தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)/ஐரோப்பியர் காலம்

7. ஐரோப்பிய காலம் (17, 18,
19 ஆம் நூற்றாண்டுகள்)

உரைநடை வளர்ச்சி

ஐரோப்பியர் வருகைக்குப் பின் இலக்கியங்கள் உரை நடையில் வெளிவரத் தொடங்கின, நாவல் சிறுகதை முதலாய புதிய இலக்கிய வகைகளைத் தமிழகத்திற்கு அவர்கள் அறிமுகப்படுத்தினர்; அகராதிகளைத் தொகுத்தனர். இதனையொட்டிப் பிறரும் உரைநடையில் எழுதத் தொடங்கினர், உரைநடை வளர்ச்சி பெற்றது.

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு

கிறித்தவப் பெருமக்கள் சிறப்பாகப் பாதிரிமார்கள தமிழ் மொழியின் பெருமையினையும், இலக்கிய இலக்கணச் சிறப்புகளையும் உலகறியச் செய்தனர்.

தமிழில் இக்கால வளர்ச்சிக்குக் கடந்த முந்நூறு ஆண்டுகளாகக் கிறித்துவப் பெருமக்கள் ஆறறிய தொண்டே முக்கிய காரணமெனின் அது மிகையாகாது.

வீரமாமுனிவரும், ஜி. யூ. போப்பும், டாக்டர் கால்டு வெல்லும் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர்.

வீரமாமுனிவர்

இவர் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்பது; இத்தாலி நாட்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார், பல மேனாட்டு மொழிகளில் புலமை பெற்றார், சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றார்; பிற தென் மொழிகளையும் கற்றுணர்ந்தார். தொன்னூல் விளக்கம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றினார்; சதுரகராதியை உருவாக்கினர். இது பெயர், பொருள், தொகை, தொடை எனும் நான்கு பகுதிகளைக் கொண்டது. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவைக் கதையை உரைநடையில் எழுதிக் கதையிலக்கியத்திற்கும் உரைநடை வளர்ச்சிக்கும் வழிகாட்டினார். வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம் முதலிய உரைநடை நூல்களையும் இயற்றினார்.

'தேம்பாவணி' இவர் இயற்றிய குறிப்பிடத்தக்க காப்பியமாகும். இது தூயவளனாரின் வரலாற்றைக் கூறுகிறது. இலக்கிய வளம் மிக்கது; காவிய மணம் கமழ்வது; ஏறத்தாழ 3600 பாடல்களைக் கொண்டது. திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை அடைக்கலமாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, அடைக்கல நாயகி வெண்கலிப்பா ஆகிய நூல்களும் இவர் இயற்றியனவே. குறில் எகர ஒகரங்கள் முற்காலத்தில் புள்ளியிட்டு எழுதப்பட்டன. வீரமாமுனிவரே புள்ளியை விலக்கி எ ஏ. ஒ ஒ எனும் வடிவைத் தந்தார்.

ஜி. யு போப்

1830 இல் இங்கிலாந்தில் பிறந்த போப் எனும் பாதிரியார் தம் பத்தொன்பதாம் வயதில் தமிழகம் வந்தார். நீண்டநாள் தமிழ்த் தொண்டாற்றினார்; திருக்குறள், நாலடியார், சிவஞான போதம். திருவாசகம் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; தமிழ் இலக்கணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளியிட்டார். தம் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன், என்று பொறிக்க வேண்டும் என விரும்பினார். இஃது அவருக்குத் தமிழின் பாலிருந்த பற்றினை விளக்குகிறது. இவர் சமுதாயப் பணியும் ஆற்றினார்.

டாக்டர் கால்டுவெல்

1814 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்: சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்தார்; திருநெல்வேலி மாவட்டக்தில் தங்கி, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்குமேல் தமிழ்ப்பணி ஆற்றினார். பல மேனாட்டு மொழிகளையும், தென்னக மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்து பெரும் புலமை பெற்றார். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் பெருநூலை இயற்றித் தமிழுக்குச் சிறந்த பெருமையைத் தேடித் தந்தார். 'திராவிட மொழிகளின் தனித் தன்மைகளைச் சுட்டி, அவற்றின் பெருமையை உலகறியச் செய்தார்; உலக மொழிகள் பலவற்றிலும் தமிழிச் சொற்கள் சென்று கலந்ததை எடுத்துக் காட்டினார்; 'திருநெல்வேலி சரித்திரம்' என்னும் அரிய வரலாற்று நூலையும் எழுதினார். இவ்விரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் அமைந்தவை. தாமரைத் தடாகம், நற்கருணைத்தியான மாலை முதலிய பல நூல்களை உரைநடையில் எழுதித் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணை செய்தார். தமிழுக்காகவும், கிறித்தவ சமயத்துக்காகவும் உழைத்த இவ் அறிஞர் பெருந்தகை தம் இறுதிக் காலத்தில் தாயகம் செல்ல மறுத்துக் கோடைக்கானலிலேயே உயிரிழத்தமையை நினைக்குங்கால், நெஞ்சம் நெகிழாமல் இருக்க முடியவில்லை.

முக்கூடற்பள்ளு

நாயக்கர் காலத்து எழுந்த இலக்கிய வகைகளுள் பள்ளு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஃது உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்க வல்லது. பள்ளு இலக்கியங்களுள் முக்கூடற்பள்ளு தலைசிறந்ததாகும். இதன் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

கடவுள் வணக்கம், பள்ளன் பெருமை, அவள் மனைவியர் உறவுகள், நாட்டு வளம், மழைக்குறி, ஆற்று வெள்ளம் முதலிய செய்திகள் இடம் பெறுகின்றன. பண்ணையாரிடம் பள்ளன் பேசும் உரையாடல்களும், அவன் தன் மனைவியரிடையே நிகழ்த்தும் ஊடற்செய்திகளும் நகைச்சுவை நல்குவன. நெல் வகைகளும், எருது வகைகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் விளங்கினார். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், தியாகராச செட்டியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலியோர் இவர் மரணவர்களுள் குறிப்பிடத் தக்கவராவர்,

முருகன் பிள்ளைத் தமிழ், அகிலாண்ட நாயகி மாலை, அம்பல வாணதேசிகர் கலம்பகம், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் நூல்களுள் குறிப்பிடத்தக்கன. இவர் பாடல்கள் கம்பர் பாடல்களைப் போலக் கருத்துச் செறிவும், சொல்லின்பமும் வாய்ந்தவை. அதனால் இவர் நவீன கம்பர் எனப் போற்றப்படுகிறார். சேக்கிழார் பிள்ளைத் தமிழில் பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று சேக்கிழாரை இவர் பாராட்டுகிறார். உலா, கோவை, தூது முதலாய சிற்றிலக்கியங்களையும் இவர் மிகுதியாகப் படைத்துள்ளார். இவர் 1815 முதல் 1867 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

இராமலிங்க அடிகள்

தாயுமானவருக்குப் பிறகு சமரச சன்மார்க்க நெறிக்குப் புத்துணர்வூட்டிய பெருந்தகை இவரே. இறைவனை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து இவர் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. அவை அனைத்தும் திருவருட்பா எனும் பெயரில் வெளிவந்துள்ளன. அப்பாடல்கள் கற்பார் நெஞ்சினை உருக்கவல்லன. திருவாசகத்தில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. குவலயமெல்லாம் கொல்லாமையைக் கடைப்பிடித்தொழுக வேண்டும் என்பது இவரது உள்ளக் கிடக்கையாகும்.

'மனுமுறை கண்ட வாசகம்’ எனும் உரைநடை நூலையும், பல கட்டுரைகளையும் இவர் இயற்றியுள்ளார்.

'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் உலைந்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுஉளம் துடித்தேன்;
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்"

உலக உயிர்களின் துன்பத்தைக் கண்டு இவர் ஏங்கும் ஏக்கத்தை இப்பாடல் புலப்படுத்துகிறது.

இவர் 1823 முதல் 1874 வரை நிலவுலகின்கண் வாழ்ந்தார்.

ஆறுமுக நாவலர்

இவர் யாழ்பாணத்துத் தமிழ்ப் புலவராவார்; சைவத்தை நிலை நிறுத்தவும், தமிழை வளர்க்கவும் அரும் பணியாற்றினார்; பள்ளிப் பிள்ளைகளுக்காகப் பாட நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சென்னையில் அச்சுக் கூடம் ஒன்றினை நிறுவிச் சைவ சமய நூல்களையும், இலக்கண நூல்களையும் பதிப்பித்தார்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலிய சிறு நூல்களுக்கு உரை எழுதினார்: திரு விளையாடற் புராண வசனம், பெரிய புராண வசனம், இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை, சைவ வினா விடை முதலியன இவர் இயற்றியனவே. இவர் இயற்றிய நூல்களுள் நன்னூல் காண்டிகை உரை போற்றத்தக்க தாகும். இவர் 1822 முதல் 1889 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்

டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராவார். இவர் பல்வேறு இடங்களுக்கெல்லாம் சென்று அலைந்து ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து அவற்றை அச்சுக்குக் கொண்டு வந்தார். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை யென்றால் எத்துனையோ நூல்கள் செல்லுக்கும், பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால், இவர் தொண்டு அளப்பரிய தொன்றாகும். பதிப்புத் துறையில் இவருக்கிணையாவார் ஒருவரும் இலர். சிறந்த முன்னுரை, அரிய குறிப்புரை, சொற்பொருள், அகர வரிசை விளக்கம், நூலின்கண் இடம் பெற்ற அரசர், விலங்கு, புள், மரம் முதலியவற்றின் பெயர் முதலானவை இவர் பதிப்பின் முதற்கண் இடம் பெறும். பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, பெருங்கதை முதலியன இவர் பதிப்பித்த நூல்களுள் குறிப்பிடத் தக்கனவாகும், பல சிற்றிலக்கிய நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார். ‘என் வரலாறு’ எனும் தலைப்பில் தம் வரலாற்றை அழகாக வெளியிட்டுள்ளார்; நினைவு மஞ்சரி, புதியதும் பழையதும், சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் முதலாய பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். இவர் 1885 முதல் 1942வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். வடமொழியிலும் தமிழிலும் புலமை மிக்கவர்; சுக்கிர நீதியும், மண்ணியல் சிறு தேரும் இவர் மொழி பெயர்த்த நூல்களாகும். உரை நடைக் கோவை, சுலோசனை, உதயணன் கதை முதலியவை இவர் இயற்றிய உரைநடை நூல்களாகும். மண்ணியல் சிறுதேர் என்பது கவிதைகள் இடையிட்ட உரைநடை நாடக நூலாகும். இஃது இவர் படைப்புகளுள் மிகச் சிறந்ததாகும். இவர் 1891 முதல் 1963 வரை வாழ்ந்தார்.

வையாபுரிப்பிள்ளை

இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்; தமிழ்ச் சுடர் மணிகள், சொற்கலை விருந்து முதலாய நூல்களை எழுதினார். பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு சங்க இலக்கியம் முழுவதையும் இவர் தொகுப்பித்துள்ளார்; இலக்கிய விளக்கம் முதலிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதி வெளியிட்டார்; புதுமை இலக்கியத்தில் இவருக்கிருந்த ஆர்வம் காரணமாக ‘இராஜி' எனும் நாவலையும் ‘சிறுகதை மஞ்சரி’ என்னும் கதைத் தொகுப்பு நூலையும் இயற்றினார்; 1891 முதல் வரை வாழ்ந்தார்.

தமிழறிஞர்கள் பிறர்

தமிழுக்குப் பணியாற்றிய அறிஞர்கள் பலர். நாவலர் சோமசுந்தர பாரதியார், ரா.பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார் முதலியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவார். இவர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆக்கமளித்துள்ளனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களுள் மாரிவாயில் என்னும் செய்யுள் இலக்கியமும் “தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்” எனும் உரைநடை நூலும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1880 முதல் 1959 வரை வாழ்ந்தார்.

ரா. பி. சேதுப்பிள்ளை

இவர் சொற்பொழிவு கேட்பாருள்ளத்தைக் கவரவல்லது. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலியன இவர் சொற்பொழிவுகளில் இடம்பெறும் நூல்களாகும். இவர் பேச்சும் எழுத்தும் எதுகை மோனைத் தொடை மிக்கன. இன்று பலர் இவரைப் பின்பற்றி வருகின்றனர். இவர் 1896 முதல் 1961வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

மறைமலையடிகள்

இவர் நாகப்பட்டினத்தையடுத்த சிற்றூரொன்றில் பிறந்தார்; இயற்பெயரான வேதாசலம் என்பதன் தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது. தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழியிலும் இவர் புலமை மிக்கவர். தமிழ் நடையில் ஒரு மறுமலர்ச்சியை இவர் உண்டாக்கினார். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முல்லைப் பாட்டாராய்ச்சி, படடினப்பாலை ஆராய்ச்சி எனும் ஆராய்ச்சி நூல்களையும், திருவொற்றியூர் மும்மணிக் கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் எனும் செய்யுள் நூல்களையும் குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள் எனும் நாவல்களையும், சைவ சமய தத்துவ விளக்க நூல்களையும், சிறுவருக்கான நூல்கள் சிலவற்றையும், அம்பிகாபதி, அமராவதி எனும் நாடக நூலையும், தொலைவில் உணர்தல், நூற்றாண்டு வாழ்வது எப்படி முதலிய அறிவியல் நூல்களையும் யாத்துள்ளார்; ஞான சாகரம் எனும் இதழ் ஒன்றனையும் வெளியிட்டு வந்தார். தமிழ் மொழிக்கு இவர் செய்த தொண்டு அளப்பரியது. 1876 முதல் 1950 வரை இவர் வாழ்ந்தார்.

திரு. வி. கல்யாணசுந்தரனார்

திருவாரூர் விருதாச்சலனார் மகன் கலியாணசுந்தர்ன் என்பது இவர் பெயரின் விளக்கமாகும். இன்று அப்பெயர் திரு. வி. க. என வழங்குகிறது. இவர் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு நாடு சுதந்தரம் பெறப் பலவாறு முயன்றார்; தொழிலாளர் நலத்தில் பங்கு கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தார்; எழுத்திலும், பேச்சிலும் புதுமையைப் புகுத்தி மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தார். இவர் பேச்சுக்கள் ‘தமிழ்த் தென்றல்’ எனும் நூலாக வெளிவந்துள்ளன.

பெண்ணின் பெருமை, காந்தியடிகளும் மனித வாழ்க்கையும், முருகன் அல்லது அழகு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், இந்தியாவும் விடுதலையும் தமிழ்ச்சோலை, உள்ளொளி, சைவத் திறவு முதலிய நூல்களை எழுதி உரைநடை வளர்ச்சிக்கு இவர் புத்துயிருட்டினார்; முருகன் அருள் வேட்டல், இருளில் ஒளி, படுக்கைப் பிதற்றல் முதலிய பல செய்யுள் நூல்களையும் இயற்றினார்; தேசபக்தன், நவசக்தி எனும் இதழ்களையும் வெளியிட்டார்.

டாக்டர் மு. வரதராசனார்

டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் பணியாற்றியுள்ளார்; பழமையை விளக்கியும், புதுமையை வரவேற்றும் கற்றவரையும், மற்றவரையும் தம்பால் ஈர்த்தார். இவரெழுதிய திருக்குறள் தெளிவுரை மிக அதிக அளவில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மொழியியல், திறனாய்வு, நாவல், கட்டுரை முதலாகப் பல துறைகளிலும் நூல்களை எழுதித் தமிழ் இலக்கியத்தை இவர் வளமாக்கியுள்ளார். மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் தோற்றம் 25-4-1913; மறைவு 10-10-74.

டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு வழிகாட்டிய பேரறிரஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். மொழி வரலாறு பற்றிய கட்டுரைத் தொகுப்பு இவர் வெளியீடுகளுள் மிகச் சிறந்ததாகும். ‘கானல் வரி' என்னும் ஆராய்ச்சி நூல் சிலப்பதிகாரத்தின் சீர்மையைக் காட்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறைப் பேராசிரியராகவும்: மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும், பணியாற்றித் தமிழுக்கும் கல்வித்துறைக்கும் பெருந் தொண்டாற்றியுள்ளார். இவரைப் பல்கலைச் செல்வர் எனப் பாராட்டுவர்.

டாக்டர் வ. சுப மாணிக்கம்

‘வள்ளுவம்’ என்னும் குறள் விளக்க நூலும் ‘தமிழ்க் காதல்’ என்னும் ஆராய்ச்சி நூலும் இவரது ஆராய்ச்சித் திறனைப் புலப்படுத்துவனவரகும். மேலும், நெல்லிக்கனி, மனைவியின் உரிமை, உப்பங்கழி முதலாய பல நாடக நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராய்ப் பணியாற்றிய இவர், மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் விளங்கினார். சங்க இலக்கிய ஆய்வுகளில் இவருக்குத் தனி இடம் உண்டு.