114. நாணுத் துறவு உரைத்தல்
(வெட்கம் விட்டுப் பேசுதல்)


தலைவன் கூற்று

“அன்றில் இணைந்து வாழும் பனைமரத்தைத் தடிந்து கொண்டுவந்து நிறுத்துவேன்; மடவேறுவதைத் தவிர அவளை அடைவதற்கு வழியே தென்படவில்லை. அதுவே தக்க வழியாகும்.”

“ஆமாம்! வெட்கப்பட்டு என்ன பயன்? வெளியே சொல்லக்கூடாதுதான்; முடியவில்லையே! என் வீரம்: ஆண்மை எல்லாம் தோற்றுவிட்டன. வேறு வழியே இல்லை; மடலேற வேண்டியதுதான்.”

“சின்னப் பெண்தான்; அந்தப் பேரழகி என்னைச் சீண்டிவிட்டாள். வேறு வழியில்லை; மடலேறுவது தவிர வேறு வழியே இல்லை. எந்த நேரமானாலும் எனக்கு என்ன? நடுயாமம் ஆனாலும் இந்த இடத்தைவிட்டு விலகப் போவது இல்லை."

தலைவி கூற்று

“ஆண்பிள்ளை மடல் ஏறலாம்; பெண்பிள்ளை ஏறக்கூடாது. இது மரபு! மடலேறாத பெண் மதிக்கத் தக்கவள்; அதனால் அடங்கி இருக்கிறேன்!”

“மடல் ஏறாவிட்டால் போகிறது. மன்றம் ஏறி ஊரறியச் செய்வேன்; இருந்து இருந்து பார்த்தேன்; இவர் எந்த முயற்சியும் செய்வதுபோல இல்லை.”

“பெண் கிரகலட்சுமி, வீட்டைவிட்டு வெளியே கால் அடி எடுத்து வைக்கக்கூடாது என்கிறார்கள். என்னைத் தான் கிரகம் ஆட்டிப் படைக்கிறதே. தெருவுக்கு வந்தால்தான் வழக்கே தோன்றும். பூட்டை உடைத்தாகிவிட்டது; கதவு திறக்க வேண்டியது. நாணம் விட்டாகிவிட்டது; நியாயம் அடைய வேண்டியதுதான், இந்த ஊரார் என் தனிமை கண்டு நகைப்பர்; அவர்கள் இனி என் செயல் கண்டு திகைப்பர்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/114&oldid=1107129" இலிருந்து மீள்விக்கப்பட்டது