திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

தாவீது அரசராகத் திருப்பொழிவு பெறுகிறார். விவிலிய நூலோவியம். காப்பகம்: பாரிசு.


அதிகாரம் 5 தொகு

தாவீது யூதா, இஸ்ரயேலின் அரசராதல் தொகு

(1 குறி 11:1-9; 14:1-7)


1 இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: "நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்.
2 சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். 'நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்' என்று உமக்கே ஆண்டவர் கூறினார்".
3 இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.
4 முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
5 எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார். [1]


6 அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்ற போது, அவர்கள் தாவீதை நோக்கி, "நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்திவிடுவார்கள்" - அதாவது "இங்கே தாவீது வர முடியாது" என்றனர். [2]
7 இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர்.


8 அன்று தாவீது, "எபூசியரைத் தாக்குகின்றவர்கள், குடைகால்வாய் வழியே சென்று தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும்", என்று கூறினார். ஆகவே, "பார்வையற்றவரும் முடவரும் கோவிலினுள் நுழையலாகாது" என்று கூறப்பட்டது.


9 தாவீது கோட்டையில் தங்கி, அதற்கு 'தாவீது நகர்' என்று பெயரிட்டார். மில்லோவிலிருந்து உட்புறமாக தாவீது சுற்றிலும் மதில் எழுப்பினார்.
10 தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.


11 தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டினர்.
12 ஆண்டவர் தம்மை இஸ்ரயேலின் அரசராக நியமித்தார் என்றும் தம் மக்கள் இஸ்ரயேலுக்காகவே அவர் தம்மை உயர்த்தினார் என்றும் தாவீது உணர்ந்தார்.


13 எபிரோனை விட்டு வந்ததும் தாவீது மேலும் பல வைப்பாட்டியரையும் மனைவியரையும் எருசலேமில் தேர்ந்தெடுத்தார்; மேலும் பல புதல்வர்களும் புதல்வியரும் தாவீதுக்குப் பிறந்தனர்.
14 எருசலேமில் அவருக்குப் பிறந்தவர்களின் பெயர்களாவன: சம்மூவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,
15 இப்கார், எலிசுவா, நேபேகு, யாபியா,
16 எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று.

பெலிஸ்தியர்மீது வெற்றி தொகு

(1 குறி 14:8-17)


17 தாவீது இஸ்ரயேலின் அரசராக திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று கேட்டதும் பெலிஸ்தியர் எல்லாரும் தாவீதைப் பிடிப்பதற்குப் புறப்பட்டுச் சென்றனர். தாவீது அதைக் கேள்வியுற்றுக் கோட்டைக்குள் புகுந்துகொண்டார்.
18 பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.
19 "பெலிஸ்தியருக்கு எதிராக நான் செல்லட்டுமா? நீர் அவர்களை என் கையில் ஒப்புவிப்பீரா?" என்று தாவீது ஆண்டவரிடம் கேட்டார். "செல், உறுதியாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்பேன்" என்று ஆண்டவர் தாவீதிடம் கூறினார்.


20 தாவீது பாகால்-பெராட்சிம் வரை வந்து அங்கே அவர்களைத் தோற்கடித்தார். "தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை என் கண்முன்னே தகர்த்தெறிந்தார்" என்று தாவீது கூறினார். ஆகவே தான் அந்த இடம் பாகால்-பெராட்சிம் [3] என்று அழைக்கப்படுகிறது.
21 பெலிஸ்தியர் தங்கள் தெய்வச் சிலைகளை விட்டுச் செல்ல, தாவீதும் அவர்தம் ஆள்களும் அவற்றை எடுத்துச் சென்றனர்.


22 பெலிஸ்தியர் மீண்டும் எதிர்த்து வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.
23 தாவீது ஆண்டவரிடம் ஆலோசனை கேட்க, "நீ எதிர்த்துச் செல்லவேண்டாம். சுற்றி வளைத்து அவர்கள் பின்னால் சென்று, முசுக்கொட்டை மரங்களுக்கு எதிரிலிருந்து அவர்களை அணுக வேண்டும்.
24 முசுக் கொட்டை மரங்களுக்கு மேல் அணிவகுப்புப் பேரொலி ஒலிக்கும் போது நீ தயாராக இருக்கவேண்டும். ஏனெனில் அப்போது ஆண்டவர் பெலிஸ்தியர் படையைத் தாக்குவதற்காக உனக்கு முன்பாகச் செல்கிறார்" என்று ஆண்டவர் கூறினார்.
25 ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டவாறே தாவீது செய்து, பெலிஸ்தியரைக் கெபா முதல் பெசேர் வரை தாக்கினார்.

குறிப்புகள்

[1] 5:4-5 = 1 அர 2:11; 1 குறி 3:4; 29:27.
[2] 5:6 = யோசு 15:63; நீத 1:21.
[3] 5:20 எபிரேயத்தில் 'தகர்க்கும் தலைவர்' என்பது பொருள்.

அதிகாரம் 6 தொகு

உடன்படிக்கைப் பேழை எருசலேமுக்குக் கொணரப்படல் தொகு

(1 குறி 13:1-14; 15:25-16:6, 43)


1 தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் ஒன்றுதிரட்டினார்.
2 தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவர் பெயரால் அழைக்கப்படுகிறது. [1]
3 குன்றின்மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபின் புதல்வர்கள் உசாவும் அகியோவும் அப் புது வண்டியை நடத்திவந்தார்கள். [2]
4 குன்றின் மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை அவர்கள் கொண்டு வந்தார்கள். அகியோ பேழைக்கு முன்னால் சென்றான்.
5 தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் தேவதாரு மரத்தாலான இசைக் கருவிகளோடும், யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் ஆகியவற்றோடும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தனர்.
6 அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையைத் தாங்கிப் பிடித்தான்.
7 அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுளின் பேழையருகே இறந்தான்.
8 ஆண்டவர் சினமுற்று உசாவைத் திடீரெனத் தாக்கியதால், தாவீது மனவேதனை அடைந்தார். இந்நாள் வரை அவ்விடம் பெரேசு-உசா [3] என்று அழைக்கப்படுகிறது.
9 அன்று தாவீது ஆண்டவருக்கு அஞ்சி, "இத்தகைய ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்?" என்று வினவினார்.
10 எனவே, ஆண்டவரின் பேழையைத் தாவீதின் நகருக்குத் தம்மோடு எடுத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. கித்தியனான ஓபேது-ஏதோமின் இல்லத்திற்கு அதைத் திருப்பிவிட்டார்.
11 ஆண்டவரின் பேழை கித்தியனான ஓபேது-ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கிற்று. ஆண்டவர் ஓபேது-ஏதோமுக்கும் அவன் வீட்டார் அனைவருக்கும் ஆசி வழங்கினார். [4]
12 ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஓபேது-ஏதோமின் வீட்டாருக்கும் அவனுக்குரிய அனைத்துக்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார் என்று அரசர் தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது-ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார்.
13 ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாவையையும் பலியிட்டார்.
14 நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்து கொண்டு, தாவீது தம் முழுவலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
15 தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
16 ஆண்டவரின் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் மகள் மீக்கால் பலகணி வழியாகப் பார்த்தாள். அரசர் தாவீது ஆண்டவர் முன்பு குதித்து ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரைத் தன் உள்ளத்தில் வெறுத்தாள்.
17 ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார்.
18 எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார்.
19 பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப்பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.
20 தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, "இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழற்றுவது போல, இஸ்ரயேலின் அரசர் தம் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமை கொண்டாரே!" என்று ஏளனம் செய்தாள். [5]
21 "ஆண்டவரின் மக்கள் மீதும் இஸ்ரயேல் மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையையும் அவர்தம் வீட்டாரையும் ஒதுக்கிவிட்டு, என்னைத் தேர்ந்துகொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்; இன்னும் ஆடுவேன்.
22 நான் என்னை இன்னும் கடையவனாக்கிக் கொள்வேன்; என் கண்முன் என்னைத் தாழ்த்திக் கொள்வேன்; நீ குறிப்பிட்ட பணிப்பெண்களுக்கு முன்பாக நான் பெருமை அடைவேன்" என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.
23 சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும் வரை குழந்தைப் பேறு கிட்டவில்லை.

குறிப்புகள்

[1] 6:2 = விப 25:22.
[2] 6:3 = 1 சாமு 7:1-2.
[3] 6:8 எபிரேயத்தில், 'உசா தாக்கப்படல்' என்பது பொருள்.
[4] 6:11 = 1 குறி 26:4-5.
[5] 6:19-20 = 1 குறி 16:43.


(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை