெரிகிறது. பூதுகன் இராமேசுவரத்தில் வெற்றித்துரண் ஒன்றை நாட்டியதாகக் கூறிக் கொண்டான். ஆயின், புதுச் சேரிக்குத் தெற்கே இதுகாறும் பூதுகனுடைய அல்லது கிருஷ்ணனுடைய கல்வெட்டோ- பட்டயமோ கிடைத்தில. இஃது எங்ஙனமாயினும், ஆதித்தனும் பராந்தகனும் அரும்போர் செய்து சேர்த்த பேரரசு துகளாயது என்பதில் ஐயமே இல்லை.[9]

விருதுப் பெயர்கள் : பராந்தகன் பல பெயர்களைக் கொண்டவன். இவன் மதுரையை அழித்தமையால் மது ராந்தகன் எனப்பட்டான், சிங்கள நாட்டை வென்றமை யால் சிங்களாந்தகன் எனப்பட்டான். இவன் முதலில் நடந்த போரில் கிருஷ்ணனை வீரம் காட்டி வென்றமை யால் வீர சோழன் எனப்பட்டான் என்று கன்னியா குமரிக் கல்வெட்டு கூறுகிறது. இவனுக்குச் சோழகுலப் பெருமானார், வீர நாராயணன், சமர கேசரி, விக்கிரம சிங்கன், குஞ்சரமல்லன், சோழ சிகாமணி, சூரசிகாமணி என்னும் விருதுப் பெயர்களும் உண்டு.

சமயப்பணி: பராந்தகன் வீரநாராயணபுரம் போன்ற பல கிராமங்களை வேதம் வல்லார்க்கு முற்றூட்டாக அளித்தனன். இவன் சிறந்த சிவபக்தன். புலியூர்ச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் என்று லீடன் பட்டயம் கூறுகிறது. இதனை விக்கிரம சோழன் உலாவும் ஆதரிக்கிறது.[10] இவன் நாட்டை 46 ஆண்டு அரசாண்டவன்; உத்தரமேரூர் அவையிற் பல சீர்திருத்தங்களைச் செய்தவன் ஏமகர்ப்பம், துலாபாரம் செய்து புகழ் பெற்றவன். இவன் ‘சிவனது பாத தாமரையில் உறையும் வண்டு’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆதித்த சோழன் கட்டாது விட்ட பல கோவில்கள் இவன் காலத்தில் முற்றுப் பெற்றன. இவன் மகனான இராசாதித்தன் காளத்திக்கு அருகில் கோதண்ட ராமேச்சரமும் (கோதண்டராமன் என்று இராசாதித்தன் பெயர்) அரக்கோணத்திற்கு அருகில் கீழைப் பாக்கத்தில் உள்ள ஆதித்தேச்சரமும் கட்டினான். இவன் மனைவி பெயர் ஈராயிரவன் தேவி அம்மனார் என்பது. இவன் தன் பெயரால் காட்டுமன்னார் குடிக்கு அடுத்த ‘வீரநாராயண ஏரி’ (வீரான ஏரி-வீராநத்தம் ஏரி) எடுப்பித்தான், வீர நாராயணநல்லூர் (வீரான நல்லூர்), வீர நாராயண சதுர்வேதி மங்கலம் இவற்றை உண்டாக்கினான்; காட்டு மன்னார்குடியில் அளந்தேச்சுரர் கோவிலைக் கட்டினான்.[11]


  1. 11 of 1931.
  2. S.I.I. Vol.3. No.99.
  3. Mahavamasa, Chap. 5.
  4. Mahavamsa, chap. 53
  5. Ep. Ind. Vol. 4.pp, 221-225, S.I.I. Vol. 2. No. 76.
  6. 160, 236 of 1912.
  7. Rice's Mysore & Coorg from Inscription, pp. 45.
  8. K.A.N. Sastry’s cholas’ vol.I, pp. 155.
  9. K.A.N. Sastry’s “Cholas’ Vol. I. pp. 159-62.
  10. Kanni 16
  11. A.R.E. 1921. II. 27.