திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/செக்கரியா/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

"இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்; மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்; வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே." - செக்கரியா 10:1.


அதிகாரம் 9 தொகு

அண்டை நாட்டினருக்கு வரும் தண்டனை தொகு


1 ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது;
அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்;
ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே
சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன. [1]
2 அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும்
ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம்.
3 தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது;
தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.
4 இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்;
அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்;
அந்நகரும் நெருப்புக்கு இரையாகும். [2]
5 அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்;
காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்;
அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும்.
காசா நகரிலிருந்து அரசன் அழிந்தொழிவான்;
அஸ்கலோன் குடியற்றுப்போகும்.
6 அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்;
பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.


7 இரத்தம் வடியும் இறைச்சியை அவர்கள் வாயினின்று அகற்றுவேன்;
அருவருப்பான உணவை அதன் பற்களிடையிருந்து நீக்குவேன்;
அவ்வினம் நம் கடவுளுக்கு எஞ்சியதாகும்;
அது யூதாவின் குலங்களில் தலையாயது ஆகும்.
எக்ரோன் நகரத்தார் எபூசியரைப் போல் இருப்பார்கள்; [3]
8 அங்குமிங்கும் தாக்கும் படையினின்று எனது இல்லத்தைக் காப்பதற்கு


நான் பாளையம் இறங்குவேன்;
ஒடுக்குகிறவன் எவனும் இனி அவர்களின் நகர்களை ஊடுருவிச் செல்லான்;
ஏனெனில் என் கண்களாலேயே யாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வருங்கால அரசன் தொகு


9 மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு;
மகளே எருசலேம்! ஆர்ப்பரி.
இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்.
அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்;
கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். [4]


10 அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; [5]
எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; [6]
போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும்.
வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்;
அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை,
பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும். [7]

கடவுளின் மக்களுக்குக் கிடைக்கும் மீட்பு தொகு


11 உன்னைப் பொறுத்தமட்டில்
உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு,
சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை
நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன். [8]


12 நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே,
உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்;
இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று
நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.


13 நான் யூதாவை என் வில்லாக்கிக் கொண்டேன்;
எப்ராயிமை அம்பாக அமைத்துக்கொண்டேன்;
சீயோனே! உன் மக்களை யவனருக்கு எதிராக ஏவிவிட்டு
உன்னை வல்லவனின் வாள் போல் ஆக்குவேன்.


14 அப்போது அவர்கள்மீது ஆண்டவர் தோன்றுவார்.
அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்;
தலைவராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்;
அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து வருவார்.


15 படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு அடைக்கலமாய் இருப்பார்;
அவர்கள் தங்கள் பகைவரை ஒழித்துக்கட்டி,
அவர்களுடைய கவண் கற்களை மிதித்துப்போடுவார்கள்;
திராட்சை இரசத்தைப்போல் அவர்களது குருதியைக் குடிப்பார்கள்;
கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும், பலிபீடத்தின் கொம்புகளைப் போல் நனைந்தும்,
இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.


16 அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்,
தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்;
அவர்களும் அவரது நாட்டில்
மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப்போல் ஒளிர்வார்கள்.


17 ஆம், அக்காட்சி எத்துணை இனியது; எத்துணை அழகியது;
கோதுமை இளங்காளையரையும்
புதுத்திராட்சை இரசம் கன்னியரையும் செழிப்புறச் செய்யும்.


குறிப்புகள்

[1] 9:1 = எசா 17:1-3; எரே 49:23-27; ஆமோ 1:3-5.
[2] 9:1-4 = எசா 23:1-18; எசே 26:1-28:26;
யோவே 3:4-8; ஆமோ 1:9-10;
மத் 11:21-22; லூக் 10:13-14.
[3] 9:5-7 = எசா 14:29-31; எரே 47:1-7;
எசே 35:15-17; யோவே 3:4-8;
ஆமோ 1:6-8; செப் 2:4-7.
[4] 9:9 = மத் 21:5; யோவா 12:15.
[5] [6] 9:10 - "செய்வேன்...விடுவேன்" என்பது எபிரேய பாடம்.
[7] 9:10 = திபா 72:8.
[8] 9:11 = விப 24:8.


அதிகாரம் 10 தொகு

விடுதலைக்கான ஆண்டவரின் வாக்குறுதி தொகு


1 இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்;
ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்;
மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்;
வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே;


2 குலதெய்வங்களை வீணானதையே கூறுகின்றன;
குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்;
அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்;
வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்;
ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்;
ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.


3 ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது;
தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்;
ஏனெனில், படைகளின் ஆண்டவர்
தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்;
அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார்.


4 அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்;
கூடார முளையும், போர் வில்லும்,
ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.


5 அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல்,
பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள்.


6 "யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்;
யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்;
அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால்
அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்;
அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்;
ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்;
நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன்.


7 எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப் போலாவார்கள்;
திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல்
அவர்கள் உள்ளம் களிப்படையும்;
அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்;
ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.


8 சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்;
ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்;
முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.


9 மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும்,
தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்;
தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.


10 நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்;
அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்;
கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்;
இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.


11 எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்;
கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்;
பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்;
அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்;
எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.


12 ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்;
ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள்,"
என்கிறார் ஆண்டவர்.


(தொடர்ச்சி): செக்கரியா:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை